மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #65

26-3-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பிரார்த்தனை என்பது என்ன?

பொதுவாக பிரார்த்திக்கும் காலத்தில் இறைவா எமக்கு இதைக் கொடு அதைக் கொடு அனைத்தும் வேண்டும் இது வேண்டாம் என்பதே பிரார்த்தனையாக இருக்கின்றது. இவ்விதம் இல்லாமல், இறைவா எமக்கு எது நலம் தருமோ அதையே நடத்தி வைப்பாய் என்பதே சிறப்பான பிரார்த்தனை ஆகும். இதைப் பலரும் மறந்துவிட்டு நித்யம் (எப்பொழுதும்) மேலும் சிறிது சிறப்பாக ஆண்டவா எமக்கு இதைச் செய் நான் உனக்கு அதைச் செய்கிறேன் என்று கூறுகின்றனர். இது மாபெரும் தவறாகும். ஏனெனில் இறை சக்திக்கு நாம் அளிப்பது எதுவும் தேவையற்றது. ஏன் என சிந்தித்தால் இவ்வுடலில் நம் ஆத்மாவை அடைத்து வைப்பதே அவன் அருள்தான் என்பதை உணர வேண்டும். இவ்வுடலிலிருந்து நமது ஆத்மாவானது பிரிந்து நல்ல நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் அவனருள் தேவைப்படுகின்றது. இந்நிலையில் ஆண்டவனிடம் எமக்கு எது நலம் தருவதோ அதனை அளிப்பாய் என்று மட்டும் வேண்டுதலே சிறந்ததாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #64

26-2-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இறை சக்தி ஒன்று மட்டுமே இருக்கும் போது, நான் ஏன் காலத்தை வீணாக்கி மனிதர்களை நாடி அவர்களிடமிருந்து ஆன்மீகம் கற்றுக்கொள்ள வேண்டும்?

தெய்வம் நேரடியாக வந்து யாதும் உபதேசிப்பதில்லை இதை நன்கு உணர்தல் வேண்டும். இறைவனிடம் நேரடியாக ஆன்மீகம் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் மகத்தான தியாகங்கள் மகத்தான சாதனைகள் (தியானம்) செய்தல் வேண்டும். கலியுகத்தில் தெய்வ சக்தியானது நாம் கேட்கும் வினாக்களுக்கு மனித ரூபம் இல்லையேல் வேறு ஏதேனும் வழியில் விளக்கங்களை உணர்த்துவார். உண்மையாக வழிபாட்டில் ஈடுபடும் மகான்கள் வழியிலும் விளக்கங்கள் கிடைக்கக்கூடும். இதற்கு ஒருவர் நமக்கு உகந்த ஓர் குருவை தேடிக்கொள்ளுதல் வேண்டும் என்பது விதியாகும். இத்தகைய நிலையில் நாம் சாதனைகளைத் தெய்வத்தை நோக்கிச் செய்திட்டால் பின்பு அத்தெய்வத்தின் அருளால் நமக்கு ஓர் நல்ல வழிகாட்டியும் (குரு) கிடைத்திடுவார்.

பாடல் #725

பாடல் #725: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

விளக்கம்:

உடம்பை முன்பு குறையுடையது என்று எண்ணியிருந்தேன். உடம்புக்குள்ளே உரிமையாளர் இல்லாமல் தானே வந்தடையும் பொருள் ஒன்று இருப்பதை கண்டேன். அந்த பொருள் பரம்பொருளாகிய இறைவன் என்பதையும் அவன் இந்த உடம்புக்குள்ளே கோவில் கொண்டுள்ளான் என்பதை தெரிந்து கொண்டு இந்த உடம்பை யாம் பேணி பாதுகாத்து வருகின்றோம்.

கருத்து: உடம்புக்குள் பரம்மொருளாகிய இறைவன் இருப்பதினால் பிராணாயமம் யோகப்பயிற்சிகள் செய்து உடம்பை பாதுகாத்து வரவேண்டும்.

பாடல் #726

பாடல் #726: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்
கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே.

