பாடல் #924

பாடல் #924: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின்
அடையும் அறையொன்றுக் கீரெழுத் தாக்கி
அடையு மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்தைம் பத்தொன்றும் அமர்ந்தே.

விளக்கம்:

இடமிருந்து வலமாக ஆறு கோடுகளும் மேலிருந்து கீழாக ஆறு கோடுகளும் வரைந்தால் இருபத்தைந்து கட்டங்கள் வரும். அதில் ஒரு கட்டத்திற்குள் இரண்டு எழுத்துக்களாக மொத்தம் ஐம்பது எழுத்துக்கள் வரும்படி எழுதி அமைத்து அதைச் சுற்றி ஓம் எனும் எழுத்தை பெரியதாக எழுதி அதன் இறுதியில் க்ஷ ஹ எழுத்துக்களை எழுதி முடித்தால் வரும் சக்கரத்தில் மொத்தம் ஐம்பத்தொரு எழுத்துக்கள் இருக்கும்.

குறிப்பு: திருவம்பலச் சக்கரத்தின் இன்னொரு வடிவத்தை இந்தப் பாடலில் அருளுகின்றார். இந்த திருவம்பலச் சக்கரத்தின் தொடர்ச்சி அடுத்தப் பாடலிலும் தொடரும்.

பாடல் #925

பாடல் #925: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாமா னுள்வட்டம்
அமர்ந்த அசபை யாம்அத னுள்வட்டம்
அமர்ந்த இரேகை ஆகின்ற சூலமே.

விளக்கம்:

பாடல் #924 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரம் வரைந்து அதனைச் சுற்றி வெளிப்புற வட்டத்தில் ஹர ஹர என்று தொடர்ச்சியாக எழுதி அதற்கு அடுத்த நடு வட்டத்தில் ஹரி ஹரி என்று தொடர்ச்சியாக எழுதி அதற்கு அடுத்த உள் வட்டத்தில் அம் சம் எனும் மந்திரத்தின் பீஜங்களான ஹம்ஸ ஸொஹம் என்ற எழுத்துக்களை தொடர்ச்சியாக எழுதி அதற்குள் வட்டமாக ஓம் எனும் எழுத்தை எழுதினால் வருவது திருவம்பலச் சக்கரத்தின் சூலமாகும்.

குறிப்பு: இந்த திருவம்பலச் சக்கரத்தின் தொடர்ச்சி அடுத்தப் பாடலிலும் தொடரும்.

பாடல் #926

பாடல் #926: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

சூலத் தலையினில் தோற்றிடுஞ் சத்தியுஞ்
சூலத் தலையினிற் சூழூம்ஓங் காரத்தால்
சூலத் திடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்
தாலப் பதிக்கும் அடைவு அதுதானே.

விளக்கம்:

பாடல் #925 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தின் நடுவில் அமைந்த சூலத்தின் நான்கு புறங்களின் தலைப்பகுதியிலும் சக்தி மந்திரத்தின் பீஜமான ஹ்ரீம் என்ற எழுத்தை எழுதி அதைச் சுற்றி இருக்கும் ஓம் என்ற எழுத்துக்குள்ளிருக்கும் சூலங்களுக்கு நடுவில் இருக்கின்ற கட்டத்தின் மேல் ஐந்து பூதங்களைக் குறிக்கும் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துக்களை எழுதி அமைக்கப்படும் திருவம்பலச் சக்கரமே அனைத்திற்கும் தலைவனாகிய இறைவன் வீற்றிருக்கும் இடமாகும்.

குறிப்பு: இந்த திருவம்பலச் சக்கரத்தின் தொடர்ச்சி அடுத்தப் பாடலிலும் தொடரும்…

பாடல் #927

பாடல் #927: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகாரம் ஒகார மதஞ்சாம்
அதுவாகுஞ் சக்கர வட்டமேல் வட்டம்
பொதுவாம் இடைவெளி பொங்கநம் பேரே.

