பாடல் #1567

பாடல் #1567: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

சைவச் சமையத் தனிநாயக னந்தி
யுய்ய வகுத்த தொருநெறி யொன்றுண்டு
தெய்வ வரனெறி சன்மார்கஞ் சேர்ந்தது
வையத் துள்ளவர்க்கு வகுத்துவைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சைவச சமையத தனிநாயக னநதி
யுயய வகுதத தொருநெறி யொனறுணடு
தெயவ வரனெறி சனமாரகஞ செரநதது
வையத துளளவரககு வகுததுவைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சைவ சமைய தனி நாயகன் நந்தி
உய்ய வகுத்தது ஒரு நெறி ஒன்று உண்டு
தெய்வ அரன் நெறி சன்மார்க்கம் சேர்ந்தது
வையத்து உள்ளவர்க்கு வகுத்து வைத்தானே.

பதப்பொருள்:

சைவ (சைவ) சமைய (சமயத்திற்கு) தனி (தனிப் பெரும்) நாயகன் (தலைவனாகவும்) நந்தி (குரு நாதனாகவும் இருக்கின்ற இறைவன்)
உய்ய (அனைத்து உயிர்களும் முக்தியை அடைவதற்காக) வகுத்தது (வகுத்து அருளிய) ஒரு (ஒரு) நெறி (வழி முறையில்) ஒன்று (அன்பு ஒன்று மட்டுமே) உண்டு (இருக்கின்றது)
தெய்வ (அதுவே தெய்வீகமான) அரன் (இறைவனை அடைவதற்கான) நெறி (வழி முறையாகும்) சன்மார்க்கம் (உண்மை வழி முறைகள் அனைத்தும்) சேர்ந்தது (அதனோடு சேர்ந்தே)
வையத்து (உலகத்தில்) உள்ளவர்க்கு (உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் தகுதிக்கு ஏற்றவாறு) வகுத்து (பல வழி முறைகளாக பிரித்து) வைத்தானே (வைத்து அருளினான் இறைவன்).

விளக்கம்:

சைவ சமயத்திற்கு தனிப் பெரும் தலைவனாகவும் குரு நாதனாகவும் இருக்கின்ற இறைவன் அனைத்து உயிர்களும் முக்தியை அடைவதற்காக வகுத்து அருளிய வழி முறையில் அன்பு ஒன்று மட்டுமே இருக்கின்றது. அதுவே தெய்வீகமான இறைவனை அடைவதற்கான வழி முறையாகும். உண்மை வழி முறைகள் அனைத்தும் அதனோடு சேர்ந்தே உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் தகுதிக்கு ஏற்றவாறு பல வழி முறைகளாக பிரித்து வைத்து அருளினான் இறைவன்.

பாடல் #1568

பாடல் #1568: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

இத்தவ மத்தவ மென்றிரு பேரிடும்
பித்தரைக் காணில னாமெங்கள் பேர்நந்தி
யெத்தவ மாகிலெ னெங்கும் பிறக்கிலெ
னொத்துணர் வார்க்குஒல்லை யூர்புக லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இததவ மததவ மெனறிரு பெரிடும
பிததரைக காணில னாமெஙகள பெரநநதி
யெததவ மாகிலெ னெஙகும பிறககிலெ
னொததுணர வாரககுஒலலை யூரபுக லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இத் தவம் அத் தவம் என்று இரு பேர் இடும்
பித்தரை காண் இலன் ஆம் எங்கள் பேர் நந்தி
எத் தவம் ஆகில் என் எங்கும் பிறக்கில் என்
ஒத்து உணர்வார்க்கு ஒல்லை ஊர் புகல் ஆமே.

பதப்பொருள்:

இத் (இந்த) தவம் (தவம் சிறந்தது) அத் (அந்த) தவம் (தவம் சிறப்பு இல்லாதது) என்று (என்று) இரு (நன்மை தீமை என்று இரண்டு விதமான) பேர் (பெயர்களை) இடும் (வைக்கின்ற)
பித்தரை (பைத்தியக் காரர்களை) காண் (காண்பது) இலன் (இல்லாதவன்) ஆம் (ஆக இருக்கின்றான்) எங்கள் (எங்களின்) பேர் (பெருமை மிக்க) நந்தி (குருநாதனாகிய இறைவன்)
எத் (எந்த) தவம் (தவத்தை) ஆகில் (கடைபிடித்தால்) என் (என்ன?) எங்கும் (இந்த உலகத்தில் எந்த இடத்தில்) பிறக்கில் (எந்த உயிராக பிறந்திருந்தால்) என் (என்ன?)
ஒத்து (அனைத்து உயிர்களிலும் அன்பின் வடிவமாக இறைவன் ஒருவனே இருக்கின்றான் என்பதை) உணர்வார்க்கு (உணருபவர்களுக்கு) ஒல்லை (உடனடியாக) ஊர் (முக்திக்குள்) புகல் (நுழைய) ஆமே (முடியும்).

