திருமந்திரம் சொல்லும் சிவ மணம்

“திருமந்திரம் சொல்லும் சிவ மணம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 20-03-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

பாடல் #1379

பாடல் #1379: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தனமது வாகிய தையலை நோக்கி
மனமது வோடி மறிக்கிலோ ராண்டிற்
கனமவை யற்றுக் கருதிய நெஞ்சந்
தினகர னாரிடச் செய்தி யதாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தனமது வாகிய தையலை நொககி
மனமது வொடி மறிககிலொ ராணடிற
கனமவை யறறுக கருதிய நெஞசந
தினகர னாரிடச செயதி யதாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தனம் அது ஆகிய தையலை நோக்கி
மனம் அது ஓடி மறிக்கில் ஓர் ஆண்டில்
கனம் அவை அற்றுக் கருதிய நெஞ்சம்
தினகரனார் இட செய்தி அது ஆமே.

பதப்பொருள்:

தனம் (நவாக்கிரி சக்கரத்தில் உள்ள பீஜ மந்திரங்களின் பலனை) அது (அளிக்கின்ற) ஆகிய (சக்தியாகிய) தையலை (சக்கரத்தோடு ஒன்றாக இணைந்து இருக்கின்ற இறைவியை) நோக்கி (நினைத்து)
மனம் (மனதில் இருக்கின்ற) அது (எண்ணங்களை) ஓடி (வெளியில் சென்று விடும்படி செய்து / ஒருமுகப் படுத்தி) மறிக்கில் (எண்ணங்கள் அற்ற நிலையில்) ஓர் (ஒரு) ஆண்டில் (வருடம் தியானத்தில் இருந்தால்)
கனம் (பிறவிக்கு பாரமான) அவை (அனைத்தும்) அற்றுக் (சாதகரை விட்டு நீங்கிவிட) கருதிய (இறைவியையே எண்ணி தியானித்து இருந்த) நெஞ்சம் (சாதகருடைய நெஞ்சத்தில்)
தினகரனார் (இருக்கின்ற மாயையாகிய இருளை நீக்கி விடும் சூரியனைப் போல பேரொளியுடன் இறைவன் வந்து) இட (தமது திருவடியை வைத்து அருளுவார்) செய்தி (நவாக்கிரி சக்கரத்தின் தன்மை) அது (இதுவே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

பாடல் #1378 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தோடு ஒன்றாக இணைந்து இருந்து அதிலுள்ள பீஜ மந்திரங்களின் பலனை அளிக்கின்ற சக்தியாகிய இறைவியை மட்டுமே நினைத்து கொண்டு மனதில் இருக்கின்ற மற்ற எண்ணங்களை எல்லாம் வெளியில் சென்று விடும்படி செய்து எண்ணங்கள் அற்ற நிலையில் ஒரு வருடம் தியானத்தில் இருந்தால் பிறவிக்கு பாரமான அனைத்தும் சாதகரை விட்டு நீங்கிவிடும். அதன் பிறகு இறைவியையே எண்ணி தியானித்து இருந்த சாதகருடைய நெஞ்சத்தில் இருக்கின்ற மாயையாகிய இருளை நீக்கி விடும் சூரியனைப் போல பேரொளியுடன் இறைவன் வந்து தமது திருவடியை வைத்து அருளுவார். நவாக்கிரி சக்கரத்தின் தன்மை இதுவே ஆகும்.

பாடல் #1378

பாடல் #1378: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பரந்தி ருந்துள்ளே யறுப்பது சத்தி
கரந்தன கன்னிக ளப்படி சூழ
மலர்ந்திரு கையில் மலரவை யேந்திச்
சிறந்தவ ரேத்துஞ் சிறீதன மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பரநதி ருநதுளளெ யறுபபது சததி
கரநதன கனனிக ளபபடி சூழ
மலரநதிரு கையில மலரவை யெநதிச
சிறநதவ ரெததுஞ சிறிதன மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பரந்து இருந்து உள்ளே அறுப்பது சத்தி
கரந்தன கன்னிகள் அப்படி சூழ
மலர்ந்து இரு கையில் மலர் அவை ஏந்தி
சிறந்தவர் ஏத்தும் சிறீம் தனம் ஆமே.

