பாடல் #1732

பாடல் #1732: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

ஆகின்ற சத்தியி னுள்ளே கலைநிலை
யாகின்ற சத்தியி னுள்ளே கதிரெழ
வாகின்ற சத்தியி னுள்ளே யமர்ந்தபி
னாகின்ற சத்தியு ளத்திசை பத்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆகினற சததியி னுளளெ கலைநிலை
யாகினற சததியி னுளளெ கதிரெழ
வாகினற சததியி னுளளெ யமரநதபி
னாகினற சததியு ளததிசை பததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின்
ஆகின்ற சத்தி உள் அத் திசை பத்தே.

பதப்பொருள்:

ஆகின்ற (அசையாத சக்தியாகிய சதாசிவப் பரம்பொருளில் எண்ண அலைகள் உருவாகின்ற போது அந்த அசைவினால் வெளிப்படுகின்ற) சத்தியின் (அசையும் சக்திக்கு) உள்ளே (உள்ளே) கலை (உலக இயக்கத்திற்கு தேவையான ஐந்து விதமான கலைகளாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தும்) நிலை (நிலை பெறும்)
ஆகின்ற (சதாசிவப் பரம்பொருளிலிருந்து வெளிப்பட்ட) சத்தியின் (சக்தியின்) உள்ளே (உள்ளே) கதிர் (வெளிச்சமாகிய சக்தி) எழ (எழுந்து வரும் போது)
ஆகின்ற (சதாசிவப் பரம்பொருளிலிருந்து வெளிப்பட்ட) சத்தியின் (சக்தியின்) உள்ளே (உள்ளே) அமர்ந்த (சத்தமாகிய சிவமும் அமர்ந்த) பின் (பிறகு)
ஆகின்ற (சதாசிவப் பரம்பொருளிலிருந்து வெளிப்பட்ட) சத்தி (சக்திக்கு) உள் (உள்) அத் (அண்ட சராசரங்களும்) திசை (திசைகள்) பத்தே (பத்தும் அடங்கி இருக்கும்).

விளக்கம்:

அசையாத சக்தியாகிய சதாசிவப் பரம்பொருளில் எண்ண அலைகள் உருவாகின்ற போது அந்த அசைவினால் வெளிப்படுகின்ற அசையும் சக்திக்கு உள்ளே உலக இயக்கத்திற்கு தேவையான ஐந்து விதமான கலைகளாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தும் நிலை பெறும். அதற்குள்ளிருந்து வெளிச்சமாகிய சக்தி எழுந்து வரும் போது அதனுள் சத்தமாகிய சிவமும் அமரும். அதற்குள்ளேயே அண்ட சராசரங்களும் அதிலிருக்கும் பத்து திசைகளும் அடங்கி இருக்கும்.

பாடல் #1733

பாடல் #1733: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

அத்திசைக் குள்ளே யமர்ந்தன வாறங்க
மத்திசைக் குள்ளே யமர்ந்தன நால்வேத
மத்திசைக் குள்ளே யமர்ந்த சரிதையோ
டத்திசைக் குள்ளே யமைந்த சமையமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அததிசைக குளளெ யமரநதன வாறஙக
மததிசைக குளளெ யமரநதன நாலவெத
மததிசைக குளளெ யமரநத சரிதையொ
டததிசைக குளளெ யமைநத சமையமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அத் திசைக்கு உள்ளே அமர்ந்தன ஆறு அங்கம்
அத் திசைக்கு உள்ளே அமர்ந்தன நால் வேதம்
அத் திசைக்கு உள்ளே அமர்ந்த சரிதையோடு
அத் திசைக்கு உள்ளே அமைந்த சமையமே.

பதப்பொருள்:

அத் (அண்ட சராசரங்களில் உள்ள பத்து) திசைக்கு (திசைகளுக்கு) உள்ளே (உள்ளே) அமர்ந்தன (அமர்ந்து இருக்கின்றது) ஆறு (வேதத்தின் ஆறு) அங்கம் (அங்கங்களாகிய சிட்சை, வியாகரணம், சந்தம், சோதிடம், நிருக்தம், கல்பம் ஆகியவை)
அத் (அண்ட சராசரங்களில் உள்ள பத்து) திசைக்கு (திசைகளுக்கு) உள்ளே (உள்ளே) அமர்ந்தன (அமரந்து இருக்கின்றது) நால் (ரிக்கு, சாமம், யஜூர், அதர்வணம் ஆகிய நான்கு) வேதம் (வேதங்களும்)
அத் (அண்ட சராசரங்களில் உள்ள பத்து) திசைக்கு (திசைகளுக்கு) உள்ளே (உள்ளே) அமர்ந்த சரிதையோடு
அத் (அண்ட சராசரங்களில் உள்ள பத்து) திசைக்கு (திசைகளுக்கு) உள்ளே (உள்ளே) அமைந்த சமையமே.

