பாடல் #1780

பாடல் #1780: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

பச்சிமத் திக்கிலே வைச்ச வாசாரியன்
நிச்சலு மென்னை நினையென்ற வப்பொரு
ளுச்சிக்குக் கீழது வுண்ணாவுக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பசசிமத திககிலெ வைசச வாசாரியன
நிசசலு மெனனை நினையெனற வபபொரு
ளுசசிககுக கீழது வுணணாவுககு மெலது
வைசச பதமிது வாயதிற வாதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பச்சிமம் திக்கிலே வைத்த ஆசாரியன்
நிச்சலும் என்னை நினை என்ற அப் பொருள்
உச்சிக்கு கீழ் அது உள் நாவுக்கு மேல் அது
வைத்த பதம் இது வாய் திறவாதே.

பதப்பொருள்:

பச்சிமம் (மேல்) திக்கிலே (திசையிலே) வைத்த (இறையருளால் வைக்கப் பட்ட) ஆசாரியன் (குருவாக வழிகாட்டுகின்ற ஜோதியானது)
நிச்சலும் (தினமும்) என்னை (தன்னை) நினை (நினைத்துக் கொண்டே இரு) என்ற (என்று அருளிய) அப் (அந்த) பொருள் (பரம்பொருளின் வடிவமானது)
உச்சிக்கு (உச்சந் தலைக்கு) கீழ் (கீழ்) அது (உள்ள இடத்திலும்) உள் (வாய்க்கு உள்ளே இருக்கின்ற) நாவுக்கு (அண்ணாக்குக்கு) மேல் (மேலே) அது (உள்ள இடத்திலும் உள்ள சகஸ்ரதளத்தில்)
வைத்த (இறையருளால் வைக்கப் பட்ட) பதம் (திருவடிகளாக) இது (இருக்கின்றது) வாய் (வாய்) திறவாதே (திறந்து பேசாமல் மனதை அடக்கி அந்த திருவடிகளின் மேலேயே எண்ணத்தை வைத்து இருக்க வேண்டும்).

விளக்கம்:

மேல் திசையிலே இறையருளால் வைக்கப் பட்ட குருவாக வழிகாட்டுகின்ற ஜோதியானது தினமும் தன்னை நினைத்துக் கொண்டே இரு என்று அருளிய அந்த பரம்பொருளின் வடிவமானது உச்சந் தலைக்கு கீழ் உள்ள இடத்திலும், வாய்க்கு உள்ளே இருக்கின்ற அண்ணாக்குக்கு மேலே உள்ள இடத்திலும் உள்ள சகஸ்ரதளத்தில் இறையருளால் வைக்கப் பட்ட திருவடிகளாக இருக்கின்றது. வாய் திறந்து பேசாமல் மனதை அடக்கி அந்த திருவடிகளின் மேலேயே எண்ணத்தை வைத்து இருக்க வேண்டும்.

பாடல் #1779

பாடல் #1779: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

உயிராஞ் சரீரமு மொண் பொருளான
வியவார் பரமும் பின்மேவு பிராணன்
செயலார் சிவமுஞ் சிற்சத்தி யாதிக்கே
யுயலார் குருபர னுய்யக்கொண் டானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உயிராஞ சரீரமு மொண பொருளான
வியவார பரமும பினமெவு பிராணன
செயலார சிவமுஞ சிறசததி யாதிககெ
யுயலார குருபர னுயயககொண டானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உயிர் ஆம் சரீரமும் ஒண் பொருள் ஆன
வியவு ஆர் பரமும் பின் மேவும் பிராணன்
செயல் ஆர் சிவமும் சித் சத்தி ஆதிக்கே
உயல் ஆர் குரு பரன் உய்ய கொண்டானே.

