பாடல் #242

பாடல் #242: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாம் நாட்டிற்கே.

விளக்கம்:

உண்மை ஞானம் இல்லாதவர்கள் வெறும் சடை முடியும் பூணூலும் தரித்து உண்மை ஞானிகள் போல நடித்துக்கொண்டு இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் இருக்கும் நாடு எப்போதும் சுபிட்சம் அடையாமல் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கும். நடிப்பவர்கள் யார் என்பதை அந்த நாட்டு மக்களை ஆளுகின்ற அரசன் உண்மையான ஞானிகளின் மூலம் சோதனை செய்து நடிப்பவர்களை அடையாளம் கண்டுகொண்டு அந்த உண்மையான ஞானிகளின் மூலமே நடித்துக் கொண்டிருக்கின்ற ஞானிகளுக்கும் உண்மை ஞானத்தை போதனை செய்யவைத்து ஞானம் உண்டாக்கினான் என்றால் அவன் நாடும் அவனும் எப்போதும் நலம் பெற்று இன்பமாக இருப்பார்கள்.

பாடல் #243

பாடல் #243: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

ஆவையும் பாவையும் மற்றற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே.

விளக்கம்:

பால் தரும் பசுக்களையும் பெண்களையும் அற நெறி உணர்ந்த சான்றோரையும் வானுலகத்து தேவர்கள் போற்றுகின்ற ஞானத்தை உணர்ந்து அதைக் குறிக்கும் வேஷத்தை தரித்த ஞானிகளையும் அவர்கள் வாழும் நாட்டிற்கு காவலனாக விளங்கும் அரசன் அவர்களைக் காத்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவர்களை காப்பாற்றவில்லை என்றால் அவன் இறந்தபின் இன்னுமொரு பிறவி எடுக்க முடியாத அளவிற்கு எப்போதுமே தப்பிக்க முடியாத நரகத்தில் துன்பப்பட்டுக் கொண்டு கிடப்பான்.

பாடல் #244

பாடல் #244: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேயாற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.

விளக்கம்:

பிறவி இல்லாத மேன்மை தரும் முக்தியையும் இந்தப் பிறவிக்கு தேவையான செல்வங்களும் வேண்டும் என்று ஒரு அரசன் விரும்பினால் அவன் மறந்த நிலையிலும் தர்மத்தின் வழி தவறாமல் நடக்க வேண்டும். ஏனெனில் சிறப்பு பெற்ற தண்ணீர் சூழ்ந்த இந்த உலகத்தில் அனைத்து உயிர்களும் செய்யும் காரியங்கள் அனைத்திலும் ஆறில் ஒரு பங்கு அரசனுக்கே வந்து சேரும். அந்த உயிர்கள் செய்யும் புண்ணியங்கள் பாவங்கள் அனைத்திலும் ஆறில் ஒரு பங்கு தமக்கு வரும் என்பதை உணர்ந்துகொண்டு அரசன் எப்போதும் மறக்காமல் அறத்தின் வழியிலேயே அவர்களையும் வழிநடத்திச் செல்ல வேண்டும்.

பாடல் #245

பாடல் #245: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப்
பாய்ந்த புலியன்ன பாவம்அகத் தானே.

விளக்கம்:

ஒரு நாட்டை ஆளும் அரசன் அதை மிகவும் நன்றாக காத்து ஆட்சி புரிந்தான் என்றால் அந்த நாட்டில் உள்ள மக்களும் தாங்கள் ஏற்றுக்கொண்ட தொழில்களுக்கு ஏற்ற தர்மநெறிகளிலிருந்து மாறாமல் அவ்வழியே நல்லவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழும் நாட்டை பிறர் போர் செய்தோ அல்லது சூழ்ச்சி செய்தோ கைப்பற்ற நினைத்தால் தங்கள் நாட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக புலி பதுங்கியிருந்து பாய்ந்து அடித்து தனது உணவை தேடிக்கொள்வது போல போர் தொழில் கொண்ட மக்களும் நாட்டைக் காக்கும் அரசனும் பதுங்கியிருந்து தனது நாட்டை காப்பாற்றிக்கொள்வார்கள்.

கருத்து : மன்னன் தர்மவழியில் நாட்டை ஆட்சி செய்தால் மக்களும் தர்மவழியில் நடப்பார்கள்.

