பாடல் #760: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)
உயருறு வாருல கத்தொடுங் கூடிப்
பயனுறு வார்பலர் தாமறி யாமற்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே.
விளக்கம்:
பாடல் #759 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலானதொரு நிலையை அடைந்த யோகியர்கள் உலகத்தவர்களின் மேல் கொண்ட கருணையினால் அவர்கள் அறியாமலேயே அவர்களோடு கலந்து நின்று பல நல்வினைகளைப் புரிந்து பயன்பெற வைக்கின்றார்கள். உலகத்தவர்களையும் பயன்பெற வைக்கின்ற உயர்வான நிலையைப் பற்றி தெரியாத அல்லது அதில் விருப்பமில்லாதவர்கள் தங்களின் கர்மவினைகளைச் செய்துகொண்டு வீணாக வாழ்க்கையைக் கழித்து மீன்களைப் போல் எப்போதும் கண்மூடாமல் அன்பர்களுக்கு அருள்கொடுக்கும் இறை சக்தியை காணாமலேயே காலத்தை கழித்து அழிந்து போகின்றார்கள்.
கருத்து: அகயோகம் செய்து அனைத்திற்கும் மேலான உயர் நிலையை அடைந்த யோகியர்கள் உலகத்தவர் மேல் கருணை கொண்டு அவர்களுக்காக பல நல்வினைகளைப் புரிகின்றார்கள். இதை அறியாத மற்றவர்கள் தங்களின் வினைகளையே புரிந்து வீணாக காலத்தைக் கழிக்கின்றார்கள்.