பதப்பொருள்:

உயிர் (உயிரோடு) ஆம் (இருக்கின்ற) சரீரமும் (உடலும்) ஒண் (அதனோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற) பொருள் (பொருள்) ஆன (ஆகிய ஆன்மாவும்)
வியவு (அனைத்திலும் உயர்ந்து) ஆர் (முழுவதுமாக இருக்கின்ற) பரமும் (பரம்பொருளும்) பின் (உடல் எடுத்த பிறகு) மேவும் (வந்து சேர்ந்து கொள்ளுகின்ற) பிராணன் (மூச்சுக்காற்றும் ஆகிய இவை அனைத்தின்)
செயல் (செயல்களிலும்) ஆர் (முழுவதுமாக இருக்கின்ற) சிவமும் (இறைவனும்) சித் (ஞானமாக இருக்கின்ற) சத்தி (இறைவியுமே) ஆதிக்கே (ஆதியிலிருந்தே செயல் பட வைக்கின்றார்கள்)
உயல் (என்பதை முழுவதுமாக உணர்ந்த அடியவர்களிடம்) ஆர் (முழுமையாக இருக்கின்ற) குரு (குருவாகிய) பரன் (பரம்பொருள்) உய்ய (அவர்களை முக்தி நிலைக்கு ஏற்றிச் செல்வதற்கு) கொண்டானே (ஆட்கொண்டு அருளுவார்).

விளக்கம்:

உயிரோடு இருக்கின்ற உடலும், அதனோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற பொருளாகிய ஆன்மாவும், அனைத்திலும் உயர்ந்து முழுவதுமாக இருக்கின்ற பரம்பொருளும், உடல் எடுத்த பிறகு வந்து சேர்ந்து கொள்ளுகின்ற மூச்சுக்காற்றும், ஆகிய இவை அனைத்தின் செயல்களிலும் முழுவதுமாக இருக்கின்ற இறைவனும் ஞானமாக இருக்கின்ற இறைவியுமே ஆதியிலிருந்தே செயல் பட வைக்கின்றார்கள் என்பதை முழுவதுமாக உணர்ந்த அடியவர்களிடம் முழுமையாக இருக்கின்ற குருவாகிய பரம்பொருள் அவர்களை முக்தி நிலைக்கு ஏற்றிச் செல்வதற்கு ஆட்கொண்டு அருளுவார்.

பாடல் #1778

பாடல் #1778: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

உடல்பொரு ளாவி யுதகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக் கைவைத்து
நொடியிலடி வைத்து நுண்ணுணர் வாக்கிக்
கடிய பிறப்பறக் காட்டின னந்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உடலபொரு ளாவி யுதகததாற கொணடு
படரவினை பறறறப பாரததுக கைவைதது
நொடியிலடி வைதது நுணணுணர வாககிக
கடிய பிறபபறக காடடின னநதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர் வினை பற்று அற பார்த்து கை வைத்து
நொடியில் அடி வைத்து நுண் உணர்வு ஆக்கி
கடிய பிறப்பு அற காட்டினன் நந்தியே.

பதப்பொருள்:

உடல் (உடல்) பொருள் (உடலுக்குள் பொருளாக மறைந்து இருக்கின்ற இறைவன்) ஆவி (ஆன்மா ஆகிய மூன்றும் சேர்ந்து) உதகத்தால் (தாயின் கர்ப்பப் பைக்குள் இருக்கின்ற தண்ணீரில் பிறவி) கொண்டு (எடுத்துக் கொண்டு வரும் படி செய்து)
படர் (அந்த பிறவியில் தமது ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போது அதனால் சேர்ந்து கொள்ளுகின்ற) வினை (பல விதமான வினைகளால்) பற்று (உருவாகுகின்ற பற்றுக்கள்) அற (நீங்கும் படி) பார்த்து (தமது திருக்கண்ணால் பார்த்து [நயன தீட்சை]) கை (தமது திருக்கரங்களை) வைத்து (வைத்து அபயம் கொடுத்து [ஸ்பரிச தீட்சை])
நொடியில் (ஒரு கண நேரத்தில்) அடி (தமது திருவடிகளை) வைத்து (வைத்து [திருவடி தீட்சை]) நுண் (அதன் மூலம் ஞானமாகிய நுண்ணியமான) உணர்வு (உணர்வுகளை [ஞான தீட்சை]) ஆக்கி (ஆக்கிக் கொடுத்து)
கடிய (துன்பங்களால் நீண்டு கொண்டே இருக்கின்ற) பிறப்பு (பிறவி சுழற்சியிலிருந்து) அற (நீங்குவதற்கான) காட்டினன் (வழியை காட்டி அருளினான்) நந்தியே (உள்ளுக்குள் குருநாதனாக இருக்கின்ற இறைனவன்).

