பாடல் #1839

பாடல் #1839: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

உழைக்கு முன்னே நெடுநீர் மலரேந்திப்
பிழைப்பின்றி யீசன் பெருந்தவம் பேணி
யிழைக்கொண்ட பாதத் தினமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உழைககு முனனெ நெடுநீர மலரெநதிப
பிழைபபினறி யீசன பெருநதவம பெணி
யிழைககொணட பாதத தினமலர தூவி
மழைககொணடல பொலவெ மனனிநில லீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உழைக்கும் முன்னே நெடு நீர் மலர் ஏந்தி
பிழைப்பு இன்றி ஈசன் பெரும் தவம் பேணி
இழை கொண்ட பாதத்து இன மலர் தூவி
மழை கொண்டல் போலவே மன்னி நில்லீரே.

பதப்பொருள்:

உழைக்கும் (காலையில் எழுந்த பிறகு தங்களின் தொழில் செய்வதற்கு) முன்னே (முன்பு) நெடு (அவசரமின்றி நிதானமாக) நீர் (தூய்மையான நீரையும்) மலர் (நறுமணமிக்க மலர்களையும்) ஏந்தி (இரு கைகளில் ஏந்திக் கொண்டு)
பிழைப்பு (எந்தவிதமான குற்றமும்) இன்றி (இல்லாமல்) ஈசன் (இறைவனை சிரத்தையோடு பூசை செய்கின்ற) பெரும் (மிகப்பெரும்) தவம் (தவத்தை) பேணி (ஒரு நாளும் தவறாமல் கடைபிடித்து)
இழை (அழகிய சிலம்புகளை) கொண்ட (அணிந்து கொண்டு இருக்கின்ற) பாதத்து (இறைவனின் திருவடிகளுக்கு) இன (ஒரே வகையான) மலர் (நறுமலர்களை) தூவி (தூவி அருச்சனை செய்து)
மழை (மழை பொழிகின்ற) கொண்டல் (கருத்த மேகத்தை) போலவே (போலவே தூய்மையான நீரால் அபிஷேகம் செய்து) மன்னி (நிலையாக) நில்லீரே (நில்லுங்கள்).

விளக்கம்:

காலையில் எழுந்த பிறகு தங்களின் தொழில் செய்வதற்கு முன்பு அவசரமின்றி நிதானமாக தூய்மையான நீரையும் நறுமணமிக்க மலர்களையும் இரு கைகளில் ஏந்திக் கொண்டு, எந்தவிதமான குற்றமும் இல்லாமல் இறைவனை சிரத்தையோடு பூசை செய்கின்ற மிகப்பெரும் தவத்தை ஒரு நாளும் தவறாமல் கடைபிடித்து, அழகிய சிலம்புகளை அணிந்து கொண்டு இருக்கின்ற இறைவனின் திருவடிகளுக்கு ஒரே வகையான நறுமலர்களை தூவி அருச்சனை செய்து, மழை பொழிகின்ற கருத்த மேகத்தை போலவே தூய்மையான நீரால் அபிஷேகம் செய்து நிலையாக நில்லுங்கள்.

உட் கருத்து:

இறைவனுடைய திருவடிகளில் எப்போதும் இழைந்து (உராய்ந்து) கொண்டே இருக்கின்ற அழகிய சிலம்புகளைப் போலவே அடியவர்கள் தங்களின் மனதிற்குள் இறைவனின் திருவடிகளை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பது ஒரு மிகப் பெரிய தவம் ஆகும். அந்த தவத்தை சிரத்தையோடு இடைவிடாது கடை பிடித்தால் கருமையான மேகங்களுக்குள் மழை நீர் மறைந்து இருப்பது போலவே அடியவரது எண்ணத்திற்குள் இறைவனின் திருவருளானது எப்போதும் நிறைந்து நிற்கும்.

பாடல் #1840

பாடல் #1840: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

வென்று விரைந்து விரைபணி யென்றனர்
நின்று பொருந்த யிறைப்பணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடிற்
கொன்றிடு நித்தலுங் கூறிய தன்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெனறு விரைநது விரைபணி யெனறனர
நினறு பொருநத யிறைபபணி நெரபடத
துனறு சலமலர தூவித தொழுதிடிற
கொனறிடு நிததலுங கூறிய தனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வென்று விரைந்து விரை பணி என்றனர்
நின்று பொருந்த இறை பணி நேர் பட
துன்று சல மலர் தூவி தொழுதிடில்
கொன்று இடும் நித்தலும் கூறியது அன்றே.

