மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #74

24-12-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

சனீஸ்வரன் அவரின் தன்மைகள் என்ன?

அனைவரும் அவ் ஈஸ்வரனைக் கண்டு பெருமளவிற்கு பீதி (பயம்) காண்கின்றனர். வந்தவுடன் கொடுமைப்படுத்துவார் என்ற தவறான எண்ணம் பலருக்கும் உண்டு. சனீஸ்வரரின் காலமாகிய பத்தொன்பது வருடங்களிலும் பின்பு வரும் 7 1/2 வருடங்களிலும் நமது அளவற்ற கர்மவினைகளை தீர்க்க வாய்ப்பு அளிக்கின்றான். அவருக்கு மட்டும் ஈஸ்வரன் என்ற பட்டம் உண்டு. இதில் நாம் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல எம்பிரானை குகையில் 7 1/2 வருடங்கள் இருக்க வைத்தாரே இது பெரும் காரியமல்லவா? இந்நிலையில் நாம் சனீஸ்வரனைக் கண்டு பயப்பட வேண்டாம் என்பது எமது வேண்டுகோளாகும். ஏனெனில் நாம் கொண்டு வந்த கர்ம மூட்டைகள் பெருமளவு அதை படிப்படியாக தீர்த்து வைக்க இச்சனீஸ்வரரே உதவுகின்றார். அவருக்கு ஞானகாரகன் என்ற பெயரும் உண்டு ஏனெனில் கடினங்கள் (கஷ்டங்கள்) வழியாக விரக்திகளும் தோன்றி நாம் ஞானம் பெறுகின்றோம். இதனை நாம் மறக்கவும் மறுக்கவும் முடியாத ஓர் விதித்திரமான செயலாகின்றது. இதுமட்டுமல்லாது சில கோவில்களில் இருந்து சனீஸ்வரன் பெரும் நலன்களையும் அளிக்கின்றான். இக்காலத்திலும் கோவில்களில் இருந்து யோகம் அளிக்கும் நிலையிலையே காண்கின்றான் என்பதை உணர வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் பயப்படுவதோ கிலி (அதிர்ச்சி) காண்பதோ வேண்டாம். இதற்கு பதிலாக அவன் திருவடியை பணிந்து அவன் அருள் பெறுவீர்களாக சர்வ நலன்களும் உண்டாகும்,

வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் என்ன வித்யாசம்?

வாழ்த்து என்பது நாம் செய்யும் காரியத்தை தொட்டோ நம் முன்னேற்றத்தை தொட்டோ ஓர் புகழ்ச்சி அளிப்பது என்பதே அர்த்தமாகும். இதுவே வாழ்த்து என்பதின் முழுமையான பொருள். இக்காலம் வரை இவ்விதம் செய்திருக்கிறாய் உன்னை வாழ்த்துகிறேன் என்பது இதற்கு பொருளாகும்.

ஆசி என்பது முழுமையான ஆசிர்வாதமாகும். இது கிடைக்கும் வழியாக பல கர்மங்கள் தீர்ந்து விடுகிறது என்றும் நாம் ஆன்மீக பாதையில் உறுதியாக மேன்மைகள் காணக் கூடும். ஏனென்றால் நீ வருங்காலத்தில் நன்றாய் இருத்தல் வேண்டும் என்கின்ற அந்த ஆசிர்வாதம் மாகான்கள் வழியாக கிடைக்க அது இறைவனின் ஆசிர்வாதமாக கண்டு கொள்ளல் வேண்டும். இது தான் இரண்டுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசங்களாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #73

27-11-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இறைவன் எம்மை ஒதுக்கிவிட்டாரா?