விளக்கம்:

உடல், அதற்குள் பொருளாக மறைந்து இருக்கின்ற இறைவன், ஆன்மா ஆகிய மூன்றும் சேர்ந்து தாயின் கர்ப்பப் பைக்குள் இருக்கின்ற தண்ணீரில் பிறவி எடுத்துக் கொண்டு வரும் படி செய்து, அந்த பிறவியில் தமது ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போது அதனால் சேர்ந்து கொள்ளுகின்ற பல விதமான வினைகளால் உருவாகுகின்ற பற்றுக்கள் நீங்கும் படி தமது திருக்கண்ணால் பார்த்து (நயன தீட்சை), தமது திருக்கரங்களை வைத்து அபயம் கொடுத்து (ஸ்பரிச தீட்சை), ஒரு கண நேரத்தில் தமது திருவடிகளை வைத்து (திருவடி தீட்சை), அதன் மூலம் ஞானமாகிய நுண்ணியமான உணர்வுகளை (ஞான தீட்சை) ஆக்கிக் கொடுத்து, துன்பங்களால் நீண்டு கொண்டே இருக்கின்ற பிறவி சுழற்சியிலிருந்து நீங்குவதற்கான வழியை காட்டி அருளினான் உள்ளுக்குள் குருநாதனாக இருக்கின்ற இறைவன்.

பாடல் #1777

பாடல் #1777: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென்
றாவி யெழுமள வன்றே யுடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித் தடக்கிற் பரகெதி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெவி யெழுகினற செஞசுட ரூடுசென
றாவி யெழுமள வனறெ யுடலுற
மெவப படுவதும விடடு நிகழவதும
பாவித தடககிற பரகெதி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேவி எழுகின்ற செம் சுடர் ஊடு சென்று
ஆவி எழும் அளவு அன்றே உடல் உற
மேவ படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கில் பர கெதி தானே.

பதப்பொருள்:

மேவி (அசையா சக்திக்குள் கலந்து இருக்கின்ற ஆசைகளாகிய அசையும் சக்தியும் சேர்ந்து) எழுகின்ற (எழுகின்ற) செம் (சிகப்பான) சுடர் (சுடராகிய பேரொளியை) ஊடு (ஊடுருவிச்) சென்று (சென்று)
ஆவி (ஆசைகளை அனுபவிப்பதற்கு ஏற்ற வலிமை பெற்ற ஆன்மாவாக பலவாறாக பிரிந்து) எழும் (எழுந்து) அளவு (அதனதன் ஆசைகளின் அளவுக்கு ஏற்ப) அன்றே (அப்போதே) உடல் (அவற்றுக்கு ஏற்ற உடலை) உற (தமது அருளால் உருவாக்கி கொடுத்து)
மேவ (அதற்குள் பொருந்தி இருந்து) படுவதும் (செயல் படுவதும்) விட்டு (அந்த ஆன்மாக்களை விட்டு அனைத்திற்கும் மேலாக இருந்து) நிகழ்வதும் (தமது பேரருளால் அனைத்தையும் இயக்குவதையும் செய்கின்ற பரம்பொருளாகிய இறைவனின்)
பாவித்து (தன்மைகளை தமக்குள்ளே உணர்ந்து தாமும் அவராகவே பாவனை செய்து) அடக்கில் (தமது ஐந்து புலன்களை அடக்கி எண்ணங்கள் அற்ற நிலையை அடைந்தால்) பர (அனைத்திற்கும் மேலான) கெதி (இறை நிலையை) தானே (தாமும் அடைய முடியும்).

