பாடல் #1547

பாடல் #1547: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

உறுமா றறிவது முண்ணின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்று மில்லை
யறுமா றதுவான தங்கியு ளாங்கே
யிறுமா றறிகில ரேழைக டாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உறுமா றறிவது முணணினற சொதி
பெறுமா றறியிற பிணககொனறு மிலலை
யறுமா றதுவான தஙகியு ளாஙகெ
யிறுமா றறிகில ரேழைக டாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி
பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை
அறும் ஆறு அது ஆனது அங்கி உள் ஆங்கே
இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே.

பதப்பொருள்:

உறும் (இறைவனை அடைகின்ற) ஆறு (வழி முறையை) அறிவதும் (அறிந்து கொள்வதும் அதன் மூலம்) உள் (தமக்கு உள்ளே) நின்ற (நிற்கின்ற) சோதி (ஜோதியாகிய இறைவனை)
பெறும் (பெறுகின்ற) ஆறு (வழி முறையை) அறியில் (அறிந்து கொண்டால்) பிணக்கு (குழப்பமானது) ஒன்றும் (என்று ஒன்றும்) இல்லை (இல்லாமல் போய்விடும்)
அறும் (அப்போது இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்தையும் அறுக்கின்ற) ஆறு (வழியாக) அது (அதுவே) ஆனது (ஆகிவிடும்) அங்கி (நன்மை செய்கின்ற ஜோதியாக) உள் (உள்ளே) ஆங்கே (இருக்கின்ற இறைவனை அடைந்து)
இறும் (தான் எனும் அகங்காரத்தை நீக்குகின்ற) ஆறு (வழி முறையை) அறிகிலர் (அறியாதவர்கள்) ஏழைகள் (மாயையில் சிக்கிக் கொண்டு இறைவனின் அருளைப் பெறாத ஏழைகளாகவே) தாமே (இருக்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைகின்ற வழி முறையை அறிந்து கொள்வதும் அதன் மூலம் தமக்கு உள்ளே நிற்கின்ற ஜோதியாகிய இறைவனை பெறுகின்ற வழி முறையை அறிந்து கொண்டால் குழப்பமானது என்று ஒன்றும் இல்லாமல் போய்விடும். அப்போது இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற அனைத்தையும் அறுக்கின்ற வழியாக அதுவே ஆகிவிடும். இதை கடை பிடித்து நன்மை செய்கின்ற ஜோதியாக உள்ளே இருக்கின்ற இறைவனை அடைந்து தான் எனும் அகங்காரத்தை நீக்குகின்ற வழி முறையை அறியாதவர்கள் மாயையில் சிக்கிக் கொண்டு இறைவனின் அருளைப் பெறாத ஏழைகளாகவே இருக்கின்றார்கள்.

பாடல் #1548

பாடல் #1548: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங்
கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வழிநடக குமபரி சொனறுணடு வையங
கழிநடக குணடவர கறபனை கெடபர
சுழிநடக குநது யரமது நீககிப
பழிநடப பாரககுப பரவலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம்
கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர்
சுழி நடக்கும் துயரம் அது நீக்கி
பழி நடப்பார்க்கு பரவலும் ஆமே.

பதப்பொருள்:

வழி (இறைவனை அடைகின்ற வழியில்) நடக்கும் (நடக்கும் போது) பரிசு (கிடைக்கின்ற பலன்) ஒன்று (ஒன்று) உண்டு (இருக்கின்றது) வையம் (இந்த உலகத்தில்)
கழி (தனது உடலுக்கு உண்டான வினையின் போக்கில்) நடக்கு (செல்பவர்கள்) உண்டவர் (மற்றவர்கள் மாயையால் தமக்கு உண்மை என்று நம்பி கூறுகின்ற) கற்பனை (கற்பனையான விஷயங்களை) கேட்பர் (நம்பி கேட்கிறார்கள்)
சுழி (இவர்கள் தங்களின் வினைகளின் வழியாகவே) நடக்கும் (மற்றவர்கள் சொல்லுவதை உண்மை என்று நம்பி செல்லுவதால்) துயரம் (பல விதமான துன்பங்களை அனுபவிக்கின்றனர்) அது (இதற்கு காரணமாக இருக்கின்ற வினைகளை) நீக்கி (நீக்குவதற்கு)
பழி (உலகத்தில் உள்ளவர்கள் தம் மீது எவ்வளவு பழியை சுமத்தினாலும் அதனால் கவலை படாமல்) நடப்பார்க்கு (இறைவனை அடைகின்ற வழியை விட்டுவிடாமல் நடப்பவர்களுக்கு) பரவலும் (இறைவனை அடைவதற்கான அனைத்து விதமான வழிகளும் அந்த வழிகளில் செல்வதற்கான பக்குவங்களும்) ஆமே (கிடைக்கும்).

விளக்கம்:

இறைவனை அடைகின்ற வழியில் நடக்கும் போது கிடைக்கின்ற பலன் ஒன்று இருக்கின்றது. இந்த உலகத்தில் தனது உடலுக்கு உண்டான வினையின் போக்கில் செல்பவர்கள் மற்றவர்கள் மாயையால் தமக்கு உண்மை என்று நம்பி கூறுகின்ற கற்பனையான விஷயங்களை நம்பி கேட்கிறார்கள். இவர்கள் தங்களின் வினைகளின் வழியாகவே மற்றவர்கள் சொல்லுவதை உண்மை என்று நம்பி செல்லுவதால் பல விதமான துன்பங்களை அனுபவிக்கின்றனர். இதற்கு காரணமாக இருக்கின்ற வினைகளை நீக்குவதற்கு உலகத்தில் உள்ளவர்கள் தம் மீது எவ்வளவு பழியை சுமத்தினாலும் அதனால் கவலை படாமல் இறைவனை அடைகின்ற வழியை விட்டுவிடாமல் நடப்பவர்களுக்கு இறைவனை அடைவதற்கான அனைத்து விதமான வழிகளும் அந்த வழிகளில் செல்வதற்கான பக்குவங்களும் கிடைக்கும்.

பாடல் #1549

பாடல் #1549: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

வழிசென்று மாதவம் வைகின்ற போது
பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
வழிசெல்லும் வல்வினை யார்திறம் விட்டிட்
டுழிசெல்லி லும்பர் தலைவன்முன் னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வழிசெனறு மாதவம வைகினற பொது
பழிசெலலும வலவினைப பறறறுத தாஙகெ
வழிசெலலும வலவினை யாரதிறம விடடிட
டுழிசெலலி லுமபர தலைவனமுன னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வழி சென்று மா தவம் வைகின்ற போது
பழி செல்லும் வல் வினை பற்று அறுத்து ஆங்கே
வழி செல்லும் வல் வினையார் திறம் விட்டிட்டு
உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே.

பதப்பொருள்:

வழி (இறைவனை அடைகின்ற வழியில் ஆசைகள் இல்லாமல்) சென்று (சென்று புரிகின்ற) மா (மாபெரும்) தவம் (தவமானது) வைகின்ற (அதன் பயனால் நிலை பெற்று நிற்கின்ற) போது (போது)
பழி (ஞானிகள் பழிக்கின்ற) செல்லும் (உலக வழிகளில் செல்லும் போது) வல் (வலிமையான) வினை (வினைகளினால்) பற்று (கட்டி இருக்கின்ற பற்றை) அறுத்து (அறுத்து விட்டு) ஆங்கே (தாம் இருக்கின்ற இடத்திலேயே)
வழி (இறைவனை நோக்கிய வழியில்) செல்லும் (செல்லுகின்றவர்) வல் (வலிமையான) வினையார் (வினைகளில் ஆட்பட்டு வினை வழியே செல்லுகின்ற உலகத்தவர்களின்) திறம் (உறுதியான பந்த பாசங்களை) விட்டிட்டு (விட்டு விட்டு)
உழி (இறைவன் இருக்கின்ற இடம் நோக்கி) செல்லில் (அவனை அடைகின்ற வழியில் சென்றால்) உம்பர் (தேவர்களுக்கு எல்லாம்) தலைவன் (தலைவனாகிய இறைவனின்) முன் (முன்பு) ஆமே (சென்று நிற்பார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைகின்ற வழியில் ஆசைகள் இல்லாமல் சென்று புரிகின்ற மாபெரும் தவமானது அதன் பயனால் நிலை பெற்று நிற்கின்ற போது, ஞானிகள் பழிக்கின்ற உலக வழிகளில் செல்லும் போது வலிமையான வினைகளினால் கட்டி இருக்கின்ற பற்றை அறுத்து விட்டு, தாம் இருக்கின்ற இடத்திலேயே இறைவனை நோக்கிய வழியில் செல்லுகின்றவர்கள், வலிமையான வினைகளில் ஆட்பட்டு வினை வழியே செல்லுகின்ற உலகத்தவர்களின் உறுதியான பந்த பாசங்களை விட்டு விட்டு, இறைவன் இருக்கின்ற இடம் நோக்கி அவனை அடைகின்ற வழியில் சென்றால், தேவர்களுக்கு எல்லாம் தலைவனாகிய இறைவனின் முன்பு சென்று நிற்பார்கள்.

பாடல் #1527

பாடல் #1527: ஐந்தாம் தந்திரம் – 20. தீவிர தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி அதி விரைவாக வருகின்ற தன்மை)

இருவினை நேரொப்பி லின்னருட் சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தருமெனு ஞானத்தாற் றன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருவினை நெரொபபி லினனருட சததி
குருவென வநது குணமபல நீககித
தருமெனு ஞானததாற றனசெய லறறால
திரிமலந தீர்நது சிவனவ னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இரு வினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி
குரு என வந்து குணம் பல நீக்கி
தரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால்
திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே.

பதப்பொருள்:

இரு (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) வினை (வினைகளையும்) நேர் (சரிசமமாக பாவித்து அனுபவிக்கும் நிலையை அடைந்த சாதகருக்குள்) ஒப்பு (தனக்கு ஒப்பானது என்று) இல் (ஒன்றும் இல்லாதவளாகிய) இன் (இனிமையான) அருள் (பேரருளைக் கொண்ட) சத்தி (இறைவியானவள்)
குரு (குரு) என (எனும் நிலையில்) வந்து (வந்து) குணம் (சாதகருக்குள் நன்மை தீமை ஆகிய தன்மைகள்) பல (பல விதமாக இருப்பவை அனைத்தையும்) நீக்கி (நீக்கி விட்டு)
தரும் (அவளது பெரும் கருணையினால் தரப்படுவது) எனும் (என்று அறியப்படுகின்ற) ஞானத்தால் (பேரறிவு ஞானத்தால்) தன் (சாதகர் தன்னுடைய) செயல் (செயல் என்று ஒன்றும்) அற்றால் (இல்லாமல் இருக்கும் நிலையை அடைந்து விட்டால்)
திரி (சாதகருக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான) மலம் (மலங்களும்) தீர்ந்து (நீங்கப் பெற்று) சிவன் (சிவம் எனும் பரம் பொருளாகவே) அவன் (சாதகரும்) ஆமே (ஆகி விடுவார்).

விளக்கம்:

நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் சரிசமமாக பாவித்து அனுபவிக்கும் நிலையை அடைந்த சாதகருக்குள் தனக்கு ஒப்பானது என்று ஒன்றும் இல்லாதவளாகிய இனிமையான பேரருளைக் கொண்ட இறைவியானவள் குரு எனும் நிலையில் வந்து சாதகருக்குள் நன்மை தீமை என்று பல விதமாக இருக்கின்ற அனைத்து தன்மைகளையும் நீக்கி விட்டு, அவளது பெரும் கருணையினால் தரப்படுவது என்று அறியப்படுகின்ற பேரறிவு ஞானத்தை தந்து அருளுவாள். அந்த ஞானத்தால் சாதகர் தன்னுடைய செயல் என்று ஒன்றும் இல்லாமல் இருக்கும் நிலையை அடைந்து விட்டால் சாதகருக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களும் நீங்கப் பெற்று சிவம் எனும் பரம் பொருளாகவே சாதகரும் ஆகி விடுவார்.