பதப்பொருள்:

வென்று (ஐந்து புலன்களினால் ஆசை மயக்கத்தை வென்று) விரைந்து (வாழ்க்கைக்கு உடனடியாக செய்ய வேண்டியது) விரை (நறுமணம் மிக்க தூபத்தை காட்டி) பணி (இறைவனுக்கு தொண்டு செய்வதே) என்றனர் (என்று சான்றோர்கள் சொன்னார்கள்)
நின்று (இறைவன் மேல் கொண்ட பக்தியில் தன்னையே மறந்து நின்று) பொருந்த (மனம் இறைவனோடு பொருந்தி இருக்க) இறை (இறைவனுக்கான) பணி (பூஜைகளை) நேர் (சிறிதும் தவறாமல்) பட (நிகழும் படி)
துன்று (இறைவனோடு பொருந்தி) சல (தூய்மையான நீரால் அபிஷேகம் செய்து) மலர் (காலைப் பனி பூத்திருக்கும் நறுமணம் மிக்க மலர்களை) தூவி (தூவி அருச்சனை செய்து) தொழுதிடில் (தொழுது வந்தால்)
கொன்று (இறையருளானது வினைகளை கொன்று) இடும் (நீக்கிவிடும்) நித்தலும் (தினம்தோறும்) கூறியது (என்று சான்றோர்கள் சொன்னது) அன்றே (முன் காலத்தில் ஆகும்).

விளக்கம்:

ஐந்து புலன்களின் வழியே செல்லும் ஆசைகளில் சிக்கிச் சுழலாமல் அதை மன உறுதியால் வென்று மனித வாழ்க்கையில் உடனடியாக செய்ய வேண்டியது இறைவனுக்கு தூப தீபங்கள் காட்டி வழிபடுவதே என்று சான்றோர்கள் சொல்லுவார்கள். அவர்கள் சொல்லியபடி இறைவன் மேல் கொண்ட பக்தியில் தன்னையே மறந்து இறைவனோடு தம் மனமும் பொருந்தி இருக்கும் படி நின்று தூய்மையான நீரால் அபிஷகம் செய்தும் காலைப் பனி பூத்திருக்கும் நறுமணம் மிக்க மலர்களால் அருச்சனை செய்தும் தினந்தோறும் இறைவனை தொழுது வந்தால் இறைவனது திருவருளானது அடியவர்களின் வினைகளை அழித்து நீக்கிவிடும். இதை முன் காலத்திலேயே சான்றோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

பாடல் #1841

பாடல் #1841: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

சாத்தியும் வைத்துஞ் சயம்புவென் றேத்தியு
மாத்தியை நாளு மிறையை யறிகிலா
ராத்தி மலாகிட்டதற் கழுக்கற்றக் கால்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாததியும வைததுஞ சயமபுவென றெததியு
மாததியை நாளு மிறையை யறிகிலா
ராததி மலாகிடடதற கழுககறறக கால
மாததிககெ செலலும வழியது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும்
ஆத்தியை நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மல் ஆக்கு இட்டு அதற்கு அழுக்கு அற்ற கால்
மா திக்கே செல்லும் வழி அது ஆமே.

பதப்பொருள்:

சாத்தியும் (நறுமணமிக்க மலர்களை அணிவித்தும்) வைத்தும் (அறுசுவை உணவு படைத்தும்) சயம்பு (தானாகவே தோன்றிய மூர்த்தி) என்று (என்று) ஏத்தியும் (போற்றி வணங்கியும்)
ஆத்தியை (அடைவதற்கு மிகப் பெரும் செல்வமாகியவனை) நாளும் (தினம் தோறும் பூஜை செய்தும்) இறையை (இறைவனை) அறிகிலார் (யாரும் அறிந்து கொள்வது இல்லை)
ஆத்தி (உலக பற்றுக்களில் உள்ள ஆசையுடன்) மல் (மன உறுதியோடு போர் புரிந்து) ஆக்கு (அந்த ஆசைகளை பக்தியாக மாற்றி) இட்டு (இறைவன் மேல் எண்ணங்களை வைத்து) அதற்கு (அந்த எண்ணங்களில்) அழுக்கு (எந்தவிதமான மாசும்) அற்ற (இல்லாமல் போகும்) கால் (காலத்தில்)
மா (சென்று அடைவதற்கு மிகப்பெரிய) திக்கே (திசையாகிய முக்திக்கு) செல்லும் (செல்லுகின்ற) வழி (வழியாக) அது (அதுவே) ஆமே (ஆகி விடும்).

விளக்கம்:

நறுமணமிக்க மலர்களை அணிவித்தும், அறுசுவை உணவு படைத்தும், தானாகவே தோன்றிய மூர்த்தி என்றுபோற்றி வணங்கியும், தினம் தோறும் பூஜை செய்தும் அடைவதற்கு மிகப் பெரும் செல்வமாகிய இறைவனை யாரும் அறிந்து கொள்வது இல்லை. அதற்கு காரணம் உலகப் பற்றுக்களில் சிக்கி இறைவன் மேல் முழு பக்தி இல்லாமல் போவதே ஆகும். ஆகவே, உலக பற்றுக்களில் உள்ள ஆசைகளோடு மன உறுதியுடன் போர் புரிந்து அந்த ஆசைகளை பக்தியாக மாற்றி இறைவன் மேல் போகும் படி எண்ணங்களை வைத்து வந்தால் ஓரு காலத்தில் அந்த எண்ணங்களில் எந்தவிதமான மாசும் இல்லாமல் போகும். அப்போது சென்று அடைவதற்கு மிகப்பெரிய திசையாகிய முக்திக்கு செல்லுகின்ற வழியாக அதுவே ஆகி விடும்.

பாடல் #1842

பாடல் #1842: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

ஆவிக் கமலத்தினைப் புனத் தின்புற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடை
தாவிக்கு மந்திரந் தாமறி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆவிக கமலததினைப புனத தினபுற
மெவித திரியும விரிசடை நநதியைக
கூவிக கருதிக கொடுபொயச சிவததிடை
தாவிககு மநதிரந தாமறி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆவி கமலத்தினை புனத்து இன்பு உற
மேவி திரியும் விரி சடை நந்தியை
கூவி கருதி கொடு போய் சிவத்து இடை
தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே.

பதப்பொருள்:

ஆவி (உயிர்களின் உயிர்ப்பு ஆற்றலாகிய) கமலத்தினை (சகஸ்ரதளத்தின் உச்சியில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரினை) புனத்து (சென்று சேரும்படி மூச்சுக்காற்றை கொண்டு சென்று அடைந்து) இன்பு (பேரின்பம்) உற (உருவாகுவதற்கு)
மேவி (அந்த தாமரை மலரின் மேல் பிரகாசமாக திகழும் ஜோதியாக வீற்றிருந்து) திரியும் (அதிலிருந்து அனைத்திற்கும் பரவுகின்ற ஒளிக் கதிர்களைப் போன்ற) விரி (விரிந்த) சடை (சடையைக் கொண்ட) நந்தியை (குரு நாதனாகிய இறைவனை)
கூவி (தாம் செய்கின்ற பூஜையின் மூலம் போற்றிப் புகழ்ந்து அழைத்தும்) கருதி (இறைவன் மேல் எண்ணங்களை வைத்து) கொடு (அந்த எண்ணங்களை கொண்டு) போய் (போய்) சிவத்து (சகஸ்ரதளத்தில் ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனின்) இடை (இடத்தில்)
தாவிக்கும் (நிலை பெற்று இருக்கும் படி சேர்க்கின்ற) மந்திரம் (மந்திரம் எதுவென்று) தாம் (தாங்கள்) அறியாரே (அறியாமல் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