விளக்கம்:

அசையா சக்திக்குள் கலந்து இருக்கின்ற ஆசைகளாகிய அசையும் சக்தியும் சேர்ந்து எழுகின்ற சிகப்பான சுடராகிய பேரொளியை ஊடுருவிச் சென்று, ஆசைகளை அனுபவிப்பதற்கு ஏற்ற வலிமை பெற்ற ஆன்மாவாக பலவாறாக பிரிந்து எழுந்து, அதனதன் ஆசைகளின் அளவுக்கு ஏற்ப அப்போதே அவற்றுக்கு ஏற்ற உடலை தமது அருளால் உருவாக்கி கொடுத்து, அதற்குள் பொருந்தி இருந்து செயல் படுவதும், அந்த ஆன்மாக்களை விட்டு அனைத்திற்கும் மேலாக இருந்து தமது பேரருளால் அனைத்தையும் இயக்குவதையும் செய்கின்ற பரம்பொருளாகிய இறைவனின் தன்மைகளை தமக்குள்ளே உணர்ந்து தாமும் அவராகவே பாவனை செய்து, தமது ஐந்து புலன்களை அடக்கி எண்ணங்கள் அற்ற நிலையை அடைந்தால், அனைத்திற்கும் மேலான இறை நிலையை தாமும் அடைய முடியும்.

கருத்து:

இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருந்த ஆன்மாவானது தமது ஆசைகளால் பிறவி எடுப்பதும், அதனதன் ஆசைகளுக்கு ஏற்ற வலிமை பெற்ற உடலும் உயிருமாக பிறப்பதும், வாழ்வில் பல வித செயல்களை புரிந்து ஆசைகளை தீர்த்துக் கொள்வதும், பின்பு இறைவனை தமக்குள் உணர்வதும், அதன் பயனால் ஆசைகளற்ற நிலைக்கு செல்வதும், எண்ணங்கள் அற்ற அந்த நிலையில் தாமே சிவமாக ஆகி விடுவதும், ஆகிய இவை அனைத்தும் சிவ இலிங்க வடிவமாக இருக்கின்ற இறைவனின் பேரருளால் ஆகும்.

பாடல் #1776

பாடல் #1776: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

மலர்ந் தயன்மாலு முருத்திர மகேசன்
பலந்தெழு மைமுகன் பரவிந்து நாதம்
நலந்தரு சத்தி சிவன் வடிவாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மலரந தயனமாலு முருததிர மகெசன
பலநதெழு மைமுகன பரவிநது நாதம
நலநதரு சததி சிவன வடிவாகிப
பலநதரு லிஙகம பராநநதி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மலர்ந்த அயன் மாலும் உருத்திரன் மகேசன்
பலந்து எழும் ஐம் முகன் பர விந்து நாதம்
நலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகி
பலம் தரும் இலிங்கம் பரா நந்தி ஆமே.

பதப்பொருள்:

மலர்ந்த (திருமாலின் தொப்புள் கொடியின் தாமரை மலரிலிருந்து வெளிப்படுகின்ற) அயன் (பிரம்மாவும்) மாலும் (திருமாலும்) உருத்திரன் (உருத்திரனும்) மகேசன் (மகேஸ்வரனும்)
பலந்து (அருளை வழங்குவதற்கு தம்மை பலவிதமாக பிரிந்து) எழும் (எழுகின்ற) ஐம் (ஐந்து) முகன் (முகங்களைக் கொண்ட சதாசிவனும்) பர (பரம்பொருளாகிய) விந்து (வெளிச்சத்திலும்) நாதம் (சத்தத்திலும் இருந்தே வெளிப்படுகின்றனர்)
நலம் (அந்த வெளிச்சமும் சத்தமும் அனைத்து நன்மைகளையும்) தரும் (தருகின்ற) சத்தி (வெளிச்ச வடிவாகிய இறைவி மற்றும்) சிவன் (சத்த வடிவாகிய இறைவனின்) வடிவு (வடிவங்களாக) ஆகி (ஆகி)
பலம் (இந்த ஐந்து தெய்வங்களுக்கும் சக்தியை) தரும் (தருகின்ற) இலிங்கம் (சிவ இலிங்க வடிவமாகவும்) பரா (அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகவும்) நந்தி (குருநாதனாகவும் இருந்து அருளுகின்ற) ஆமே (ஆதிப் பரம்பொருளாகவும் இருக்கின்றது).