பாடல் #1528

பாடல் #1528: ஐந்தாம் தந்திரம் – 20. தீவிர தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி அதி விரைவாக வருகின்ற தன்மை)

இரவும் பகலு மிறந்த விடத்தே
குரவன் செய்கின்ற குழலியை யுன்ன
யரவஞ் செய்யாம லவளுடன் சேரப்
பரிவொன்றி லாளும் பராபரை தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இரவும பகலு மிறநத விடததெ
குரவன செயகினற குழலியை யுனன
யரவஞ செயயாம லவளுடன செரப
பரிவொனறி லாளும பராபரை தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இரவும் பகலும் இறந்த இடத்தே
குரவன் செய்கின்ற குழலியை உன்ன
அரவம் செய்யாமல் அவளுடன் சேர
பரிவு ஒன்றில் ஆளும் பரா பரை தானே.

பதப்பொருள்:

இரவும் (இரவு) பகலும் (பகல் எனும் இரண்டு விதமான நிகழ்வுகளையும்) இறந்த (உணராத அளவிற்கு தன் நிலை மறந்து இருக்கின்ற) இடத்தே (சாதகரின் உள்ளத்தில்)
குரவன் (குரவம் எனும் மலரை) செய்கின்ற (பின்னியிருக்கின்ற) குழலியை (கூந்தலைக் கொண்ட இறைவியை) உன்ன (அந்த உள்ளத்தில் நினைத்துக் கொண்டே)
அரவம் (எந்த விதமான ஆரவாரமும்) செய்யாமல் (செய்யாமல்) அவளுடன் (அவளோடு) சேர (சேர்ந்து ஒன்றாக இலயித்து இருந்தால்)
பரிவு (தனது மாபெரும் கருணை எனும்) ஒன்றில் (அருளினால்) ஆளும் (சாதகரை ஆட்கொண்டு அருளுவாள்) பரா (பராவாகிய இறைவனும்) பரை (பரையாகிய இறைவியும்) தானே (சேர்ந்து இருக்கும் அருள் சக்தி).

விளக்கம்:

இரவு பகல் எனும் இரண்டு விதமான நிகழ்வுகளையும் உணராத அளவிற்கு தன் நிலை மறந்து இருக்கின்ற சாதகரின் உள்ளத்தில் குரவம் எனும் மலரை பின்னியிருக்கின்ற கூந்தலைக் கொண்ட இறைவியை அந்த உள்ளத்தில் நினைத்துக் கொண்டே எந்த விதமான ஆரவாரமும் செய்யாமல் அவளோடு சேர்ந்து ஒன்றாக இலயித்து இருந்தால் தனது மாபெரும் கருணை எனும் அருளினால் சாதகரை ஆட்கொண்டு அருளுவாள் பராவாகிய இறைவனும் பரையாகிய இறைவியும் சேர்ந்து இருக்கும் அருள் சக்தி.

பாடல் #1529

பாடல் #1529: ஐந்தாம் தந்திரம் – 20. தீவிர தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி அதி விரைவாக வருகின்ற தன்மை)

மாலை விளக்கும் மதியமு ஞாயிறுஞ்
சால விளக்குந் தனிச்சுட ரண்ணலும்
ஞாலம் விளக்கிய நாதனென் னுள்புகுந்
தூனை விளக்கி யுடனிருந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மாலை விளககு மதியமு ஞாயிறுஞ
சால விளககுந தனிசசுட ரணணலும
ஞாலம விளககிய நாதனென னுளபுகுந
தூனை விளககி யுடனிருந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்
சால விளக்கும் தனி சுடர் அண்ணலும்
ஞாலம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து
ஊனை விளக்கி உடன் இருந்தானே.