விளக்கம்:

சுவாசிக்கும் மூச்சுக்காற்றை மூலாதாரத்திற்கு அனுப்பி மூலாதாரத்திலுள்ள அக்கினியால் மூச்சுக்காற்றை சுத்தம் செய்து சுழுமுனை நாடியின் கீழ்புறத்திலிருந்து மேலாகச் செலுத்தினால் சுழுமுனையை நாடி சுத்தம் அடையும். பின்பு அந்த காற்றை சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரோடு சேர்த்து அந்த மலரை விரியச் செய்த பிறகு அந்த வாயுவை உடம்பிலுள்ள அனைத்து நாடிகளுக்குள்ளும் செலுத்தும் அகயோகப் பயிற்சியை அறிந்து கொண்டு அதைச் செய்பவர்களின் உடல் நெருப்பில் கருகி வெந்துபோகாமல் என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும்.

கருத்து: சுவாசிக்கும் மூச்சுக்காற்றை மூலாதாரத்திற்கு அனுப்பி சுழுமுனை நாடியை சுத்தப்படுத்தி சகஸ்ரதளத்தில் சேர்த்து பின்பு உடலில் உள்ள அனைத்து நாடிகளுக்கும் அனுப்பும் பயிற்சியை செய்பவர்களின் உடல் நெருப்பினால் சுட்டாலும் அழியாமல் இருக்கும்.

திருமூலர் அருளிய மூச்சுப்பயிற்சி

பாடல் #727

பாடல் #727: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்
வஞ்சக வாத மறுமத்தி யானத்திற்
செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.

விளக்கம்:

பாடல் #726 ல் உள்ளபடி மூச்சுசுழற்சிப் பயிற்சியை சூரியன் மறையும் சாயந்திர நேரத்தில் செய்தால் கபம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். இந்தப் பயிற்சியை சூரியன் உச்சியிலிருக்கும் மத்தியான நேரத்தில் செய்தால் வாதம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். இந்தப் பயிற்சியை சூரியன் தோன்றும் காலை நேரத்தில் செய்தால் பித்தம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். உடலில் விஷமாக இருக்கும் மூன்றுவிதமான வியாதிகளையும் நீக்கும் வழியாகவே இந்த பயிற்சியை அருளினோம். இந்தப் பயிற்சியை நாள் முழுவதும் செய்துகொண்டே இருந்தால் முடிகள் நரைக்காமல் உடலும் முதுமையடையாமல் இளமையாகவே எப்போதும் நிலைத்து நிற்கும்.

கருத்து: கபம் பித்தம் வாதம் ஆகிய மூன்றும் உடலுக்கு வரும் அனைத்து வியாதிகளுக்கும் காரணம். சரியான நேரத்தில் பாடல் #726 ல் உள்ளபடி அகயோகம் செய்வதன் மூலம் கபம் பித்தம் வாதம் மூன்றையும் நீக்கலாம். அதே யோகத்தை நாள் முழுவதும் செய்தால் உடலில் நோய் இல்லாமல் எப்போதும் இளமையாகவே இருக்கும்.

பாடல் #728

பாடல் #728: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றவிழ் முட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்கவே உடலழி யாதே.

விளக்கம்:

மூன்று வளைவுகளை உடைய இடகலை பிங்கலை எனும் நாடிகளாக இரண்டு பாம்புகள் எட்டு அங்குல நீளத்திற்கு இருக்கின்றன. இயல்பான சுவாசமானது நாசியிலிருந்து இந்த இரண்டு நாடிகளின் வழியே கீழ் நோக்கி எட்டு அங்குல அளவு செல்லும். இந்த இரண்டு நாடிகளின் அடியிலிருந்து தலை உச்சி வரை செல்லும் பன்னிரண்டு அங்குல அளவிற்கு சுழுமுனை நாடி இருக்கிறது. முதுகெலும்பு ஆரம்பிக்கும் கழுத்து அது முடியும் இடுப்பு ஆகிய இரண்டு மூட்டுக்களையும் நேராக வைத்து இரண்டு கால்களையும் மடக்கி உடம்பை நேராக வைத்து அசையாமல் அமர்ந்து மூச்சுக்காற்றாகிய இயந்திரத்தை இடகலை பிங்கலை வழியாக எட்டு அங்குலம் கீழ் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் தொடங்கும் சுழுமுனை நாடி வழியே திசை மாற்றி பன்னிரண்டு அங்குலம் மேல் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் இருக்கும் சகஸ்ரதள ஆயிரம் தாமரை இதழ்களோடு கலக்க வைக்கும் சுழற்சியான அகயோகத்தை எப்போதும் செய்து கொண்டு இருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.