விளக்கம்:

அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகிய சதாசிவமூர்த்தி எனும் பரம்பொருளே சிவ இலிங்க வடிவமாக இருந்து தனது பேரருளால் வெளிச்சத்தின் வடிவமாகிய இறைவி, சத்தத்தின் வடிவமாகிய இறைவன், அவர்களுக்கு கீழே ஐந்து விதமான தொழில்களை புரிகின்ற பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களாகவும் இருந்து அனைவருக்கும் சக்தி கொடுத்து வழி நடத்துகின்ற குருநாதனாகவும் இருக்கின்றான்.

பாடல் #1775

பாடல் #1775: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

ஒன்றெனக் கண்டே னெம்மீச னொருவனை
நன்றென் றடியிணை நானவனைத் தொழ
வென்றைம் புலனு மிகக்கிடந் தின்புற
வன்றென் றருள்செய்யு மாதிப் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒனறெனக கணடெ னெமமீச னொருவனை
நனறென றடியிணை நானவனைத தொழ
வெனறைம புலனு மிகககிடந தினபுற
வனறென றருளசெயயு மாதிப பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒன்று என கண்டேன் எம் ஈசன் ஒருவனை
நன்று என்று அடி இணை நான் அவனை தொழ
வென்று ஐம் புலனும் மிக கிடந்து இன்பு உற
அன்று என்று அருள் செய்யும் ஆதி பிரானே.

பதப்பொருள்:

ஒன்று (ஐந்து விதமான பூதங்களால் உருவாகிய அசையும் பொருள் அசையா பொருள் ஆகிய அனைத்தும் ஒன்றே) என (என்று) கண்டேன் (கண்டு தரிசித்து) எம் (எம்) ஈசன் (பரம்பொருளாகிய இறைவன்) ஒருவனை (ஒருவனே அவை அனைத்துமாக இருப்பதை உணர்ந்து கொண்டோம்)
நன்று (ஆகவே அவை அனைத்தும் நன்மையானது) என்று (என்றும்) அடி (இறைவனின் திருவடிகளுக்கு) இணை (சரிசமமானது என்றும்) நான் (யாம் அறிந்து கொண்டு) அவனை (அவனை ஐந்து பூதங்களால் ஆகிய அனைத்திலும் கண்டு) தொழ (வணங்கினோம்)
வென்று (அதன் பயனால் உலக ஆசைகளிலிருந்து வெற்றி பெற்ற) ஐம் (எமது ஐந்து) புலனும் (புலன்களும்) மிக (இறைவனுடனே மிகவும்) கிடந்து (சேர்ந்து கிடந்து) இன்பு (பேரின்பத்தில்) உற (திளைத்திருக்கும் படி)
அன்று (அப்பொழுதில் இருந்து) என்று (என்றும்) அருள் (அருள்) செய்யும் (செய்கின்றான்) ஆதி (ஆதி மூல) பிரானே (தலைவனாகிய இறைவன்).

விளக்கம்:

ஐந்து விதமான பூதங்களால் உருவாகிய அசையும் பொருள் அசையா பொருள் ஆகிய அனைத்தும் ஒன்றே என்று கண்டு தரிசித்து எம் பரம்பொருளாகிய இறைவன் ஒருவனே அவை அனைத்துமாக இருப்பதை உணர்ந்து கொண்டோம். ஆகவே அவை அனைத்தும் நன்மையானது என்றும் இறைவனின் திருவடிகளுக்கு சரிசமமானது என்றும் யாம் அறிந்து கொண்டு, அவனை ஐந்து பூதங்களால் ஆகிய அனைத்திலும் கண்டு வணங்கினோம். அதன் பயனால் உலக ஆசைகளிலிருந்து வெற்றி பெற்ற எமது ஐந்து புலன்களும் இறைவனுடனே மிகவும் சேர்ந்து கிடந்து பேரின்பத்தில் திளைத்திருக்கும் படி அப்பொழுதில் இருந்து என்றும் அருள் செய்கின்றான் ஆதி மூல தலைவனாகிய இறைவன்.