பதப்பொருள்:

மாலை (அந்தி சாயும் வேளையில் வெளிச்சத்திற்காக ஏற்றப்படுகின்ற) விளக்கும் (விளக்குகளில் இருந்து வருகின்ற ஒளியையும்) மதியமும் (இரவு நேரங்களில் நிலவில் இருந்து வருகின்ற ஒளியையும்) ஞாயிறும் (பகல் நேரங்களில் சூரியனில் இருந்து வருகின்ற ஒளியையும்)
சால (இறைவனை வணங்கும் பூஜைகளில் ஏற்றி வைக்கின்ற) விளக்கும் (தீபங்களில் இருந்து வருகின்ற ஒளியையும்) தனி (தனிப் பெரும்) சுடர் (சுடராக இருக்கின்ற) அண்ணலும் (இறைவனின் ஜோதி உருவமாகவே பார்த்து உணர்ந்தால்)
ஞாலம் (உலகத்தை) விளக்கிய (விளக்கி அருளுகின்ற) நாதன் (தலைவனாகிய இறைவன்) என் (எமது) உள் (உடலுக்குள்) புகுந்து (புகுந்து வந்து)
ஊனை (எமது உடலுக்குள் இருக்கின்ற உண்மை பொருளையும்) விளக்கி (விளக்கி யாம் அறியும் படி செய்து) உடன் (எம்முடன் எப்போதும்) இருந்தானே (இருப்பான்).

விளக்கம்:

அந்தி சாயும் வேளையில் வெளிச்சத்திற்காக ஏற்றப்படுகின்ற விளக்குகளில் இருந்து வருகின்ற ஒளியையும், இரவு நேரங்களில் நிலவில் இருந்து வருகின்ற ஒளியையும், பகல் நேரங்களில் சூரியனில் இருந்து வருகின்ற ஒளியையும், இறைவனை வணங்கும் பூஜைகளில் ஏற்றி வைக்கின்ற தீபங்களில் இருந்து வருகின்ற ஒளியையும், தனிப் பெரும் சுடராக இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவமாகவே சாதகர் பார்த்து உணர்ந்தால், உலகத்தை விளக்கி அருளுகின்ற தலைவனாகிய இறைவன் அவரது உடலுக்குள் புகுந்து வந்து, அவரது உடலுக்குள் இருக்கின்ற உண்மை பொருளையும் விளக்கி அவர் அறியும் படி செய்து அவருடன் எப்போதும் இருப்பான்.

பாடல் #1523

பாடல் #1523: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)

கன்னிக்கும் பெண்பிள்ளை யப்பனார் தோட்டத்தி
லெண்ணிக்கு மேழேழ் பிறவி யுணர்விக்கு
முண்ணிற்ப தெல்லா மொழிவ முதல்வனைக்
கண்ணுற்று நின்ற கனியது வாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கனனிககும பெணபிளளை யபபனார தொடடததி
லெணணிககு மெழெழ பிறவி யுணரவிககு
முணணிறப தெலலா மொழிவ முதலவனைக
கணணுறறு நினற கனியது வாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கன்னிக்கும் பெண் பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழ் ஏழ் பிறவி உணர்விக்கும்
உள் நிற்பது எல்லாம் ஒழிவது முதல்வனை
கண் உற்று நின்ற கனி அது ஆகுமே.

பதப்பொருள்:

கன்னிக்கும் (எப்போதும் இளமையுடன் இயங்கிக் கொண்டே இருக்கின்ற) பெண் (பெண் தன்மை கொண்ட) பிள்ளை (பிள்ளையாகிய இறைவியின் அருட் சக்திக்கு) அப்பனார் (அப்பாவாக / தந்தையாக இருக்கின்ற இறைவனுக்கு சொந்தமாகிய) தோட்டத்தில் (அண்ட சராசரங்கள் எனும் தோட்டத்தில் இருக்கும்)
எண்ணிக்கும் (எண்ணிலடங்காத அளவிற்கு இருக்கின்ற பிறவிகளை) ஏழ் (ஏழும்) ஏழ் (ஏழும் கூட்டி வரும் மொத்தம் பதினான்கு உலகங்களிலும்) பிறவி (பல விதமாக எடுக்கின்ற அனைத்து பிறவிகளையும்) உணர்விக்கும் (சாதகருக்கு உணர வைத்து)
உள் (சாதகருக்குள்) நிற்பது (நிற்கின்ற) எல்லாம் (மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகிய அனைத்தையும்) ஒழிவது (அழிய வைக்கின்ற) முதல்வனை (ஆதி மூலமாகிய இறைவனை அடைய செய்து)
கண் (சாதகரின் கண்ணிற்கு) உற்று (உள்ளே) நின்ற (நின்று) கனி (அனைத்தையும் உணர வைக்கின்ற பேரின்ப ஞானமாக) அது (அந்த அருள் சக்தியே) ஆகுமே (இருக்கின்றாள்).

விளக்கம்:

எப்போதும் இளமையுடன் இயங்கிக் கொண்டே இருக்கின்ற பெண் தன்மை கொண்ட பிள்ளையாகிய இறைவியின் அருட் சக்திக்கு தந்தையாக இருக்கின்ற இறைவனுக்கு சொந்தமாகிய அண்ட சராசரங்கள் எனும் தோட்டத்தில் இருக்கும் எண்ணிலடங்காத அளவிற்கு இருக்கின்ற மொத்தம் பதினான்கு உலகங்களிலும் பல விதமாக எடுக்கின்ற அனைத்து பிறவிகளையும் சாதகருக்கு உணர வைத்து, சாதகருக்குள் நிற்கின்ற மும்மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை ஆகிய அனைத்தையும் அழிய வைக்கின்ற ஆதி மூலமாகிய இறைவனை அடைய செய்து சாதகரின் கண்ணிற்கு உள்ளே நின்று அனைத்தையும் உணர வைக்கின்ற பேரின்ப ஞானமாக அந்த அருள் சக்தியே இருக்கின்றாள்.

பாடல் #1524

பாடல் #1524: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)

பிறப்பை யறுக்கும் பெருந்தவ நல்கு
மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்
குறப்பெண் குவிமுலைக் கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிறபபை யறுககும பெருநதவ நலகு
மறபபை யறுககும வழிபட வைககுங
குறபபெண குவிமுலைக கொமள வலலி
சிறபபொடு பூசனை செயயநின றாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிறப்பை அறுக்கும் பெரும் தவம் நல்கும்
மறப்பை அறுக்கும் வழி பட வைக்கும்
குற பெண் குவி முலை கோமள வல்லி
சிறப்போடு பூசனை செய்ய நின்றாளே.

பதப்பொருள்:

பிறப்பை (இனிமேல் எடுக்க வேண்டிய அனைத்து பிறவிகளையும்) அறுக்கும் (அறுத்து விடக் கூடிய) பெரும் (மிகப் பெரும்) தவம் (தவத்தை) நல்கும் (அருளுபவளாகவும்)
மறப்பை (இறைவனிடமிருந்தே பிரிந்து வந்திருக்கின்றோம் என்பதை மறந்து விட்டு மாயையில் இருக்கின்ற நிலையை) அறுக்கும் (அறுக்கின்ற) வழி (வழியில்) பட (சாதகர்களை செல்ல) வைக்கும் (வைக்கின்றவளாகவும்)
குற (அதற்கு தேவையான அனைத்து ஞானங்களையும்) பெண் (அருளுகின்ற சக்தியாகவும்) குவி (குவிந்த) முலை (மார்பகங்களின் மூலம் அமிழ்தத்தை வழங்குபவளாகவும்) கோமள (அடியவர்களை தன் பால் ஈர்க்கின்ற பேரழகுடன்) வல்லி (என்றும் இளமையானவளாகவும் இருக்கின்ற இறைவியானவள்)
சிறப்போடு (சிறப்பு பொருந்தியவளாக) பூசனை (அவர்களை பூஜைகள்) செய்ய (செய்ய வைத்துக் கொண்டே) நின்றாளே (அருட் சக்தியாக எப்போதும் சேர்ந்தே நிற்கின்றாள்).