இறைவன் எவரையும் ஒதுக்குவது இல்லை. நாம்தான் ஒதுங்கிச் செல்கின்றோம். இறைவன் எப்போதும் நமக்கு முன்னால் இருக்கின்றான். ஆனால் நாம் அதை உணர்வதில்லை என்பது நமது குறையாகின்றது எனபதே உண்மையான நிலை. இது இறைவனின் குறையல்ல என்பதை நன்கு உணர்தல் வேண்டும். நம்மிடம் இருக்கும் இறைவனை நாம் உணர வேண்டுமென்றால் அதற்கு உண்டான சில சாதனைகளில் ஈடுபடுதல் வேண்டும். பத்து நிமிடம் அல்லது பதினைந்து நிமிடங்கள் சாதனைகள் செய்தபின் இறைவன் என்னை விட்டு நீங்கிவிட்டான் என்று சொல்வது வெறும் மடமையான (அறியாமை) சிந்தனை. இந்த நோய் பலருக்கும் உண்டு. சிறிது நேரம் சாதனைகள் செய்திட இறைவன் நமக்கு முன் தோன்றுதல் வேண்டும் காட்சியளித்தல் வேண்டும் யாம் அவரை உணர்தல் வேண்டும் என்பதெல்லாம் ஒருவித மன நோயே. சாதனை என்பது ஒரு நாள் இரண்டு நாள் செய்வது அல்ல எதிர்பார்ப்பின்றி பல ஆண்டுகள் செய்த பின்பே இறைவன் நம்மோடு இருப்பதை உணர இயலும். இதனை யாம் கூறுகின்றோம் என மன வருத்தம் வேண்டாம். இதுவே உண்மையான நிலை. இருப்பினும் இக்கலியுகத் தன்மைக்கு இதனை சிறிது எளிதாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் எப்பொழுதும் இறைவன் நம்மோடு இருக்கின்றான் என்கின்ற ஓர் மன பாவனை (எண்ணத்தை) வளர்த்தல் வேண்டும். இது ஒன்றே சிறப்பான வழி. எப்பொழுதும் இறைவன் நம்மோடு இருக்கின்றான் என பாவனை செய்தால் நாமும் நம் பழக்க வழக்கங்களிலும் மன பழக்கங்களிலும் சிறிது சிரத்தை (ஈடுபாடு) காட்டுவோம் என்பதும் உண்மையே. தாய் தந்தை நம்மோடு இருக்கின்றார்கள் என்றால் தகாத காரியங்கள் நாம் செய்ய மாட்டோம் அல்லவா? இத்தகைய நிலையை இறைவனுக்கு நாம் அளித்து நம் வீட்டில் எப்பொழுதும் அவர் இருக்கின்றார் நாம் வெளியில் செல்லும் போது நம்முடன் வருகின்றார் என சிந்திக்கத் துவங்கிவிட்டால் தவறுகள் குறையும் மன வலிமை உண்டாகும். நாம் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். நாம் எண்ணியது போல் நடக்கவில்லை என்றால் மன வருத்தம் எவருக்கும் இருத்தல் வேண்டாம். ஏனெனில் எண்ணியது அனைத்தும் நடந்துவிட்டால் இறைவன் இல்லை என்ற ஓர் சொல்லும் உண்டு. ஆகவே அனைத்தும் அவன் விருப்பப்படி நடக்கின்றது என்று மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்பதே எமது அறிவுரையாகின்றது.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #72

31-10-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

சூரபத்மனை எம்பெருமான் வேலவன் (முருகன்) வதை செய்த (அழித்த) சூரசம்ஹாரத்தின் (சூரனின் அழிவு) பொருள் என்ன?

ஆலயங்களில் பெருமளவில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. இக்கதை பொதுவாக அனைவரும் அறிந்த கதை. இருப்பினும் இவ்வித சம்ஹாரங்களின் (அழித்தல்களின்) பொருள் என்ன என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அசுரர்கள் அழிந்தார்கள் என்பது கதையாகின்றது. உண்மையாக அழிய வேண்டியது அசுரத் தன்மையாகும். ஓர் மனிதனை குற்றம் காணாமல் அவனின் தன்மைகளைக் குற்றம் காணுதல் வேண்டும். இதனை அனைவரும் பின்பற்றுவது நலமாகும். அடுத்தவரிடம் குற்றம் காண்பது எளிதாக இருக்கின்றது. நமக்குள் இருக்கும் குற்றத்தைக் காண்பது கடினமாக இருக்கின்றது. ஏனெனில் நமது குற்றத்தை நமது அகங்காரம் மறைத்து விடுகின்றது. நமக்குள் இருக்கும் குற்றத்தை அறிய வேண்டுமெனில் முதலில் அகங்காரத்தை நீக்க வேண்டும். இதற்கு அனைவரும் கடினமான முயற்சிகள் எடுக்க வேண்டும். எளிதில் எதுவும் கிடைப்பதில்லை. துரித உணவுகளுக்கும் சிறிது நேரம் வேண்டுமல்லவா? நல்ல உணவு வேண்டுமென்றால் இன்னும் அதிக காலம் காத்திருத்தல் வேண்டுமல்லவா? இத்தகைய நிலையில் நாம் நலம் பெற வேண்டுமென்றால் படிப்படியாக முயற்சித்து முன்னேறுதல் வேண்டும். இத்தகைய அசுரர்கள் அழியும் கதைகளைக் கேட்பது வெறும் மன மகிழ்ச்சிக்கு மட்டும் அல்ல அக்கதைகளைக் கேட்டு தீய குணங்களை அகற்றுதல் வேண்டும். அனைவரும் இறைவனால் கொல்லப்பட மாட்டார்கள் விடுதலைப்பட மாட்டார்கள் என்பதை மனதில் அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய கதையில் நடைபெறும் உண்மையான நிலையை அறிந்து இறைவனின் துணையோடு நாம் நமது தீய குணங்களை அழித்தல் வேண்டும். இதனை மனதில் வைத்துச் செயல்பட்டால் இறைவனின் அருளும் ஆசிகளும் முழுமையாகக் கிடைக்கும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #71

