பாடல் #766: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)
அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவனிவ னாகுமே.
விளக்கம்:
இறைவன் இருக்கின்ற இடத்தை யாரும் அறிவதில்லை. பாடல் #765 இல் உள்ளபடி இறைவனை அறிந்தவர் மூலம் கேட்டு தமக்குள் ஆராய்ந்து உறுதியுடன் தேடினால் இறைவன் தமக்குள்ளேயே வீற்றிருப்பதை அறிந்து கொள்ளலாம். தமக்குள் இறைவன் வீற்றிருப்பதை அறிந்து கொண்டவர்களுக்கு இறைவன் பேரறிவாய் நின்று அவர்களுக்குள்ளேயே அழியாமல் அமர்ந்திருப்பான். பேரறிவாய் அமர்ந்திருக்கும் இறைவனையே எப்போதும் தரிசித்துக் கொண்டு இருப்பவர்கள் தாமும் அந்த இறைவனாகவே ஆகிவிடுவார்கள்.
கருத்து: தமக்குள்ளேயே வீற்றிருக்கின்ற இறைவனைக் கண்டு உணர்ந்தவர்கள் இறைவனாகவும் ஆகிவிடுவார்கள்.