உயிர்களின் உயிர்ப்பு ஆற்றலாகிய சகஸ்ரதளத்தின் உச்சியில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரினை சென்று சேரும்படி மூச்சுக்காற்றை கொண்டு சென்று அடைந்து, அதன் பயனால் அமிழ்தம் சுரந்து பேரின்பம் உருவாகும் பலனை அனைத்து உயிர்களும் அடைய வேண்டும் என்ற கருணையினால் அந்த தாமரை மலரின் மேல் பிரகாசமாக திகழும் ஜோதியாக வீற்றிருந்து அதிலிருந்து அனைத்திற்கும் பரவுகின்ற ஒளிக் கதிர்களைப் போன்ற விரிந்த சடையைக் கொண்ட குரு நாதனாகிய இறைவன் அமர்ந்து இருக்கின்றான். அந்த இறைவனை தாம் செய்கின்ற பூஜையின் மூலம் போற்றிப் புகழ்ந்து அழைத்தும், இறைவன் மேல் எண்ணங்களை வைத்தும், அந்த எண்ணங்களை கொண்டு போய் சகஸ்ரதளத்தில் ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனுடன் நிலை பெற்று இருக்கும் படி சேர்க்கின்ற மனதின் திறமைக்கு திறவு கோலாக இருப்பது எதுவென்று தாங்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1814

பாடல் #1814: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

அருளிற் றலைநின் றறிந்தழுந் தாகா
ரருளிற் றலைநில்லா ரைம்பாச நீங்கா
ரருளிற் பெருமை யறியார் செறியா
ரருளிற் பிறந்திட் டிறந்தறி வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருளிற றலைநின றறிநதழுந தாகா
ரருளிற றலைநிலலா ரைமபாச நீஙகா
ரருளிற பெருமை யறியார செறியா
ரருளிற பிறநதிட டிறநதறி வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அருளில் தலை நின்று அறிந்து அழுந்து ஆகார்
அருளில் தலை நில்லார் ஐம் பாசம் நீங்கார்
அருளில் பெருமை அறியார் செறியார்
அருளில் பிறந்து இட்டு இறந்து அறிவாரே.

பதப்பொருள்:

அருளில் (ஒளியாகிய பேரருளில்) தலை (உறுதியாக) நின்று (நின்று) அறிந்து (அதை முழுவதுமாக அறிந்து கொண்டு) அழுந்து (அதிலேயே அமிழ்ந்து) ஆகார் (அதுவாகவே ஆகாதவர்கள்)
அருளில் (ஒளியாகிய பேரருளில்) தலை (தலையாக) நில்லார் (நிற்காதவர்கள்) ஐம் (ஐந்து விதமான புலன்களால் வருகின்ற) பாசம் (பந்த பாசங்களை) நீங்கார் (விட்டு நீங்காதவர்கள்)
அருளில் (ஒளியாகிய பேரருளில்) பெருமை (கிடைக்கின்ற பெரும் பலனை) அறியார் (அறிந்து கொள்ளாதவர்கள்) செறியார் (அதனின் பலனை அறிந்து அதன் மூலம் தம்மை மேன்மை படுத்திக் கொள்ளாதவர்கள்)
அருளில் (ஒளியாகிய பேரருளில்) பிறந்து (பிறந்து) இட்டு (இந்த உலகத்தில் உயிர்களாக வந்திருந்தாலும்) இறந்து (அந்த பேரருளில் இருக்கின்ற இறவாத பேரறிவை அறியாமல் இறந்து போகின்ற) அறிவாரே (உலக அறிவையே அறிந்தவர்களாக இருக்கின்றார்கள்).

விளக்கம்:

ஒளியாகிய பேரருளில் உறுதியாக நின்று அதை முழுவதுமாக அறிந்து கொண்டு அதிலேயே அமிழ்ந்து அதுவாகவே ஆகாதவர்கள், அந்த பேரருளை அடைவதையே வாழ்க்கையின் குறிக்கோளாக மேற்கொண்டு நிற்காதவர்கள், ஐந்து விதமான புலன்களால் வருகின்ற பந்த பாசங்களை விட்டு நீங்காதவர்கள், அந்த பேரருளில் கிடைக்கின்ற பெரும் பலனை அறிந்து கொள்ளாதவர்கள், பேரருளின் பலனை அறிந்து அதன் மூலம் தம்மை மேன்மை படுத்திக் கொள்ளாதவர்கள், பேரருளில் பிறந்து இந்த உலகத்தில் உயிர்களாக வந்திருந்தாலும் அந்த பேரருளில் இருக்கின்ற இறவாத பேரறிவை அறியாமல் இறந்து போகின்ற உலக அறிவையே அறிந்தவர்களாக இருக்கின்றார்கள்.

