பாடல் #1816

பாடல் #1816: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

ஆடியும் பாடியும் மழுது மரற்றியுந்
தேடியுங் கண்டேன் சிவன் பெருந்தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
னூடு நின்றானவன் றன்னரு ளுற்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆடியும பாடியும மழுது மரறறியுந
தெடியுங கணடென சிவன பெருநதனமையைக
கூடிய வாறெ குறியாக குறிதநதென
னூடு நினறானவன றனனரு ளுறறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன் பெரும் தன்மையை
கூடிய ஆறே குறியா குறி தந்து என்
ஊடு நின்றான் அவன் தன் அருள் உற்றே.

பதப்பொருள்:

ஆடியும் (இறைவனின் திருவிளையாடல்களை ஆடியும்) பாடியும் (அவனது பெருமைகளைப் போற்றிப் பாடியும்) அழுதும் (அவனது மாபெரும் கருணையை எண்ணி அழுதும்) அரற்றியும் (அவன் அருகில் செல்ல முடியவில்லையே என்று புலம்பியும்)
தேடியும் (தமக்குள்ளே தேடியும்) கண்டேன் (கண்டு கொண்டேன்) சிவன் (இறைவனின்) பெரும் (மாபெரும்) தன்மையை (தன்மையை)
கூடிய (அவனோடு ஒன்றாக சேருகின்ற) ஆறே (வழியே) குறியா (வேறு எந்த சிந்தனையும் இல்லாமல்) குறி (அவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக) தந்து (கொடுத்து அருளி) என் (எமது)
ஊடு (உள்ளே கலந்து) நின்றான் (நின்றான்) அவன் (இறைவன்) தன் (தமது) அருள் (பேரருளை) உற்றே (எமக்கு கொடுத்து ஞானமாக வெளிப்பட்டான்).

விளக்கம்:

இறைவனின் திருவிளையாடல்களை ஆடியும், அவனது பெருமைகளைப் போற்றிப் பாடியும், அவனது மாபெரும் கருணையை எண்ணி அழுதும், அவன் அருகில் செல்ல முடியவில்லையே என்று புலம்பியும், தமக்குள்ளே தேடியும், இறைவனின் மாபெரும் தன்மையை கண்டு கொண்டேன். அப்படி தேடிக் கண்டு கொண்ட இறைவனோடு சேருவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வேறு எதிலும் சிந்தனையை செலுத்தாமல் இருக்கின்ற வழியை எமக்கு கொடுத்து அருளி எம்மோடு கலந்து நின்று எம்முள்ளிருந்து ஞானமாக வெளிப்பட்டான்.

One thought on “பாடல் #1816

Leave a Reply to BalachandranCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.