பாடல் #846

பாடல் #846: மூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம தாமே.

விளக்கம் :

தெளிவைத் தரும் இந்த சிவநீரான அமுரி நீரை பருகினால் ஓரு வருட காலத்தில் அறிவு மிக தெளிவாகும். உடலில் உள்ள நோய் இளைப்பு முதலிய அனைத்து குறைகளும் நீங்கும். இந்த நீர் மூச்சுக்காற்றுடன் கலந்து உடலில் மேலே ஏறுவதை எட்டு ஆண்டுகள் பயிற்சி செய்தால் மனம் கீழ் செல்லாமல் எப்போதும் மேலேயே நிற்கும் அதனால் மன ஒருமை உண்டாகும். சிவ இன்பத்திற்குரிய இவ்உடம்பு பொன் போல அழகு பெற்று விளங்கும்.

பாடல் #847

பாடல் #847: மூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை

நூறும் மிளகு நுகருஞ் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயிரும் ஆமே.

விளக்கம்:

நூறு மிளகு அளவு சிவ அமுரி நீரை மூச்சுக்காற்றோடு கலந்து அதனை சுழுமுனை நாடியின் உச்சித் துளைக்குக் கொண்டு சேர்த்தால் உடல் பொன் மேனியாக மாறி ஒளிபெற்றுத் திகழும். நரைகூடிய வெள்ளை முடிகளும் மிகவும் கருமையாக மாறும். யோகிக்கு இதை விட சிறந்த மருந்து வேறொன்றும் இல்லை.

பாடல் #848

பாடல் #848: மூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனு மில்லையே.

விளக்கம் :

கடற்கரையின் அருகே சேரும் அலைகளின் நுரைகலந்த உப்புநீர் எதற்கும் உதவாது அதை ஒதுக்கிவிட வேண்டும் என்று அறிவில்லாத மனிதர்கள் கூறுவார்கள். ஆனால் அந்த அலைகளின் நுரைகலந்த உப்புநீரிலிந்து நுரையையும் அழுக்கையும் நீக்கிவிட்டு சுத்தமான உப்பாக்கி அதை உணவில் கலந்து சுவையோடு உண்ணத் தெரியும் அறிவுள்ள மனிதர்கள் வீணாக்க மாட்டார்கள். அதுபோலவே உயிர்களின் உடலின் கழிவு உப்புக்கள் நிறைந்த சிறுநீர் எதற்கும் பயன்படாது அதை வெளியேற்றிவிடு என்பவர்கள் அறிவில்லாத மனிதர்கள். அந்த உப்புக்கள் நிறைந்த சிறுநீர்ப் பைக்கு அருகிலேயே இருக்கும் சுக்கிலத்தை அடி வயிற்று நெருப்பால் சுத்தமாக்கி சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்க்கும் வழியறியந்த அறிவுள்ள யோகியர் அதை வீணாக்காமல் செய்தால் அவர்களின் நரை முடிகள் கருத்து சுருங்கிய தோல்கள் இளைமை பெற்று முதுமையை வென்று என்றும் இறப்பில்லாமல் பேரின்பத்தில் வாழ்வார்கள்.

பாடல் #849

பாடல் #849: மூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை

அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளுங் கபாலமே.

விளக்கம் :

அழகிய கூந்தலை உடையவளே ஒரு அதிசயம் உள்ளது. இந்த உடலில் மறைவாக உள்ள அமுரி நீர் உடலில் மேலே சென்று சிரத்தை அடையும் போது மிளகு, நெல்லி, மஞ்சள், வேப்பம் பருப்பு இவற்றைக் கலந்து நனறாக அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் மேன்மை அடையும். தலை மயிர் கறுப்பாக ஆகும்.

பாடல் #850

பாடல் #850: மூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவும்வொண் ணாதே.

விளக்கம்:

உயிர்களின் உடலிலுள்ள சிவ நீரான அமுரி நீரை வீரியத்தால் உண்டாகும் வீர மருந்து என்றும் தேவர்கள் பருகும் அமிர்தம் என்றும் மங்கையருடனான போகத்திற்கு உதவும் மருந்து என்றும் குருவாகிய இறைவன் அருளிக் கூறினார். அனைத்திற்கும் தலையான முதல் மருந்து இதுவே என்று யோகியர்கள் அறிவார்கள். அப்படி அறிந்தவர்களின் உள்ளுக்குள் ஜோதி மயமாக இருக்கும் இந்த பெருமை மிக்க மருந்தின் அருமை பெருமைகளை வார்த்தைகளால் விவரித்து சொல்ல முடியாது.

