பாடல் #1736

பாடல் #1736: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

அஞ்சு முகமுள வைம்மூன்று கண்ணுள
வஞ்சி னோடைந்து கரதலந் தானுள
வஞ்சி னோடைஞ் சாயுதமுள நம்பியென்
னெஞ்சுள் புகுந்து நிறைந்துநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அஞசு முகமுள வைமமூனறு கணணுள
வஞசி னொடைநது கரதலந தானுள
வஞசி னொடைஞ சாயுதமுள நமபியென
னெஞசுள புகுநது நிறைநதுநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அஞ்சு முகம் உள ஐம் மூன்று கண் உள
அஞ்சினோடு ஐந்து கரதலம் தான் உள
அஞ்சினோடு ஐஞ்சு ஆயுதம் உள நம்பி என்
நெஞ்சு உள் புகுந்து நிறைந்து நின்றானே.

பதப்பொருள்:

அஞ்சு (சதா சிவப் பரம்பொருளுக்கு ஐந்து) முகம் (திருமுகங்கள்) உள (உள்ளது) ஐம் (அந்த ஐந்து திருமுகங்களிலும்) மூன்று (முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து) கண் (திருக்கண்கள்) உள (உள்ளது)
அஞ்சினோடு (ஐந்து திருமுகங்களோடு சேர்ந்து ஐந்தும்) ஐந்து (ஐந்தும் கூட்டி மொத்தம்) கரதலம் (பத்து திருக்கரங்கள்) தான் (அவருக்கு) உள (உள்ளது)
அஞ்சினோடு (ஐந்து திருமுகங்களோடு சேர்ந்து ஐந்தும்) ஐஞ்சு (ஐந்தும் கூட்டி மொத்தம்) ஆயுதம் (பத்து திருக்கரங்களிலும் பத்து விதமான ஆயுதங்கள் தம் அடியவரைக் காக்கின்ற கருவிகளாக) உள (உள்ளது) நம்பி (இவ்வாறு சதாசிவ இலிங்கமாக இருக்கின்ற இறைவன் தம்மை நம்புகின்ற) என் (அடியவர்களின்)
நெஞ்சு (நெஞ்சத்திற்கு) உள் (உள்ளே) புகுந்து (புகுந்து) நிறைந்து (முழுவதுமாக நிறைந்து) நின்றானே (நிற்கின்றான்).

விளக்கம்:

சதா சிவப் பரம்பொருளுக்கு ஐந்து திருமுகங்கள் உள்ளது. அந்த ஐந்து திருமுகங்களிலும் முகத்திற்கு மூன்றாக மொத்தம் பதினைந்து திருக்கண்கள் உள்ளது. அவருக்கு பத்து திருக்கரங்கள் உள்ளது. அந்த பத்து திருக்கரங்களிலும் பத்து விதமான ஆயுதங்கள் தம் அடியவரைக் காக்கின்ற கருவிகளாக உள்ளது. இவ்வாறு சதாசிவ இலிங்கமாக இருக்கின்ற இறைவன் தம்மை நம்புகின்ற அடியவர்களின் நெஞ்சத்திற்கு உள்ளே புகுந்து முழுவதுமாக நிறைந்து நிற்கின்றான்.

திருமூலர் தனது சீடர்களுடன்

திருமூலர் தனது ஏழு சீடர்களுடன் திருவாவடுதுறை கோமூக்தீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்திருக்கும் ஓவியம். 1912 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருமந்திரம் புத்தகத்தில் உள்ளது.

