பாடல் #342

பாடல் #342: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

எங்கும் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபால்
பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித்து ஆழிசெய் தானே.

விளக்கம்:

அனைத்து உயிருக்குள்ளும் எங்கும் எதிலும் இரண்டறக் கலந்திருப்பவனும் அனைத்து உயிர்களும் உய்ய வேதங்களை உலகிற்கு ஓதி அந்த வேதத்திற்கு முதல்வனாயும் இருக்கும் இறைவனை உணராமல் உயிர்கள் வீணாக ஒருவர்மேல் ஒருவர் குரோதம் கொண்டு ஆத்திரத்தில் அறிவிழந்து அடுத்த உயிருக்குள்ளும் இறைவன் இருக்கின்றான் என்பதை உணராமல் அந்த உயிரை அழிக்க பல கெட்ட செயல்களைச் செய்கின்றனர். உயிர்கள் இறைவா காப்பாற்று என்று வேண்டிட குரோதம் என்னும் அசுர குணத்தை உயிர்களிடம் உள்ள சக்திமய சக்கரங்களை கருவியாக பயன்படுத்தி இறைவன் தனது திருவடி மூலம் அழித்தான்.

இந்த பாடலுக்கான புராணம் நிகழ்ந்த இடம் திருவிற்குடி தலமாகும். ஒரு முறை இந்திரன் தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார். கோபமடைந்த இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர் சிவன் என்பதை அறிந்த இந்திரன் ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளி பாற்கடலில் விழுந்தது. அதில் ஒரு குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான குழந்தைக்கு ஜலந்தராசூரன் என பெயர் வைக்கப்பட்டது. அவன் பெரியவனானதும் மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும் சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன் தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும் என வரம் வாங்கி விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு அசுரன் முன் வந்து நின்று தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார் இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும் என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன் என் மனைவியின் கற்பின் திறனால் எனக்கு அழிவு வராது என சவால் விட்டான். இந்த நேரத்தில் திருமாலை அழைத்த சிவன் நீர் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில் மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இந்நேரத்தில் சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது.

Related image

பாடல் #341

பாடல் #341: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு வீரச்செயல்கள்)

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.

விளக்கம்:

அண்டசராசரமெங்கும் பரவி இருப்பவனும் வாணுலகம் மண்ணுலகம் என்று இரண்டு நிலங்களையும் தாங்கி இருப்பவனும் தம்மை நாடி வருபவர்களுக்கு தஞ்சம் கொடுப்பவனுமாகிய இறைவனின் திருவடிகளின் பெருங்கருணையை உணர்ந்து இருக்கும் தேவர்கள் பிரம்மனைப் பார்த்துக் கோபம் கொண்டனர். பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்வதாலும் ஐந்து தலைகளைக் கொண்டதாலும் மும்மூர்த்திகளிலேயே தாம்தான் உயர்ந்தவர் என்று தற்பெருமை கொண்டிருந்ததால் இறைவனது திருவடிக் கருணையை உணராமல் இருந்தார். பிரம்மனின் தற்பெருமையால் படைப்பு பாதிக்கப்படுவதைக் கண்ட இறைவன் பைரவ அவதாரம் எடுத்து பிரம்மனின் ஐந்து தலைகளின் ஒன்றைத் தனது விரல் நகத்தால் கிள்ளி எடுத்துவிட்டார். பிரம்மாவின் கிள்ளி எடுக்கப்பட்ட தலையிலிருந்து வந்த குருதியை அந்த கபாலத்திலேயே எடுத்து திருமாலை ஏற்றுக்கொள்ளச் செய்து அருளினார். இது நிகழ்ந்த இடம் திருக்கண்டியூர் தலமாகும்.

உட்கருத்து: உயிர்களிடம் இருக்கும் நான் என்னும் அகங்காரம் அகந்தை தான் யார் என்பதை உணரவிடாமல் செய்து நல்ல எண்ணம் குணங்களை அழிப்பதுடன் இறைவனையும் அடையவிடாமல் செய்து விடுகிறது. மேலும் அகந்தை அகங்காரத்தினால் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அதன் அடுத்த பிறவியையும் பாதிக்கிறது. (உதாரணமாக உயிருக்கு கர்மவினையின்படி 10 பிறவிகள் என்று எடுத்துக்கொண்டால் அகந்தை அகங்காரத்தினால் மேலும் பிறவிகள் எண்ணிக்கை கூடி அடுத்து வரும் பிறவிகளையும் பாதிக்கிறது) பிறவிகள் உயிர்கள் இறைவா என்னை காப்பாற்று என்று இறைவனை வேண்டிட தன்னை நாடி வருபவர்களுக்கு பெருங்கருணை செய்யும் இறைவன் அந்த அகந்தை அகங்காரத்தை அடியோடு வெட்டி எடுத்து உயிர்களை காக்கும் திருமாலிடம் அளித்து மீண்டும் இந்த உயிருக்கு மீண்டும் அகந்தை அகங்காரம் வராமல் இருக்க அருளினார்.

