பாடல் #717: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)
சாதக மானஅத் தன்மையை நோக்கியே மாதவ மான வழிபாடு செய்திடும் போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால் வேதக மாக விளைந்து கிடக்குமே.
விளக்கம்:
பாடல் #716 ல் உள்ளபடி அகயோகம் செய்வதன் பெருமையை உணர்ந்து மாபெரும் தவமாகிய அந்த யோகத்தை செய்து மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் போய்ச் சேரும்படி மேல் நோக்கிப் பாய்ச்சினால் இரும்பை தங்கமாக்கிவிடும் இரசவாத குளிகையைப் போலவே யோகம் செய்பவரின் உடல் பொன்னொளி வீசும் தங்கத்தாலான உடலாக மாறிவிடும்.
கருத்து: அகயோகம் செய்யும் யோகியரின் உடல் பொன்னொளி வீசும் தங்கமாக மாறிவிடும்.
பாடல் #718: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)
கிடந்தது தானே கிளர்பயன் மூன்று நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப் படர்ந்தது தானேஅப் பங்கய மாகத் தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே.
விளக்கம்:
பாடல் #717 ல் உள்ளபடி அகயோகத்தால் தம் உடலைத் தங்கமாக மாற்றிக்கொண்ட யோகியர்களுக்குள் உருவாகும் பயன்கள் மூன்றுவிதமாகும். முதலாவதாக மூலாதாரத்தில் இருந்து வெளிவரும் காற்று சுழுமுனை நாடி வழியாக உள்ளுக்குள் சென்று சகஸ்ரதளத்திற்கும் மூலாதாரத்திற்கும் இடையே உள்ளுக்குள் நோக்கி சுழன்று கொண்டு இருப்பதால் வெளிக்காற்றை சுவாசிக்க வேண்டியது இல்லை. இரண்டாவதாக அவர்களின் உள்ளுக்குள்ளே சுழன்று கொண்டு இருக்கும் காற்று சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் தாமரை இதழ்களிலும் பரவி அதை மலரச் செய்து எப்போதும் இயக்கத்திலேயே வைத்திருக்கும். மூன்றாவதாக அவர்களின் உடல் இறைவனின் ஜோதிமயத்திலேயே மூழ்கி பேரின்பத்தில் எப்போதும் அழியாமல் நிற்கும்.
கருத்து: அகயோகம் செய்கின்ற யோகியர்கள் உடலுக்கு தேவையான மூச்சுக்காற்றை தனக்குள்ளேயே பெற்றுக்கொண்டு தனக்குள் ஜோதியாய் இருக்கும் இறைவனுடன் பேரின்பத்தில் மூழ்கி இருப்பார்கள்.
பாடல் #719: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)
தானே எழுந்தஅத் தத்துவ நாயகி ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும் வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத் தேனே பருகிச் சிவாலய மாகுமே.
விளக்கம்:
இறைவனை அடைவதற்கு வழியாக பிறக்கும் போதே அனைத்து உயிர்களுக்கும் உள்ளே இருக்கும் குண்டலினி சக்தியானது பாடல் #717 ல் உள்ளபடி அகயோகத்தால் தம் உடலைத் தங்கமாக மாற்றிக்கொண்ட யோகியர்களுக்குள் தானாக எழுந்துவிடும். தேவர்களையும் உலகத்தையும் படைத்த அசையும் சக்தியாகவும் அசையா சக்தியாகவும் இருக்கின்ற இறைவனை சுழுமுனை நாடி வழியாக சகஸ்ரதளத்தை சென்று அடைந்து அங்கிருக்கும் அமிர்தத்தை பருகிவிட்டால் அந்த யோகியரின் உடல் இறைவனை வீற்றிருக்கும் ஆலயமாகும்.
கருத்து: அகயோகம் செய்து குண்டலினி சக்தியை மேலெழுப்பி அமிர்தத்தை பருகும் யோகியர்களின் உடல் இறைவனை வீற்றிருக்கும் ஆலயமாகும்.
உயிர்கள் வாழ்வதற்கு மட்டுமன்றி தம்மை வந்தடைந்து மேன்மையடையவும் மூச்சுக்காற்றை படைத்து அருளியிருக்கின்றான் இறைவன். ஆனால் உயிர்கள் சுவாசிக்கும் 540 பங்குகளில் (பாடல் #700 இல் காண்க) ஒரு பங்கைத் தவிர மீதி அனைத்தும் இறைவனை அடையாமலேயே வீணாகிவிடுவதை யாரும் அறிந்திருக்கவில்லை. வீணாகும் மூச்சுக்காற்றின் உண்மைப் பயனை அறிந்து கொண்டு அகயோகம் செய்யும் யோகியர்களுக்கு இறைவனே குருவாக இருந்து அவர்களின் வெளிப்புற மூச்சுக்காற்றை நிறுத்தி உட்புறமாக மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை நாடிவழியே சுவாசிக்க வைத்து அந்த சுவாசத்தோடு கலந்து நின்று அருளுகின்றான்
கருத்து: உடலின் செயல்களில் வீணாகிவிடும் மூச்சுக்காற்றை அகயோகம் செய்து மாற்றி முழுமையாக பயன்படுத்தும் யோகியர்களின் சுவாசத்தோடு கலந்து குருவாக நின்று இறைவன் அருளுகின்றான்.
