பாடல் #1330: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
கண்டுகொ ழுந்தனி நாயகி தன்னையு
மொண்டுகொ ழுமுக வசியம தாயிடும்
பண்டுகொ ழும்பர மாய பரஞ்சுடர்
நின்று கொளுநிலை பேறுடை யாளே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கணடுகொ ழுநதனி நாயகி தனனையு
மொணடுகொ ழுமுக வசியம தாயிடும
பணடுகொ ழுமபர மாய பரஞசுடர
நினறு கொளுநிலை பெறுடை யாளெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கண்டு கொழும் தனி நாயகி தன்னையும்
ஒண்டு கொழும் உக வசியம் அது ஆயிடும்
பண்டு கொழும் பரம் ஆய பரம் சுடர்
நின்று கொளும் நிலை பேறு உடையாளே.
பதப்பொருள்:
கண்டு (சாதகர்கள் தமக்குள் தரிசிக்கும்) கொழும் (தலைவனாகிய இறைவனோடு சேர்ந்தும்) தனி (நவாக்கிரி சக்கரத்தில் தனி) நாயகி (நாயகியாகவும் இருக்கின்ற) தன்னையும் (இறைவியையும்)
ஒண்டு (ஒன்றாகச் சேர்த்து) கொழும் (தலைவனாகிய இறைவனையும்) உக (தியானிக்கும் அளவுக்கு ஏற்ப) வசியம் (இறைசக்தியை தனக்குள் கிரகித்துக் கொள்ளும்) அது (கருவியாகவே நவாக்கிரி சக்கரம்) ஆயிடும் (ஆகி விடும்)
பண்டு (ஆதியிலிருந்தே) கொழும் (தலைவனாகவும்) பரம் (பரம்பொருள்) ஆய (ஆகவும் இருக்கின்ற இறைவனையும்) பரம் (பராசக்தியின்) சுடர் (பேரொளியான இறைவியையும்)
நின்று (சாதகர்கள் தமக்குள் மானசீகமாக வடித்துக் கொண்ட நவாக்கிரி சக்கரத்தில் நிலை நிறுத்திக்) கொளும் (கொள்கின்ற) நிலை (உயர்வான நிலையைப் பெறுகின்ற) பேறு (மிகப் பெரிய வரத்தை) உடையாளே (இறைவியானவள் கொடுத்து அருளுவாள்).
விளக்கம்:
பாடல் #1329 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள் தரிசிக்கும் இறைவனோடு சேர்ந்தும் நவாக்கிரி சக்கரத்தில் தனி நாயகியாகவும் இருக்கின்ற இறைவியையும் இறைவனையும் ஒன்றாகச் சேர்த்து தியானிக்கும் அளவுக்கு ஏற்ப இறைசக்தியை தனக்குள் கிரகித்துக் கொள்ளும் கருவியாக நவாக்கிரி சக்கரம் ஆகி விடும். அதன் பிறகு ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாகவும் பரம்பொருளாகவும் இருக்கின்ற இறைவனையும் பராசக்தியின் பேரொளியான இறைவியையும் சாதகர்கள் தமக்குள் மானசீகமாக வடித்துக் கொண்ட நவாக்கிரி சக்கரத்தில் நிலை நிறுத்திக் கொள்கின்ற உயர்வான நிலையைப் பெறுகின்ற மிகப் பெரிய வரத்தை இறைவியானவள் கொடுத்து அருளுவாள்.









