பாடல் #745

பாடல் #745: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து
பாலங் கடந்தது பத்துப் பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
டாலங் கடந்ததுஒன் றாரறி வாரே.

விளக்கம்:

பாடல் #744 இல் உள்ளபடி துவாதசாந்த வெளியில் இறைவன் நான்கு உயர் தத்துவங்களாக இருப்பதை உணர்ந்த யோகியர்கள் அதையும் தாண்டிய நிலையில் பாடல் #467 இல் உள்ளபடி ஒன்பது துவாரங்கள் இருபத்தைந்து தத்துவங்களால் ஆன உருவத்தைத் தாண்டி அதைச் சுற்றியிருக்கும் குணங்களைக் கொண்ட ஐந்துவித கோசங்களையும் தாண்டி அண்டசராசரங்கள் அனைத்தையும் தாண்டிய ஒரே பொருளாக இருப்பதை அறிந்துகொள்வதில்லை.

கருத்து: இறைவனை நான்கு உயர் தத்துவங்களாக உணர்ந்த யோகியர்களாலும் இறைவன் அனைத்தையும் கடந்த ஒரே பொருளாக இருப்பதை உணர்ந்துகொள்வதில்லை.

ஐந்து கோசங்கள்:

  1. அன்னமயம் – உணவினால் உருவாகும் உடல்.
  2. பிராணமயம் – மூச்சுக்காற்றால் உருவாகும் உயிர்.
  3. மனோமயம் – மனதினால் உருவாகும் எண்ணங்கள்.
  4. விஞ்ஞானமயம் – அறிவினால் உருவாகும் ஞானம்.
  5. ஆனந்தமயம் – உண்மை ஞானமாகிய பேரறிவால் உருவாகும் பேரின்பம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.