திருமந்திரத்தில் சைவம் – பகுதி 2

திருமந்திரத்தில் சைவம் – பகுதி 2 எனும் தலைப்பைப் பற்றி திருமந்திரத் திண்ணை எனும் குழுவில் Zoom நேரலையில் 16-09-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரத்தில் சைவம் – பகுதி 3

“திருமந்திரத்தில் சைவம் – பகுதி 3” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 22-10-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரத்தில் வேடம்

“திருமந்திரத்தில் வேடம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 18-06-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரத்தில் நவ குண்டம்

“திருமந்திரத்தில் நவ குண்டம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 19-02-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

அறிவோம் வாருங்கள் மரணமில்லாப் பெருவாழ்வு

“அறிவோம் வாருங்கள் மரணமில்லாப் பெருவாழ்வு” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 12-02-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

பாடல் #1737

பாடல் #1737: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

சத்தி தராதல மண்டஞ் சதாசிவஞ்
சத்தி சிவமிக்க தாபர சங்கமஞ்
சத்தி யுருவ மருவஞ் சதாசிவஞ்
சத்தி சிவந்தத்துவ முப்பத்து ஆறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததி தராதல மணடஞ சதாசிவஞ
சததி சிவமிகக தாபர சஙகமஞ
சததி யுருவ மருவஞ சதாசிவஞ
சததி சிவநதததுவ முபபதது ஆறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி தராதலம் அண்டம் சதா சிவம்
சத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதா சிவம்
சத்தி சிவம் தத்துவம் முப்பத்து ஆறே.

பதப்பொருள்:

சத்தி (சக்தி) தராதலம் (பூமியாகிய நிலத்திலும்) அண்டம் (அண்டமாகிய ஆகாயத்தில்) சதா (சதா) சிவம் (சிவப் பரம்பொருளும் இருக்கின்றார்கள்)
சத்தி (சக்தியும்) சிவம் (சதாசிவப் பரம்பொருளும்) மிக்க (பரிபூரணமாக) தாபரம் (சதாசிவ இலிங்கத்தில்) சங்கமம் (ஒன்றாக சேர்ந்து இருக்கின்றார்கள்)
சத்தி (சக்தி) உருவம் (உருவமாகவும்) அருவம் (அருவமாக) சதா (சதா) சிவம் (சிவப் பரம்பொருளும் இருக்கின்றார்கள்)
சத்தி (சக்தியும்) சிவம் (சிவமும்) தத்துவம் (தத்துவங்கள்) முப்பத்து (முப்பத்து) ஆறே (ஆறாகவும் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

சக்தி பூமியாகிய நிலத்திலும் சதாசிவப் பரம்பொருள் அண்டமாகிய ஆகாயத்தில் இருக்கின்றார்கள். சக்தியும் சதாசிவப் பரம்பொருளும் பரிபூரணமாக சதாசிவ இலிங்கத்தில் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றார்கள். சக்தி உருவமாகவும் சதாசிவப் பரம்பொருள் அருவமாகவும் இருக்கின்றார்கள். சக்தியும் சிவமும் முப்பத்தாறு தத்துவங்களாகவும் இருக்கின்றார்கள்.

பாடல் #1738

பாடல் #1738: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

தத்துவ மாவ தருவஞ் சராசரந்
தத்துவ மாவ துருவஞ் சுகோதைய
தத்துவ மெல்லாஞ் சகலமு மாய்நிற்குந்
தத்துவ மாகுஞ் சதாசிவந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தததுவ மாவ தருவஞ சராசரந
தததுவ மாவ துருவஞ சுகொதைய
தததுவ மெலலாஞ சகலமு மாயநிறகுந
தததுவ மாகுஞ சதாசிவந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தத்துவம் ஆவது அருவம் சராசரம்
தத்துவம் ஆவது உருவம் சுகோதையம்
தத்துவம் எல்லாம் சகலமும் ஆய் நிற்கும்
தத்துவம் ஆகும் சதா சிவம் தானே.

பதப்பொருள்:

தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) ஆவது (ஆக இருப்பதே) அருவம் (உருவம் இல்லாமல்) சராசரம் (அசையும் பொருள் அசையாத பொருள் என்று அனைத்திலும் இருக்கின்றது)
தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) ஆவது (ஆக இருப்பதே) உருவம் (உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உருவம் கொடுத்து) சுகோதையம் (அவை இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது)
தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) எல்லாம் (எல்லாமே) சகலமும் (அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்தும்) ஆய் (ஆக) நிற்கும் (நிற்கின்றது)
தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) ஆகும் (ஆக இருப்பதே) சதா (சதா) சிவம் (சிவப் பரம்பொருள்) தானே (தான் ஆகும்).

