பாடல் #639: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)
காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரண மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.
விளக்கம்:
இந்த உலகத்தில் துன்பம் தரக்கூடிய காரணங்களாகிய தனு, கரணம், புவனம், போகம் ஆகிய பந்தங்களைக் கடந்து சென்று ஏழுவகையான சிவ தத்துவங்களையும் தன் அறிவாலேயே உணர்ந்து பெற்று ஜென்ம ஜென்மமாய்த் தொடர்ந்து வரும் மாயையைத் தவத்தால் வெற்றி பெற்று இறைவனின் திருவடியைச் சேருதல் சமாதியால் பெறும் பயனாகும்.
நான்கு வகை பந்தங்கள்:
தனு – தன் உடலின் மேல் இருக்கும் பற்று
கரணம் – ஆசைப்படும் மனது
புவனம் – உலகப் பற்று
போகம் – உலகப் பொருள்களை அனுபவித்தல்
ஏழுவகை சிவ தத்துவங்கள்:
இறைமை – இறைவனாக தன்னை உணர்தல்
முற்றறிவு உடைமை – அனைத்தையும் அறிந்தவனாக இருத்தல்
எங்கும் தானாதல் – எங்கும் வியாபித்து இருத்தல்
இயல்பாகவே மாயையின்மை – மாயையே இல்லாது இருத்தல்
வரம்பில்லாத ஆற்றல் – எல்லையில்லா சக்தியைக் கொண்டிருத்தல்
தன்வயத்தன் ஆதல் – எதனாலும் கட்டுப்படாமல் தன் கட்டுப்பாட்டிலேயே இருத்தல்
ஒன்றியுணர்தல் – அனைத்திலும் ஒன்றி இருப்பதாக உணர்தல்
கருத்து: சமாதி நிலையை அடைந்தால் அனைத்துவித துன்பங்கள் மற்றும் மாயையிலிருந்து விடுதலை பெற்று சிவ தத்துவங்களை உணரலாம்.