விளக்கம்:

அண்ட சராசரங்களில் உள்ள பத்து திசைகளுக்கு உள்ளே பாடல் #55 இல் உள்ளபடி வேதத்தின் ஆறு அங்கங்களாகிய சிட்சை, வியாகரணம், சந்தம், சோதிடம், நிருக்தம், கல்பம் ஆகியவையும், நான்கு வேதங்களாகிய ரிக்கு, சாமம், யஜூர், அதர்வணம் ஆகியவையும், இறைவனை அடையும் நான்கு வழிமுறைகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவையும், பாடல் #994 இல் உள்ளபடி இறைவனை அடையும் ஆறு சமயங்களாகிய தியானம், செபம், பூஜை, சக்கரம், ஞானம், புத்தி ஆகியவையும் அமர்ந்து இருக்கின்றன.

வேதத்தின் ஆறு அங்கங்கள்:

சிட்சை – வேதத்தின் எழுத்து மற்றும் ஒலி முதலியவற்றைப் பற்றிச் சொல்வது.
வியாகரணம் – சொற்களின் இலக்கணத்தை ஆராய்வது.
சந்தம் – செய்யுள் இலக்கணம் பற்றிச் சொல்வது.
சோதிடம் – கோள் நிலைகளை வைத்து காலத்தை ஆராய்வது.
நிருக்தம் – வேதச் சொற்களுக்கு பொருள் கூறுவது.
கல்பம் – வேதத்தின் செயல் முறைகளை உரைப்பது.

நான்கு வேதங்கள்:

ரிக்கு – தெய்வங்களை போற்றி வணங்குகின்ற மந்திரங்களைக் கொண்டது.
யஜூர் – தெய்வங்களை யாகம் செய்து வழிபடும் முறைகளைக் கொண்டது.
சாமம் – இசை மூலம் இறைவனை போற்றும் பாடல்களைக் கொண்டது.
அதர்வணம் – தெய்வ சக்திகளை உபயோகித்து பாதுகாத்துக் கொள்கின்ற மந்திரங்களைக் கொண்டது.

இறைவனை அடையும் நான்கு வித வழிகள்:

சரியை – கோயில்கள் செல்வது, பூஜைகள் செய்வது. (பக்தி யோகம்)
கிரியை – மந்திரம் சொல்லி சக்கரங்கள் வைத்து வழிபடுவது. (கர்ம யோகம்)
யோகம் – தியானம், தவம் செய்வது. (இராஜ யோகம்)
ஞானம் – அனைத்திற்கும் மேலான நிலையில் சலனங்கள் இன்றி இருப்பது. (ஞான யோகம்)

இறைவனை அடையும் ஆறு வித சமயங்கள்:

தியானம் – மந்திரத்தை மனதிற்குள் தியானித்தல்.
செபம் – அக வழிபாடு மூலம் செபித்தல்.
பூஜை – புற வழிபாடு மூலம் செபித்தல்.
சக்கரம் – சக்கரங்கள் அமைத்து செபித்தல்.
ஞானம் – மந்திரத்தின் பொருளை தேடி ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்.
புத்தி – மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்.

பாடல் #1734

பாடல் #1734: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

சமையத் தெழுந்த வவத்தை யீரைந்துள
சமையத் தெழுந்த விராசி யீராறுள
சமையத் தெழுந்த சதிர் ரீரெட்டுள
சமையத் தெழுந்த சதாசிவன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சமையத தெழுநத வவததை யீரைநதுள
சமையத தெழுநத விராசி யீராறுள
சமையத தெழுநத சதிர ரீரெடடுள
சமையத தெழுநத சதாசிவன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சமயத்து எழுந்த அவத்தை ஈர் ஐந்து உள
சமயத்து எழுந்த இராசி ஈர் ஆறு உள
சமயத்து எழுந்த சதிர் ஈர் எட்டு உள
சமயத்து எழுந்த சதா சிவம் தானே.

