பாடல் #1771

பாடல் #1771: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

சத்தி சிவன் விளையாட்டா முயிராக்கி
யொத்த விருமாயா கூட்டத் திடைபூட்டிச்
சுத்த மதாகுந் துரியம் பிறிவித்துச்
சித்த மகிழ்ந்து சிவமகமாக் குமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததி சிவன விளையாடடா முயிராககி
யொதத விருமாயா கூடடத திடைபூடடிச
சுதத மதாகுந துரியம பிறிவிததுச
சிதத மகிழநது சிவமகமாக குமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி சிவன் விளையாட்டு ஆம் உயிர் ஆக்கி
ஒத்த இரு மாயா கூட்டத்து இடை பூட்டி
சுத்தம் அது ஆகும் துரியம் பிறிவித்து
சித்தம் மகிழ்ந்து சிவம் அகம் ஆக்குமே.

பதப்பொருள்:

சத்தி (இறைவியும்) சிவன் (இறைவனும்) விளையாட்டு (ஆடுகின்ற திருவிளையாட்டின்) ஆம் (மூலம்) உயிர் (உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப ஐந்து பூதங்களால் உடலை) ஆக்கி (உண்டாக்கி அதனோடு உயிரை சேர்த்து)
ஒத்த (ஒன்றாக இருக்கின்ற) இரு (சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டு விதமான) மாயா (மாயைகளின்) கூட்டத்து (கூட்டத்திற்கு) இடை (நடுவில்) பூட்டி (பந்த பாசங்களால் பூட்டி அவர்களின் வினைகளை அனுபவிக்க வைக்கின்றார்கள்)
சுத்தம் (தம்மை அடைய விரும்பி முயற்சி செய்கின்ற உயிர்களின் வினைகளை சிறிது சிறிதாக நீக்கி சுத்தம்) அது (அந்த உயிர்) ஆகும் (ஆகும் போது) துரியம் (அது அனுபவிக்க வேண்டிய அனைத்து அவத்தைகளையும்) பிறிவித்து (அதனிடமிருந்து மாற்றி நீக்கி விட்டு)
சித்தம் (அந்த உயிரின் சித்தத்தை) மகிழ்ந்து (பேரின்பத்தில் மகிழ்ந்து இருக்கும் படி செய்து) சிவம் (சிவமாகவே) அகம் (அந்த உயிரின் உள்ளத்தை) ஆக்குமே (ஞான இலிங்கமாக்கி விடுவார்கள்).

விளக்கம்:

இறைவியும் இறைவனும் தாங்கள் ஆடுகின்ற திருவிளையாட்டின் மூலம் உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப ஐந்து பூதங்களால் உடலை உண்டாக்கி அதனோடு உயிரை சேர்த்து, ஒன்றாக இருக்கின்ற சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டு விதமான மாயைகளின் கூட்டத்திற்கு நடுவில் பந்த பாசங்களால் அந்த உயிர்களை பூட்டி அவர்களின் வினைகளை அனுபவிக்க வைக்கின்றார்கள். அந்த உயிர்களில் தம்மை அடைய விரும்பி முயற்சி செய்கின்ற உயிர்களின் வினைகளை சிறிது சிறிதாக நீக்கி சுத்தம் செய்து, அது அனுபவிக்க வேண்டிய அனைத்து அவத்தைகளையும் அதனிடமிருந்து மாற்றி நீக்கி விட்டு, அந்த உயிரின் சித்தத்தை பேரின்பத்தில் மகிழ்ந்து இருக்கும் படி செய்து, சிவமாகவே அந்த உயிரின் உள்ளத்தை ஞான இலிங்கமாக்கி விடுவார்கள்.

4 thoughts on “பாடல் #1771

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.