பாடல் #1610

பாடல் #1610: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங்
கோணாத போதமுங் கூடாத கூட்டமு
நாணாத நாணமு நாதாந்த போதமுங்
காணா யெனவந்து காட்டின னந்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காணாத கணணுடன கெளாத கெளவியுங
கொணாத பொதமுங கூடாத கூடடமு
நாணாத நாணமு நாதாநத பொதமுங
காணா யெனவநது காடடின னநதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காணாத கண் உடன் கேளாத கேள்வியும்
கோணாத போதமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாத அந்த போதமும்
காண் ஆய் என வந்து காட்டினன் நந்தியே.

பதப்பொருள்:

காணாத (இதுவரை இறைவனை கண்டு அறியாத) கண் (ஊனக் கண்ணை மாற்றி காண வைக்கின்ற ஞானக் கண்ணையும்) உடன் (அதனுடன்) கேளாத (இறைவன் என்று ஒருவர் இருப்பதையே அறியாமல் இருக்கின்ற) கேள்வியும் (நிலையை மாற்றுகின்ற அறிவையும்)
கோணாத (தன்னுடைய நிலையிலிருந்து எப்போதும் மாறாத) போதமும் (ஞானத்தையும்) கூடாத (இறைவனோடு தாம் சேர்ந்து இருக்கின்றோம் என்பதையே அறியாமல் இருந்த எண்ணத்தை மாற்றி) கூட்டமும் (அவனோடு சேர்ந்து இருப்பதையும்)
நாணாத (இறைவனைப் பற்றிக் கொள்ளாமல் உலகப் பற்றுக்களிலேயே இருந்த மனதை மாற்றி) நாணமும் (இறைவனை பற்றிக் கொள்வதையும்) நாத (நாதத்தின் / ஒலியின்) அந்த (எல்லையாக இருக்கின்ற) போதமும் (ஞானத்தையும்)
காண் (இதுவரை அறியாமல்) ஆய் (இருக்கின்றாய்) என (என்று கருணையோடு) வந்து (வந்து என்னை தடுத்து ஆட்கொண்டு) காட்டினன் (காட்டி அறிய வைத்தான்) நந்தியே (குருநாதனாக வந்த இறைவன்).

விளக்கம்:

இதுவரை இறைவனை கண்டு அறியாத ஊனக் கண்ணை மாற்றி காண வைக்கின்ற ஞானக் கண்ணையும் அதனுடன் இறைவன் என்று ஒருவர் இருப்பதையே அறியாமல் இருக்கின்ற நிலையை மாற்றுகின்ற அறிவையும் தன்னுடைய நிலையிலிருந்து எப்போதும் மாறாத ஞானத்தையும் இறைவனோடு தாம் சேர்ந்து இருக்கின்றோம் என்பதையே அறியாமல் இருந்த எண்ணத்தை மாற்றி அவனோடு சேர்ந்து இருப்பதையும் இறைவனைப் பற்றிக் கொள்ளாமல் உலகப் பற்றுக்களிலேயே இருந்த மனதை மாற்றி இறைவனை பற்றிக் கொள்வதையும் நாதத்தின் எல்லையாக இருக்கின்ற ஞானத்தையும் இதுவரை அறியாமல் இருக்கின்றாய் என்று கருணையோடு வந்து என்னை தடுத்து ஆட்கொண்டு காட்டி அறிய வைத்தான் குருநாதனாக வந்த இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.