கருத்து: கழுத்தையும் இடுப்பையும் வளைக்காமல் நேராக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்து மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரதளத்தோடு கலந்து மறுபடியும் உடல் முழுவதும் பரவும் சுழற்சியை செய்து கொண்டிருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.

பாடல் #729

பாடல் #729: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபது மாறும் புகுவரே.

விளக்கம்:

பிங்கலை இடகலை நாடிகளின் வழியே மூச்சுக்காற்றை அறுபது மாத்திரை அளவிற்கு (30 வினாடிகள்) வலதும் இடதுமாக உள்ளிழுத்து நூறு மாத்திரை அளவிற்கு (50 வினாடிகள்) அடக்கி வைத்து ஆறு மாத்திரை அளவிற்கு (3 வினாடிகள்) சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரோடு அறுபது மாத்திரை அளவிற்கு (30 வினாடிகள்) வைத்திருந்து பிறகு நூறு மாத்திரை அளவிற்கு (50 வினாடிகள்) உடலிலுள்ள அனைத்து நாடிகளுக்கும் கொண்டு செல்லும் சுழற்சியைத் தொடர்ச்சியாக செய்தால் ஆயுளை எப்போதும் கூட்டிக்கொண்டே இருக்கலாம்.

கருத்து: அகயோகப் பயிற்சியை முறைப்படி தொடர்ச்சியாக செய்ய ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #63

7-12-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தியானத்தை எவ்விதம் செய்தல் வேண்டும்?

மேலான இடத்தை விட்டுக் கீழான இடத்தை நோக்கி ஓடும் மழை நீரானது யதார்த்த நிலையாகும். இதற்கு மாறாக கீழ் நிலையிலிருந்து மனம்தனை மேல் செலுத்துவது மட்டுமின்றி மேல் நிலையும் அடைதல் வேண்டும் என்பதே ஆன்மீக நெறி. இது யதார்த்த நிலைக்கு மாறுபட்டது என்கின்ற போதிலும் மனமது செம்மையானால் எந்தக் கடினமும் இல்லை. மேல் நோக்குவதே ஆன்மீகத்திற்கு நலம் தரும் வழி என்றும் மேல் என்பது இறைவனை மட்டுமல்ல நல்ல குணங்களையும் நல்ல செயல்களையும் நல்ல சிந்தனைகளையும் குறிப்பது ஆகும். எவர் ஒருவர் நல்ல செயல்களைச் செய்கின்றாரோ அதைப் பின்பற்றுதல் வேண்டும். நல்ல சிந்தனைகளை எவர் அளித்தாலும் உடனடியாக அதைப் பின்பற்ற முயற்சித்தல் வேண்டும். இதில் தவறினால் வாய்ப்பு ஒன்று இழந்ததாகக் கண்டு கொள்ளலாம். இவ்விதமே அனைத்தும் மேல் நோக்கிச் சிந்திக்க மேல் நோக்கித் தியானம் செய்ய சிறப்புகள் உண்டாகும் என்பதே எமது அறிவுரையாகும். எவ்விதம் தியானம் செய்வது எனக் கேட்டால் இதனைக் குருவிடம் நேர்முகமாகக் கற்றுக் கொள்வதே சிறந்தது. மூன்று நான்கு வகை தியானங்களில் நமக்கு எது சிறப்பாக அமைகின்றதோ அதனை ஏற்றுக் கொண்டு ஈடுபாட்டோடு செய்திட மேன்மைகள் தாமாக தொடரும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #62

10-11-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேடு நினைப்பவன் கெடுவான் என்கின்ற பழைய சொல்லிற்கு உள் அர்த்தம் என்ன?