விளக்கம்:

இந்த தவம் சிறந்தது அந்த தவம் சிறப்பு இல்லாதது என்று நன்மை தீமை என்று இரண்டு விதமான பெயர்களை வைக்கின்ற பைத்தியக்காரர்களை எங்களின் பெருமை மிக்க குருநாதனாகிய இறைவன் கண்டு கொள்வது இல்லை. எந்த தவத்தை கடைபிடித்தால் என்ன? இந்த உலகத்தில் எந்த இடத்தில் எந்த உயிராக பிறந்திருந்தால் என்ன? அனைத்து உயிர்களிலும் அன்பின் வடிவமாக இறைவன் ஒருவனே இருக்கின்றான் என்பதை உணருபவர்களுக்கு உடனடியாக முக்திக்குள் நுழைய முடியும்.

பாடல் #1569

பாடல் #1569: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஆமே பிரான்முக மைந்தொடு மாருயி
ராமே பிரானுக் கதோமுக மானதா
மாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆமெ பிரானமுக மைநதொடு மாருயி
ராமெ பிரானுக கதொமுக மானதா
மாமெ பிரானுககுந தனசிர மாலைககும
நாமெ பிரானுககு நரரியல பாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆருயிர்
ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆனதாம்
ஆமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரர் இயல்பு ஆமே.

பதப்பொருள்:

ஆமே (ஆமாம் இருக்கின்றது) பிரான் (தலைவனாகிய இறைவனுக்கு) முகம் (முகங்கள்) ஐந்தொடும் (ஐந்தோடு) ஆருயிர் (உலகில் உள்ள உயிர்கள் எல்லாம்)
ஆமே (ஆமாம் இருக்கின்றது) பிரானுக்கு (தலைவனாகிய இறைவனுக்கு) அதோ (கீழ் நோக்கி இருக்கின்ற ஆறாவது) முகம் (முகமான) ஆனதாம் (அதோ முகமாக இருக்கின்றது. ஆகவே அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்து உயிர்களும் இறைவனுக்கு அதோ முகமாகவே இருக்கின்றன)
ஆமே (ஆமாம் இருக்கின்றது) பிரானுக்கும் (தலைவனாகிய இறைவனுக்கும்) தன் (தமது கழுத்தில் அணிந்திருக்கும்) சிர (மண்டையோட்டு) மாலைக்கும் (மாலையாக)
நாமே (உயிர்கள் பலவாறாக அழைக்கின்ற பெயர்களே இருக்கின்றது) பிரானுக்கு (இவையெல்லாம் தலைவனாகிய இறைவனுக்கு) நரர் (மனிதர்களாகிய உயிர்களின்) இயல்பு (இயல்பான மாயையினால்) ஆமே (இருக்கின்றனவே தவிர இறைவனுக்கு என்று தனியாக ஒரு பெயரோ உருவமோ அல்லது தன்மையோ கிடையாது.

விளக்கம்:

அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனுக்கு ஐந்து திரு முகங்களோடு ஆறாவது முகமான அதோ முகமாக அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்து உயிர்களுமே இருக்கின்றன. இந்த உலகத்தில் இருக்கின்ற உயிர்களால் அழைக்கப் படுகின்ற பலவாறான பெயர்களே இறைவன் தனது திருக்கழுத்தில் அணிந்து இருக்கின்ற மண்டையோட்டு மாலையாக இருக்கின்றது. இவையெல்லாம் மாயையை தமது இயல்பாக கொண்ட மனிதர்களால் பாவனை செய்யப் பட்ட உருவகங்களே தவிர இறைவனுக்கு என்று தனியாக ஒரு பெயரோ உருவமோ அல்லது தன்மையோ கிடையாது.

கருத்து:

இறைவனை அடைவதற்கு இருக்கின்ற ஆறு விதமான வழிகளில் செல்லுகின்ற உயிர்கள் தங்களின் மாயையால் இறைவனுக்கு பல விதமான பெயர்களையும் உருவங்களையும் பாவனை செய்து வழி படுகின்றன. அனைத்து பெயர்களும் உருவங்களும் ஒரே பரம் பொருளையே குறிக்கின்றது.