பாடல் #1774

பாடல் #1774: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

வரைத்து வலஞ்செய்யு மாறுமிங் கொன்றுண்டு
நிரைத்து வருங்கங்கை நீர்மல ரேந்தி
யுரைத்த வனாம முணர வல்லார்க்குப்
புரைத் தெங்கும்போகான் புரிசடை யோனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வரைதது வலஞசெயயு மாறுமிங கொனறுணடு
நிரைதது வருஙகஙகை நீரமல ரெநதி
யுரைதத வனாம முணர வலலாரககுப
புரைத தெஙகுமபொகான புரிசடை யொனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு
நிரைத்து வரும் கங்கை நீர் மலர் ஏந்தி
உரைத்த அவன் நாமம் உணர வல்லார்க்கு
புரைத்து எங்கும் போகான் புரி சடையோனே.

பதப்பொருள்:

வரைத்து (அளவில்லாத இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து) வலம் (வழிபாடு) செய்யும் (செய்கின்ற) ஆறு (முறை) இங்கு (தாம் இருக்கின்ற இடத்திலேயே) ஒன்று (ஒன்று) உண்டு (இருக்கின்றது)
நிரைத்து (எப்போதும் எப்போதும் அசைந்து ஓடி) வரும் (வருகின்ற) கங்கை (கங்கையாக பாவித்த) நீர் (தூய்மையான நீரையும்) மலர் (வாசனை மிக்க தூய்மையான மலரையும்) ஏந்தி (கைகளில் ஏந்திக் கொண்டு)
உரைத்த (மனதிற்குள் ஜெபிக்கின்ற) அவன் (இறைவனின்) நாமம் (திருநாமத்தின் மூலம்) உணர (இறைவனை தமக்குள்ளேயே உணர) வல்லார்க்கு (முடிந்தவர்களுக்கு)
புரைத்து (பொய்யாக) எங்கும் (எங்கும்) போகான் (போகாமல் மாறாத சத்தியமாக எப்போதும் உடன் இருப்பான்) புரி (கயிறு போல் திரிந்த) சடையோனே (சடை முடியை தலையில் அணிந்து கொண்டு இருக்கின்ற அருள் வடிவான இறைவன்).

விளக்கம்:

பாடல் #1773 இல் உள்ளபடி பஞ்ச பூதங்களால் ஆகிய அனைத்துமாகவும் அவை அனைத்தையும் தாண்டியும் அளவில்லாமல் இருக்கின்ற இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து தாம் இருக்கின்ற இடத்திலேயே வழிபாடு செய்கின்ற முறை ஒன்று இருக்கின்றது. எப்போதும் அசைந்து ஓடி வருகின்ற கங்கையாக பாவித்த தூய்மையான நீரையும், வாசனை மிக்க தூய்மையான மலரையும் கைகளில் ஏந்திக் கொண்டு, மனதிற்குள் ஜெபிக்கின்ற இறைவனின் திருநாமத்தின் மூலம் இறைவனை தமக்குள்ளேயே உணர முடிந்தவர்களுக்கு, எங்கும் பொய்த்து போகாமல் மாறாத சத்தியமாக எப்போதும் உடன் இருப்பான் கயிறு போல் திரிந்த சடை முடியை தலையில் அணிந்து கொண்டு இருக்கின்ற அருள் வடிவான இறைவன்.

பாடல் #1773

பாடல் #1773: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

குரைக்கின்ற வாறிற் குவலைய நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செய்யு மாறறி யேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குரைககினற வாறிற குவலைய நீரும
பரககினற காறறும பயிலகினற தீயும
நிரைககினற வாறிவை நீணடகன றானை
வரைதது வலஞசெயயு மாறறி யெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குரைக்கின்ற ஆறில் குவலைய நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற ஆறு இவை நீண்டு அகன்ற ஆனை
வரைத்து வலம் செய்யும் ஆறு அறியேனே.