பாடல் #1815

பாடல் #1815: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
யாரா வமுதளித் தானந்தி பேர்நந்தி
பேரா யிரமுடைப் பெம்மான் பேரொன்றில
னாரா வருட்கட லாடுகவென் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வாரா வழிதநத மாநநதி பெரநநதி
யாரா வமுதளித தானநதி பெரநநதி
பெரா யிரமுடைப பெமமான பெரொனறில
னாரா வருடகட லாடுகவென றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி
ஆரா அமுது அளித்தான் நந்தி பேர் நந்தி
பேர் ஆயிரம் உடை பெம்மான் பேர் ஒன்று இலன்
ஆரா அருள் கடல் ஆடுக என்றானே.

பதப்பொருள்:

வாரா (இந்த உலகத்திற்கு திரும்பவும் வந்துவிடாத) வழி (பெரும் வழியை) தந்த (தந்து அருளிய) மா (மாபெரும்) நந்தி (குருநாதனாகிய இறைவன்) பேர் (பெருமை மிக்க) நந்தி (நந்தி ஆகும்)
ஆரா (என்றும் தெகிட்டாத) அமுது (அமிழ்தமாகிய பேரின்பத்தை) அளித்தான் (அளித்து அருளியவன்) நந்தி (குருநாதனாகிய இறைவன்) பேர் (பெருமை மிக்க) நந்தி (நந்தி ஆகும்)
பேர் (தனது திருப்பெயர்களாக அடியவர்கள் அழைக்கும்) ஆயிரம் (ஆயிரம் பெயர்களை) உடை (உடைய) பெம்மான் (பெருமானாக இருந்தாலும்) பேர் (தனக்கென்று தனிப் பெயர்) ஒன்று (ஒன்றும்) இலன் (இல்லாதவன்)
ஆரா (என்றும் தெகிட்டாத) அருள் (அமிழ்தமாகிய) கடல் (குருநாதனாகிய இறைவனின் பேரருள் பெருங்கடலில்) ஆடுக (மூழ்கி பேரின்பத்தில் திளைத்து இருங்கள்) என்றானே (என்று தமது அடியவர்களுக்கு அருளினான்).

விளக்கம்:

இந்த உலகத்திற்கு திரும்பவும் வந்துவிடாத பெரும் வழியை தந்து அருளிய மாபெரும் குருநாதனாகிய இறைவன் பெருமை மிக்க நந்தி ஆகும். என்றும் தெகிட்டாத அமிழ்தமாகிய பேரின்பத்தை அளித்து அருளியவன் குருநாதனாகிய இறைவன் பெருமை மிக்க நந்தி ஆகும். தனது திருப்பெயர்களாக அடியவர்கள் அழைக்கும் ஆயிரம் பெயர்களை உடைய பெருமானாக இருந்தாலும் தனக்கென்று தனிப் பெயர் ஒன்றும் இல்லாதவன். என்றும் தெகிட்டாத அமிழ்தமாகிய குருநாதனாகிய இறைவனின் பேரருள் பெருங்கடலில் மூழ்கி பேரின்பத்தில் திளைத்து இருங்கள் என்று தமது அடியவர்களுக்கு அருளினான்.

தத்துவ விளக்கம்:

மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கின்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு மீண்டும் பிறவி எடுக்காத மாபெரும் வழியை குருநாதனாக வந்த இறைவன் அடியவருக்கு தந்து அருளி அந்த வழியை சரியாகப் பின்பற்றுகின்ற மன வலிமையையும் கொடுத்து அதை அவர் அகங்காரம் வந்துவிடாமல் சரியாகப் பின்பற்றும் போது அதற்கு பலனாக என்றும் தெகிட்டாத அமிழ்தமாகிய பேரின்பத்தை கொடுத்து அருளுகின்றான். இறைவன் கொடுக்கின்ற வழிமுறைகள் பல ஆயிரம் வகையாக இருக்கவே அடியவர்கள் அவன் புரிகின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பெயரைக் கொடுத்து அவனை ஆயிரம் பெயர்களில் அழைத்தாலும் தனக்கென்று ஒரு பெயரும் இல்லாதவன் இறைவன். இப்படிப்பட்ட இறைவனே தனது பேரருளாகிய பெருங்கடலில் அடியவர்கள் மூழ்கித் திளைத்து இன்புற்றிருக்குமாறு அருளுகின்றான்.