இறைவனுடைய ஆறு முகங்கள்:

  1. ஈசானம்
  2. தற்புருடம்
  3. அகோரம்
  4. வாமதேவம்
  5. சத்யோ ஜாதம்
  6. அதோ முகம்

பாடல் #1570

பாடல் #1570: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஆதிப் பிரானுல கேழு மளந்தவ
னோதக் கடலு முயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையி னின்றபரா சத்தி
யாதிகட் டெய்வமு மந்தமு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆதிப பிரானுல கெழு மளநதவ
னொதக கடலு முயிரகளு மாயநிறகும
பெதிப பிலாமையி னினறபரா சததி
யாதிகட டெயவமு மநதமு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆதி பிரான் உலகு ஏழும் அளந்தவன்
ஓத கடலும் உயிர்களும் ஆய் நிற்கும்
பேதிப்பு இலாமையில் நின்ற பராசத்தி
ஆதி கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

பதப்பொருள்:

ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற) பிரான் (தலைவனாகிய இறைவனே) உலகு (உலகங்கள்) ஏழும் (ஏழையும்) அளந்தவன் (அவற்றின் தேவைக்கு ஏற்ப அளந்து படைத்தான்)
ஓத (அலைகளால் பேரிரைச்சல் கொண்டு இருக்கின்ற) கடலும் (கடல்களும்) உயிர்களும் (அது சூழ்ந்து நிற்கின்ற உலகத்தில் வாழ்கின்ற உயிர்களும்) ஆய் (ஆகிய அனைத்துமாக) நிற்கும் (அவனே நிற்கின்றான்)
பேதிப்பு (அவை அனைத்தில் இருந்தும் வேறு பட்டு) இலாமையில் (இல்லாதவனாக) நின்ற (ஒன்றாகவே கலந்து நிற்கின்ற இறைவனே) பராசத்தி (அசையும் சக்தியாகவும் இருந்து அனைத்தையும் இயக்குகின்றான்)
ஆதி (ஆதியிலிருந்தே) கண் (அனைத்தையும் பார்க்கின்றவனாகவும் பார்க்கப் படுகின்ற பொருளாகவும் இருக்கின்ற) தெய்வமும் (தெய்வமாகவும்) அந்தமும் (அனைத்தையும் ஊழிக் காலத்தில் அழிக்கின்ற தெய்வமாகவும்) ஆமே (அவனே இருக்கின்றான்).

விளக்கம்:

ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனாகிய இறைவனே ஏழு உலகங்களையும் அவற்றின் தேவைக்கு ஏற்ப அளந்து படைத்தான். அலைகளால் பேரிரைச்சல் கொண்டு இருக்கின்ற கடல்களும் அது சூழ்ந்து நிற்கின்ற உலகத்தில் வாழ்கின்ற உயிர்களும் ஆகிய அனைத்துமாக அவனே நிற்கின்றான். அவை அனைத்தில் இருந்தும் வேறு பட்டு இல்லாதவனாக ஒன்றாகவே கலந்து நிற்கின்ற இறைவனே அசையும் சக்தியாகவும் இருந்து அனைத்தையும் இயக்குகின்றான். ஆதியிலிருந்தே அனைத்தையும் பார்க்கின்றவனாகவும் பார்க்கப் படுகின்ற பொருளாகவும் இருக்கின்ற தெய்வமாகவும் அனைத்தையும் ஊழிக் காலத்தில் அழிக்கின்ற தெய்வமாகவும் அவனே இருக்கின்றான்.

கருத்து:

உயிர்களுக்குள் இருக்கின்ற இறைவனே உயிர்கள் வெளிப்புறத்தில் பார்க்கின்ற அனைத்துமாகவும் இருக்கின்றான் அனைத்தையும் இயக்குகின்றான் என்பதை உணர்ந்து வழி படுதலே அவனை அடைவதற்கு எளிதான வழியாகும்.

பாடல் #1571

பாடல் #1571: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஆய்ந்தறி வார்கள மரர்வித் தியாதர
ராய்ந்தறி யாவண்ணம் நின்ற வரனெறி
யாய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ
வாய்ந்தறிந் தேன்மன மயம்மைகண் டேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆயநதறி வாரகள மரரவித தியாதர
ராயநதறி யாவணணம நினற வரனெறி
யாயநதறிந தெனவன செவடி கைதொழ
வாயநதறிந தெனமன மயமமைகண டெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆய்ந்து அறிவார்கள் அமரர் வித்தியாதரர்
ஆய்ந்து அறியா வண்ணம் நின்ற அரன் நெறி
ஆய்ந்து அறிந்தேன் அவன் சேவடி கை தொழ
ஆய்ந்து அறிந்தேன் மனம் மய அம்மை கண்டேனே.