விளக்கம்:

பாடல் #926 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்திற்குள் இருக்கும் சூலங்களுக்கு இடைப்பட்ட கட்டத்தின் மேல் எழுதப்படுகின்ற அ, இ, உ, எ, ஒ என்கிற ஐந்து எழுத்துக்களும் இறைவனுடைய பெயராக விளங்குகின்றது.

குறிப்பு: இந்த திருவம்பலச் சக்கரத்தின் தொடர்ச்சி அடுத்தப் பாடலிலும் தொடரும்…

பாடல் #928

பாடல் #928: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியின்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற்று இருந்த இயல்பிது வாமே.

விளக்கம்:

பாடல் #927 இல் உள்ளபடி இறைவனின் பெயராக விளங்குகின்ற அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து எழுதுக்களின் ஆதார மந்திரமாகிய நமசிவாய மந்திரமே திருவம்பலச் சக்கரத்தின் மூலமந்திரம் ஆகும். இந்த மந்திரங்களைச் சுற்றி பாடல் #924 மற்றும் #925 இல் உள்ளபடி மூன்று வட்டங்களுடன் வரைந்தால் திருவம்பலச் சக்கரம் முழுமையாக முறையாக அழகுடன் அமைந்து விடும்.

பாடல் #929

பாடல் #929: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

இயலுமிம் மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்
புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண்
முயலும் எழுத்தின் முன்னா இருந்ததே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தில் மந்திரங்களை பாடல் #924 முதல் #928 வரை சொல்லியபடி வரையும் வழியையும் பாடல் #916, #917 #918 வரை சொல்லியபடி வழிபட வேண்டிய முறைகளையும் முயற்சி செய்பவர்களுக்கு இறைவன் குருவாக நின்று அவர்களது அறிவு தெளிவு பெறும்படி செய்வான். காற்று, நீர், நெருப்பு, நிலம், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் பீஜ மந்திரங்களாகிய யம், வம், ரம், லம், ஹம் ஆகியவற்றை சக்கரத்தில் வரையப்பட்டுள்ள மந்திரங்களுக்கு முன்பாக சேர்த்து வழிபட வேண்டும்.

திருவம்பலச் சக்கரத்தில் உள்ள மந்திரங்களுக்கு முன் பஞ்ச பூத பீஜங்களை சேர்க்கும் முறை.

  1. நிலம் = லம் யநமவாசி
  2. நீர் = வம் வாயநமசி
  3. நெருப்பு = ரம் நமசிவாய
  4. வாயு = யம் மசிவாயந
  5. ஆகாயம் = ஹம் சிவாயநம

பாடல் #930

பாடல் #930: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆறெட் டெழுத்தின்மே லாறும் பதினாலும்
ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமுஞ்
சீறிட்டு நின்று சிவாய நமவென்னக்
கூறுஇட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தில் உள்ள ஐம்பத்தொரு எழுத்துக்களில் நாற்பத்து எட்டாவதாக உள்ள ‘ஸ’ எழுத்துடன் ஆறாவதாக உள்ள ‘ஊ’ எழுத்தை சேர்த்து ‘ஸூம்’ என்ற பீஜ மந்திரமாகவும், ‘ஸ’ எழுத்துடன் பதினான்காவதாக உள்ள ‘ஒள’ எழுத்தையும் சேர்த்து ‘ஸெள’ என்ற பீஜ மந்திரமாகவும் சேர்த்துக் கொண்டு அதற்கு முன்பு ஒளியும் ஒலியுமாகிய ஓங்கார மந்திரத்தையும் அதற்கு பின்பு ‘சிவாயநம’ மந்திரத்தையும் சேர்த்து ‘ஓம் ஸூம் ஸெள சிவாயநம’ என்று உச்சரித்தால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் தனித்தனியாகப் பிரிந்து சென்றுவிடும்.

பாடல் #931

பாடல் #931: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அண்ணல் இருப்ப தவளக் கரத்துளே
பெண்ணிநல் லாளும் பிரானக் கரத்துளே
எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே.