பதப்பொருள்:

சமயத்து (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களில்) எழுந்த (எழுந்தது) அவத்தை (ஆன்மாக்கள் அனுபவிக்க வேண்டியதாகிய) ஈர் (மேலாலவத்தை கீழாலவத்தை ஆகிய இரண்டிலும்) ஐந்து (ஐந்து ஐந்தாக மொத்தம் பத்து) உள (உள்ளது)
சமயத்து (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களில்) எழுந்த (எழுந்தது) இராசி (இராசிகள்) ஈர் (இரண்டும்) ஆறு (ஆறும் பெருக்கி மொத்தம் 12) உள (உள்ளது)
சமயத்து (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களில்) எழுந்த (எழுந்தது) சதிர் (இறையருளால் கிடைக்கின்ற பேறுகள்) ஈர் (இரண்டும்) எட்டு (எட்டும் பெருக்கி மொத்தம் 16) உள (உள்ளது)
சமயத்து (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களில்) எழுந்த (எழுந்த இவை அனைத்தும்) சதா (சதா) சிவம் (சிவப் பரம்பொருள்) தானே (தான் ஆகும்).

விளக்கம்:

இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களிருந்து எழுவது ஆன்மாக்கள் அனுபவிக்க வேண்டியதாகிய ஐந்து விதமான மேலாலவத்தைகளும், ஐந்து விதமான கீழாலவத்தைகளும், 12 இராசிகளும், இறையருளால் கிடைக்கக் கூடிய 16 விதமான பேறுகளும் உள்ளது. இந்த சமயங்கள் அனைத்தும் சதா சிவப் பரம்பொருளே ஆகும்.

பாடல் #1735

பாடல் #1735: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

நடுவு கிழக்குத் தெற்குத்தர மேற்கு
நடுவு படிகநற் குங்கும வன்ன
மடைவுள வஞ்சனஞ் செவ்வரத் தம்பா
லடியற் கருளிய முகமிவை யைந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நடுவு கிழககுத தெறகுததர மெறகு
நடுவு படிகநற குஙகும வனன
மடைவுள வஞசனஞ செவவரத தமபா
லடியற கருளிய முகமிவை யைநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நடுவு கிழக்கு தெற்கு உத்தர மேற்கு
நடுவு படிக நல் குங்கும வன்னம்
அடைவு உள அஞ்சனம் செவ் அரத்தம் பால்
அடியற்கு அருளிய முகம் இவை ஐந்தே.

பதப்பொருள்:

நடுவு (நடுவில் மேல் நோக்கி இருக்கின்ற ஈசானம் முகம்) கிழக்கு (கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருடம் முகம்) தெற்கு (தெற்கு நோக்கி இருக்கின்ற அகோரம் முகம்) உத்தர (வடக்கு நோக்கி இருக்கின்ற வாமதேவம் முகம்) மேற்கு (மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாதம் முகம் ஆகிய ஐந்து முகங்களில்)
நடுவு (ஈசானம் முகம்) படிக (படிக நிறத்திலும்) நல் (தற்புருடம் முகம் நல்ல) குங்கும (குங்கும) வன்னம் (நிறத்திலும்)
அடைவு (தெற்கு நோக்கி) உள (இருக்கின்ற அகோரம் முகம்) அஞ்சனம் (கருப்பு நிறத்திலும்) செவ் (வாமதேவம் முகம் செம்மையான) அரத்தம் (அரத்தம் பூவைப் பொன்ற சிகப்பு நிறத்திலும்) பால் (சத்தியோசாதம் முகம் பாலைப் போன்ற வெண்மையான நிறத்திலும் இருக்கின்றதே)
அடியற்கு (தம்மை வணங்கும் அடியவர்களுக்காக) அருளிய (இறைவன் அருளிய) முகம் (திருமுகங்கள்) இவை (இவை) ஐந்தே (ஐந்தும் ஆகும்).

விளக்கம்:

தம்மை வணங்கும் அடியவர்களுக்காக இறைவன் அருளிய திருமுகங்கள் ஐந்தாகும். இவை முறையே நடுவில் மேல் நோக்கி இருக்கின்ற ஈசானம் முகம், கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருடம் முகம், தெற்கு நோக்கி இருக்கின்ற அகோரம் முகம், வடக்கு நோக்கி இருக்கின்ற வாமதேவம் முகம், மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாதம் முகம் ஆகும். ஈசானம் முகம் படிக நிறத்திலும், தற்புருடம் முகம் நல்ல குங்கும நிறத்திலும், அகோரம் முகம் கருப்பு நிறத்திலும், வாமதேவம் முகம் செம்மையான அரத்தம் பூவைப் பொன்ற சிகப்பு நிறத்திலும், சத்தியோசாதம் முகம் பாலைப் போன்ற வெண்மையான நிறத்திலும் இருக்கின்றது.

