மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #61

14-10-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

வைராக்கியம் என்று கூறினால் அது முழுமையாக இருக்க வேண்டும். எதார்த்தமான காரியங்களில் பெரும் வைராக்கியத்தைக் காணும் மக்கள் தெய்வ காரியங்களில் விட்டுவிடுவது ஏன் என எமக்கு குழப்பம் ஏற்படுகிறது. வைராக்கியம் என்பது மேல் நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பது விதியாகும். முழுமையாக இறைவனை அடைதல் வேண்டும் என்ற வைராக்கியம் மனதில் இருந்தால் மற்றவைகள் அனைத்தும் தானாக வீழ்ந்து விடும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்றால் இறைவனை அடைவது கடினமாகும். படிப்படியாகத் தேவையற்றவையை விலக்குதல் வேண்டுமே ஓழிய திடீரென்று நான் இதனை விட்டு விடுகின்றேன் இதனை என்னிடமிருந்து நீக்குகின்றேன் இதனை தவிர்க்கின்றேன் (கெட்டபழக்கம், தீயகுணம்) என வாக்குகள் அளித்து விட்டு பின்பு அவ்வாக்கை திருப்பி எடுத்துக் கொண்டு பழைய நிலைக்குத் திரும்பும் நிலையைக் கண்டால் அது வெட்கத்துக்குரிய ஓர் நிலையாகும். இதனை உறுதியாக தவிர்த்தல் வேண்டும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #60

16-9-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஈசனைப் பல பெயர்கள் கூறி அழைக்கின்றனர். இவ்வாறு நாராயணனைப் பல பெயர்கள் கூறி அழைப்பதும் உண்டு. பலரும் எமது தெய்வம்தான் பெரிது மற்றவை சிறிது எனக் கூறுவதும் உண்டு. இது ரூபங்களை (உருவங்களை) வணங்கும் காலம் வரை தவறில்லை. அதனையும் தாண்டிச் செல்ல வேண்டுமானால் இத்தகைய ரூபங்களை மறத்தல் வேண்டும். குறிப்பாக ஜெகதீஸ்வரனே சிறப்பானவர் ஜம்புகேஸ்வரனே சிறப்பானவர் என்பதெல்லாம் ஆரம்ப காலங்களில் கூறுவது சரியாக இருக்கும். ஆனால் மேன்மை வேண்டும் ஞானம் வேண்டும் என்றால் பெயர்களை மறந்து ரூபமற்ற நிலையைத் தாண்டிச் செல்ல வேண்டும். எங்கும் அதே ஈஸ்வரன் அதே நாராயணன் என்று எண்ணிட வேண்டும். பின்பு எல்லாம் ஒன்றே என்ற நிலை பெற்றபின் சிவனும் விஷ்ணுவும் வேறில்லை என்கின்ற நிலை உணர்வீர். அதன் பின்பு அனைத்து நிலைகளிலும் மேன்மை அடைவீர்கள். அரியும் சிவனும் ஒன்றே அறியாதோர் வாயில் மண்ணே என்று இக்காலத்தில் ஓர் பழமொழி உண்டு. ஆனால் யாம் அரியும் சிவனும் ஒன்றே என்று அறியாதோர் அறிவு மண்ணே என்று கூறுவோம். இதனை உணர்ந்து நாமங்களிட்டு வழிபடுவதைக் குறைத்து வருவீர்களாக. எக்காலத்திலும் ஜம்புகேஸ்வரர் சுந்தரேஸ்வரரை விடச் சிறப்பானவராகவோ குறைந்தவராகவோ ஆக மாட்டார் என்பதை உணர வேண்டும். எல்லாம் ஒன்றே என்பதை மனதில் வைத்து வழிபடுவதே சிறப்பானதாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #59

23-7-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆடி மாதம் நல்ல காரியங்கள் ஏதும் செய்யக்கூடாது என்று கூறுகின்றார்களே அது ஏன்?

