பாடல் #1779

பாடல் #1779: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

உயிராஞ் சரீரமு மொண் பொருளான
வியவார் பரமும் பின்மேவு பிராணன்
செயலார் சிவமுஞ் சிற்சத்தி யாதிக்கே
யுயலார் குருபர னுய்யக்கொண் டானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உயிராஞ சரீரமு மொண பொருளான
வியவார பரமும பினமெவு பிராணன
செயலார சிவமுஞ சிறசததி யாதிககெ
யுயலார குருபர னுயயககொண டானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உயிர் ஆம் சரீரமும் ஒண் பொருள் ஆன
வியவு ஆர் பரமும் பின் மேவும் பிராணன்
செயல் ஆர் சிவமும் சித் சத்தி ஆதிக்கே
உயல் ஆர் குரு பரன் உய்ய கொண்டானே.

பதப்பொருள்:

உயிர் (உயிரோடு) ஆம் (இருக்கின்ற) சரீரமும் (உடலும்) ஒண் (அதனோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற) பொருள் (பொருள்) ஆன (ஆகிய ஆன்மாவும்)
வியவு (அனைத்திலும் உயர்ந்து) ஆர் (முழுவதுமாக இருக்கின்ற) பரமும் (பரம்பொருளும்) பின் (உடல் எடுத்த பிறகு) மேவும் (வந்து சேர்ந்து கொள்ளுகின்ற) பிராணன் (மூச்சுக்காற்றும் ஆகிய இவை அனைத்தின்)
செயல் (செயல்களிலும்) ஆர் (முழுவதுமாக இருக்கின்ற) சிவமும் (இறைவனும்) சித் (ஞானமாக இருக்கின்ற) சத்தி (இறைவியுமே) ஆதிக்கே (ஆதியிலிருந்தே செயல் பட வைக்கின்றார்கள்)
உயல் (என்பதை முழுவதுமாக உணர்ந்த அடியவர்களிடம்) ஆர் (முழுமையாக இருக்கின்ற) குரு (குருவாகிய) பரன் (பரம்பொருள்) உய்ய (அவர்களை முக்தி நிலைக்கு ஏற்றிச் செல்வதற்கு) கொண்டானே (ஆட்கொண்டு அருளுவார்).

விளக்கம்:

உயிரோடு இருக்கின்ற உடலும், அதனோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற பொருளாகிய ஆன்மாவும், அனைத்திலும் உயர்ந்து முழுவதுமாக இருக்கின்ற பரம்பொருளும், உடல் எடுத்த பிறகு வந்து சேர்ந்து கொள்ளுகின்ற மூச்சுக்காற்றும், ஆகிய இவை அனைத்தின் செயல்களிலும் முழுவதுமாக இருக்கின்ற இறைவனும் ஞானமாக இருக்கின்ற இறைவியுமே ஆதியிலிருந்தே செயல் பட வைக்கின்றார்கள் என்பதை முழுவதுமாக உணர்ந்த அடியவர்களிடம் முழுமையாக இருக்கின்ற குருவாகிய பரம்பொருள் அவர்களை முக்தி நிலைக்கு ஏற்றிச் செல்வதற்கு ஆட்கொண்டு அருளுவார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.