3-10-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஞானிகள் சினம் (கோபம்) கொள்வது சரியா?

உறுதியாகச் சரி இல்லை என்கின்ற போதிலும் காரண சினம் என்று ஒன்று உண்டு இந்தக் காரண சினம் தவறாகாது. மேலும் காரண சினத்திற்குக் காரணமாக இருப்பவர் செய்வது மாபெரும் தவறாகும். காரண சினம் என்பது ஓர் காரியத்திற்காகச் சினம் கொள்வது என்கிற போதிலும் இது சினம் போல் ஓர் தோற்றமாகும். காரணத்திற்காகச் சினம் கொள்வது போல் உள்ளது என்றும் கூறுவார்கள். இருப்பினும் அச்சினத்திற்குக் காரணமானவர் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் செல்லும் வழி கடினமாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #70

10-8-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீகப் பாதையில் செல்வோர் தெய்வீகக் காரியங்களில் பெருமளவில் நாணப்படுவது (வெட்கப்படுவது) சரியாகாது. தெய்வ நாமங்களைக் கூறுவதற்கோ பாடுவதற்கோ தயக்கம் காண்பது நலம் தருவது அல்ல. ஏனெனில் தெய்வ நாமங்களைச் சொல்ல சொல்ல நாம் கேட்பது மட்டுமல்ல மற்ற ஜீவராசிகளும் கேட்டுக் கொண்டு அவர்களுக்கும் முக்திக்கு வழி பிறக்கிறது. அன்பர்கள் பலரும் முணுமுணுத்தவாரே மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஜெபித்துக் கொண்டு இருக்கின்றனர். இவ்விதம் செய்வதை விட மனசுக்குள் (மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் ஜெபிப்பது­­) செய்வதே நலம் தரும். ஒன்று உரக்க (சத்தமாக) இல்லையேல் மௌனமாகச் செய்ய வேண்டும் என்பதே விதியாகும். இதற்குக் காரணம் உண்டு. ஆன்மீகத்தில் எவ்வாறு ரூபம் விட்டு அரூபம் செல்கின்றோமோ அவ்விதமே ஓசை (சத்தம்) விட்டு நிசப்தத்திற்கும் (மௌனம்) செல்லுதல் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. இதற்கு இரண்டு பொருள்கள் (அர்த்தங்கள்) உண்டு. நமக்குள் வெறும் நிசப்தம் இருக்கும் போது வெளியில் எவ்விதம் ஓசை இருந்த போதிலும் காதில் விழாத நிலை ஏற்படும். இதுவே தியானத்தின் மிகையானது (எல்லை) ஆகும். எந்தக் காலத்திலும் எந்த ஸ்தலத்திலும் எந்த நிலையிலும் தியானம் செய்திடவோ ஜெபிக்கவோ கூச்சம் தேவையற்றது ஆகும். இறைவனின் நாமங்கள் என்பது இக்காலத் தந்தியைப் போல நமக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்கிறது. எவ்வளவு தியானம் செய்தாலும் சிறிது நேரமாவது தெய்வ நாமங்களை மனதிலாவது கூற வேண்டும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #69

13-7-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

சுத்தம் அசுத்தம் என்பது ஆன்மீகத்தில் உண்டா? சுத்தம் தேவையா? ஏனெனில் பல சித்தர்கள் அழுக்கிலும் அமர்ந்து இருக்கின்றனரே அவர் நிலையில் சுத்தம் தேவையில்லையா?