ஆடி மாதம் என்பது தீய மாதம் அல்ல என்பதை அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக மனிதர்கள் தங்கள் காரியங்கள் செய்வதை நிறுத்தி தேவிகளின் காரியங்கள் செய்தல் வேண்டும் என்பதே அதற்குரிய விளக்கம். உதாரணமாக மனிதர்கள் சுபகாரியங்களில் ஈடுபடாமல் தெய்வ காரியங்களில் குறிப்பாக தேவியின் காரியங்களை நடத்தி அவளை மகிழச் செய்திட அனைத்தும் பெருகும். இதற்காகவே ஆடிப் பெருக்கு என்கிற ஒரு விழாவும் இருக்கிறது. இந்நிலையில் ஆடி ஆனந்தம் தரும் ஆண்டாருக்கும் நல் நிலையில் ஆனந்தம் கொடுக்கும். மனிதர்கள் அவர்களை நன்றாக பூஜித்திட வேண்டும் என்பதே விளக்கமாகும். ஆண்டார் என்று இங்கே யாம் எப்பிறவியினரையும் சார்ந்து கூறவில்லை. அகிலத்தை (உலகத்தை) ஆண்டாள் என்பதே இதற்குப் பொருளாகும். இவ்விதம் இருக்க அனைவரும் மூன்று நாட்களில் குறிப்பாக ஆதித்ய நாளிலும் (ஞாயிற்றுக் கிழமை) மங்களவன் நாளிலும் (செவ்வாய்க் கிழமை) வெள்ளிக் கிழமையன்றும் மறக்காமல் தேவிதனைக் கண்டு வணங்கி ஏதாவது தோத்திர வழிபாடு (ஜெப வழிபாடு) செய்திட நலன்கள் உண்டாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #58

26-6-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இடுக்கன் வருங்கால் நகுக எனும் பழமொழியின்படி கடின காலங்களில் எவ்வாறு சிரிப்பு வரும்?

நல்லவைகள் நடக்கும்போதும் கடினங்கள் நடக்கும்போதும் நாம் சமமான மனநிலையில் இருத்தல் வேண்டும். நல்லவை நடக்கும்போது பெரிய அளவில் சிரிக்காமல் இருக்கப் பழகிக்கொண்டால் கடினம் வரும் காலத்தில் சிரிப்பும் தோன்றும். ஏனெனில் அனைத்தும் அவன் திருவிளையாடல் என அறிந்துகொண்டால் அந்தத் திருவிளையாடலின் அருமையை உணர்ந்து சிரிப்பே தோன்றும் கோபமும் குறையும் வேறொன்றும் தோனாது. ஒன்றை மனதில் நன்றாக நினைத்திட சென்ற ஜென்ம வினைகள் எல்லாம் நம்மைப் பற்றிக்கொள்வதன் விளைவால் இந்த ஜென்மத்தில் அந்த வினைகளைத் தீர்க்கும் வாய்ப்பும் இறைவன் அளித்திட அவ்வாய்ப்புகளில் துக்கமும் கலந்து நிற்கும் என்பதை உணர்தல் வேண்டும். இதில் தீமையைக் காணாமல் நல்ல வாய்ப்பு என எண்ணிக்கொண்டால் துக்கம் வரும் நிலை இல்லை. இருப்பினும் மனித இயல்பு ஒன்று உண்டு. நன்றாக இருக்கும் காலங்களில் சிரிப்பையும் தீயது என்று எண்ணும்போது துயரமும் அதிகமாக இருக்கும் என்கின்ற நிலையைக் காணுகின்றோம். இதற்கு முழுமையான காரணம் சரணாகதி இல்லாத நிலை. அனைவரும் இறைவனிடம் சரணாகதி அடையவேண்டும். முழுமையான சரணாகதி அடைந்தால் என்றும் ஆனந்தமே துயரம் என்னும் நிலைக்கு இடமில்லை. இதற்கெனவே பெரியோர்கள் சிவனே எனக் கிட என்று கூறுவதும் உண்டு. அனைத்தையும் அவன் பொறுப்பில் விட்டுவிட நமக்குத் துயரமும் இல்லை பெரும் ஆனந்தமும் இல்லை அனைத்தும் சமம் ஆகின்றன. இவ்விதம் அனைத்தையும் தாண்டி சாட்சியாக நின்று காணும் நிலை அடைதல் வேண்டும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #57