பதப்பொருள்:

பரந்து (அனைத்திலும் பரந்து விரிந்து) இருந்து (இருக்கின்ற இறைவியானவள்) உள்ளே (சாதகருக்கு உள்ளிருந்து) அறுப்பது (அவரது மும்மலங்களையும் அறுக்கின்ற) சத்தி (சக்தியாக இருக்கின்றாள்)
கரந்தன (அவளது அருளை வாங்கிக் கொடுக்கின்ற) கன்னிகள் (அறுபத்து நான்கு சக்திகளும்) அப்படி (சாதகர் இருக்கின்ற நிலையில் அவரைச்) சூழ (சுற்றி இருந்து)
மலர்ந்து (மலர்ந்து இருக்கின்ற) இரு (தங்களின் இரண்டு) கையில் (கைகளிலும்) மலர் (தாமரை மலர்களை) அவை (பல விதங்களில்) ஏந்தி (ஏந்திக் கொண்டு இருக்கின்றார்கள்)
சிறந்தவர் (இவர்களின் அருளால் தாம் செய்யும் சாதகத்தை சிறப்பாக செய்கின்ற சாதகர்கள்) ஏத்தும் (போற்றி வணங்குகின்ற) சிறீம் (நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஶ்ரீம்’ எனும் பீஜ மந்திரத்தின்) தனம் (பலனாகவே) ஆமே (இறைவி இருக்கின்றாள்).

விளக்கம்:

அனைத்திலும் பரந்து விரிந்து இருக்கின்ற இறைவியானவள் சாதகருக்கு உள்ளிருந்து அவரது மும்மலங்களையும் அறுக்கின்ற சக்தியாக இருக்கின்றாள். பாடல் #1371 இல் உள்ளபடி அவளது அருளை வாங்கிக் கொடுக்கின்ற அறுபத்து நான்கு சக்திகளும் சாதகர் இருக்கின்ற நிலையில் அவரைச் சுற்றி இருந்து பாடல் #1376 இல் உள்ளபடி மலர்ந்து இருக்கின்ற தங்களின் இரண்டு கைகளிலும் தாமரை மலர்களை பல விதங்களில் ஏந்திக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்களின் அருளால் தாம் செய்யும் சாதகத்தை சிறப்பாக செய்கின்ற சாதகர்கள் போற்றி வணங்குகின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஶ்ரீம்’ எனும் பீஜ மந்திரத்தின் பலனாகவே இறைவி இருக்கின்றாள்.

பாடல் #1377

பாடல் #1377: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

மணிமுடி பாத சிலம்பணி மங்கை
யணிந்தவர்க் கன்றி யருளில்லை யாகுந்
தணிந்தவர் நெஞ்சினுட் டன்னரு ளாகிப்
பணிந்தவர்க் கன்றே பரகதி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மணிமுடி பாத சிலமபணி மஙகை
யணிநதவரக கனறி யருளிலலை யாகுந
தணிநதவர நெஞசினுட டனனரு ளாகிப
பணிநதவரக கனறெ பரகதி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மணி முடி பாதம் சிலம்பு அணி மங்கை
அணிந்தவர்க்கு அன்றி அருள் இல்லை ஆகும்
தணிந்தவர் நெஞ்சின் உள் தன் அருள் ஆகி
பணிந்தவர்க்கு அன்றே பர கதி ஆமே.

பதப்பொருள்:

மணி (நவரத்தினக் கற்களால் ஆன) முடி (கிரீடத்தை அணிந்து கொண்டும்) பாதம் (தனது திருவடியில்) சிலம்பு (சிலம்புகளை) அணி (அணிந்து கொண்டும்) மங்கை (சாதகர்களின் நிலைகளுக்கு ஏற்ப அருளுகின்ற என்றும் இளமையுடன் இருக்கின்ற இறைவியானவள்)
அணிந்தவர்க்கு (தமது மனதிற்குள் பதிய வைக்கின்ற சாதகரைத்) அன்றி (தவிர வேறு யாருக்கும்) அருள் (அவளது திருவருள்) இல்லை (கிடைப்பதற்கு மிகவும் அரியதாக) ஆகும் (இருக்கும்)
தணிந்தவர் (இறைவியின் தூய்மையான அன்பில் நிறைந்து இருக்கின்ற) நெஞ்சின் (சாதகரின் நெஞ்சத்திற்கு) உள் (உள்ளே நினைக்கின்ற அனைத்தும்) தன் (இறைவியின்) அருள் (திருவருளாகவே) ஆகி (ஆகிவிடும்)
பணிந்தவர்க்கு (அப்படி தனது மனதிற்குள் பதிய வைத்த இறைவியின் திருவடிகளை பணிந்து தொழுகின்ற சாதகர்களுக்கு) அன்றே (அவர்கள் பணிந்த அன்றே) பர (முக்தியை அடையும்) கதி (வழியாக) ஆமே (இறைவி இருப்பாள்).

விளக்கம்:

பாடல் #1376 இல் உள்ளபடி தனது ஆடையில் நவரத்தின மணிகளைப் பதித்து வைத்த பேரழகுடன் நினைத்த அந்த கணமே தோன்றுகின்ற இறைவியானவள் தனது தலையில் நவரத்தினக் கற்களால் ஆன கிரீடத்தை அணிந்து கொண்டும் தனது திருவடிகளில் சிலம்புகளை அணிந்து கொண்டும் சாதகர்களின் நிலைகளுக்கு ஏற்ப அருளுகின்ற என்றும் இளமையுடன் இறைவி இருக்கின்றாள். அவளை தமது மனதிற்குள் பதிய வைக்கின்ற சாதகரைத் தவிர வேறு யாருக்கும் அவளது திருவருள் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. இறைவியின் தூய்மையான அன்பில் நிறைந்து இருக்கின்ற சாதகரின் நெஞ்சத்திற்கு உள்ளே நினைக்கின்ற அனைத்தும் இறைவியின் திருவருளாகவே ஆகிவிடும். அப்படி தனது மனதிற்குள் பதிய வைத்த இறைவியின் திருவடிகளை பணிந்து தொழுகின்ற சாதகர்களுக்கு அவர்கள் பணிந்த அன்றே முக்தியை அடையும் வழியாக இறைவி இருப்பாள்.

பாடல் #1376

பாடல் #1376: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பரந்த கரமிரு பங்கய மேந்திக்
குவிந்த கரமிரு கொய்த மாபாணி
மலர்ந்தணி கொங்கைகள் முத்தார் பவள
மிருந்தல் குலாடை மணிபொதிந் தன்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பரநத கரமிரு பஙகய மெநதிக
குவிநத கரமிரு கொயத மாபாணி
மலரநதணி கொஙகைகள முததார பவள
மிருநதல குலாடை மணிபொதிந தனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பரந்த கரம் இரு பங்கயம் ஏந்தி
குவிந்த கரம் இரு கொய்த மா பாணி
மலர்ந்து அணி கொங்கைகள் முத்து ஆர் பவளம்
இருந்த அல்குல் ஆடை மணி பொதிந்து அன்றே.

பதப்பொருள்:

பரந்த (எங்கும் பரந்து விரிந்து இருக்கும் இறைவியின்) கரம் (திருக் கரங்கள்) இரு (இரண்டிலும்) பங்கயம் (தாமரை மலர்களை) ஏந்தி (ஏந்திக் கொண்டு இருக்கின்றாள்)
குவிந்த (மலரின் மொக்கு பொல குவிந்து இருக்கின்ற) கரம் (திருக் கரங்கள்) இரு (இரண்டும்) கொய்த (அப்போது பறித்த மலர்களைப் போல) மா (மிகப் பெரும்) பாணி (அழகு பொருந்தி இருக்கின்றாள்)
மலர்ந்து (மலர்ந்த மலர்களால் ஆன மாலையை) அணி (அணிந்து இருக்கும்) கொங்கைகள் (திரு மார்புகளில்) முத்து (முத்துக்களால் ஆன) ஆர் (மாலையில்) பவளம் (பவளத்தை பதிந்து அணிந்து இருக்கின்றாள்)
இருந்த (அவளது திரு இடைக்கு) அல்குல் (கீழே இருக்கின்ற) ஆடை (ஆடையில்) மணி (நவரத்தின மணிகளைப்) பொதிந்து (பதித்து வைத்த பேரழகுடன்) அன்றே (நினைத்த அந்த கணமே தோன்றுகிறாள்).

