பாடல் #163

பாடல் #163: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினில்
கெட்டது எழுபதிற் கேடறி யீரே.

விளக்கம்:

கரு முட்டையில் (சுரோணிதம்) சுக்கிலம் சேர்ந்ததால் முன்னூறு நாட்களில் (10 மாதம்) பிறந்தது மனித உடல். பிறந்த உயிர் தாமாகவே இறைவனை அறியும் அறிவை கொண்டு வரவில்லை பிறந்ததில் இருந்து இறைவனை அடையும் அறிவுச் செல்வம் இல்லாத அந்த குழந்தை 12 ஆண்டுகளில் உலக வாசனையுடன் வளர்ந்து சிறிது சிறிதாக உலகப் பற்றுக்களின் மேல் ஆசை கொண்டு அப்பற்றுகளுடன் வாழும் அந்த உயிர் எழுபது வயதில் இறைவனை அடையும் வழிகள் தெரியாமல் மனம் தெளிவை அடையாமலேயே உடல் கெட்டு அழிந்து விடுவதை யாரும் அறிந்து கொள்ளவில்லை.

பாடல் #164

பாடல் #164: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.

விளக்கம்:

விளக்கு (மனித உடல்) இருக்கும் போதே அதிலிருக்கும் ஒளியை (உயிர்) எடுத்துக் கொண்டான் (எமன்) என்று கதறுபவர்கள் எண்ணெய் (கர்ம வினைகள்) தீர்ந்துவிட்டதால்தான் ஜோதியும் (உயிர்) நின்றுவிட்டது என்பதை அறியாத மூடர்கள். தினமும் விடியும் காலைப் பொழுது (பிறப்பு) பிறகு இரவு வர மறைந்து இருளாகும் (இறப்பு) என்பதை உணராத இந்த உலகத்தவர்கள் இறந்தவனுக்காக துக்கத்தில் புலம்புகின்றனர். பிறப்பு உண்டெனில் இறப்பும் உண்டு என்பதை அறியாமல் உலகப் பற்றுக்களில் ஆசை வைத்து நிலையற்ற உடம்பை நிலையென்று எண்ணி வருந்துகின்றனரே.

பாடல் #165

பாடல் #165: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

மடல்விரிக் கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவந் தொழாமல்
இடர்படந் தேழா நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே.

விளக்கம்:

மடல் விரித்த அழகிய கொன்றை மலரை மார்பில் அணிந்த மாயவனால் (இறைவன்) மாயையில் படைக்கப்பட்ட இந்த மனித உடலும் அதிலிருக்கும் உயிரும் அந்த இறைவனின் திரு உருவத்தைத் வழிபடாமல் ஆசைகளின் வழியே வாழ்ந்து துன்பப்பட்டு இறந்தவர்களின் நெருக்கமானவர்கள் (மனைவி மக்கள் மற்றும் உறவினர்) அடிவயிற்றிலிருந்து உரக்கக் கூப்பிட்டு அழுது புலம்பிக்கொண்டிருக்க நரகிலேயே கொடியதான ஏழாவது நரகத்தில் கிடந்து அல்லல் படுவார்கள்.

கருத்து: அழியக்கூடிய இந்த உடலின் மேல் ஆசை வைத்து உலகில் ஆசையினால் பல தீய காரியங்களைச் செய்துகொண்டு தம்மைப் படைத்தவனும் என்றும் அழியாதவனும் ஆகிய இறைவனைப் போற்றி வணங்காதவர்கள் இறந்தபின் அவர்களின் உறவினர்கள் கதறி அழுது கூப்பிட்டாலும் திரும்பி வரமுடியாமல் ஏழாவது நரகத்தில் கிடந்து துன்பப்படுவார்கள்.

பாடல் #166

பாடல் #166: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

குடையும் குதிரையும் கொற்றவா ளும்கொண்
டிடையுமக் காலம் இருந்து நடுவே
புடையு மனிதனார் போகும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே.

விளக்கம்:

அரசாட்சியும் வலிமையான குதிரை படையும் உறுதியான வாளும் செங்கோலும் தரித்துக் கொண்டு வாழ வேண்டிய காலம் வரை அரசனாக வாழும் மனிதர்களும் அவர்களின் நடுவே நான்கு பக்கமும் மனிதர்களோடு புடைசூழ சென்று கொண்டிருக்கும் போதே அவர்களது உயிரானது இடகலை பிங்கலை நாசிகளின் வழியே பிரிந்து அடையவேண்டிய இடத்துக்குச் சென்று அடைந்துவிடும்.

உட்கருத்து: மக்கள் படைசூழ வலம் வரும் பாராளும் அரசன் ஆனாலும் உயிர் பிரிந்து போவதை யாராலும் தடுக்க இயலாது.

பாடல் #167

பாடல் #167: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளிப் பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தீட்டும்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.

விளக்கம்:

உடலாகிய இந்தத் தோல் பையினுள் (தோலால் சூழ்ந்த உடல்) உயிராக இருந்து வினைகளைச் (செயல்களை) செய்து அதன் மூலம் தன்னுடைய கர்ம பலன்கள் கழிந்த பின் உடல் இயங்க காரணமான இறைவன் (உயிர்) உடலில் இருந்து பிரிந்த பிறகு வெறும் எலும்பும் தோலுமாகிய இந்த மனித உடலை, காக்கை வந்து கொத்தித் திருடிச் சென்றால் என்ன? கண்டவர்கள் பிணம் என்று பழித்தால் என்ன? உடலை சுட்டு எரித்தபின் எலும்பின் மேல் பால் ஊற்றி காரியம் செய்தால் என்ன? பலவகைப் பட்டவர்களும் வந்து உயிர் இருக்கும் போது செய்த காரியங்களைப் பற்றி பழி சொன்னால் என்ன? பலரும் புகழ்ந்து பேசினால் என்ன? அதனால் இந்த உயிருக்கோ அல்லது வெறுமெனக் கிடக்கும் உடலுக்கோ ஒரு பயனும் இல்லை.