30-5-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆண்டவன் இவ்வுலகை படைத்தான் நன்றாக
ஆண்டவன் இவ்வுலகை படைத்தான் அவன் கருணையால்
ஆண்டவன் படைத்த மனிதருக்கும் கருணை என்பதும் குறையாமே
கருணைதனை அனைவரும் வளர்த்தல் வேண்டும்
கருணைதனை காட்டிடக் கருணையும் திரும்பக் கிடைக்கும்
கருணையற்ற உலகம் வெறுமையாகக் காண்பீர்கள்
கருணையே இறைவன் வாக்காகுமே
இக்கால நிலைகளைச் சிந்தித்துப் பார்த்தால் செயல்கள் யாவும் கருணையற்ற செயல்களாக இருக்கிறது
வளர்ப்பீர்கள் நன்றாக கருணைகளை ஜீவராசிகள் அனைத்தும் பெற்றிட வேண்டும் என்று
வளர்ப்பீர்கள் நன்றாக கருணைகளை சர்வதேசங்கள் பெற்றிட வேண்டும் என்று
வளர்ப்பீர்கள் நன்றாக கருணையுடன் பிரார்த்திக்கும் தன்மையை
நன்றாகத் தலை சாய்த்தும் நன்றாகக் கேட்டும் நன்றாகச் செயல்பட்டும் நன்றாகத் தலை வணங்கியும்
இறை சேவையில் ஈடுபட இறைவனிடம் சரணாகதி அடைந்தால் அனைத்தும் சுபிட்சம் (நல்லதாகும்).

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #56

5-4-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இறைவனுக்குப் படைப்பது (நைவேத்யம்) அவசியமா?

இறைவன் நம்முடன் வாழ்கின்றான் என்கிற எண்ணம் கொண்டால் நாம் உட்கொள்ளும் அனைத்தையும் இறைவனுக்குப் படைத்து வந்தால் விசேஷமாக படையல் தேவையற்றது. அந்த நிலை அடையும் வரை இறைவன் வேறு நாம் வேறு என்கின்ற எண்ணம் இருக்கும் வரை இறைவனுக்கு நாம் யாதேனும் படைத்து நம் ஆன்மீகப் பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் முன்பு கூறியவாறு அனைத்தும் இறைவனுடையதே. அவன் நமக்குத் தருவதை நாம் மீண்டும் திருப்பிக் கொடுக்கின்றோம். ரூபம் சிறிது மாறுகின்றது என்பது ஒன்றே வித்தியாசமாகின்றது (நமக்குக் கிடைக்கும் அனைத்தும் இறைவன் கொடுப்பது நாம் அதிலிருந்து சிறிதளவே திருப்பிக் கொடுக்கின்றோம்). இறைவனுக்கு நாம் பொதுவாகப் படைக்க வேண்டியது தூய்மையான உள்ளம் ஆகும். அந்த தூய்மையான உள்ளம் இருக்கும் நிலை அடைவது சிறிது சிரமம் (கஷ்டம்) என்கின்ற போதிலும் முயற்சிகள் செய்து தூய்மையான நிலையை உணர்ந்து அந்த உள்ளத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பதே சிறந்த படைப்பாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #55