பாடல் #1816

பாடல் #1816: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

ஆடியும் பாடியும் மழுது மரற்றியுந்
தேடியுங் கண்டேன் சிவன் பெருந்தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
னூடு நின்றானவன் றன்னரு ளுற்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆடியும பாடியும மழுது மரறறியுந
தெடியுங கணடென சிவன பெருநதனமையைக
கூடிய வாறெ குறியாக குறிதநதென
னூடு நினறானவன றனனரு ளுறறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன் பெரும் தன்மையை
கூடிய ஆறே குறியா குறி தந்து என்
ஊடு நின்றான் அவன் தன் அருள் உற்றே.

பதப்பொருள்:

ஆடியும் (இறைவனின் திருவிளையாடல்களை ஆடியும்) பாடியும் (அவனது பெருமைகளைப் போற்றிப் பாடியும்) அழுதும் (அவனது மாபெரும் கருணையை எண்ணி அழுதும்) அரற்றியும் (அவன் அருகில் செல்ல முடியவில்லையே என்று புலம்பியும்)
தேடியும் (தமக்குள்ளே தேடியும்) கண்டேன் (கண்டு கொண்டேன்) சிவன் (இறைவனின்) பெரும் (மாபெரும்) தன்மையை (தன்மையை)
கூடிய (அவனோடு ஒன்றாக சேருகின்ற) ஆறே (வழியே) குறியா (வேறு எந்த சிந்தனையும் இல்லாமல்) குறி (அவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக) தந்து (கொடுத்து அருளி) என் (எமது)
ஊடு (உள்ளே கலந்து) நின்றான் (நின்றான்) அவன் (இறைவன்) தன் (தமது) அருள் (பேரருளை) உற்றே (எமக்கு கொடுத்து ஞானமாக வெளிப்பட்டான்).

விளக்கம்:

இறைவனின் திருவிளையாடல்களை ஆடியும், அவனது பெருமைகளைப் போற்றிப் பாடியும், அவனது மாபெரும் கருணையை எண்ணி அழுதும், அவன் அருகில் செல்ல முடியவில்லையே என்று புலம்பியும், தமக்குள்ளே தேடியும், இறைவனின் மாபெரும் தன்மையை கண்டு கொண்டேன். அப்படி தேடிக் கண்டு கொண்ட இறைவனோடு சேருவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வேறு எதிலும் சிந்தனையை செலுத்தாமல் இருக்கின்ற வழியை எமக்கு கொடுத்து அருளி எம்மோடு கலந்து நின்று எம்முள்ளிருந்து ஞானமாக வெளிப்பட்டான்.

பாடல் #1817

பாடல் #1817: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

உற்ற பிறப்பு முறுமல மானதும்
பற்றிய மாயா படலமெனப் பண்ணி
யற்றனை நீக்கி யடிவைத்தான் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழலணிந் தேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உறற பிறபபு முறுமல மானதும
பறறிய மாயா படலமெனப பணணி
யறறனை நீககி யடிவைததான பெரநநதி
கறறன விடடென கழலணிந தெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உற்ற பிறப்பும் உறு மலம் ஆனதும்
பற்றிய மாயா படலம் என பண்ணி
அற்றனை நீக்கி அடி வைத்தான் பேர் நந்தி
கற்றன விட்டேன் கழல் அணிந்தேனே.