Related image

பாடல் #340

பாடல் #340: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டுச் சந்திசெய் தானே.

விளக்கம்:

பிரம்மாவின் மூத்தகுமாரனாகிய தட்சன் தவமிருந்து வானவர்கள் தனக்கு அடிபணிய வேண்டும் என்று வரம் பெற்றான். வரம் பெற்ற ஆணவத்தால் அண்டசராசரங்களுக்கும் தலைவன் ஆனான். பார்வதி தேவியைத் தனது மகளாக அடைந்தான். பார்வதி தேவி ஈசனைக் கண்டு தனது மாயை மறைந்து அவருடன் இணைந்துவிட்டாள். தந்தையாகிய தனது சம்மதம் இல்லாமல் இறைவனுடன் இணைந்துவிட்டாள் என்ற கோபத்தில் இறைவனை அழிக்க ஒரு மாபெரும் யாகம் செய்த தட்சன் அதில் இறைவனை அழைக்காமலும் தேவர்களுக்குத் தரவேண்டிய அவிர்பாகத்தை அவருக்குத் தராமலும் கொலைக்குற்றத்திற்கு மேலான குற்றம் புரிந்தான். அவன் குற்றத்தில் கோபம் கொண்ட இறைவன் பைரவர் அவதாரம் எடுத்து அவனது தலையைத் துண்டித்து வேள்வித் தீயில் போட்டு எரித்துவிட்டார். அதன்பிறகு பார்வதி தேவியும் பிரம்ம தேரும் உலக நன்மைக்கு தட்சன் தேவை என்று வேண்டிக்கொள்ள மனமிறங்கிய இறைவன் ஒரு ஆட்டின் தலையை எடுத்து தட்சனின் உடலில் பொருத்தி அவன் வாழும்படி செய்தார். தட்சனும் தனது ஆணவம் அழிந்து இறைவனை வணங்கினான். இந்த புராணம் நிகழ்ந்த இடம் திருப்பறியலூர் தலமாகும்.

உட்கருத்து: உயிர்கள் தனது கர்மாக்களை தீர்க்க பிறந்து கர்மாக்கள் தீர்ந்ததும் இறைவனை அடைய காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உயிர்களிடம் ஆணவம் தலைவன் போல் குடிகொண்டு தான் சொல்லுவது தான் சரி. அடுத்தவர் சொல்வதை கேட்கமாட்டேன் என்று தன் சொல்படி உயிரை ஆட்டிப்படைத்துக் கொண்டு இறைவனிடம் உயிர் செல்லவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது. உயிர் இறைவா ஆணவத்திடம் இருந்து என்னைக்காப்பாற்று என்று வேண்டிட இறைவன் ஆணவம் என்னும் தலைவனின் தலையை வெட்டி உயிர்களுக்கு அருள் செய்தான். ஆணவம் முற்றிலும் அழிந்தால் இறைவனை அடைந்து விடலாம். ஆனால் உயிர்கள் தனது கர்மாக்கள் தீர்ந்தால் மட்டுமே இறைவனை அடையமுடியும் ஆகவே கர்மாக்கள் தீரும்வரை நன்மை, தீமை என எது நடந்தாலும் எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணும் ஆட்டுத்தலை போன்ற எண்ணத்தை படைத்து உயிர்களுக்கு அருளினான்.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #8

9-10-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: குருவாக்கு சில சமயங்களில் தவறுகின்றதே இது ஏன்?

முதலாவதாக குருவென ஏற்றுக் கொண்டால் அக்கேள்வியை கேட்க எவ்வித அதிகாரமும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஏற்றபின் சந்தேகங்கள் கூடாது என்பதே விதி. ஏற்கும் முன் சந்தேகங்கள் தோன்றுவது சகஜம்.