9-3-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நமது கண்கள் அனைத்தையும் காண்கின்றன ஆனால் தன்னை காண்பதில்லை. அதுபோலவே மற்றவர்களின் நலன்களை முதலில் எண்ணிய பின்பே நமது நலன்களை நாட வேண்டும். ஆனால் இந்தக் கலியுகத்தில் அவ்வாறு நடப்பதில்லை. அனைவரும் சுயநலத்தில் மூழ்கி அதிலிருந்து வெளிவர முடியாமல் இருக்கின்றனர். ஏன் இப்படி என்று எண்ணிப் பார்த்தால் மற்றவர் போல் நாமும் இருந்தால் மட்டுமே வாழ முடியும் என்று நினைக்கின்றனர். இந்த மனப்பான்மையை சிறிது மாற்றி சுயநலத்திலிருந்து சிறிது நீங்கி மற்றவர்களின் நலத்தையும் எண்ணுதல் வேண்டும். இதன் முதல்படியாக சிறிதேனும் அன்னதானம் அளித்திடல் வேண்டும். பசியாற்றும் காரியமானது மிகவும் நல்ல கர்மம் ஆகும். இந்த அன்னதானத்தைப் படிப்படியாகப் பெரிதாக்கிக் கொண்டு மற்ற நல்ல காரியங்களையும் எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி செய்தல் வேண்டும். பொதுவாக நல்ல காரியங்கள் செய்யும் போது வேறு விதமான எண்ணங்கள் இல்லை என்றாலும் நாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணம் மேலோங்குகின்றது இதனைத் தவிர்த்தல் வேண்டும். இறைவன் அளிக்கின்றான் நமது என ஒன்றுமில்லை என்பதை மனதில் வைக்க வேண்டும். இதனை மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். ஏனெனில் பலரின் மனதில் நாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணம் மேலோங்குவதை கண்கின்றோம் இதனை உறுதியாக நீக்க வேண்டும்.

தியானங்கள் மற்ற பிரார்த்தனைகள் செய்யாதவர்களும் இக்காலத்தில் ஆரம்பியுங்கள். ஏனெனில் உடலுக்கு உணவுபோல ஆத்மாவிற்கு சில நல்ல பிரார்த்தனைகளும் மந்திரங்களும் உணவாகின்றது என்பதை மறக்காதீர்கள்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #54

9-2-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்

ஆன்மீகம் என்பது ஆத்மாவை மிகையாக (அதிகமாக) நாடுவது என்று பொருளாகும். இவ்விதம் இருக்க பலரும் இக்காலத்தில் அமைதி கிடைக்காத நிலையில் ஆண்டவனை நாடுகின்றனர். ஆண்டவன் உடனடியாக நிவர்த்தி (கேட்டதைக் கொடுப்பது) செய்தல் வேண்டும் என்ற எண்ணத்தோடும் அங்கு செல்கின்றனர். ஆனால் அது அவ்விதம் நடக்காது. ஏனெனில் கர்மவிதிகள் கர்ம பாக்கிகளைத் தீர்த்தல் வேண்டும் என்கின்ற ஓர் கணக்கு உண்டு. திடீர் மாற்றங்களை எதிர் பார்ப்பதும் ஓர் குற்றமாகின்றது. மேலும் ஆன்மீகப் பாதையில் செல்லும் முன்னதாக தெய்வ நிலைகளை அடைவதில் நாட்டம் (ஆர்வம்) காணும் முன்னதாக நல்ல மனிதனாக மாறுதல் வேண்டும். நல்ல மனிதன் என்றால் என்ன எனப் பலரும் எண்ணுவர். நல்ல மனிதன் என்பவன் முதலில் மற்றவர்களை எண்ணுபவனாக இருக்க வேண்டும். அதாவது சுயநலமில்லாமல் மற்றவர்களின் சௌகர்யங்களைப் (சுகங்களைப்) பார்ப்பதே முதலில் இருக்க வேண்டும். நம் நாட்டில் இது இல்லை என்பதற்குப் பெரும் ஆதாரமாக நம் சாலைகள் இருக்கின்றது. மற்றவர்களுக்கு வழி விடுவது என்றால் அது பலகீனம் என எண்ணுவார்கள் போல் இருக்கிறது. இந்த இடத்தில் முதலில் மற்றவர்களின் சௌகர்யங்களை எண்ணுங்கள்.