முதலில் ஓர் பழஞ்சொல் ஒன்று உண்டு முதன்மையில் தூய்மை பின்பே இறையருள் என்போம். சித்தர்கள் அமர்ந்தாற்போல் பல வருடங்கள் நீ அமர்ந்திருந்தால் உடல் தூய்மை பார்க்க வேண்டாம். ஏனெனில் அசுத்தம் என்பது இல்லாமல் போகும். இருப்பினும் பல தலங்களில் (இடங்கள்) அலைந்து வருபவர்களுக்கு உடல் சுத்தம் உறுதியாக வேண்டும். இதற்கும் மேலாக இறைவனுக்குப் படைக்கும் காலத்தில் கை சுத்தம் வஸ்துக்கள் சுத்தம் (நைவேத்யம் வைக்கும் பொருள்கள்) என்பதெல்லாம் வேண்டும். சித்தர்கள் நிலை வேறு ஏனெனில் அவர்கள் தன்னை மறந்த நிலையில் உள்ளார்கள். உடலுக்கு என்ன நேர்ந்திட்ட போதிலும் சிறிதும் அசைய மாட்டார்கள். உன்னால் அவ்வாறு இருக்க முடியாது அல்லவா? உடலுக்குச் சிறிது ஏதேனும் வந்தவுடன் வைத்தியரை நோக்கிச் செல்வீர்கள். உடலை மறந்தோருக்கு அசுத்தம் இல்லை என்கின்ற விதி உண்டு. மற்றவர்கள் அனைவரும் குறிப்பாக ஆன்மீகப் பாதையில் செல்கின்றவர்களுக்கு உறுதியாக சுத்தம் அசுத்தம் என்பதை அதிகமாகவே பார்த்தல் வேண்டும். குறிப்பாக வாக்கு சுத்தம் தன் வாக்குகளைப் (தான் கூறும் வார்த்தைகளைப்) பொய்யாக்குவதைத் தவிர்த்தல் வேண்டும். சிறு சிறு சம்பவங்களில் இருந்து தப்பிக்கச் சிறு சிறு பொய்கள் கூறுவதும் கூடாது. அவ்வாறு கூறினால் வாக்கு சுத்தமற்றதாகும். மேலும் இயன்ற அளவிற்குச் சுத்தமான பண்டங்களை உண்ணுதல் வேண்டும். ஏனெனில் ஆன்மீகப் பாதையில் செல்லச் செல்ல ஜீரண உறுப்புகளின் சக்தி குறையும். நலம் தரும் உணவை மட்டுமே ஜீரண உறுப்புகள் ஏற்றுக்கொள்ளும் என்கின்ற விதியும் உண்டு. இதனை மனதில் வைத்துச் சுத்தமான எரிவு தன்மை (அதிக அளவு எரிக்க/ஜீரணிக்க வேண்டியில்லாத) அளிக்கா உணவுகளை உண்ணக் கற்றுக் கொள்ள வேண்டும். நாக்கினை அடக்கா விட்டால் ஆன்மீக வளர்ச்சி மிகவும் குறைவாகவே காணப்படும். நாக்கு என்பது சொல் ருசி இரண்டையும் குறிக்கும். இதனை மனதில் வைக்க வேண்டும். மற்றவர்கள் சுத்தமாக இருக்கின்றார்களா இல்லையா என சிந்திக்க வேண்டாம். மற்றவர்களுக்கு வேறுபல தகுதிகள் உள்ளன அதை நீ கண்டாயா? இல்லையே. இதனால் மற்றவர்களின் நிலை எண்ணாமல் நம் நிலை என்ன நாம் எப்படி முன்னேற வேண்டும் என்று மனதில் வைத்துச் சான்றோர்கள் (ஞானம் பெற்ற பெரியவர்கள்) மகான்கள் கூறியதை மனதில் வைத்து முன்னேறுவாயாக.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #68

16-6-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பிராப்த கர்மம் என்பதற்கு தீர்வு கிடையாது என்று கூறுகின்றனரே ஒரு இடத்தில் அத்தகைய கர்ம நிலைகளை அனுபவிக்கத் தயங்கி மற்றொரு இடத்திற்கு ஏன் கடல் கடந்து சென்ற போதிலும் அங்கும் அதன் பாக்கியை அனுபவித்துத் தீரவேண்டும் என்ற விதி உண்டா?