பாடல் #246

பாடல் #246: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

விளக்கம்:

பிராணாயாமப் பயிற்சியின் மூலம் மூச்சுக்காற்றை உள்ளே அடக்கி மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியை சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றின் மூலம் தலை உச்சியின் மேலேற்றி சகஸ்ரரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனின் நிலவைப் போன்ற திருமுகத்தைக் கண்டு தரிசித்து பிறகு குண்டலினி சக்தியை புருவ மத்தியில் இருக்கும் ஆஞ்சை சக்கரத்தில் கொண்டு வந்து இறக்கி அதன் பிறகு அங்கே இருக்கும் அமிர்தத்தை இறைவனை நினைத்து பருகாமல் புத்தி மயக்கத்தின் மேல் மோகம் கொண்டு பனை மரத்திலிருக்கும் கள்ளை இறக்கித் தினமும் பருகி அந்த மயக்கத்திலேயே இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களுக்குத் தக்க தண்டனை அளித்துத் திருத்த வேண்டியது நாட்டை ஆளும் அரசனது கடமையாகும்.

பாடல் #247

பாடல் #247: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

தத்தம் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண்ட மும்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே.

விளக்கம்:

உயிர்கள் அவரவர்கள் ஏற்றுக்கொண்ட சமய வழிகளின் நெறிமுறைகளின் படியும் ஒழுக்கத்தின் படியும் நடக்கத் தவறியவர்களை அனைத்து சமய வழிகளின் தலைவனாகவும், அனைத்து உயிர்களின் தந்தையாகவும் இருக்கும் சிவபெருமான் தாம் வழங்கிய சிவாகமத்தில் கொடுத்துள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப எந்தவித தண்டைனையானாலும் அவர்களின் ஆன்மாவிற்கு மறுபிறவியில் கொடுத்து அவர்களை சீர் படுத்துவான். ஆனாலும் அவர்கள் எடுத்திருக்கும் இந்தப் பிறவியில் இருக்கும் உடலுக்கு வேண்டிய தண்டனைகளைக் கொடுத்து அவர்களைத் திருத்துவது ஒரு நாட்டை ஆளும் அரசனது கடமையாகும்.

குறிப்பு : ஏன் இறைவன் அடுத்த பிறவியில் தண்டனை கொடுக்க வேண்டும் இப்பிறவியில் கொடுத்தால் என்ன என்ற கேள்வியை பலர் கேட்கின்றனர். அதற்கான பதில் தவறுக்கு ஏற்ற இறைவனின் தண்டனையை உடல் அளவிலும் மன அளவிலும் தாங்கும் சக்தியை அந்த ஆத்மாவிற்கு கொடுத்து தண்டனையை தாங்கும் அளவிற்கு ஆன்மாவை பக்குவப்படுத்திய பிறகே இறைவன் தண்டனையை அளிக்கிறான்.

பாடல் #224

பாடல் #224: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தம்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.

விளக்கம் :

அந்தணர் என்பவர் வேதங்களை ஓதுதல். கற்ற வேதங்களை பிறருக்கு கற்றுக்கொடுத்தல். வேத முறைப்படி யாகம் வளர்த்தல். பிறருக்கு யாகம் செய்யும் முறையை கற்றுக்கொடுத்தல். தானம் கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தானம் தருதல். பிறரிடமிருந்து தானம் பெறுதல் ஆகியவற்றை செய்பவர்களே அந்தணர்கள் ஆவார்கள். அதுமட்டுமின்றி 1.தூய்மையாக இருத்தல் 2. இறையருளோடு இருத்தல் 3. அளவான உணவு 4. பொறுமையோடு இருத்தல் 5. நேர்மையுடன் இருத்தல் 6. பொய் பேசாது சத்தியத்தைக் கடைபிடித்தல் 7. சத்தியத்திற்காக வைராக்கியத்தை வளர்த்தல் 8. காமத்தை எண்ணாதிருத்தல் 9. களவு (திருடு) எண்ணாமலிருத்தல் 10. கொலை எண்ணாமலிருத்தல் ஆகிய பத்து குணங்களையும் தானும் அறிந்து பிறர் அறித்துகொள்ளச் செய்து நியமத்தின் வழி நடக்க வேண்டும். தாம் கடைபிடிக்கும் தவத்திலும் நல்ல காரியங்களைச் செய்யும் கருமங்களிலிருந்தும் எப்போதும் தவறாமல் நின்று நல்லது தீயது ஆகிய அனைத்து சடங்குகளையும் பிறருக்காக செய்து கொடுப்பவர்களே அந்தணர்கள் அவர்கள்.