பதப்பொருள்:

குரைக்கின்ற (சத்தம் இருக்கின்ற ஆகாயத்தின்) ஆறில் (வழியில்) குவலைய (உலகமும் [நிலம்]) நீரும் (உலகத்தில் இருக்கின்ற நீரும்)
பரக்கின்ற (அலைந்து திரிகின்ற) காற்றும் (காற்றும்) பயில்கின்ற (பொருளின் தன்மைக்கு ஏற்ப பழகுகின்ற) தீயும் (நெருப்பும்)
நிரைக்கின்ற (கூட்டமாக இருக்கின்ற) ஆறு (வழியில்) இவை (இந்த ஐந்து பூதங்களாகிய) நீண்டு (அனைத்திலும் நீண்டு விரிந்தும்) அகன்ற (இவை அனைத்தையும் தாண்டியும்) ஆனை (இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை)
வரைத்து (ஒரு எல்லைக்குள் வரையறுத்து) வலம் (அவனை வணங்குவதை) செய்யும் (செய்கின்ற) ஆறு (வழியை) அறியேனே (யாம் அறியாமல் இருக்கின்றோம்).

விளக்கம்:

சத்தம் இருக்கின்ற ஆகாயத்தின் வழியில் உலகமும் [நிலம்], உலகத்தில் இருக்கின்ற நீரும், அலைந்து திரிகின்ற காற்றும், பொருளின் தன்மைக்கு ஏற்ப பழகுகின்ற நெருப்பும், இப்படி ஐந்து பூதங்களின் கூட்டமாக இருக்கின்ற வழியில் அனைத்திலும் நீண்டு விரிந்தும், இவை அனைத்தையும் தாண்டியும் இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து அவனை வணங்குவதற்கான வழியை யாம் அறியாமல் இருக்கின்றோம்.

பாடல் #1772

பாடல் #1772: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவமுமாஞ் சிவஞ் சத்தியாகுஞ்
சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லைச்
சத்தி தானென்றுஞ் சமைந்துரு வாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததி சிவனறன விளையாடடுத தாரணி
சததி சிவமுமாஞ சிவஞ சததியாகுஞ
சததி சிவமனறித தாபரம வெறிலலைச
சததி தானெனறுஞ சமைநதுரு வாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி சிவன் தன் விளையாட்டு தாரணி
சத்தி சிவமும் ஆம் சிவம் சத்தி ஆகும்
சத்தி சிவம் அன்றி தாபரம் வேறு இல்லை
சத்தி தான் ஒன்றும் சமைந்து உரு ஆகுமே.

பதப்பொருள்:

சத்தி (இறைவியும்) சிவன் (இறைவனும்) தன் (தங்கள்) விளையாட்டு (திருவிளையாட்டால்) தாரணி (அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாக்குகின்றார்கள்)
சத்தி (இறைவியானவள்) சிவமும் (இறைவனுமாகவும்) ஆம் (இருக்கின்றாள்) சிவம் (இறைவனாவன்) சத்தி (இறைவியாகவும்) ஆகும் (இருக்கின்றான்)
சத்தி (இறைவியும்) சிவம் (இறைவனும்) அன்றி (இல்லாமல்) தாபரம் (இந்த உலகத்தில் ஆதாரமாக பற்றிக் கொள்ள வேண்டி பொருள்) வேறு (வேறு) இல்லை (எதுவும் இல்லை)
சத்தி (இறைவி) தான் (தானே) ஒன்றும் (இறைவனோடு சேர்ந்து) சமைந்து (கலந்து) உரு (அனைத்து விதமான வடிவங்களாகவும்) ஆகுமே (ஆகுகின்றாள்).

விளக்கம்:

இறைவியும் இறைவனும் தங்கள் திருவிளையாட்டால் அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாக்குகின்றார்கள். இறைவியானவள் இறைவனுமாகவும் இருக்கின்றாள், இறைவனாவன் இறைவியாகவும் இருக்கின்றான். இறைவியும் இறைவனும் இல்லாமல் இந்த உலகத்தில் ஆதாரமாக பற்றிக் கொள்ள வேண்டி பொருள் வேறு எதுவும் இல்லை. இறைவி தானே இறைவனோடு சேர்ந்து கலந்து அனைத்து விதமான வடிவங்களாகவும் ஆகுகின்றாள். இதை பரிபூரணமாக உணர்ந்து கொள்வதே ஞான இலிங்கத்தின் தத்துவமாகும்.

