பாடல் #934

பாடல் #934: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம்
அஞ்செழுத் துஉள்ளே அமர்ந்திருந் தானே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தில் உள்ள நமசிவாய என்னும் மந்திரத்தை எண்ணி தியானித்தால் உள்ளுக்குள் இருந்து இறைவனே குருவாக வந்து வழி காட்டுவார். குருவாக அமர்ந்த இறைவனின் வழிகாட்டுதலின் படி நமசிவாய மந்திரத்தின் ஐந்து அட்சரங்களான அ, இ, உ, எ, ஒ என்கிற எழுத்துக்கள் இறைவனின் வடிவமாகவே இருப்பதை உணர்ந்து திருவம்பலச் சக்கரத்தில் அமைந்திருக்கும் இந்த ஐந்து அட்சரங்களும் சதாசிவமூர்த்தியாகவே இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

பாடல் #935

பாடல் #935: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கூத்தனைக் காணும் குறிபல பேசிடிற்
கூத்த னெழுத்தின் முதலெழுத் தோதினார்
கூத்தனொ டொன்றிய கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியுமது வாமே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தில் திருநடனமாடும் இறைவனைக் கண்டு அடைய வழிகள் பல இருக்கிறது என்று பேசினாலும் இறைவனின் வடிவமாக இருக்கும் நமசிவாய மந்திரத்தின் முதலெழுத்தான ‘ந’ அல்லது அதன் அட்சரமான ‘அ’ என்ற எழுத்தை செபித்தால் இறைவனாகிய அந்த எழுத்தோடு ஒன்றாக சேர்ந்து நிற்பார்கள். இதுவே திருவம்பலச் சக்கரத்தில் திருநடனமாடும் இறைவனைக் கண்டு அடையும் வழியாகும்.

குறிப்பு: ‘ந’ அல்லது ‘அ’ என்ற முதலெழுத்தை ஒலியலை சிறிதும் மாறாமல் தொடர்ந்து உச்சரித்து செபிக்க வேண்டும்.

பாடல் #936

பாடல் #936: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அத்திசைக் குள்நின் றனலை எழுப்பியே
அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுறவு ஆக்கினன் தானே.

விளக்கம்:

பாடல் #935 இல் உள்ளபடி நமசிவாய மந்திரத்தின் முதலெழுத்தாகிய ‘ந’ எழுத்தை செபித்து திருவம்பலச் சக்கரத்தின் நான்கு திசையிலும் உள்ள சூலத்தின் அக்கினியை எழுப்பும் சாதகர்கள் நான்கு திசைகளுக்குள்ளும் மறைந்து நிற்கின்ற இறைவனோடு தாமும் கலந்து நின்று திருவம்பலச் சக்கரத்தை தமக்குள் உணர்வார்கள்.

பாடல் #937

பாடல் #937: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

தானே யளித்திடுந் தையலை நோக்கினால்
தானே யளித்திட்டு மேலுற வைத்திடுந்
தானே யளித்த மகாரத்தை ஓதிடத்
தானே யளித்ததோர் கல்லொளி யாகுமே.

விளக்கம்:

பாடல் #936 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தை தமக்குள் உணர்ந்தபின் அதிலிருந்து வெளிவரும் சக்தியை தமக்குள் உணர்ந்து கொண்டே இருந்தால் சக்கரத்திலிருந்து வரும் சக்திமயம் சாதகரின் உடலைச் சுற்றி உறைபோல் மூடிக்கொள்ளும். அதன் பிறகு ‘நமசிவாய’ மந்திரத்தின் இரண்டாவது எழுத்தாகிய ‘ம’ எழுத்தை செபித்தால் சாதகரின் சதையால் ஆன உடலும் மாணிக்கக் கல்லைப் போல ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.

பாடல் #938

பாடல் #938: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கல்லொளி யேஎன நின்ற வடதிசை
கல்லொளி யேஎன நின்றனன் இந்திரன்
கல்லொளி யேஎன நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே.

விளக்கம்:

பாடல் #937 இல் உள்ளபடி சாதகரின் உடலிலிருந்து பிரகாசிக்கும் ஒளி கீழிருந்து மேல் நோக்கி எழும் சுடர் போல உணர்ந்தால் தமது உடலில் இருக்கும் பஞ்ச பூதங்களுக்கும் தலைவனாக இருப்பதை உணர்வார்கள். அதன்பிறகு நமசிவாய மந்திரத்தின் மூன்றாவது எழுத்தாகிய ‘சி’ எழுத்தை செபித்தால் சாதகரின் உடலிலிருந்து பிரகாசிக்கும் ஒளியாகத் தாமே இருப்பதை இறைவன் காட்டி நிற்பான்.

பாடல் #939

பாடல் #939: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

தானே யெழுகுணந் தண்சுட ராய்நிற்குந்
தானே யெழுகுணம் வேதமு மாய்நிற்குந்
தானே யெழுகுண மாவதும் ஓதிடில்
தானே யெழுந்த மறையவ னாமே.

விளக்கம்:

பாடல் #938 இல் உள்ளபடி சாதகருக்குள் ஒளியாக தன்னை காட்டி நின்ற இறைவன் குளிர்ந்த சுடர் ஒளியாக நிற்பதையும் அந்த இறைவனே வேதங்களின் பொருளாகவும் அதில் கூறியுள்ள பலவித குணங்களாகவும் தமக்குள் நிற்பதை உணர்ந்து பாடல் #936 #937 #938 இல் உள்ளபடி ’ந’ ’ம’ ’சி’ எழுத்தை செபித்துக்கொண்டே இருந்தால் தனக்குள் மட்டுமில்லாமல் தனக்கு வெளியில் இருக்கும் அனைத்திலும் மறைந்து நிற்பது இறைவனின் தன்மையே என்பதை சாதகர் அறிந்து கொள்வார்.

பாடல் #940

பாடல் #940: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மறையவ னாக மதித்த பிறவி
மறையவ னாக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத் துண்ணிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத் தாமவ ராமே.

விளக்கம்:

உயிர்கள் இறைவனின் தன்மையை தமக்குள் உணர்ந்து கொள்ள மனிதப் பிறவியை பெற்றுள்ளன. அதனை அறிந்து அனைத்து உயிர்களையும் இறைவனாகப் பார்த்து உணர்பவர்கள் ஐந்தெழுத்தான ‘நமசிவாய’ என்னும் மந்திரத்தில் மறைவாக இருக்கும் பரம்பொருளை உள்ளத்தில் வைத்து தியானிக்க அவர்களும் இறைவனாகும் பேறு பெற்று ‘நமசிவாய’ ஐந்தெழுத்து மந்திரத்தை தாமாகவே உணர்வார்கள்.