பாடல் #225

பாடல் #225: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாம் எனாதுகண் டின்புறு வோர்களே.

விளக்கம்:

அந்தணர்கள் எப்போதும் வேதங்களின் முடிவாக இருக்கின்ற வேதாந்தங்களைக் கேட்பதில் விருப்பத்தோடு இருக்க வேண்டும். மூன்று பதங்களைக் கொண்ட படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றின் முடிவாய் இருக்கின்ற ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாகிய தத்துவமஸி (பரம்பொருள் நீயாக இருக்கிறாய்) என்பதை உணர்ந்து ஒலி மற்றும் வேதத்தின் முடிவாகிய இறைவனை இவன் தான் என்று தனக்குள் உணர்ந்து பேரின்பத்திலேயே திளைத்து இருப்பவர்களே அந்தணர்கள் ஆவார்கள்.

பாடல் #226

பாடல் #226: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற் குவப்பர் மந்திரமாங்கு உன்னி
நேயுத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயாத மறையோர்கள் தாமே.

விளக்கம்:

காயத்ரி மந்திரத்தையும் சாவித்ரி மந்திரத்தையும் தமது கருத்தில் வைத்து விருப்பப்பட்டு ஆராய்ந்து அதன் பொருளை உணர்ந்து நாள் தோறும் அந்த மந்திரங்களையே மனதில் வைத்து தியானித்து இறையருளால் உணர்ந்த அன்பு எனும் தேரில் ஏறி அன்பையே தமது எண்ணத்தில் எப்போதும் வைத்து மாயையாகிய உலகப் பற்றுக்களின் மேல் ஆசை கொள்ளாமல் வேதங்களின் முறைப்படியே வாழ்ந்து வருபவர்களே அந்தணர்கள் ஆவார்கள்.

குறிப்பு: காயத்ரி மந்திரத்தின் ஒரு எழுத்து இல்லாத மந்திரமே சாவித்திரி மந்திரமாகும். ஞானிகள், முனிவர்கள், யோகிகளால் மட்டுமே காயத்ரி மந்திரத்தை சொல்ல முடியும். ஏனெனில் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது உருவாகும் சக்திகளை சாதாரண மனிதர்களால் தாங்க முடியாது. உடல் நிலை மனநிலை பாதிக்கும். தற்போது மனிதர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் காயத்ரி மந்திரமே சாவித்திரி மந்திரமாகும். தற்போது இருக்கும் கலியுகத்தில் மனிதர்களின் உடல்நிலை மனநிலை எந்த விதத்திலும் பாதிப்படையாமல் இறைவனை அடைய இறையருளால் ஓர் எழுத்து நீக்கப்பட்ட மந்திரமே சாவித்திரி மந்திரமாகும்.

பாடல் #227

பாடல் #227: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான திருகை இருத்திச்
சொரூபம தானோர் துகளில்பார்ப் பாரே.

விளக்கம்:

முக்திக்கு வழிகாட்டும் பெரிய நெறியாகிய ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை பொருளுணர்ந்து ஜெபித்து குருவானவர் வழிகாட்டிய நெறிகளையே பின்பற்றி குருவானவர் கூறிய மந்திர உரைகளையே எப்போதும் ஜெபித்து இறைவனை அடைய நான்கு வேதங்களிலும் (1. ரிக் வேதம், 2. யஜுர் வேதம், 3. சாம வேதம், 4. அதர்வண வேதம்) சொல்லப்பட்டிருக்கும் நெறிகளின்படி வாழ்ந்து அந்த நான்கு வேதங்களின் உட்பொருளாக இருக்கும் இறைவனை தமக்குள் வைத்து தியானித்து தமது உருவத்தையே இறைவனது உருவமாக பாவித்து தமது உடலில் உள்ள ஒவ்வொரு துகளிலும் இறைவனை பார்ப்பவர்கள் அந்தணர்கள்.