பதப்பொருள்:

உற்ற (எமக்கு கொடுக்கப்பட்ட) பிறப்பும் (பிறவியும்) உறு (யாம் அனுபவிக்கின்ற) மலம் (மூன்று விதமான மலங்கள்) ஆனதும் (ஆக இருப்பதும்)
பற்றிய (எம்மை பற்றிக் கொண்ட) மாயா (மாயையின்) படலம் (இருள் கூட்டம்) என (என்று) பண்ணி (எமது ஆசைகள் தீர்ப்பதற்காக அருள் செய்து)
அற்றனை (அவனருளால் அழியக் கூடிய அனைத்தையும்) நீக்கி (எம்மை விட்டு நீக்கி விட்டு) அடி (தமது திருவடியை) வைத்தான் (எம் தலைமேல் வைத்தருளினான்) பேர் (பெருமை மிக்க) நந்தி (குருநாதனாகிய இறைவன்)
கற்றன (அவனது திருவடியின் அருளினால் இதுவரை யாம் அறிந்த உலக அறிவுகளை அனைத்தையும்) விட்டேன் (விட்டு விட்டேன்) கழல் (அவனது திருவடியை) அணிந்தேனே (எம் தலை மேல் அணிந்து கொண்டு அதனோடு பொருந்தி இருந்தேன்).

விளக்கம்:

எமக்கு கொடுக்கப்பட்ட பிறவியும், யாம் அனுபவிக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களாக இருப்பதும், எம்மை பற்றிக் கொண்ட மாயையின் இருள் கூட்டம் என்று எமது ஆசைகள் தீர்ப்பதற்காக அருள் செய்து, அவனருளால் அழியக் கூடிய அனைத்தையும் எம்மை விட்டு நீக்கி விட்டு, தமது திருவடியை எம் தலைமேல் வைத்தருளினான் பெருமை மிக்க குருநாதனாகிய இறைவன். அவனது திருவடியின் அருளினால் இதுவரை யாம் அறிந்த உலக அறிவுகளை அனைத்தையும் விட்டு விட்டு அவனது திருவடியை எம் தலை மேல் அணிந்து கொண்டு அதனோடு பொருந்தி இருந்தேன்.

பாடல் #1818

பாடல் #1818: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

விளக்கினை யேற்றி வெளியை மறிமின்
விளக்கினின் முன்னே வேதினை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவ தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விளககினை யெறறி வெளியை மறிமின
விளககினின முனனெ வெதினை மாறும
விளககை விளககும விளககுடை யாரகள
விளககில விளஙகும விளககாவ தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விளக்கினை ஏற்றி வெளியை மறிமின்
விளக்கினின் முன்னே வேதினை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு ஆவது ஆமே.

பதப்பொருள்:

விளக்கினை (தமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியின் விளக்கை) ஏற்றி (சுழுமுனை நாடி வழியே மேலேற்றி எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் ஜோதியாக எரியச் செய்து) வெளியை (தமக்கு வெளியில் இருக்கின்ற புற உலகின் மேல் செல்லுகின்ற புலன்களை) மறிமின் (தடுத்து நிறுத்தினால்)
விளக்கினின் (மாபெரும் ஜோதியாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தின்) முன்னே (முன்பே) வேதினை (உலக அறிவு எல்லாம் உண்மை அறிவாக) மாறும் (மாறும்)
விளக்கை (அப்படிப்பட்ட பேரறிவாகிய இறைவனின் ஜோதியை) விளக்கும் (உண்மையாக உணர்ந்து கொள்ளும் படி விளங்க வைக்கும்) விளக்கு (தெளிவு) உடையார்கள் (உடைய ஞானிகள்)
விளக்கில் (எடுத்துரைத்து விளக்கினால்) விளங்கும் (முழுவதும் புரிந்து கொள்ளக் கூடிய) விளக்கு (மாபெரும் ஜோதி) ஆவது (ஆக இருப்பது) ஆமே (பரம்பொருளாகிய இறைவனே ஆகும்).

விளக்கம்:

தமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியின் விளக்கை சாதகத்தின் மூலம் சுழுமுனை நாடி வழியே மேலேற்றி எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் ஜோதியாக எரியச் செய்து தமக்கு வெளியில் இருக்கின்ற புற உலகின் மேல் செல்லுகின்ற புலன்களை தடுத்து நிறுத்தினால் மாபெரும் ஜோதியாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தின் முன்பே உலக அறிவு எல்லாம் உண்மை அறிவாக மாறும். அப்படிப்பட்ட பேரறிவாகிய இறைவனின் ஜோதியை உண்மையாக உணர்ந்து கொள்ளும் படி விளங்க வைக்கும் தெளிவு உடைய ஞானிகள் எடுத்துரைத்து விளக்கினால் முழுவதும் புரிந்து கொள்ளக் கூடிய மாபெரும் ஜோதியாக இருப்பது பரம்பொருளாகிய இறைவனே ஆகும்.