பொதுவாக மற்றவர்களை கேடு நினைக்கின்றவன் கெடுவான் என்பது தான் பொருளாகின்றது. இருப்பினும் இதனை ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும் கேடு நினைப்பவன் என்பது மற்றவர்களுக்கு கெடுதல் நினைப்பவன் மட்டுமல்ல பொதுவாகவே தீயகாரியங்கள் சதா நினைக்கின்றவனும் கேடு நினைக்கின்றவன் ஆவான். இவ்விதம் நினைக்கின்றவன் தகாத காரியங்களை பற்றி சதா நினைக்கின்றவனும் கெடுவான். கெடுவான் என்பதற்கு வேறு அர்த்தம் அழிந்து விடுவான் என்பதாகும் கெட்டு போவான் என்பது மட்டுமில்லாது கெடும் இது பொதுவாக தீபம் அனைவதற்கும் ஓர் வாக்காகும் சதா தீய காரியங்கள் நினைத்து இருக்கின்றவன் சித்த பிரம்மம் கண்டு தீபம் அனைவது போல் அனைந்து விடுவான் தன்னை மாய்த்துக் கொள்வான் என்பதும் பொருளாகும். எப்பொழுதும் தீய எண்ணங்கள் மனதில் வரும் பொழுதும் கெட்ட எண்ணங்கள் மனதில் வரும் பொழுதும் அதனை சீர் (சரி) செய்யும் வகையில் உயர்ந்த எண்ணங்கள் உடனடியாக வளர்த்தல் வேண்டும். தெய்வீக எண்ணங்கள் உடனடியாக வளர்த்தல் வேண்டும் இவ்விதம் செய்தால் தீயவை உடனே மறையும். இதனை கடைபிடிப்போர் சிலரே. ஏன் இவ்வாறு தீய எண்ணங்கள் வருகிறது என எண்ணுவோர் மட்டுமே தெய்வீக எண்ணங்களையும் நல்ல எண்ணங்களையும் உடனடியாக வளர்க்கின்றனர். இரண்டாவதாக இக்காலத்தில் பலரும் பல உபதேசங்கள் பெற்று நல்வார்த்தைகள் கேட்டு முழுமையாக கிரகித்துக் கொண்டு பாண்டித்யம் (இறைஅருள் இல்லாத அறிவு) பெறுகின்றனர். இவர்கள் வாழ்க்கையின் தத்துவங்களை அவை சொல்லும் விளக்கங்களை அமுல்படுத்துவதில்லை. இது சிறு வருத்தத்திற்கு உரியதாகும் ஏனெனில் அவ்வழிகளை கடைபிடிக்கும போது மனதில் பெரும் அமைதி கிடைக்கும். இதனை பலர் மறந்து விடுகின்றனர் துன்பம் வந்தால் அத்தின்பத்தில் மூழ்கி மேலும் மேலும் ஆழமாக பதிந்து விடுகின்றனர். துன்பம் வரும் பொழுது சிரிக்க முடியாது என்கின்ற போதிலும் அத்துன்பத்திலிருந்து மனதை எடுத்து ஏற்கனவே மனதில் நடந்த ஆனந்த காலத்திற்கு மனதை இழுத்துச் செல்ல வேண்டும். இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் விஷயங்களாகும் இன்பம் பெரிதாக வந்தால் மனதில் தீர்மானித்துக் கொள்ளுங்கள் பின் துன்பமும் வருகின்றது என்று இதில் எந்த வித மாற்றமும் இல்லை பெரும் துன்பம் வந்தால் இத்துன்பத்திற்கு பிறகு மகிழ்ச்சியான காலம் வரும் என உறுதியாக எடுத்துக் கொள்ளலாம். இவை இயற்கையின் விதி மட்டுமல்லாது அவரவர்களின் கர்மவிதியும் கூட கர்மம் இல்லாதவன் இவ்வுலகில் இருக்கமாட்டான் என்பது இதற்கு பெரும் விளக்கமாகும். இதனை நன்கு உணர்ந்து செயல்படுவீர்களாக.