விளக்கம்:

இனிமேல் எடுக்க வேண்டிய அனைத்து பிறவிகளையும் அறுத்து விடக் கூடிய மிகப் பெரும் தவத்தை அருளுபவளாகவும் இறைவனிடமிருந்தே பிரிந்து வந்திருக்கின்றோம் என்பதை மறந்து விட்டு மாயையில் இருக்கின்ற நிலையை அறுக்கின்ற வழியில் சாதகர்களை செல்ல வைக்கின்றவளாகவும் அதற்கு தேவையான அனைத்து ஞானங்களையும் அருளுகின்ற சக்தியாகவும் குவிந்த மார்பகங்களின் மூலம் அமிழ்தத்தை வழங்குபவளாகவும் அடியவர்களை தன் பால் ஈர்க்கின்ற பேரழகுடன் என்றும் இளமையானவளாகவும் இருக்கின்ற இறைவியானவள் சிறப்பு பொருந்தியவளாக அவர்களை பூஜைகள் செய்ய வைத்துக் கொண்டே அருட் சக்தியாக எப்போதும் சேர்ந்தே நிற்கின்றாள்.

பாடல் #1525

பாடல் #1525: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)

தாங்குமின் னெட்டுத் திசைக்குந் தலைமகள்
பூங்கமழ் பொய்கைப் புரிகுழ லாளோடு
மாங்கது சேரு மறிவுடை யாளர்க்குத்
தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாஙகுமின னெடடுத திசைககுந தலைமகள
பூஙகமழ பொயகைப புரிகுழ லாளொடு
மாஙகது செரு மறிவுடை யாளரககுத
தூஙகொளி நீலந தொடரதலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தாங்குமின் எட்டு திசைக்கும் தலை மகள்
பூம் கமழ் பொய்கை புரி குழலாளோடும்
ஆங்கு அது சேரும் அறிவு உடையாளர்க்கு
தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே.

பதப்பொருள்:

தாங்குமின் (சாதகர்கள் தங்களின் உள்ளத்திற்குள் தாங்கிக் கொண்டால்) எட்டு (எட்டு விதமான) திசைக்கும் (திசைகளுக்கும்) தலை (தலைவியாக) மகள் (வீற்றிருக்கின்ற இறைவி)
பூம் (நறுமணமிக்க மலரில் / சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில்) கமழ் (இருந்து வருகின்ற நறுமணம் பரந்து விரிகின்ற / இருந்து அருளானது உடல் முழுவதும் பரந்து விரிகின்ற) பொய்கை (ஊற்று பெருகும் குளத்தில் / அமிழ்தம் ஊறி பெருகுவதில்) புரி (அருள் புரிகின்ற) குழலாளோடும் (கூந்தலைக் கொண்ட இறைவியோடு)
ஆங்கு (அவள் இருக்கின்ற குளத்தில் / சகஸ்ரதளத்தில்) அது (தமது குண்டலினி சக்தியை) சேரும் (கொண்டு சேர்க்கின்ற) அறிவு (ஞானத்தை) உடையாளர்க்கு (அறிந்து கொண்டவர்களுக்கு)
தூங்கு (இது வரை நெற்றிக்கு நடுவில் தூங்கிக் கொண்டு இருந்த) ஒளி (ஜோதியாகிய) நீலம் (நீல நிற ஒளியானது விழிப்பு பெற்றதால் உருவாகும் பேரறிவு ஞானமானது) தொடர்தலும் (சாகதருக்கு எப்போதும் தொடர்ந்து) ஆமே (கொண்டே இருக்கும்).