விளக்கம்:

பாடல் #1375 இல் உள்ளபடி உலகம் எங்கும் பரந்து விரிந்து இருக்கும் இறைவியின் திருக் கரங்கள் இரண்டிலும் தாமரை மலர்களை ஏந்திக் கொண்டு இருக்கின்றாள். மலரின் மொக்கு பொல குவிந்து இருக்கின்ற அவளுடைய திருக் கரங்கள் இரண்டும் அப்போது பறித்த மலர்களைப் போல மிகப் பெரும் அழகு பொருந்தி இருக்கின்றாள். மலர்ந்த மலர்களால் ஆன மாலையை அணிந்து இருக்கும் அவளுடைய திரு மார்புகளில் முத்துக்களால் ஆன மாலையில் பவளத்தை பதிந்து அணிந்து இருக்கின்றாள். அவளது திரு இடைக்கு கீழே இருக்கின்ற ஆடையில் நவரத்தின மணிகளைப் பதித்து வைத்த பேரழகுடன் நினைத்த அந்த கணமே தோன்றுகிறாள்.

பாடல் #1375

பாடல் #1375: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பேரொளி யாய பெரிய மலர்நடுச்
சீரொளி யாகத் திகழ்தரு னாயகித்
தாரொளி யாயவள் தன்னிறம் பொன்மையாய்ப்
பாரொளி யாகப் பரந்துநின் றாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெரொளி யாய பெரிய மலரநடுச
சீரொளி யாகத திகழதரு னாயகித
தாரொளி யாயவள தனனிறம பொனமையாயப
பாரொளி யாகப பரநதுநின றாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பேர் ஒளி ஆய பெரிய மலர் நடு
சீர் ஒளி ஆக திகழ் தரு நாயகி
தார் ஒளி ஆய் அவள் தன் நிறம் பொன்மை ஆய்
பார் ஒளி ஆக பரந்து நின்றாளே.

பதப்பொருள்:

பேர் (மிகப் பெரும்) ஒளி (ஒளியாக) ஆய (இருக்கின்ற) பெரிய (பெரியதான) மலர் (சகஸ்ரதள தாமரை மலரின்) நடு (நடுவில் வீற்றிருக்கும்)
சீர் (சிறப்பான) ஒளி (ஒளியாக) ஆக (இருந்து) திகழ் (பிரகாசமாகத் திகழும்) தரு (நிலையைத் தருகின்ற) நாயகி (தலைவியாகிய இறைவி)
தார் (சகஸ்ரதளத்தில் இருக்கும் தாமரை மலருக்கு) ஒளி (ஒளியாகவே) ஆய் (இருக்கின்ற) அவள் (இறைவி அவள்) தன் (தனது) நிறம் (திருமேனியின் நிறத்தில்) பொன்மை (தங்க நிறம்) ஆய் (போலவே பிரகாசமாக ஜொலிக்கின்றாள்)
பார் (உலகத்திற்கு) ஒளி (ஒளியாக) ஆக (இருந்து) பரந்து (எங்கும் பரவி விரிந்து) நின்றாளே (இறைவி நிற்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1374 இல் உள்ளபடி முக்தி அடைவதற்கான பெரிய வழியாக இருக்கின்ற இறைவனின் பேரொளி உருவமானது சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதள தாமரை மலரின் நடுவில் சீரும் சிறப்பும் பொருந்திய பேரொளியாக திகழ்கின்ற நிலையைத் தருகின்ற தலைவியாகிய இறைவியே சகஸ்ரதளத்தில் இருக்கும் தாமரை மலரின் ஒளியாக இருக்கின்றாள். அவளுடைய திருமேனியானது தங்கம் போல பிரகாசமாக ஜொலிக்கின்றது. அவளே உலகத்திற்கு ஒளி தருபவளாக எங்கும் பரவி விரிந்து நிற்கின்றாள்.