பாடல் #331

பாடல் #331: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்
திராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.

விளக்கம்:

இரவு பகல் என்று தெரியாமல் எந்த சிந்தனையும் எண்ணங்கள் அற்று உடலாலும் உள்ளத்தாலும் மற்றும் உலக பந்தங்கள் என்று எதனாலும் பாதிக்காமல் தன்னை மறந்த நிலையில் இருந்தால் தனக்குள் உண்டாகும் பேரானந்த சிவானந்ததேனை உலகத்தார் அருந்தாலாம். ஆனால் உயிர்கள் மதுவை குடித்து வீணாக அழிகின்றனர். எதனாலும் பாதிக்காத இறைவனின் திருவடிகளைப் பற்றினால் இறைவனே கொடுக்கும் சுத்த மாயையும் பந்த பாச ஆசைகளினால் வரும் அசுத்த மாயையையும் அறுந்து தனக்குள் உண்டாகும் பேரானந்த சிவானந்ததேனை அருந்தலாம்.

பாடல் #332

பாடல் #332: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானவா னந்தத்திற் சார்தலே.

விளக்கம்:

தேவியை வணங்குபவர்களில் சிலர் அவள் அருளைப்பெற்று மந்திர தந்திரசக்தி அடைய வேண்டும் என்று மதுவைப்படைத்து பின்பு அருந்துகின்றனர். மது அருந்துவோர் தம்மை மறப்பார்கள். தம்மை மறந்ததால் அவர்களுடைய ஆற்றல் அழியும். அருள் சக்தி என்பது இறைவன் மேல் எண்ணத்தை வைத்து சிவஞானத்தை அறிந்து அதில் நிலைபெற்று உண்மை ஞானத்தை அடைவதே ஆகும்.

பாடல் #333

பாடல் #333: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே.

விளக்கம்:

சிவம் அருள் பெற்றால் அதில் சக்தியின் அருளும் இருக்கும். அதுபோலவே சக்தி அருள் பெற்றால் அதில் சிவத்தின் அருளும் இருக்கும். இரண்டும் கலந்து தமக்குள்ளேயே இருக்கிறது என்பதை உணரந்து அடைந்தால் உண்மையான சக்தியின் தன்மையாகிய எட்டுவித சித்திகளும் (அட்டமா சித்திகள்) கிடைக்கும்.

பாடல் #334

பாடல் #334: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போகியே
மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.

விளக்கம்:

பாடல் #331 ல் உள்ளபடி சிவானந்ததேனை அருந்தினால் உயிர்கள் உடம்பில் வாழ இறைவனால் கொடுக்கப்பட்ட 96 தத்துவங்கள் நீங்கும். அவை அனைத்தும் தன்னுடையது என்று எண்ணும் மாயைகள் நீங்கும். உலக இன்பங்களைப் பெற எண்ணி பொய்யான தவங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீங்கும். இந்த உலகைப்பற்றிய நினைப்பொழிந்து தமக்குள் சிவபோகமாகிய என்றும் அழியாத உண்மை வீட்டில் பேரானந்த மயக்கத்துள் இருக்கலாம்.

பாடல் #335

பாடல் #335: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்
றாகும் மதத்தால் அறிவுஅழிந் தாரே.

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்று சிவ சிந்தனையில் இருக்கும் சிவயோகிகள் பிராணாயாம முறையில் மூச்சுக்காற்றை தன் வசப்படுத்தி அதனால் கிடைக்கும் குண்டலினி சக்தியின் மூலம் அமிர்தத்தை பருகி எட்டுவித சித்திகளையும் பெற்று பேரானந்தத்தில் இருப்பார்கள். அப்படி இல்லாமல் உலக இன்பங்களில் மோகம் கொண்டவர்கள் மதுவைக் குடித்து மூடர்களாகி மதம் பிடித்த யானை போல் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கோபம் கொண்டு அறிவு அழிந்து ஒரு நாள் இறந்து போகின்றனர்.

பாடல் #336

பாடல் #336: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

உண்ணீர் அமுதம் உறுமூ றலைத்திறந்
தெண்ணீர் குரவன் இணையடித் தாமரை
நண்ணீர் சமாதியி னாடிநீ ரானலங்
கண்ணா றொடேசென்று கால்வழி காணுமே.

விளக்கம்:

குருவின் ஈடுஇணையில்லாத தாமரை மலர் போன்ற திருவடிகளை எப்போதும் தியானத்தில் எண்ணி குண்டலினியை எழுப்பி மூச்சுக்காற்றின் மூலம் ஆறு ஆதார சக்கரங்களுக்கும் எடுத்துச் சென்று ஏழாவது சக்கரமான சகஸ்ரரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனோடு சேர்த்து பேரின்பத்தைத் தரும் அமிர்தம் ஊறும் இடத்தைத் திறந்து அதிலிருந்து கிடைக்கும் அமிர்தத்தை பருகி சமாதி நிலையை அடைந்து பேரானந்த நிலையில் இருக்கலாம்.

பாடல் #320

பாடல் #320: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.

விளக்கம்:

தனக்கோ உற்றார் உறவினர் மற்ற உயிர்கள் வாழும் உலகத்திற்கோ என்ன நடந்தாலும் இன்பம் துன்பம் என எது வந்தாலும் எல்லாம் இறை செயல் என்று எதனாலும் பாதிக்காத விருப்பு வெறுப்பு இல்லாமல் தான் செல்லும் இறை வழியிலிருந்து சிறிதும் மாறாமல் நடுநிலையான மனநிலையில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உண்மையான ஞானம் கிடைப்பதில்லை. அப்படி இருப்பவர்களுக்கு நரகமும் இல்லை. அப்படி இருக்கக்கூடியவர்களே நல்ல தேவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நின்ற நெறியிலேயே யானும் நிற்கின்றேன்.

பாடல் #321

பாடல் #321: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை ஓதி
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவோர்
நடுவுநின் றார்நல்ல நம்பனும் ஆமே.

விளக்கம்:

பாடல் #320ல் உள்ளபடி நடுநிலையுடன் இருந்து ஞானம் அடைந்தவர்களே பின்பு உலகத்தைக் காக்கும் திருமால் உயிர்களைப் படைக்கும் பிரம்மனாகவும் மாறுவார்கள். சிலர் சிறந்த ஞானியாகி சிவமாகவே மாறிவிடுவார்கள்.

பாடல் #322

பாடல் #322: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.

விளக்கம்:

பாடல் #320ல் உள்ளபடி நடுநிலையுடன் இருப்பவர்களில் சிலர் சிறந்த ஞானிகளாகி தேவர்களாகி சிவமாகவே ஆகின்றார்கள், யாமும் நடுநிலையுடன் இருப்பவர்களுடன் கலந்து இருக்கின்றேன்.

பாடல் #323

பாடல் #323: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடுவு ஆகிநின் றாரே.

விளக்கம்:

அண்டசராசரங்கள் அனைத்திலும் தோன்றிய அனைத்தையும் அழிப்பவன் சதாசிவமூர்த்தி ஒருவனே அவன் இல்லாமல் வேறு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து ஈசன் திருவடிகளை பற்றி மும்மூர்த்திகளுக்கும் முதன்மையானவனாகிய சதாசிவமூர்த்தியின் திருநாமமாகிய நமசிவாய மந்திரத்தை சிந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் நடுநிலையுடன் இருக்கும் ஞானியாகி விடுவார்கள்.