விளக்கம்:

எட்டு விதமான திசைகளுக்கும் தலைவியாக வீற்றிருக்கின்ற இறைவியை சாதகர்கள் தங்களின் உள்ளத்திற்குள் தாங்கிக் கொண்டால் சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் இருந்து அருளானது உடல் முழுவதும் பரந்து விரிகின்ற அமிழ்தம் ஊறி பெருகுவதில் அருள் புரிகின்ற கூந்தலைக் கொண்ட இறைவியோடு அவள் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் தமது குண்டலினி சக்தியை கொண்டு சேர்க்கின்ற ஞானத்தை அறிந்து கொண்டவர்களுக்கு இது வரை நெற்றிக்கு நடுவில் தூங்கிக் கொண்டு இருந்த ஜோதியாகிய நீல நிற ஒளியானது விழிப்பு பெற்றதால் உருவாகும் பேரறிவு ஞானமானது சாகதருக்கு எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பாடல் #1526

பாடல் #1526: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)

நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவ
னணுகிய வொன் றறியாத வொருவ
னணுகு முலகெங்கு மாவியு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நணுகினு ஞானக கொழுநதொனறு நலகும
பணிகிலும பனமலர தூவிப பணிவ
னணுகிய வொன றறியாத வொருவ
னணுகு முலகெஙகு மாவியு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும்
பணிகிலும் பல் மலர் தூவி பணிவன்
அணுகிய ஒன்று அறியாத ஒருவன்
அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே.

பதப்பொருள்:

நணுகினும் (அருள் சக்தியை நெருங்கிச் சென்று அடைந்தால்) ஞான (ஞானத்தின்) கொழுந்து (உச்சமாக இருக்கின்ற) ஒன்று (பேரறிவு ஞானத்தை) நல்கும் (அந்த அருட் சக்தியே வழங்குவாள்)
பணிகிலும் (அப்படி இல்லாமல் அருள் சக்தியை ஞானத்தால் நெருங்கி அடைய முடியாவிட்டாலும்) பல் (பல விதமான) மலர் (மலர்களை) தூவி (தூவி) பணிவன் (வணங்கி வழிபடும் போது அந்த வழிபாட்டின் பயனால்)
அணுகிய (நம்மை நெருங்கி வரும்) ஒன்று (அருட் சக்தியை) அறியாத (தன் அறிவால் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாத) ஒருவன் (சாதகனாக ஒருவன் இருந்தாலும் அருள் சக்தி வழங்கும் ஞானத்தால் அறியும் போது)
அணுகும் (அவன் இருக்கின்ற) உலகு (உலகம் மட்டுமின்றி அனைத்து உலகங்கள்) எங்கும் (எங்கும்) ஆவியும் (இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் நிற்கின்ற ஆன்மாவாக) ஆமே (அந்த அருட் சக்தியே இருக்கின்றாள் என்பதை அறிந்து கொள்ளலாம்).

விளக்கம்:

அருள் சக்தியை நெருங்கிச் சென்று அடைந்தால் ஞானத்தின் உச்சமாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தை அந்த அருட் சக்தியே வழங்குவாள். அப்படி இல்லாமல் அருள் சக்தியை ஞானத்தால் நெருங்கி அடைய முடியாவிட்டாலும் பல விதமான மலர்களை தூவி வணங்கி வழிபடும் போது அந்த வழிபாட்டின் பயனால் நம்மை நெருங்கி வரும் அருட் சக்தியை தன் அறிவால் முழுவதுமாக அறிந்து கொள் முடியாத சாதகனாக ஒருவன் இருந்தாலும் அருள் சக்தி வழங்கும் ஞானத்தால் அறியும் போது அவன் இருக்கின்ற உலகம் மட்டுமின்றி அனைத்து உலகங்கள் எங்கும் இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் நிற்கின்ற ஆன்மாவாக அந்த அருட் சக்தியே இருக்கின்றாள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கருத்து:

யோகத்தாலும் ஞானத்தினாலும் இறைவியை அடைய முடியாதவர்கள் கூட சரியை மற்றும் கிரியையின் மூலமே இறைவியை அடைந்து விட முடியும்.