விளக்கம்:

உருவம் இல்லாமல் அசையும் பொருள் அசையாத பொருள் என்று அனைத்திலும் இருப்பதும், உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உருவம் கொடுத்து அவை இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கு ஆதாரமாக இருப்பதும், அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்துமாகவும் இருப்பதே முப்பத்தாறு தத்துவங்களாகும். இந்த முப்பத்தாறு தத்துவங்களாகவும் இருப்பது சதா சிவப் பரம்பொருளே ஆகும்.

பாடல் #1739

பாடல் #1739: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

கூறுமி னூறு சதாசிவ னெம்மிறை
வேறோரை செய்து மிகைப்பொரு ளாய்நிற்கு
மேறுகை செய்தொழில் வானவர் தம்மோடு
மாறுசெய் வானென் மனம்புகுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கூறுமி னூறு சதாசிவ னெமமிறை
வெறொரை செயது மிகைபபொரு ளாயநிறகு
மெறுகை செயதொழில வானவர தமமொடு
மாறுசெய வானென மனமபுகுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கூறுமின் ஊறு சதா சிவன் எம் இறை
வேறு ஓரை செய்து மிகை பொருள் ஆய் நிற்கும்
ஏறுகை செய் தொழில் வானவர் தம்மோடு
மாறு செய்வான் என் மனம் புகுந்தானே.

பதப்பொருள்:

கூறுமின் (எடுத்துக் கூறினால்) ஊறு (உணர்வுப் பூர்வமாக அறிந்து கொள்கின்ற) சதா (சதா) சிவன் (சிவப் பரம்பொருளே) எம் (எமது) இறை (இறைவனாகும்)
வேறு (வேறு வேறு விதங்களில்) ஓரை (பல விதமாக திருவிளையாடல்கள்) செய்து (செய்து) மிகை (அனைத்திற்கும் மேலான) பொருள் (பொருள்) ஆய் (ஆகவும்) நிற்கும் (அதுவே நிற்கும்)
ஏறுகை (உலகத்தில் தவத்திலும் தானத்திலும் சிறந்து அதன் பயனால் மேலான நிலைக்கு ஏறுவதை) செய் (செய்து) தொழில் (உலக இயக்கத்திற்காக பல தொழில்களை புரிகின்ற) வானவர் (வானவர்கள்) தம்மோடு (அனைவரோடும் சேர்ந்து இருந்து)
மாறு (தீயவற்றை மாற்றி) செய்வான் (நன்மையை அருளுவதை செய்கின்றான்) என் (எமது) மனம் (மனதில்) புகுந்தானே (புகுந்தான் சதாசிவ இலிங்க வடிவமாக இருக்கின்ற இறைவன்).

விளக்கம்:

எடுத்துக் கூறினால் உணர்வுப் பூர்வமாக அறிந்து கொள்கின்ற சதா சிவப் பரம்பொருளே எமது இறைவனாகும். அவனே வேறு வேறு விதங்களில் பல விதமாக திருவிளையாடல்கள் செய்து அனைத்திற்கும் மேலான பொருளாகவும் நிற்கின்றான். உலகத்தில் தவத்திலும் தானத்திலும் சிறந்து அதன் பயனால் மேலான நிலைக்கு சென்று உலக இயக்கத்திற்காக பல தொழில்களை புரிகின்ற வானவர்கள் அனைவரோடும் சேர்ந்து இருந்து தீயவற்றை மாற்றி நன்மையை அருளுவதை செய்கின்றான் எமது மனதில் புகுந்தான் சதாசிவ இலிங்க வடிவமாக இருக்கின்ற இறைவன்.