இரண்டாவதாக அகங்காரத்தை நீக்குதல் வேண்டும். நாம் பெரியவன் என்பதில்லை வல்லவனுக்கு வல்லவன் உண்டு என்பதை மறக்காமல் செயல்படுங்கள். பாசம் காட்டுவது பலகீனம் என்று பலர் எண்ணுகின்றனர் இந்த எண்ணத்தையும் நீக்குதல் வேண்டும். இறைவன் நம் தந்தை என்றால் நாம் அனைவரும் அவர் மக்களே என்கின்ற எண்ணத்தை வளர்த்திடல் வேண்டும். இல்லை என்றால் ஆன்மீகப் பாதையில் செல்வதில் அர்த்தமில்லை. எதிர்பார்ப்புகள் என்பதையும் மனதிலிருந்து அகற்ற வேண்டும். ஏனெனில் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் தேவையில்லாத கோபம் உண்டாகும். கோபத்தினால் வரும் நஷ்டங்கள் மற்றவர்களுக்கு அல்ல உங்களுக்கே என்பதை மனதில் நன்றாக நினைத்து செயல்படுதல் வேண்டும். ஏனெனில் கோபம் வரும் நேரத்தில் எங்கு எந்த இடத்தில் யாரிடம் கோபம் காட்டுகின்றோம் என்பதை நாம் எண்ணுவதில்லை சீறிப் பாய்கின்றோம். விளைவாக சிறு கர்மாக்களையும் சேர்த்துக் கொள்கின்றோம். ஆதலால் தான் ஆன்மீகப் பாதைக்கு செல்லுவது நன்றாய் இருப்பினும் அதில் காலடி வைக்கும் முன்னதாக உன்னையே நீ திருத்திக்கொள் மனிதா என்று பல மகான்கள் கூறி உள்ளனர். இதனைக் கடைபிடித்து நல்வழியில் நல்மாற்றங்கள் ஏற்படுத்துவீர்களாக. மற்றவர்களிடம் நல்ல குணங்களைப் பார்த்தால் நம்மிடம் அது இருக்கின்றதா என எண்ணிப்பார்க்க வேண்டும் இல்லை என்றால் அதை சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் தீய குணங்களைக் கண்டால் நம்மிடம் உள்ளதா என்று பார்த்து இருந்தால் அதை நீக்க வேண்டும். இதையே முதல் படியாக எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் ஆன்மீகப் பாதையில் சிறு அளவிற்குச் சென்று அங்கேயே நல்மரத்தின் கீழ் நித்திரை காணுதல் வேண்டும் என்கின்ற நிலை உண்டாகும் (ஆன்மீகப் பாதையில் செல்லும் போது மேல் நிலைக்குச் செல்லாமல் சில காலங்கள் அதே இடத்தில் இருப்பது). சிறிது சிந்தியுங்கள் மாற்றங்கள் நீங்களாக ஏற்படுத்த வேண்டும். இதற்கும் இறைவனுடைய உதவியை நாடுதல் வேண்டும் இருப்பினும் முயற்சிகள் உங்களுடையதாக இருக்க வேண்டும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #53

13-1-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

போகி பொங்கல் மாட்டுப் பொங்கல் ஆகிய பண்டிகைகளின் விளக்கங்கள் என்ன?