அமுரி தாரணை

திருமந்திரம் பாடல் # 845 முதல் 850 வரை உள்ள ஆறு அமுரி தாரணை பாடல்கள் பற்றி பலர் பல கேள்விகள் கேட்டுள்ளார்கள். அதற்கான சிறு விளக்கம் இது. பாடலில் உள்ள விளக்கத்தின்படி அமுரி நீர் என்பது சுக்கிலம் மற்றும் திரோணிதம் ஆகும். இதனை 8 ஆண்டுகள் பிராணாயாமம் மற்றும் அகயோக பயிற்சிகள் மூலம் பயிற்சி செய்து தலை உச்சிக்கு கொண்டு சென்று நிலைத்திருக்க வைப்பது அமுரி தாரணை ஆகும். அமுரிநீரை தலை உச்சியில் கொண்டு சென்று நிலைத்திருக்க வைத்தால் முதுமை தன்மை மறைந்து இளமையுடன் எப்போதும் இருக்கலாம். இந்த அமுரி நீரை திருமூலர் சிவநீர் என்று குறிப்பிடுகிறார்.

சிவன் சொத்து குலநாசம் என்று ஒரு தத்துவம் நமது ஆன்மீகத்தில் உள்ளது. அதற்கு சரியான அர்த்தம் இப்பாடல்களே. சிவன் சொத்து என்பது சிவநீரான சுக்கிலம் ஆகும் இதனை மகளிருடன் போகத்தின் மூலம் விரையம் செய்தால் சந்ததியினர் உருவாகி குலம் விரித்தியடையும். இந்த சிவநீரை யோகப்பயிற்சிகள் மூலம் தலை உச்சிக்கு கொண்டு சென்று நிலைத்திருக்க வைப்பதினால் முதுமை தன்மை மறைந்து இளமையுடன் எப்போதும் பேரின்பத்தில் இருக்கலாம். அதனால் சாதகருக்கு வாரிசு இருக்காது. சந்ததியினர் இல்லாமல் குலம் நாசமாகிறது. இதுவே சிவன் சொத்து குலநாசம் என்பதன் முழு அர்த்தமாகும்.

பாடல் #825

பாடல் #825: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழலில் மாலையுஞ் சாத்திக்
காயக் குழலி கலவியொ டுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே.

விளக்கம்:

உடம்பில் பூசுவதற்கு ஏதுவான வாசனை திரவியங்களையெல்லாம் பூசிக்கொண்டு நீராடி காயவைத்த நறுமணம் கமழும் கூந்தலில் வாசனையுள்ள மலர்களையும் மாலையாகச் சூடிக்கொண்டு மனதை மயக்குகின்ற மங்கையோடு கலவியில் ஒன்றாகக் கலந்து இருக்கின்ற போதும் ஊசியில் நூல் கோர்ப்பது போல நெற்றிக்கு நடுவில் உள்ள சுழுமுனை நாடியின் உச்சித்துளை வழியே மூச்சுக்காற்றை செலுத்திக் கொண்டே இருக்கின்ற யோகியர்களுக்கு போகம் எப்போதும் அழியாது.

குறிப்பு: ஆணும் பெண்ணும் ஒருவருடன் ஒருவர் போகத்தில் இருக்கும் போது அதை யோகமாக எப்படி மாற்றுவது என்பதை விளக்குவதே பரியாங்க யோகமாகும்.

பாடல் #826

பாடல் #826: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

போகத்தை யுன்னவே போகாது வாயுவு
மேகத்த வெள்ளியு மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந்
தாதிற் குழைந்து தலைக்கண்ட வாறே.

விளக்கம் :

பாடல்#825 ல் கூறியபடி தலை உச்சியில் சகஸ்ரதளத்தில் பேரறிவு பொருந்திய சிவனை எண்ணியபடி ஓர் ஆடவன் போகத்தில் ஈடுபட்டால் அவனது காம வாயு விரைவாக அதன் வேலையை செய்யாமல் நீரின் தன்மை கொண்ட அவன் சுக்கிலம் பெண்ணின் சுரோணிதத்தில் கலக்காது. மயக்கும் சூதாடும் கருவியைப் போன்ற ஸ்தனங்கள் உடைய பெண்ணும் உடல் என்னும் தேரைச் செலுத்தும் ஆடவனும் செய்த இந்தக் கூட்டுறவால் வெளிப்பட்ட சுக்கிலமும் சுரோணிதமும் ஒளியாய் மாறித் தலையில் சென்று தன் தலையில் நாதமாகிய சிவனும் ஒலியான சக்தியும் விளங்குவதைக் காண்பான்.

பாடல் #827

பாடல் #827: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே.

விளக்கம் :

பாடல்# 801 ல் உள்ள படி ஒரு தலைவனும் தலைவியும் யோகத்தில் போகம் செய்யும் போது வலது இடது நாசிகளின் வழியே ஏறி இறங்கும் மூச்சுக்காற்றின் வழியே மேலே சென்று தலையின் மேலே சஸ்ரதளத்தில் உள்ள ஒலி ஓளிகளை கைவருமாறு செய்தால் முதுகுத்தண்டு எப்போதும் தளராது. தளராததாகவே உடலுக்கும் அழிவில்லை.

பாடல் #828

பாடல் #828: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே.

விளக்கம் :

போகத்தின் போது உடலிலிருந்து நீரின் தன்மை கொண்ட சுக்கிலம் வெளியே செல்லும். அவ்வாறு செல்ல விடாமல் யோகத்தால் பாதுகாத்து வெற்றி கொண்டவன் யோகிகளுக்குத் தலைவனாய் இருப்பான்.