உறுதியாக அவ்விதம் உண்டு. உதாரணமாக ஒரு அலுவலகத்தில் பெரும் கடினங்கள் காணும் நேரத்தில் இந்தக் கர்ம நிலையை மாற்றிடும் வகையில் மற்றொரு பணிக்குப் போகும் காலத்தில் அங்கும் அத்தகைய கொடுமைகள் நேரிடும் என்பது விதியாகும். ஏனெனில் அனுபவிக்க வேண்டியதை முழுமையாக அனுபவித்துத் தீர்த்தல் வேண்டும் இதற்குப் பிராயச் சித்தங்கள் (பரிகாரம்) இல்லை என்றும் அறிதல் வேண்டும். கடினமான தவம் ஜெபம் என்கின்ற வழிகளால் அனைத்தையும் தாங்கும் மனப்பக்குவம் ஏற்படுகின்றது என்பதுதான் உண்மை. துறவிகளும் முனிவர்களும் இத்தகைய மனவலிமை உடையவர்கள் ஆவர். இதனால் எதையும் தாங்கிக்கொள்ளும் தன்மைகளையும் வளர்த்துள்ளனர். கலியுகம்தனில் மனிதர்கள் அவ்விதம் இல்லை என்பதை நன்கு உணர்தல் வேண்டும். கலியுகத்தில் இருப்போர் அக்கால முனிவர் ரிஷிகள் போன்ற மனவலிமை உடல் வலிமை அடைவது மிகவும் கடினம். சதா தெய்வ நாமம் உச்சரித்துக் கொண்டேயிருக்கும் காலத்தில், மனவலிமை ஓரளவிற்கு ஏற்பட்டு எதையும் தாங்கும் தன்மையும் வளர்கின்றது. ஓர் இடம் விட்டு மற்றோர் இடம் ஓடிவிட்டால் நாம் தப்பித்துவிட்டோம் என்ற எண்ணம் தவறாகும். ஏனெனில் பிராப்த கர்மம் என்பது உன்னுடையது அது உன்னைத் தொடர்ந்தே வரும் என்று நன்கு உணர்தல் வேண்டும். சக்தியைக் கொடு வலிமையைக் கொடு எதையும் தாங்கும் மனதைக் கொடு என எப்போதும் இறைவனை வேண்டி இறை நாமத்தை விடாது உச்சரித்து வந்தால் அனைத்தும் சீராகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #67

20-5-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இறையருள் பெரிதாக இருந்தால் மட்டுமே லெளகீக (உலகம் சார்ந்த) எண்ணங்கள் நீங்கும் என்றிருக்க, லெளகீக எண்ணங்கள் நீங்க வேண்டுமென்றால் இறையருள் வேண்டும் என்றும் கூற, இது முரண்பாடாக உள்ளதே ஏன்?

எங்கு சுற்றிய போதிலும் கடைசியில் சரணாகதி என்னும் நிலையை நாம் நாட வேண்டி உள்ளது. உறுதியாக இறையருள் வேண்டுமென்றால் படிப்படியாக லெளகீகம்தனிலிருந்து விலகுதல் வேண்டும் என்பதுதான் விதி. ஏனெனில் தூய்மையான ஓர் பொருளுடன் சேர வேண்டும் என எண்ணம் கொண்டால் அத்தூய்மையான நிலையை நாமும் அடைதல் வேண்டும் என்பது விதியாகும். படிப்படியாக இந்த லெளகீக நிலையை விட வேண்டுமானால் இறையருள் வேண்டும் என்பது உறுதி. இதற்காக நாம் நித்யம் (எப்பொழுதும்) இறை சக்தியை நோக்கி வேண்டுதல் வேண்டும். அவன் பாதம் பணிய அவனருள் வேண்டும் என்பதை உணர்ந்தும் நாம் சிக்கிக் கொண்டோமே என சிறிது வருத்தம் கண்டு வேண்டிட அவன் கருணையில் படிப்படியாக தூய்மை அடைவோம். இதில் சிறு குழப்பமும் இல்லை. ஏனெனில் பல மகான்களும் ஞானிகளும் குடும்பத்திலிருந்து வந்தவர்களே ஆவார்கள். மனதில் உறுதி வேண்டும் உறுதியற்ற மனநிலையில் இறைவனை நாடினால் இறைவன் உறுதியாகத் தென்பட மாட்டான். முக்கியமாக வைராக்யம் பெரிதாக இருத்தல் வேண்டும். இறைவனின்றி வேறு யாரும் எனக்கு வேண்டாம் என்கின்ற பெரும் மனநிலை வர வேண்டும். இது ஒரு நாளில் வரக்கூடியது அல்ல படிப்படியாக வரக்கூடியது. மனதில் உறுதியுடன் நாடுங்கள் சொர்க்கம் அடையாவிட்டாலும் இறைவனை உறுதியாக அடையலாம்.