கருத்து:

நமக்குள் இருக்கும் ஜோதியாகிய விளக்கை ஏற்றி மாயையாகிய இருளை அகற்றினால் இறைவனை அறியக் கூடிய தகுதி பெற்றவர்களாக மாறுவோம். அப்போது இறைவனை உணர்ந்த ஞானி நமக்கு வழிகாட்டி இறைவனை பரிபூரணமாக உணர வைப்பார்.

பாடல் #1819

பாடல் #1819: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

ஒளியு மிருளு மொருக்காலுந் தீரா
வொளியுள் வோர்க்கன்றோ வொழியா தொளியு
மொளியிருள் கண்டகண் போலே வேறாயுள்
ளொளியிரு ணீங்கி யுயிர்சிவ மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒளியு மிருளு மொருககாலுந தீரா
வொளியுள வொரககனறொ வொழியா தொளியு
மொளியிருள கணடகண பொலெ வெறாயுள
ளொளியிரு ணீஙகி யுயிரசிவ மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒளியும் இருளும் ஒரு காலும் தீரா
ஒளி உள் ஓர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்
ஒளி இருள் கண்ட கண் போலே வேறாய் உள்
ஒளி இருள் நீங்கி உயிர் சிவம் ஆமே.

பதப்பொருள்:

ஒளியும் (ஜோதியாகிய ஞானமும்) இருளும் (இருளாகிய மாயையும்) ஒரு (எந்தவொரு) காலும் (காலத்திலும்) தீரா (இல்லாமல் போகப் போவதில்லை)
ஒளி (உண்மையான ஞானமாகிய ஒளியை) உள் (தமக்குள்) ஓர்க்கு (ஆராய்ந்து தெளிவாக அறிந்து கொண்டவர்களுக்கு) அன்றோ (மட்டுமே) ஒழியாது (அந்த ஒளியானது எப்போதும் நீங்காத) ஒளியும் (ஜோதியாக வீற்றிருக்கும்)
ஒளி (வெளிச்சத்தையும்) இருள் (இருட்டையும்) கண்ட (கண்டதே உண்மை என்று நம்பிக் கொண்டு இருக்கின்ற) கண் (புறக் கண்களைப்) போலே (போல) வேறாய் (இல்லாமல் பார்க்கின்ற அனைத்தையும் மாயை என்பதை அறிந்து இறைவனின் அம்சமாகவே) உள் (உள்ளுக்குள் இருக்கின்ற)
ஒளி (ஆன்மாவின் ஜோதியை உணர்ந்து கொண்ட போது) இருள் (இருளாகிய மாயை) நீங்கி (நீங்கி) உயிர் (உயிரானது) சிவம் (சிவமாகவே) ஆமே (ஆகி விடும்).

விளக்கம்:

ஜோதியாகிய ஞானமும் இருளாகிய மாயையும் எந்தவொரு காலத்திலும் இல்லாமல் போகப் போவதில்லை. உண்மையான ஞானமாகிய ஒளியை தமக்குள் ஆராய்ந்து தெளிவாக அறிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே அந்த ஒளியானது எப்போதும் நீங்காத ஜோதியாக வீற்றிருக்கும். தாம் பார்க்கின்ற வெளிச்சத்தையும் இருட்டையும் மட்டுமே உண்மை என்று நம்பிக் கொண்டு இருக்கின்ற புறக் கண்களைப் போல இல்லாமல் பார்க்கின்ற அனைத்தையும் மாயை என்பதை அறிந்து இறைவனின் அம்சமாகவே உள்ளுக்குள் இருக்கின்ற ஆன்மாவின் ஜோதியை உணர்ந்து கொண்ட போது இருளாகிய மாயை நீங்கி உயிரானது சிவமாகவே ஆகி விடும்.