கருத்து: வாழும்போது இந்த உடலின் மூலம் இறைவனை அடையும் வழிகளைப் பற்றி எண்ணாமல் இறந்தபிறகு அந்த வெறும் உடலை என்ன செய்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.

பாடல் #113

பாடல் #113: முதல் தந்திரம் – 1. உபதேசம்

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியோ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்புஅறுத் தானே.

விளக்கம்:

வானத்தில் (அண்டத்தில்) வெவ்வேறு நிலைகளில் இருக்கும் ஆன்மாக்கள் உலகத்தில் இறங்கி வந்து அவரவர் வினைக்கு ஏற்ப பலவிதமான உடல்களை ஏற்றுப் பிறக்கும்போது அடியவர்களின் உள்ளம் குளிர்விக்கும் திருவடிகளை அவர்களின் தலைக்கு மேலே காவலாக வைத்து அவர்களின் உடலுக்குள்ளே உயிர்சக்தியாய் நின்று தான் யார் என்பதை உள்ளிருந்து உணரவைத்து உயிர்களுக்கு ஞானக்காட்சியய் தனது ஈடுஇணையில்லாத பேரானந்த நிலையைக் காட்டி அடியவர்களின் ஆன்மாவை மூடியிருக்கும் மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயை ஆகியவற்றை அகற்றி அருளுகின்றான் இறைவன்.

பாடல் #114

பாடல் #114: முதல் தந்திரம் – 1. உபதேசம்

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவழம் பதித்தான் பதியே.

விளக்கம்:

எங்களது ஆன்மாக்களின் மேல் இருந்த மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயைகளை தன் அருட் பார்வையால் அகற்றி எமது ஞானக்கண்ணைத் திறந்தான் குருநாதராக வந்த இறைவன். அவனே எந்தவித மலங்களும் நெருங்க முடியாத மாசு மருவற்ற தனது அருட் பேரொளியைக் காட்டியவன். அவனே மும்மலங்கள் அகற்றியதால் பளிங்கு போல மாறிய எமது ஆன்மாக்களின் மேல் பவழம் போன்ற தனது திருவருளைப் பதித்தான் எமக்குத் தலைவனாக இருப்பவன்.

பாடல் #115

பாடல் #115: முதல் தந்திரம் – 1. உபதேசம்

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அநாதி
பதியினை சென்றணு காப்பசு பாசம்
பதியணு கில்பசு பாசம் நிலாவே.

விளக்கம்:

ஆன்மாக்களின் தலைவன் இறைவன் பதி. ஆன்மாவாகிய உயிர்கள் பசு. உயிர்களைப் பிடித்திருக்கும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களும் பாசம். இந்த மூவரும் யாரென்று சொல்லப் போனால் என்றும் நிலைத்து நிற்கும் பழமைவாய்ந்த இறைவனைப் போலவே ஆன்மாக்களும் அவற்றை பிடித்திருக்கும் மும்மலங்களும் நித்தியமானவையே. மும்மலங்களால் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாக்கள் தங்களின் தலைவனாகிய இறைவனைத் தேடிச் சென்று அடைவதில்லை. இறைவன் யாரென்று தெரிந்து கொள்ள முயன்று அவனைப் பலவித வழிகளில் தேடிச்சென்று அடைந்தால் ஆன்மாக்களிடமிருந்து மும்மலங்களும் விலகிவிடும்.

பாடல் #116

பாடல் #116: முதல் தந்திரம் – 1. உபதேசம்

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயமது வாய்எழும் சூரிய னாமே.

விளக்கம்:

மூங்கிலினுள்ளே இருக்கும் நெருப்பு போல (காய்ந்த மூங்கில்களை ஒன்றோடு ஒன்று உரசினால் வெளிப்படும் நெருப்பு) உயிர்களின் மெய் எனப்படும் உடலாகிய கோயிலினுள்ளே குடி கொண்டு வீற்றிருக்கும் உயிர்களின் தலைவனாகிய குருநாதன் இறைவன் உலகத் தாயை விடவும் உயிர்களின் மேல் அதிக கருணை கொண்டு அவ்வுயிர்களைப் பற்றியிருக்கும் மும்மலங்களாகிய அழுக்குகளை அகற்ற வேண்டி இருளை விலக்க கடலின் மேலே தோன்றும் சூரியனைப் போல மும்மல இருளை அகற்றும் பேரொளியாக தனது கருணை எனும் மாபெரும் கடலின் மேலே தோன்றும் சூரியன் இறைவன்.

பாடல் #117

பாடல் #117: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.

விளக்கம்:

சூரியகாந்தக் கல்லையும் பஞ்சையும் ஒன்றாக சுற்றினால்கூட அந்தக் கல் பஞ்சை எரித்துவிடாது. சூரியகாந்தக் கல்லின் மேல் சூரியனின் கதிர்கள் பட்டு அவை பஞ்சின் மேல் குவிக்கப்பட்டால் மட்டுமே பஞ்சு எரியும். அதுபோலவே ஆன்மாக்களைச் சூழ்ந்திருக்கும் மும்மலங்களாகிய அழுக்கை ஆன்மாக்களால் நீக்க முடியாது. ஆன்மாக்களின் இருளை அகற்றும் பேரொளியாக வரும் இறைவனின் அருள் கிடைத்தால் மட்டுமே ஆன்மாக்களின் மும்மல அழுக்கு நீங்கும்.