போகிப் பண்டிகை அன்று பழமையான பொருட்களையும் உடைந்ததையும் வீதியில் போட்டு எரித்து விடுகின்றனர். புதிய பொருட்களை அகம் தனில் (வீட்டின் உள்ளே) வைத்து விடுகின்றனர். இதன் தாத்பரியம் (அர்த்தம்) என்ன என்று சிறிது சிந்தித்தல் வேண்டும். இந்நாளில் நம்மிடம் இருக்கும் தீயவைகளையும் தீய பழக்கங்களையும் உறுதியாக எரித்து விட வேண்டும். இது பொருட்களைக் குறிப்பதல்ல என உணர்தல் வேண்டும். குறிப்பாக நம்மிடமிருக்கும் தீய பழக்கங்கள் தீய குணங்கள் தீய தன்மைகள் ஆகியவற்றை எரித்துவிட்டு அனைத்தும் நல்வழியில் மாறுதல் வேண்டும் என்பதை உணர்த்திடவே இந்நாள் கொண்டாடப்படுகின்றது. அடுத்து வருகின்ற பொங்கல் மாட்டுப் பொங்கல் என்பதையெல்லாம் கொண்டாடுகின்றீர்கள். நியாயமாகக் கண்டால் சிறு அளவிற்கே விவசாயம் என்பது தற்போது உண்டு. இதற்குப் பல காரணங்கள் கண்டு கொள்ளலாம். ஆயினும் முக்கியமான காரணம் நமது சுயநலத்திற்காக இயற்கை வளங்களை அழிக்கும் விருப்பம். பொங்கல் பண்டிகை பூமி விளைவதற்காக அதற்கு உணவளிக்கும் பூமாதேவிக்கும் பூமியில் உணவை வழங்கும் அன்னபூரணி தேவிக்கும் நன்றி செலுத்தக்கூடிய நாளாகும். இதனைக் குறித்திடவே புதிய பானையில் பொங்கல் வைத்து ஆனந்தம் காண்கின்றனர். இக்காரணத்தை வைத்து விசேஷமாக உணவுகள் படைத்தும் தெய்வத்தை சாந்திப்படுத்துகின்றனர் நன்றி செலுத்துகின்றனர். அடுத்ததாக மாட்டுப் பொங்கல் என்கின்ற ஒன்று உண்டு. இந்நாளில் இதற்குப் பெரிய அர்த்தம் எதுவும் இல்லை என்றே கூறுவோம். ஏனெனில் இக்காலத்தில் நிலத்தை உழுவதற்கு வாகனங்கள் மற்றும் நவீன கருவிகள் உபயோகப்படுத்துகின்றனர். இருப்பினும் விவசாயத்தில் அறுவடை செய்தவை அனைத்தையும் மாடுகள் பூட்டிய வண்டியில் சந்தைக்கு எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில் அம்மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வழியாக அவைகளுக்கும் நல்காரியங்கள் அன்று நடைபெறுகிறது. மேலும் பால் சுரந்து தரும் பசுக்களுக்கும் நன்றி செலுத்தும் நாளாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகமொத்தம் கணக்கிட்டுப் பார்த்தால் அன்ன பூரணியை நாம் தலை வணங்கி நன்றி செலுத்தும் நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும். போகியில் தீயவற்றை நீக்கி நல் மார்க்கங்களை நாடி பின்பு இக்காலத்தில் இதுவரை கிடைத்த அனைத்திற்கும் நன்றி செலுத்தவே இம்மூன்று நாட்கள் கொண்டாடப்படுகின்றன. இதனை உணராமல் ஆனந்தக் கோஷங்களில் (பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல் என்று பண்டிகை அன்று கூச்சலிடுவது) ஈடுபடுவது அர்த்தமற்றது.

பாடல் #730

பாடல் #730: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாந்
தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படுஞ்
சத்தியஞ் சொன்னோம் சதாநந்தி ஆணையே.

விளக்கம்:

இறைவன் குடியிருக்கும் உடலாகிய கோயிலில் இடதும் வலதுமாக இருக்கும் இடகலை பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றை அடக்கியாண்டு சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் செல்லும் பயிற்சியை சாதித்த சாதகனுக்கு மூச்சுக்காற்றின் சுழுமுனை பயணம் புல்லாங்குழலில் புகுந்த காற்றின் இசை போல கேட்கவும் சுழுமுனையின் உச்சியிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தின் தித்திப்பில் இறைவனின் பேரின்பக் பெருங்கூத்தும் சகஸ்ரதள ஜோதியில் சிவமாகிய ஒளியும் வெளிப்படும் என்பதை குருவிற்கெல்லாம் மஹாகுருவான சதாசிவமூர்த்தியின் மேல் ஆணை.

கருத்து: அகயோகப் பயிற்சியை சாதித்த சாதகர்களுக்கு இசையோடு நடனமும் ஆடும் இறைவனின் பேரின்பப் பெருங்கூத்துத் தரிசனம் கிடைத்து அவர்களுக்குள்ளிருந்தே ஒளியுருவமாக இறைவனும் வெளிப்படுவார்.