பாடல் #1736

பாடல் #1736: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

அஞ்சு முகமுள வைம்மூன்று கண்ணுள
வஞ்சி னோடைந்து கரதலந் தானுள
வஞ்சி னோடைஞ் சாயுதமுள நம்பியென்
னெஞ்சுள் புகுந்து நிறைந்துநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அஞசு முகமுள வைமமூனறு கணணுள
வஞசி னொடைநது கரதலந தானுள
வஞசி னொடைஞ சாயுதமுள நமபியென
னெஞசுள புகுநது நிறைநதுநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அஞ்சு முகம் உள ஐம் மூன்று கண் உள
அஞ்சினோடு ஐந்து கரதலம் தான் உள
அஞ்சினோடு ஐஞ்சு ஆயுதம் உள நம்பி என்
நெஞ்சு உள் புகுந்து நிறைந்து நின்றானே.

பதப்பொருள்:

அஞ்சு (சதா சிவப் பரம்பொருளுக்கு ஐந்து) முகம் (திருமுகங்கள்) உள (உள்ளது) ஐம் (அந்த ஐந்து திருமுகங்களிலும்) மூன்று (முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து) கண் (திருக்கண்கள்) உள (உள்ளது)
அஞ்சினோடு (ஐந்து திருமுகங்களோடு சேர்ந்து ஐந்தும்) ஐந்து (ஐந்தும் கூட்டி மொத்தம்) கரதலம் (பத்து திருக்கரங்கள்) தான் (அவருக்கு) உள (உள்ளது)
அஞ்சினோடு (ஐந்து திருமுகங்களோடு சேர்ந்து ஐந்தும்) ஐஞ்சு (ஐந்தும் கூட்டி மொத்தம்) ஆயுதம் (பத்து திருக்கரங்களிலும் பத்து விதமான ஆயுதங்கள் தம் அடியவரைக் காக்கின்ற கருவிகளாக) உள (உள்ளது) நம்பி (இவ்வாறு சதாசிவ இலிங்கமாக இருக்கின்ற இறைவன் தம்மை நம்புகின்ற) என் (அடியவர்களின்)
நெஞ்சு (நெஞ்சத்திற்கு) உள் (உள்ளே) புகுந்து (புகுந்து) நிறைந்து (முழுவதுமாக நிறைந்து) நின்றானே (நிற்கின்றான்).

விளக்கம்:

சதா சிவப் பரம்பொருளுக்கு ஐந்து திருமுகங்கள் உள்ளது. அந்த ஐந்து திருமுகங்களிலும் முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து திருக்கண்கள் உள்ளது. அவருக்கு பத்து திருக்கரங்கள் உள்ளது. அந்த பத்து திருக்கரங்களிலும் பத்து விதமான ஆயுதங்கள் தம் அடியவரைக் காக்கின்ற கருவிகளாக உள்ளது. இவ்வாறு சதாசிவ இலிங்கமாக இருக்கின்ற இறைவன் தம்மை நம்புகின்ற அடியவர்களின் நெஞ்சத்திற்கு உள்ளே புகுந்து முழுவதுமாக நிறைந்து நிற்கின்றான்.

திருமூலர் தனது சீடர்களுடன்

திருமூலர் தனது ஏழு சீடர்களுடன் திருவாவடுதுறை கோமூக்தீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்திருக்கும் ஓவியம். 1912 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருமந்திரம் புத்தகத்தில் உள்ளது.

திருமந்திரத்தில் சைவம் – பகுதி 2

திருமந்திரத்தில் சைவம் – பகுதி 2 எனும் தலைப்பைப் பற்றி திருமந்திரத் திண்ணை எனும் குழுவில் Zoom நேரலையில் 16-09-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரத்தில் சைவம் – பகுதி 3

“திருமந்திரத்தில் சைவம் – பகுதி 3” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 22-10-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரத்தில் வேடம்

“திருமந்திரத்தில் வேடம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 18-06-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரத்தில் நவ குண்டம்

“திருமந்திரத்தில் நவ குண்டம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 19-02-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.