இரண்டாவதாக குருவின் வாக்கு தெய்வ வாக்கு என செப்பக் கண்டால் இங்கு சாட்சாத் குருவானவரே தொட்டும் உரைக்க அவர் காரணமின்றி எவ்வாக்கும் உரைப்பதில்லை. இக்காலங்களில் வாக்கு தவறி விட்டதே என சிலர் துக்கம் காண்பது சகஜ நிலையே. பிற்காலத்தில் எதற்கு செப்பினர் ஏது செப்பினர் என தெளிவாகும். மற்ற ஒன்றும் யாம் இங்கு செப்ப விரும்புகின்றோம். குருவை நாடும் காலத்தில் வினாக்களை கேட்கும் காலத்தில் எப்பொழுதும் குரு உங்களுக்கு சாதகமாக விடை அளித்தல் வேண்டும் அருள் புரிதல் வேண்டும் என்பதே தவறாகின்றது. யாருக்கு என்ன தேவையோ அதனை குரு வழங்குவார் இதில் எக்குறையும் இல்லை. உதாரணமாக சிறுவன் ஒருவனுக்கு வயிற்றுப் போக்கு நிலவி வர அன்னை அவள் அவனுக்கு காரம் கொடுப்பதில்லை. இதைப்போல் காலம் சீர் இல்லையேல் குரு எதையும் அருள மாட்டார். இது வெறுப்பாகவோ விருப்பாகவோ அல்ல இதுவே நீதி என்றும் இங்கு எடுத்துரைப்போம்.

மேலும் குருவை நாட எத்தகைய வினாக்கள் கேட்க வேண்டும் என்கின்ற வினாவுக்கும் ஒன்றை செப்புவோம். நன்றாக இறைவன் அளித்த சுய புத்திகளை உபயோகித்த பின் விடை கிட்டாமல் நிற்கவே அந்நிலையில் குருவை நாடுதல் வேண்டும் என்கின்ற விதி உண்டு. ஏனெனில் இறைவனின் படைப்பில் சுயபுத்தி உள்ள படைப்பு மனிதப் படைப்பே. இவை பூரணமாக உபயோகித்த பின் வழி தெரியாது நிற்க குருவின் அருளை நாட உறுதியாக உங்களுக்கும் தெளிவு கிட்டும்.

பாடல் #339

முன்னுரை: இரண்டாம் தந்திரம் எண் -2 பதிவலியில் வீரட்டம் என்னும் தலைப்பில் வரும் 8 பாடல்களும் இறைவன் தமது வீரத்தால் மறக்கருணை என்னும் அறியாமையால் ஆட்கொள்ளப்பட்ட அசுரர்களை வதம்செய்து அவர்களை ஆட்கொண்ட புராணக்கதைகளை பாடல்களில் கூறுவதாக இருந்தாலும் இதன் உட்கருத்து உயிர்கள் தமக்குள் இருக்கும் எட்டுவித அசுரர்களை வதம் செய்து இறைவனை அடையும் வழிகளை இப்பாடல்களின் மூலம் அறியலாம்.

பாடல் #339: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.

விளக்கம்:

கருத்த நிற மேனியோடு இரு கண்களும் தெரியாத அந்தகன் என்கிற அசுரன் மிகக் கடுமையான தவம் செய்து சாகா வரம் பெற்று ஈரேழு பதினான்கு உலகத்தையும் வெற்றி பெற்று அதில் வாழும் அனைத்து உயிர்களையும் கொடுமை படுத்தினான். இவனது கொடுமை தாங்காத தேவர்கள் இறைவனிடம் சென்று தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்ள மனமிறங்கிய இறைவன் பைரவர் அவதாரம் எடுத்து குருத்து போன்ற மூன்று இலைகளில் நடு இலை மட்டும் மிகவும் நீண்டு இருக்கும் கூர்மையான சூலாயுதத்தால் அந்தகாசுரனின் கொன்று தேவர்களைக் காப்பாற்றினார்.

உட்கருத்து: அறியாமையால் மாயையில் மயங்கி கண் தெரியாமல் இருட்டில் இருக்கும் மனம் உயிரை இறைவனை அடையவிடாமல் தீய எண்ணத்துடன் வதைத்துக்கொண்டிருக்கிறது. ஒரு நாள் உயிர் இறைவா என்னை காப்பாற்று என்று வேண்ணிக்கொள்ள இறைவன் மாயையில் சிக்கி இருட்டில் கண் தெரியாமல் இருக்கும் மனதில் ஒளியைக் கொடுத்து அறியாமை என்னும் தீய எண்ணங்களை கொன்று உயிரை காப்பாற்றி அருளினார்.