பாடல் #1771

பாடல் #1771: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

சத்தி சிவன் விளையாட்டா முயிராக்கி
யொத்த விருமாயா கூட்டத் திடைபூட்டிச்
சுத்த மதாகுந் துரியம் பிறிவித்துச்
சித்த மகிழ்ந்து சிவமகமாக் குமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததி சிவன விளையாடடா முயிராககி
யொதத விருமாயா கூடடத திடைபூடடிச
சுதத மதாகுந துரியம பிறிவிததுச
சிதத மகிழநது சிவமகமாக குமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி சிவன் விளையாட்டு ஆம் உயிர் ஆக்கி
ஒத்த இரு மாயா கூட்டத்து இடை பூட்டி
சுத்தம் அது ஆகும் துரியம் பிறிவித்து
சித்தம் மகிழ்ந்து சிவம் அகம் ஆக்குமே.

பதப்பொருள்:

சத்தி (இறைவியும்) சிவன் (இறைவனும்) விளையாட்டு (ஆடுகின்ற திருவிளையாட்டின்) ஆம் (மூலம்) உயிர் (உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப ஐந்து பூதங்களால் உடலை) ஆக்கி (உண்டாக்கி அதனோடு உயிரை சேர்த்து)
ஒத்த (ஒன்றாக இருக்கின்ற) இரு (சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டு விதமான) மாயா (மாயைகளின்) கூட்டத்து (கூட்டத்திற்கு) இடை (நடுவில்) பூட்டி (பந்த பாசங்களால் பூட்டி அவர்களின் வினைகளை அனுபவிக்க வைக்கின்றார்கள்)
சுத்தம் (தம்மை அடைய விரும்பி முயற்சி செய்கின்ற உயிர்களின் வினைகளை சிறிது சிறிதாக நீக்கி சுத்தம்) அது (அந்த உயிர்) ஆகும் (ஆகும் போது) துரியம் (அது அனுபவிக்க வேண்டிய அனைத்து அவத்தைகளையும்) பிறிவித்து (அதனிடமிருந்து மாற்றி நீக்கி விட்டு)
சித்தம் (அந்த உயிரின் சித்தத்தை) மகிழ்ந்து (பேரின்பத்தில் மகிழ்ந்து இருக்கும் படி செய்து) சிவம் (சிவமாகவே) அகம் (அந்த உயிரின் உள்ளத்தை) ஆக்குமே (ஞான இலிங்கமாக்கி விடுவார்கள்).

விளக்கம்:

இறைவியும் இறைவனும் தாங்கள் ஆடுகின்ற திருவிளையாட்டின் மூலம் உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப ஐந்து பூதங்களால் உடலை உண்டாக்கி அதனோடு உயிரை சேர்த்து, ஒன்றாக இருக்கின்ற சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டு விதமான மாயைகளின் கூட்டத்திற்கு நடுவில் பந்த பாசங்களால் அந்த உயிர்களை பூட்டி அவர்களின் வினைகளை அனுபவிக்க வைக்கின்றார்கள். அந்த உயிர்களில் தம்மை அடைய விரும்பி முயற்சி செய்கின்ற உயிர்களின் வினைகளை சிறிது சிறிதாக நீக்கி சுத்தம் செய்து, அது அனுபவிக்க வேண்டிய அனைத்து அவத்தைகளையும் அதனிடமிருந்து மாற்றி நீக்கி விட்டு, அந்த உயிரின் சித்தத்தை பேரின்பத்தில் மகிழ்ந்து இருக்கும் படி செய்து, சிவமாகவே அந்த உயிரின் உள்ளத்தை ஞான இலிங்கமாக்கி விடுவார்கள்.