பாடல் #1715

பாடல் #1715: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

ஏத்தின ரெண்ணிலி தேவரெம் மீசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தெண்ணல் வள்ளலென்
றார்த்தன ரண்டங் கடந்தப்புற நின்று
காத்தன னவனின் கருத்தறி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எததின ரெணணிலி தெவரெம மீசனை
வாழததினர வாசப பசுநதெணணல வளளலென
றாரததன ரணடங கடநதபபுற நினறு
காததன னவனின கருததறி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏத்தினர் எண் இலி தேவர் எம் ஈசனை
வாழ்த்தினர் வாச பசும் தெண்ணல் வள்ளல் என்று
ஆர்த்தனர் அண்டம் கடந்து அப்புறம் நின்று
காத்தனன் அவனின் கருத்து அறியாரே.

பதப்பொருள்:

ஏத்தினர் (போற்றி வணங்குகின்றார்கள்) எண் (எண்ணிக்கை) இலி (இல்லாத) தேவர் (தேவர்கள்) எம் (எம்பெருமானாகிய) ஈசனை (இறைவனை)
வாழ்த்தினர் (வாழ்த்துகின்றார்கள்) வாச (நறுமணமாக இருப்பவன் என்றும்) பசும் (பசுமையாக இருப்பவன் என்றும்) தெண்ணல் (மாசு மருவில்லாத பேரழகோடு இருப்பவன் என்றும்) வள்ளல் (பெருங் கருணை கொண்ட வள்ளல்) என்று (என்றும்)
ஆர்த்தனர் (கூவி அழைத்து வழிபடுகின்றார்கள்) அண்டம் (ஆயினும் அண்ட சராசரங்களாகவும் அவற்றை எல்லாம்) கடந்து (கடந்து) அப்புறம் (அதற்கு அப்பாலும்) நின்று (நின்று)
காத்தனன் (அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய) அவனின் (அந்த இறைவனின்) கருத்து (உண்மையான தன்மையை) அறியாரே (அவர்கள் அறிவது இல்லை).

விளக்கம்:

எண்ணிக்கை இல்லாத தேவர்கள் எம்பெருமானாகிய இறைவனை நறுமணமாக இருப்பவன் என்றும், பசுமையாக இருப்பவன் என்றும், மாசு மருவில்லாத பேரழகோடு இருப்பவன் என்றும், பெருங் கருணை கொண்ட வள்ளல் என்றும் போற்றி வணங்கி வாழ்த்தி கூவி அழைத்து வழிபடுகின்றார்கள். ஆயினும் அண்ட சராசரங்களாகவும் அவற்றை எல்லாம் கடந்து அதற்கு அப்பாலும் நின்று அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய அந்த இறைவனின் உண்மையான தன்மையை அவர்கள் அறிவது இல்லை.

பாடல் #1714

பாடல் #1714: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

போகமு முத்தியும் புத்தியுஞ் சித்தியு
மாகமு மாறாறு தத்துவத் தப்பாலா
மேகமு நல்கி யிருக்குஞ் சதாசிவ
மாகம தத்துவா வாற்சிவ மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொகமு முததியும புததியுஞ சிததியு
மாகமு மாறாறு தததுவத தபபாலா
மெகமு நலகி யிருககுஞ சதாசிவ
மாகம தததுவா வாறசிவ மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறு ஆறு தத்துவத்து அப்பால் ஆம்
ஏகமும் நல்கி இருக்கும் சதா சிவம்
ஆகம தத்துவா ஆல் சிவம் ஆமே.

பதப்பொருள்:

போகமும் (வினைகளை அனுபவிப்பதற்கான சூழலையும்) முத்தியும் (அந்த வினைகளை அனுபவித்து முடித்த பிறகு முக்தியையும்) புத்தியும் (இறைவனை அறிவதற்கான ஞானத்தையும்) சித்தியும் (அந்த ஞானத்தினால் கிடைக்கின்ற சித்திகளையும்)
ஆகமும் (உடலையும் மனதையும் இயக்குகின்ற) ஆறு (ஆறும்) ஆறு (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் முப்பத்தாறு) தத்துவத்து (தத்துவங்களையும்) அப்பால் (கடந்து) ஆம் (இருக்கின்ற)
ஏகமும் (அனைத்தும் தாம் ஒன்றே என்கின்ற நிலையையும்) நல்கி (உயிர்களுக்கு கொடுத்து அருளி) இருக்கும் (இருக்கின்ற பரம் பொருளே) சதா (சதா) சிவம் (சிவமாகும்)
ஆகம (அந்த பரம் பொருளை உணர்ந்து கொள்வதற்கு வழியாக ஆகமங்கள்) தத்துவா (அருளுகின்ற தத்துவங்களாக) ஆல் (இருக்கின்ற இலிங்கமே) சிவம் (சிவம்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