யோகியர் தாம் விடும் மூச்சுக்காற்றின் அளவைக் கொண்டே தமக்குள் இறைவன் வீற்றிருக்கும் உடலும் இறைவி வீற்றிருக்கும் உயிரும் எப்போது பிரியும் என்பதை ஒரு சில சோதனைகளால் சிறிதும் பிழையின்றி மிகச் சரியாக அறிந்து கொள்ளலாம். அந்த சோதனைகள் என்ன என்பதை யோக குருவை வழிபட்டு அவர் அருளுகின்ற சாதனைகளை அரிய மாபெரும் செல்வமாக மதித்து சிரத்தையாக செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கருத்து: உடலை விட்டு உயிர் பிரிந்து விடும் ஆயுளை மிகச் சரியாகக் கணக்கிடும் சாதனைகளை யோக குருவின் அருள் கொண்டு அறிந்து கொண்டு சிரத்தையுடன் செய்யும் சாதகர்களுக்கு இறப்பிலிருந்து தப்பிக்கும் வழி கிடைக்கும்.
யோக குருவை வழிபட்டு அவர் அருளுகின்ற சாதனைகளைச் சிரத்தையாக செய்வதன் மூலம் கிடைக்கும் பலனை அடுத்த பாடல் #722ல் காணலாம்.
பாடல் #721 இல் கூறியுள்ளபடி யோக குருவை வழிபட்டு அவரது அருளால் கிடைத்த சாதனைகளின் மூலம் ஆறுகளைப் போன்ற இடகலை பிங்கலை நாடிகளின் வழியே குதிரையைப் போல குதித்துவரும் மூச்சுக்காற்றை வீணாக்காமல் கட்டி வைத்து சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்த்து அங்கே சுரக்கும் அமிர்தத்தைப் பருக முடிந்த யோகியர்களின் உடல் கடலுக்கு அடியில் ஆயிரம் ஆண்டுகள் இருந்தாலும் நிலத்திற்கு அடியில் ஆயிரம் ஆண்டுகள் இருந்தாலும் அழியவே அழியாமல் என்றும் உயிர்ப்புடன் இருக்கும் என்பது குருவிற்கெல்லாம் மேலான மஹா குருவான இறைவனின் மேல் ஆணையே.
கருத்து: யோக குருவின் அருளால் கிடைத்த சாதனைகளின் மூலம் தங்களின் உடலும் உயிரும் பிரியும் ஆயுட் காலத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் யோகியர்கள் அதை மாற்றுவதற்கு அகயோகம் செய்தால் அவர்களின் உடலும் உயிரும் எவ்வளவு ஆயிரம் வருடங்களானாலும் பிரியாமல் இருக்கும் இது குருவிற்கெல்லாம் மேலான மஹா குருவான இறைவனின் மேல் ஆணை.
ஏழு விதமான ஒலிகளை உணரும் காதுகளும் ஐந்து விதமான ஒளிகளைக் காணும் கண்களும் மூன்று விதமான சுவாசங்களை முகரும் நாசிகளும் இரண்டு விதமானதைச் செய்யும் நாக்கும் தொடுவதை உணரும் உடலும் உயிரான ஆன்மாவை விட்டுப் பிரியும் நாள் எதுவென்பதை மிகவும் துல்லியமாக மூச்சுக்காற்றை வைத்தே அளந்து வைத்திருக்கின்றான் அனைத்துவித மலங்களையும் அறுத்து அருளும் சோதிமயமான இறைவன்.
கருத்து: உயிர்கள் தம்மிடம் அடையும் வழியை வைத்தருளிய இறைவன் அதன்படி செய்யாத உயிர்கள் அழிந்து மறுபடியும் பிறவி எடுப்பதற்கான ஆயுளையும் துல்லியமாக அளந்து வைத்திருக்கின்றான்.
சிவபெருமானைத் தேடி எட்டுத் திசைகளிலும் பணிந்து அவனே பரம் பொருள் என்று அறிந்ததால் தைரியமுடன் எட்டுத் திசையிலும் சிவத்தை வணங்க அதனால் உள்ளம் குளிர்ந்த சிவபெருமான் தன் அருளால் எட்டு சித்திகளும் அவருக்குள் நிலைபெறச் செய்வார்.
கருத்து: எதையும் சிவமாய்ப் பணிந்து வணங்குபவர்களுக்கு சிவபெருமான் எட்டுவித சித்திகளும் கொடுத்து அருள்வான்.
பாடல் #641: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)
பரிசறி வானவர் பண்பன் அடியெனத் துரிசற நாடியே தூவெளி கண்டேன் அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே.
விளக்கம்:
தேவர்கள் முதலான அனைத்து உயிர்களின் தன்மையையும் அறிந்து கொள்கின்ற பண்பாளனாகிய இறைவனின் திருவடியை தூய எண்ணத்துடன் சரண் அடைந்து தூய்மையான பரவெளியைக் (அண்ட சராசரங்கள்) கண்டேன். ஆதலால் இறைவன் தனது பேரருளால் அரிதான எட்டுவித சித்திகளையும் எனக்கு வழங்கி எனது பிறப்பை அறுத்து அருளினான்.
கருத்து: சிவபெருமானின் திருவடியை சரணடைந்தால் எட்டுவித சித்திகளும் பெற்று பிறவி இல்லாத நிலையை அடையலாம்.