மனித முதுகெலும்பு முடியும் பகுதி கழுத்து எலும்பு களுக்கு மேல் உள்ளது இது பின் மூளைப் பகுதிக்கும் முன்மூளை பகுதிக்கும் இடையில் முடிவுறுகிறது இதற்கு குருந்தம் என்று பெயர். இதன்மேல் சோம ஒளி, சூரிய ஒளி, ஆன்ம ஒளி என்னும் மூன்று ஒளிகள் உள்ளன. இவைதான் குருத்துயர் சூலமாகும். இந்த குருத்துயர் சூலத்தின் மூலம் இறைவன் அருளால் அறியாமை என்னும் இருட்டை அகற்றி இறைவனை உணர்ந்துகொள்ளலாம்.

Related image

பாடல் #338

பாடல் #338: இரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (அகம் + இயம்= அகத்தியம். உள்ளேயிருக்கும் ஒலி)

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடும்
அங்கி உதயம் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்குஒளி தானே.

விளக்கம்:

உடலில் இருக்கும் ஒலியானது உடம்பில் தோன்றும் அக்னியை வளர்த்து அந்த அக்னியை குண்டலினி மூலம் மேல்நோக்கி தலைக்கு கொண்டு சென்று வலது புறமாக நகன்று இடப்பக்கம் தலை முழுவதும் பரவச்செய்தால் உடலோடு இருக்கும் உயிரிடம் அருள் தன்மை வளம் நிறைந்து ஒளியுடன் இருக்கும்.

பாடல் #337

இரண்டாம் தந்திரம் முன்னுரை

இரண்டாம் தந்திரத்தில் வரும் பாடல்கள் இறைவனின் நடத்திய திருவிளையாடல் புராண கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பற்றி கூறுவது போல் இருந்தாலும் அனைத்து பாடல்களும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தத்துவங்களுக்கான விளக்கங்களை கூறுகின்றது. தத்துவம் என்பது தத்- துவம் தத் என்றால் உள்ளது என்றும் துவம் என்றால் தன்மை என்றும் பொருள், உள்ளது தன்மை அதாவது உண்மைத்தன்மை என்று பொருள். முதல் தலைப்பு அகத்தியம் இத்தலைப்பில் அகத்தியரின் தத்துவத்தை கூறுகிறார்.

பாடல் #337: இரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (அகம் + இயம்= அகத்தியம். உள்ளேயிருக்கும் ஒலி)

நடுவுநில் லாதிவ் வுலகம் சரிந்து
கெடுநின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே.

விளக்கம்:

இறைவனும் இறைவியும் திருமணம் செய்த போது அதைக் காண வேண்டும் என்ற ஆசையில் உலகத்திலுள்ள அனைத்து முனிவர்களும் யோகிகளும் சித்தர்களும் தேவர்களும் திருக்கயிலாயத்தில் வந்து சேர்ந்தனர். அதனால் அதுவரை சரிசமமாக நின்ற வடக்கு நிலங்களும் தெற்கு நிலங்களும் அதிக பளுவால் மாறி வடக்கு நிலங்கள் தாழ்ந்தும் தெற்கு நிலங்கள் உயர்ந்தும் நின்றது. உலகத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து தேவர்கள் இறைவனிடம் சென்று எம்பெருமானே இப்படி உலகம் சமம் இல்லாமல் கெட்டு நிற்கின்றதே இதைக் காப்பாற்றுங்கள் என்று முறையிட்டனர். சிவபெருமான் அகத்தியரைப் பார்த்து நீ சென்று உயர்ந்து நிற்கும் தெற்கு நிலங்களின் மேல் நின்று இரு என்று கூறினார். அதைக்கேட்டு அகத்தியரும் தென்னாடு சென்று பொதிகை மலையில் நிற்க தெற்கு நிலங்கள் சமம் பெற்றது.

உள்விளக்கம்:

உடலும் உயிரும் சேர்ந்து பிறந்த போது அது வளர வளர அதற்கு சிறிது சிறிதாக ஆசைகள் கோபம் காமம் என்று பல குணங்கள் சேரும் போது உடலோடு இருக்கும் உயிர் சரிசம நிலை இல்லாமல் கெட்டு அழிய ஆரம்பிக்கின்றது. அப்போது உயிர் தமக்கு ஆபத்து இறைவா என்னை காப்பாற்று என்று வணங்க உடம்பில் உயிர் தங்குவதற்கும் சாப்பிடும் உணவு செரிப்பதற்கும் அக்னியை வைத்து இருக்கும் பேரருளாளன் எம்பெருமான் ஈசன் உடம்பில் உள்ள அக்னியை கொண்டு எப்பொழுதும் அந்த அக்னி அழியாமல் இருக்க ஒலியை வைத்து அந்த அக்னியை வளர்த்துக்கொண்டே இருக்கின்றான். இந்த உடம்பு எப்பொழுதும் அழியாமல் இருக்க ஒலியால் குண்டலியில் உள்ள அக்னியை விரைவாக வளர்த்து தலையின் உச்சிக்கு கொண்டு சென்றால் அழியாமல் வைத்திருக்கலாம் என்று அருளுகிறார்.