விளக்கம்:

நமசிவாய மந்திரத்தில் இறைவியைக் குறிக்கும் ‘வ’ எழுத்துக்குள் இறைவனும் அடங்கியிருக்கிறான். அது போலவே இறைவனைக் குறிக்கும் ‘சி’ எழுத்துக்குள் இறைவியும் அடங்கியிருக்கிறாள். பாடல் #930 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரம் வரைந்து மந்திரத்தை செபிக்கும் சாதகர்கள் திருவம்பலச் சக்கரத்தில் இருக்கும் இறைவனும் இறைவியும் ‘சிவ’ மற்றும் ‘வசி’ எனும் மந்திர எழுத்துக்களில் சேர்ந்து இருப்பதை அறிவார்கள்.

குறிப்பு: திருவம்பலச் சக்கரத்தை முறைப்படி தியானிக்கும் சாதகர்களே புண்ணியவாளர்கள் ஆவார்கள்.

பாடல் #932

பாடல் #932: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே.

விளக்கம்:

அடிப் பகுதியில் இறைவனைக் குறிக்கும் ‘அ’ எழுத்தை பீடமாக வைத்து எழுதி நடுப் பகுதியில் சிவசக்தியை குறிக்கும் ‘ஹர’ எழுத்துக்களை எழுதி மேல் பகுதியில் இறைவியைக் குறிக்கும் ‘இ’ எழுத்தை எழுதினால் வரும் வடிவம் இலிங்க சொரூபமாகும். அந்த லிங்க உருவத்தோடு உயிர்களைக் குறிக்கும் ‘ம’ எழுத்தையும் சேர்த்து மூச்சுக்காற்றோடு தியானித்தால் இறைவனின் திருநடனத்தை இசையோடு சுடர் விட்டு எரியும் ஒளி உருவமாக காணலாம்.

குறிப்பு: பாடல் #765 இல் அகார உகார மகார எழுத்துக்களின் விளக்கத்தை காணலாம். பாடல் #931 இல் உள்ளபடி இறைவனும் இறைவியும் சேர்ந்திருக்கும் ‘சிவ’ ‘வசி’ எழுத்துக்களுக்கு நடுவில் ஆன்மாவை குறிக்கும் மகாராமாகிய ‘ய’ எழுத்தை சேர்த்து சிவயவசி எனும் மந்திரமாக தியானிக்க வேண்டும்.

பாடல் #933

பாடல் #933: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அவ்வுண்டு சவ்வுண் டனைத்துமங் குள்ளது
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாரில்லை
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச்
சவ்வுண்ட சத்தியும் சதாசிவன் தானே.

விளக்கம்:

பாடல் #931 இல் உள்ளபடி ‘சி’ என்ற எழுத்தின் அட்சரமான ‘ச’ எழுத்தில் அடங்கியிருக்கும் சக்தியும் ‘வ’ என்ற எழுத்தின் அட்சரமான ‘அ’ எழுத்தில் அடங்கியிருக்கும் சிவமும் ஒன்றாக சேர்ந்த சிவசக்திக்குள் அண்டசராசரங்கள் அனைத்தும் அடங்கியிருப்பதை யாரும் அறியவில்லை. பாடல் #932 இல் உள்ளபடி தியானித்து இதை அறிந்து கொண்ட சாதகர்கள் இரண்டாக பிரிந்து இருக்கும் சிவசக்தியானது ஒன்றான சதாசிவமூர்த்தியாகவே இருப்பதை உணர்ந்து கொள்வார்கள்.

குறிப்பு: பாடல் #931 இல் உள்ள குறிப்பின்படி ‘சிவயவசி’ என்று இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் ஆன்மாவை வைத்து தியானிக்கும் சாதகர்கள் இறைவன் இறைவி என்று இரண்டாகப் பார்த்த பொருள் ஒன்றான சதாசிவம் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.