பதப்பொருள்:

ஆய்ந்து (இறைவனை ஆராய்ந்து) அறிவார்கள் (அறிவார்கள்) அமரர் (அமரர்களும்) வித்தியாதரர் (உண்மை ஞானமும் உலக ஞானமும் பெற்ற ஞானிகளும்)
ஆய்ந்து (ஆனாலும் ஆராய்ந்து) அறியா (அறிந்து கொள்ள முடியாத) வண்ணம் (தன்மையை உடையவனாக) நின்ற (நின்று) அரன் (அனைத்தையும் காக்கின்ற இறைவனை அடைகின்ற) நெறி (வழி முறையாக இருக்கின்றது அன்பினால் உணர்கின்ற வழி முறையாகும்)
ஆய்ந்து (அப்படிப் பட்ட இறைவனை யானும் அன்பினால் ஆராய்ந்து) அறிந்தேன் (அறிந்து கொண்டு) அவன் (அவனின்) சேவடி (திருவடிகளை) கை (எமது இரண்டு கைகளையும் கூப்பி) தொழ (தொழுது வணங்கி)
ஆய்ந்து (எமக்குள்ளே ஆராய்ந்து) அறிந்தேன் (அறிந்து கொண்டோம்) மனம் (எமது மனமாகவும்) மய (அதன் தன்மைகளாகவும்) அம்மை (எமக்குள் இயங்குகின்ற அனைத்துமாகவும் அன்பின் வடிவமாகிய இறைவனின் சக்தியே இருந்து எமக்கு காண்பித்ததை) கண்டேனே (யாம் கண்டு கொண்டோம்).

விளக்கம்:

இறைவனை ஆராய்ந்து அறிந்தவர்களே அமரர்களாகவும் உண்மை ஞானமும் உலக ஞானமும் பெற்ற ஞானிகளாகவும் இருக்கின்றார்கள். ஆனாலும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத தன்மையை உடையவனாக நின்று அனைத்தையும் காக்கின்ற இறைவனை அடைகின்ற வழி முறை அன்பினால் உணர்கின்ற வழி முறையாகும். அப்படிப் பட்ட இறைவனை யானும் அன்பினால் ஆராய்ந்து அறிந்து கொண்டு அவனின் திருவடிகளை எமது இரண்டு கைகளையும் கூப்பி தொழுது வணங்கி எமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து கொண்டோம். அது எப்படி என்றால் அன்பின் வடிவமாகிய இறைவனின் சக்தியே எமக்குள் இருக்கின்ற மனமாகவும் அதன் தன்மைகளாகவும் எமக்குள் இயங்குகின்ற அனைத்துமாகவும் இருந்து எமக்கு காண்பித்தை யாம் கண்டு கொண்டோம்.

பாடல் #1572

பாடல் #1572: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

அறிய வொண்ணாத வுடம்பின் பயனை
யறிய வொண்ணாத வறுவகை யாக்கி
யறிய வொண்ணாத வறுவகைக் கோசத்
தறிய வொண்ணாத தோரண்டம் பதித்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிய வொணணாத வுடமபின பயனை
யறிய வொணணாத வறுவகை யாககி
யறிய வொணணாத வறுவகைக கொசத
தறிய வொணணாத தொரணடம பதிததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிய ஒண்ணாத உடம்பின் பயனை
அறிய ஒண்ணாத அறு வகை ஆக்கி
அறிய ஒண்ணாத அறு வகை கோசத்து
அறிய ஒண்ணாதது ஓர் அண்டம் பதித்தே.

பதப்பொருள்:

அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாத (முடியாத) உடம்பின் (உடம்பின்) பயனை (உண்மையான பயனாகிய அக வழிபாட்டின் மூலம் இறைவனை அடைவதை உணர்ந்து)
அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாத (முடியாத) அறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) வகை (வழி முறைகளில் தங்களின் பக்குவத்து ஏற்ற) ஆக்கி (ஒரு வழி முறையை தேர்ந்து எடுத்து அதில் முழுமை பெற்று)
அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாத (முடியாத) அறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) வகை (வழி முறைகளில் தாங்கள் கடைபிடிக்கின்ற வழி முறையின் மூலம் கிடைக்கின்ற) கோசத்து (தம்மை முழுவதும் மூடியிருக்கும் பாதுகாப்பு அரனாக இருக்கின்ற உறையை பெற்று)
அறிய (அறிந்து கொள்ள) ஒண்ணாதது (முடியாததாக இருக்கின்ற) ஓர் (ஒரு) அண்டம் (அண்டத்தையே தமது உடம்பிற்குள்) பதித்தே (பதித்து காணுவதே இறைவனை அடைவதற்கான வழி முறையாகும்).

விளக்கம்:

அறிந்து கொள்ள முடியாத உடம்பின் உண்மையான பயனாகிய அக வழிபாட்டின் மூலம் இறைவனை அடைவதை உணர்ந்து, இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளில் தங்களின் பக்குவத்து ஏற்ற ஒரு வழி முறையை தேர்ந்து எடுத்து அதில் முழுமை பெற்று அந்த முறையின் மூலம் கிடைக்கின்ற தம்மை முழுவதும் மூடியிருக்கும் பாதுகாப்பு அரனாக இருக்கின்ற உறையை பெற்று, ஒரு அண்டத்தையே தமது உடம்பிற்குள் பதித்து காணுவதே இறைவனை அடைவதற்கான வழி முறையாகும்.