ஒலி என்பதற்க்கான விளக்கம்:

மனிதனின் முன் மூளைப்பகுதியில் உள்ள நாளமில்லாச் சுரப்பி என் பெயர் பிட்யூடரி கிளாண்ட். பின் மூளையில் உள்ள நாளமில்லாச் சுரப்பு என் பெயர் பினியல் கிளாண்ட் இவை இரண்டும் வெவ்வேறு வகையில் வேலை செய்கின்றன. தெளிவான விளக்கங்கள் முன் மூளையிலும் அதனுடைய கருத்துக்கள் பின் மூளையிலும் பதிவு பெறுகின்றன. அவ்வகையான கருத்துக்களில் முதிர்ச்சியால் மூளையில் ஒரு வகை அதிர்வு (ஸ்பந்த உணர்வு) ஏற்பட்டு முன்மூளை அதிர்வு பின் நோக்கிச் செல்லும் பின் மூலையிலிருந்து அதிர்வு முன்மூளை நோக்கி செல்லும் இவை இரண்டும் சிரசின் உச்சியில் உரசுவதில் ஒலி உண்டாகும் இவ்விதமான அதிர்வு தலை முழுவதும் பரவி கவிழ்ந்து இருக்கும் சகஸ்ரதளத்தை நிமிர்ந்த சகஸ்ரதளமாக மாற்றும் இதுவே அகத்தியம்.

பாடல் #336

பாடல் #336: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

உண்ணீர் அமுதம் உறுமூ றலைத்திறந்
தெண்ணீர் குரவன் இணையடித் தாமரை
நண்ணீர் சமாதியி னாடிநீ ரானலங்
கண்ணா றொடேசென்று கால்வழி காணுமே.

விளக்கம்:

குருவின் ஈடுஇணையில்லாத தாமரை மலர் போன்ற திருவடிகளை எப்போதும் தியானத்தில் எண்ணி குண்டலினியை எழுப்பி மூச்சுக்காற்றின் மூலம் ஆறு ஆதார சக்கரங்களுக்கும் எடுத்துச் சென்று ஏழாவது சக்கரமான சகஸ்ரரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனோடு சேர்த்து பேரின்பத்தைத் தரும் அமிர்தம் ஊறும் இடத்தைத் திறந்து அதிலிருந்து கிடைக்கும் அமிர்தத்தை பருகி சமாதி நிலையை அடைந்து பேரானந்த நிலையில் இருக்கலாம்.

பாடல் #335

பாடல் #335: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்
றாகும் மதத்தால் அறிவுஅழிந் தாரே.

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்று சிவ சிந்தனையில் இருக்கும் சிவயோகிகள் பிராணாயாம முறையில் மூச்சுக்காற்றை தன் வசப்படுத்தி அதனால் கிடைக்கும் குண்டலினி சக்தியின் மூலம் அமிர்தத்தை பருகி எட்டுவித சித்திகளையும் பெற்று பேரானந்தத்தில் இருப்பார்கள். அப்படி இல்லாமல் உலக இன்பங்களில் மோகம் கொண்டவர்கள் மதுவைக் குடித்து மூடர்களாகி மதம் பிடித்த யானை போல் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கோபம் கொண்டு அறிவு அழிந்து ஒரு நாள் இறந்து போகின்றனர்.

பாடல் #334

பாடல் #334: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போகியே
மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.

விளக்கம்:

பாடல் #331 ல் உள்ளபடி சிவானந்ததேனை அருந்தினால் உயிர்கள் உடம்பில் வாழ இறைவனால் கொடுக்கப்பட்ட 96 தத்துவங்கள் நீங்கும். அவை அனைத்தும் தன்னுடையது என்று எண்ணும் மாயைகள் நீங்கும். உலக இன்பங்களைப் பெற எண்ணி பொய்யான தவங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீங்கும். இந்த உலகைப்பற்றிய நினைப்பொழிந்து தமக்குள் சிவபோகமாகிய என்றும் அழியாத உண்மை வீட்டில் பேரானந்த மயக்கத்துள் இருக்கலாம்.