பாடல் #1722

பாடல் #1722: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

அதுவுணர்ந் தேனொரு தன்மையை நாடி
யெதுவுணரா வகை நின்றன னீசன்
புதுவுணர் வான புவனங்க ளெட்டு
மிதுவுணர்ந் தென்னுடல் கோயில் கொண்டானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அதுவுணரந தெனொரு தனமையை நாடி
யெதுவுணரா வகை நினறன னீசன
புதுவுணர வான புவனஙக ளெடடு
மிதுவுணரந தெனனுடல கொயில கொணடானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அது உணர்ந்தேன் ஒரு தன்மையை நாடி
எது உணரா வகை நின்றனன் ஈசன்
புது உணர்வு ஆன புவனங்கள் எட்டும்
இது உணர்ந்த என் உடல் கோயில் கொண்டானே.

பதப்பொருள்:

அது (அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருளை) உணர்ந்தேன் (உணர்ந்து கொண்டேன்) ஒரு (ஒரு) தன்மையை (ஜோதியின் தன்மையில் உள்ள இலிங்க வடிவத்தில்) நாடி (தேடுவதன் மூலம்)
எது (எந்த முறையினாலும்) உணரா (உணர்ந்து கொள்ள முடியாத) வகை (வகையில்) நின்றனன் (நிற்கின்ற) ஈசன் (இறைவனை)
புது (ஒளி பொருந்திய இலிங்கத்தின் மூலம் உணரும் போது இது வரை யாம் உணராத ஒரு புதுவிதமான) உணர்வு (உணர்வு) ஆன (ஆக) புவனங்கள் (அனைத்து உலகங்களையும் சென்று) எட்டும் (அடைகின்ற தன்மையை)
இது (எமக்குள்) உணர்ந்த (உணர்ந்த போது) என் (அவன் எமது) உடல் (உடலையே) கோயில் (தமக்கு விருப்பமான கோயிலாக) கொண்டானே (ஆட்கொண்டு வீற்றிருந்தான்).

விளக்கம்:

அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருளை ஒரு ஜோதியின் தன்மையில் உள்ள இலிங்க வடிவத்தில் தேடுவதன் மூலம் உணர்ந்து கொண்டேன். எந்த முறையினாலும் உணர்ந்து கொள்ள முடியாத வகையில் நிற்கின்ற இறைவனை ஒளி பொருந்திய இலிங்கத்தின் மூலம் உணரும் போது, இது வரை யாம் உணராத ஒரு புதுவிதமான உணர்வாக அனைத்து உலகங்களையும் சென்று அடைகின்ற தன்மையை எமக்குள் உணர்ந்த போது, அவன் எமது உடலையே தமக்கு விருப்பமான கோயிலாக ஆட்கொண்டு வீற்றிருந்தான்.

பாடல் #1723

பாடல் #1723: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

அகலிட மாயறி யாம லடங்கு
முகலிட மாய்நின்ற ஊனதி னுள்ளே
பகலிட மாமுன்னம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அகலிட மாயறி யாம லடஙகு
முகலிட மாயநினற ஊனதி னுளளெ
பகலிட மாமுனனம பாவ வினாசன
புகலிட மாயநினற புணணியன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அகல் இடம் ஆய் அறியாமல் அடங்கும்
உகல் இடம் ஆய் நின்ற ஊன் அதின் உள்ளே
பகல் இடம் ஆம் முன்னம் பாவ விநாசன்
புகல் இடம் ஆய் நின்ற புண்ணியன் தானே.

பதப்பொருள்:

அகல் (அகன்று விரிந்து இருக்கின்ற) இடம் (அண்ட சராசரங்கள்) ஆய் (ஆக) அறியாமல் (யாரும் அறியாத வண்ணம்) அடங்கும் (அனைத்திலும் அடங்கி இருக்கின்ற பரம்பொருள்)
உகல் (அழியக்கூடிய) இடம் (இடம்) ஆய் (ஆக) நின்ற (நிற்கின்ற) ஊன் (எமது உடம்பு) அதின் (அதற்கு) உள்ளே (உள்ளே எழுந்தருளினான்)
பகல் (அப்போது இருளே இல்லாத வெளிச்சமான) இடம் (இடம்) ஆம் (ஆக எமது உடலை மாற்றி) முன்னம் (இது வரை எமக்கு இருந்த) பாவ (அனைத்து விதமான பாவங்களையும்) விநாசன் (அழித்து அருள் புரிந்து)
புகல் (யாம் சரணாகதியாக எப்போதும் இருக்கின்ற) இடம் (இடம்) ஆய் (ஆகவே) நின்ற (நிற்கின்றான்) புண்ணியன் (புண்ணியமே உருவான) தானே (இலிங்க வடிவான இறைவன்).

விளக்கம்:

அகன்று விரிந்து இருக்கின்ற அண்ட சராசரங்களாக யாரும் அறியாத வண்ணம் அனைத்திலும் அடங்கி இருக்கின்ற பரம்பொருள் அழியக்கூடிய இடமாக நிற்கின்ற எமது உடம்பிற்கு உள்ளே எழுந்தருளினான். அப்போது இருளே இல்லாத வெளிச்சமான இடமாக எமது உடலை மாற்றி, இது வரை எமக்கு இருந்த அனைத்து விதமான பாவங்களையும் அழித்து அருள் புரிந்து, யாம் சரணாகதியாக எப்போதும் இருக்கின்ற இடமாகவே நிற்கின்றான் புண்ணியமே உருவான இலிங்க வடிவான இறைவன்.