பாடல் #724

பாடல் #724: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

விளக்கம்:

உயிர்களின் உடல் அழிந்துவிட்டால் அதனுள்ளிருக்கும் உயிர் நீங்கிவிடும். உறுதியான உடல் வலிமை சீர்குலைந்தால் ஞானத்தை அடைய உடலை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியாது. உடலை உறுதியாக வைத்து வளர்க்கும் வழியை இறையருளால் அறிந்து கொண்டு அதன் மூலம் உடலை வளர்த்து அதனுள்ளிருக்கும் உயிரையும் வளர்த்தேன்.

கருத்து: இறைவனை அடைவதற்கு கருவியாக பயன்படும் உடலையும் உயிரையும் உறுதியாக நீண்ட காலம் அழியாமல் வளர்த்து இறைவனை அடையலாம்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #66

22-4-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பயம் எங்கிருந்து வருகின்றது? அதனை எவ்விதம் எதிர்ப்பது?

பொதுவாக நமக்குத் தெரியாத காரியங்களைக் கண்டு பயம் காண்கின்றோம் என்பதே உண்மை. இதற்கு உதாரணமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டக் கற்றுக் கொள்ளும் காலங்களில் செல்லும் வழியில் ஓர் கல்லைக் கண்டாலும் பயம் கொண்டு இறங்கி விடுகின்றோம் அல்லது விழுந்து விடுகின்றோம் அடிபடுகின்றோம். ஆனால் பழகிய பின்பு இவ்வளவு தானா என்கிற உணர்வு வந்துவிடப் பயம் போகின்றது. இவ்விதமே குழந்தைகள் நடக்க முயற்சிக்கும் காலங்களில் முதலில் பல முறைகள் விழுந்து எழுந்து பின்பு ஓட ஆரம்பிக்கின்றது. அப்படி ஓட ஆரம்பித்தபின் அது நடக்க முயற்சித்த காலத்தை மறந்து விடுகின்றது தான் விழுந்ததை எல்லாம் மறந்து விடுகின்றது அல்லவா? இவ்விதம் அறிந்த பின்பு பயம் விலகும் என்பதே உண்மையாகின்றது. அதனால் எதைக்கண்டு பயப்படுகின்றோமோ அக்காரியத்தை மீண்டும் மீண்டும் செய்தால் பயம் நீங்கும். சில நபர்கள் பயத்தால் ஓடி ஒளிகின்றனர். பயத்தால் பல காரியங்கள் செய்யாமல் இருக்கின்றனர். அவ்விதம் இருந்தால் நஷ்டப்படுவது நீங்களே என்பதை உணர வேண்டும். எது அச்சத்தைத் தருகின்றதோ அதனை மீண்டும் மீண்டும் செய்யுங்கள் பயத்தை வெல்லுங்கள். மேலும் எதிலும் நிதானம் வேண்டும். அதற்காக யாம் கூறிவிட்டோம் என்று நாகத்தைக் கையில் பிடிக்க முயற்சித்தல் கூடாது. சாதாரண நிலைகளில் பொதுவாக இளைஞர்களுக்கு நேரிடும் சில சம்பவங்கள், தேர்வுகள் (பரிட்சை) கணக்கு தொழிலுக்குச் செல்லும் போது நேர்முகத் தேர்ச்சிகள் இவையாவும் பயத்தைத் தரும். இதற்காக நாம் தொழிலுக்குச் செல்லவில்லை வீட்டிலேயே இருந்துவிடுகின்றோம் என்கின்ற கருத்து தவறானதாகும். இவையாவும் நீக்கிக்கொண்டால் உங்கள் வாழ்வில் பயம் என்பது காணாமல் சென்று விடும். ஏனெனில் மற்ற ஒருவரால் நம்மிடமிருந்து பறிக்க இயன்றதில் உச்ச பட்சத்தில் இருப்பது நமது உயிர் மட்டுமே அந்த உயிரை இறைவனிடம் அர்ப்பணித்து விட்டால் பின்பு பயம் ஏது? இதை மனதில் வைத்து செயல்படுவீர்களாக.