வினைகளை அனுபவிப்பதற்கான சூழலையும், அந்த வினைகளை அனுபவித்து முடித்த பிறகு முக்தியையும், இறைவனை அறிவதற்கான ஞானத்தையும், அந்த ஞானத்தினால் கிடைக்கின்ற சித்திகளையும், உடலையும் மனதையும் இயக்குகின்ற முப்பத்தாறு தத்துவங்களையும் (பாடல் #467 இல் உள்ளபடி) கடந்து இருக்கின்ற அனைத்தும் தாம் ஒன்றே என்கின்ற நிலையையும், உயிர்களுக்கு கொடுத்து அருளுகின்ற பரம் பொருளே சதா சிவமாகும். அந்த பரம் பொருளை உணர்ந்து கொள்வதற்கு வழியாக ஆகமங்கள் அருளுகின்ற தத்துவங்களாக இருக்கின்ற இலிங்கமே சிவம் ஆகும்.

பாடல் #1713

பாடல் #1713: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

உலகி லெடுத்தது சத்தி முதலா
யுலகி லெடுத்தது சத்தி வடிவா
யுலகி லெடுத்தது சத்தி குணமா
யுலகி லெடுத்த சதாசிவன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உலகி லெடுததது சததி முதலா
யுலகி லெடுததது சததி வடிவா
யுலகி லெடுததது சததி குணமா
யுலகி லெடுதத சதாசிவன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உலகில் எடுத்தது சத்தி முதல் ஆய்
உலகில் எடுத்தது சத்தி வடிவு ஆய்
உலகில் எடுத்தது சத்தி குணம் ஆய்
உலகில் எடுத்த சதா சிவன் தானே.

பதப்பொருள்:

உலகில் (உலகத்தில்) எடுத்தது (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின்) சத்தி (செயலுக்கும்) முதல் (மூல காரணம்) ஆய் (ஆக இருப்பது இலிங்கமாகும்)
உலகில் (உலகத்தில்) எடுத்தது (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின்) சத்தி (செயலுக்கும்) வடிவு (வடிவம்) ஆய் (ஆக இருப்பது இலிங்கமாகும்)
உலகில் (உலகத்தில்) எடுத்தது (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின்) சத்தி (செயலுக்கும்) குணம் (தன்மை) ஆய் (ஆக இருப்பது இலிங்கமாகும்)
உலகில் (உலகத்தில்) எடுத்த (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்துமே) சதா (அசையா சக்தியாகிய) சிவன் (சிவப் பரம்பொருளின்) தானே (அடையாளமாகிய இலிங்கமே ஆகும்).

விளக்கம்:

உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் மூல காரணமாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் வடிவமாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் தன்மையாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்துமே அசையா சக்தியாகிய சிவப் பரம்பொருளின் அடையாளமாகிய இலிங்கமே ஆகும்.

பாடல் #1712

பாடல் #1712: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

இலிங்கம தாகுவ தாரு மறியா
ரிலிங்கம தாவது எண்டிசை யெல்லா
மிலிங்கம தாகுவ தெண்ணெண் கலையு
மிலிங்கம தாக வெடுத்த துலகே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இலிஙகம தாகுவ தாரு மறியா
ரிலிஙகம தாவது எணடிசை யெலலா
மிலிஙகம தாகுவ தெணணெண கலையு
மிலிஙகம தாக வெடுதத துலகே.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இலிங்கம் அது ஆகுவது ஆரும் அறியார்
இலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம்
இலிங்கம் அது ஆகுவது எண் எண் கலையும்
இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே.

பதப்பொருள்:

இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆகுவது (எதுவாக இருக்கின்றது என்பதை) ஆரும் (யாரும்) அறியார் (அறியாமல் இருக்கின்றார்கள்)
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆவது (ஆக இருப்பது) எண் (எட்டு) திசை (திசைகளில்) எல்லாம் (உள்ள அனைத்தும் ஆகும்)
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆகுவது (ஆக இருப்பது) எண் (எட்டும்) எண் (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் அறுபத்து நான்கு) கலையும் (கலைகளும் ஆகும்)
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆக (ஆகவே) எடுத்தது (இறைவன் தமது அடையாளமாக) உலகே (அனைத்து உலகங்களும் உருவாக்கினான்).

விளக்கம்:

இலிங்கம் என்பது எதுவாக இருக்கின்றது என்பதை யாரும் அறியாமல் இருக்கின்றார்கள். எட்டு திசைகளில் உள்ள அனைத்துமே இலிங்கம் ஆகும், அறுபத்து நான்கு கலைகளும் இலிங்கம் ஆகும். இறைவன் தமது அடையாளமாகிய இலிங்கமாகவே அனைத்து உலகங்களையும் உருவாக்கினான்.