பாடல் #858: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)
அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்
தங்கிய தாரகை யாகும் சசிபானு
பங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே.
விளக்கம்:
சந்திர யோகத்தில் இடகலை பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுக்கப்படும் மூச்சுக்காற்று மூலாதாரத்தில் உள்ள நெருப்பின் மேல் பட்டு மூலாதாரத்தின் அசைவினால் தோன்றும் ஒளிக்கீற்றுக்கள் சூரியன் சந்திரன் என்னும் இரண்டு நட்சத்திரங்களாக மாறுகிறது. இந்த நட்சத்திரங்களாக மாறிய ஒளிக்கீற்றைகளை மூச்சுக்காற்றுடன் உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தாண்டி எட்டாவது சக்கரமாகிய துவாதசந்தவெளியையும் தாண்டி ஒன்பதாவது பரவெளியில் கொண்டு சென்று அங்கு உள்ள பரவொளியுடன் கலந்து விட்டால் உலகத்தை இயக்கும் இறைவனது பேரொளியின் அம்சமாக இருக்கலாம்.
குறிப்பு: அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது எனும் சொல்லுக்கு ஏற்ப உலகம் என்று நாம் அழைக்கும் சூரிய குடும்பத்தில் இருக்கின்ற ஒன்பது கிரகங்களும் இன்னும் பல நட்சத்திரங்களும் நமது உடலிலேயே இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒளி உருவமாக இருந்து இயக்கும் இறைசக்தியே நமது உடலில் சகஸ்ரதளத்தில் ஜோதி வடிவாக தங்கி இருக்கின்றது. இதை நாம் யோகப் பயிற்சியின் மூலம் இயக்க ஆரம்பித்தால் உலகங்கள் அனைத்தையும் இயக்கும் இறை சக்தியாகவே நாமும் மாறிவிடுவோம்.