பாடல் #1724

பாடல் #1724: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

போது புனைகழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியு ளீசனுடல் விசும்பாய் நிற்கு
மாதியுற நின்றது அப்பரி சாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொது புனைகழல பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியு ளீசனுடல விசுமபாய நிறகு
மாதியுற நினறது அபபரி சாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

போது புனை கழல் பூமி அது ஆவது
மாது புனை முடி வானகம் ஆவது
நீதி உள் ஈசன் உடல் விசும்பு ஆய் நிற்கும்
ஆதி உற நின்றது அப் பரிசு ஆமே.

பதப்பொருள்:

போது (மலர்கள்) புனை (சூடிய) கழல் (இறைவனின் திருவடிகள்) பூமி (உலகம்) அது (அது) ஆவது (ஆக இருக்கின்றது)
மாது (இறைவனின் சரிபாதியாக இருக்கின்ற இறைவியானவள்) புனை (கங்கை நீராக அமர்ந்து இருக்கின்ற) முடி (இறைவனின் திருமுடி) வானகம் (ஆகாயம்) ஆவது (ஆக இருக்கின்றது)
நீதி (தர்மத்தின்) உள் (வடிவமாக உள்ள) ஈசன் (இறைவனின்) உடல் (திருமேனியானது) விசும்பு (அண்ட சராசரங்கள்) ஆய் (ஆக) நிற்கும் (நிற்கின்றது)
ஆதி (ஆதி மூலமாகிய இறைவனுக்கு) உற (ஏற்ற வகையில்) நின்றது (நின்றது) அப் (அவன் அருளிய) பரிசு (பரிசாகிய) ஆமே (இலிங்கமே ஆகும்).

விளக்கம்:

மலர்கள் சூடிய இறைவனின் திருவடிகள் உலகமாக இருக்கின்றது. இறைவனின் சரிபாதியாக இருக்கின்ற இறைவியானவள் கங்கை நீராக அமர்ந்து இருக்கின்ற இறைவனின் திருமுடி ஆகாயமாக இருக்கின்றது. தர்மத்தின் வடிவமாக உள்ள இறைவனின் திருமேனியானது அண்ட சராசரங்களாக நிற்கின்றது. ஆதி மூலமாகிய இறைவனுக்கு ஏற்ற வகையில் நின்றது அவன் அருளிய பரிசாகிய இலிங்கமே ஆகும்.

பாடல் #1725

பாடல் #1725: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாய்த்
திரைபொரு நீரது மஞ்சன மாலை
வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
கரையற்ற நந்தி கலையுந்திக் காமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தரையுறற சததி தனிலிஙகம விணணாயத
திரைபொரு நீரது மஞசன மாலை
வரைதவழ மஞசுநீர வானுடு மாலை
கரையறற நநதி கலையுநதிக காமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தரை உற்ற சத்தி தனி இலிங்கம் விண் ஆய்
திரை பொரு நீர் அது மஞ்சன மாலை
வரை தவழ் மஞ்சு நீர் வான் உடு மாலை
கரை அற்ற நந்தி கலையும் திக்கு ஆமே.

பதப்பொருள்:

தரை (நிலத்தில்) உற்ற (வீற்றிருக்கும்) சத்தி (இறைவியானவள்) தனி (இறைவனுக்கு சரிசமமாக இருக்கின்ற) இலிங்கம் (இலிங்க வடிவத்தின் அடிப் பாகத்தில்) விண் (ஆகாயம்) ஆய் (ஆக இருக்கின்றாள்)
திரை (அலை மிகுந்த) பொரு (கடல்களில்) நீர் (இருக்கின்ற நீர்கள்) அது (அதுவே) மஞ்சன (இறைவனுக்கு அபிஷேகமாக) மாலை (சாற்றிக் கொண்டே இருக்கின்றது)
வரை (மலை உச்சியில்) தவழ் (தவழ்கின்ற) மஞ்சு (மேகங்களிலுள்ள) நீர் (தூய்மையான நீர் இறைவனினுக்கு நித்ய தீர்த்தமாக அபிஷேகம் செய்து கொண்டே இருக்கின்றது) வான் (வானத்தில் உள்ள) உடு (நட்சத்திரங்கள் எல்லாம்) மாலை (இறைவனின் திருமார்பில் அணிகின்ற மாலையாக இருக்கின்றது)
கரை (எல்லை) அற்ற (இல்லாத) நந்தி (குருநாதராகிய இறைவனின்) கலையும் (ஆடையாக) திக்கு (அனைத்து திசைகளும்) ஆமே (இருக்கின்றது).

விளக்கம்:

நிலத்தில் வீற்றிருக்கும் இறைவியானவள் இறைவனுக்கு சரிசமமாக இருக்கின்ற இலிங்க வடிவத்தின் அடிப் பாகத்தில் ஆகாயமாக இருக்கின்றாள். அலை மிகுந்த கடல்களில் இருக்கின்ற நீர்கள் எல்லாம் இறைவனுக்கு அபிஷேகமாக சாற்றிக் கொண்டே இருக்கின்றது. மலை உச்சியில் தவழ்கின்ற மேகங்களிலுள்ள தூய்மையான நீர் இறைவனினுக்கு நித்ய தீர்த்தமாக அபிஷேகம் செய்து கொண்டே இருக்கின்றது. வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் இறைவனின் திருமார்பில் அணிகின்ற மாலையாக இருக்கின்றது. எல்லை இல்லாத குருநாதராகிய இறைவனின் ஆடையாக அனைத்து திசைகளும் இருக்கின்றது.