பாடல் #758: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)
சாற்றிடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்
சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் கோடியே யுகமது வாமே.
விளக்கம்:
பாடல் #757 இல் உள்ளபடி அகயோகம் செய்து சாஸ்திரங்கள் கூறிய முழுமையான வயதான நூறு ஆண்டுகளையும் கடந்து நிற்பவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் உடல் கட்டுக்குலையாமல் இருப்பதைக் காண்பார்கள். இறைவனோடு கலந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர்கள் பேரறிவால் முதிர்ந்து கோடி ஆண்டுகளுக்கும் உடல் அழியாமல் இருந்து பல யுகங்களையும் காண்பார்கள்.
கருத்து: அகயோகப் பயிற்சியை முழுமையாகச் செய்து இறைவனோடு இரண்டறக் கலந்து பேரின்பத்தில் இறைவனை தரிசித்துக்கொண்டே இருப்பவர்கள் பலகோடி வருடங்கள் ஆனாலும் அழியாமல் பல யுகங்களைக் கண்டு அறிவால் முதிர்ந்து உடல் அழியாமல் இருப்பார்கள்.
