பாடல் #37

பாடல் #37: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்
தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.

விளக்கம் :

இறைவன் திருவருளால் நாள்தோறும் குருவாய் இருக்கும் சிவனை வழிபட்டு நிற்கின்றேன். அந்த சிவன் சிவப்பாய் ஏரியும் நெருப்புத்தழல் போன்ற வெளிச்சமுடன் எம்முடன் நிற்கின்றான். அவன் வானத்தில் இருளை நீக்கிப் பிரகாசமாய் ஒளிரும் நிலவைப் போல குருவை வணங்கி நிற்பவர்களின் உடலுக்குள் மகிழ்ந்து வந்து அங்கே உயிருக்கு உயிராக நின்று அஞ்ஞான இருளை அகற்றும் பேரொளியாய் இருக்கின்றான்.

பாடல் #38

பாடல் #38: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே.

விளக்கம்:

அனைத்தையும் விட பெரியவனும் கிடைப்பதற்கு மிகவும் அரிதானவனும் பிறவியே இல்லாமல் உருவானவனும் நந்தி என்ற பெயரில் எமக்குள் குருவாக வந்து இருப்பவனும் பெருமை மிக்க தவத்தின் பலனாக கிடைப்பவனுமாகிய சதாசிவமூர்த்தியின் மேல் யான் கொண்ட தீராத அன்பினால் அவனின் பெருமைகளையும் புகழ்களையும் எப்போதும் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பேன் யான்.

பாடல் #39

பாடல் #39: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்
ஆத்தம்செய் தீசன் அருள்பெற லாமே.

விளக்கம்:

இறைவனின் எல்லையற்ற குணங்களை உணர்ந்து புகழ்ந்து போற்றக்கூடியவர்களின் மனதின் உள்ளே ஜோதியாய் பரவி இருப்பவனும் அடியவர் உள்ளத்தையே கோயிலாக கொண்டு அங்கே பெருமகிழ்வோடு வீற்றிருக்கும் எம்பெருமான் சதாசிவமூர்த்தியை போற்றியும் புகழ்ந்தும் எம்பெருமான் என்று உரக்க அவன் நாமத்தை கூறியும் அன்போடு இருந்தால் அவனின் அருளைப் பெறலாம்.

பாடல் #40

பாடல் #40: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்
மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே.

விளக்கம்:

தூய்மையான ஒளி நிறைந்த பொன்னை புடம் போட்டால் கிடைக்கும் பிரகாசத்தைப் போன்ற பேரொளியை உடைய இறைவனை உயிர்கள் தங்களின் குறைகளை உணர்ந்து தாழ்மையோடு பெருமைக்குரிய இறைவனின் திருவடிகளைத் தேடிச் சரணடைந்து நெஞ்சில் வஞ்சமின்றி ஆணவமின்றி போற்றிப் புகழக்கூடியவர்களின் உள்ளத்துள் இறைவன் மகிழ்வோடு வந்து நின்று அவர்களை எப்போதும் பாதுகாத்து அருளுவான்.

பாடல் #41

பாடல் #41: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

சினம்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனம்செய்த நெஞ்சிடைப் போற்றவல் லார்க்குக்
கனம்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனம்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

விளக்கம்:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து சீறிக்கொண்டு எழுந்த ஆலகால விஷம் யாரையும் தீண்டாதவாறு தாமே அருந்தி அனைவரையும் காத்தருளிய தேவர்களின் தலைவனும் அந்த விஷம் உள்ளே இறங்கிவிடாமல் கழுத்திலேயே தடுத்து வைத்த பேரொளி வீசும் நெற்றியைக் கொண்ட உமையம்மையாரைத் தன் உடலின் சரி பாதியாகக் கொண்ட சதாசிவமூர்த்தி தமது குறைகளையும் தாண்டிய உறுதியோடு நெறி வழியில் செல்ல இறைவனைத் தம் நெஞ்சத்தினுள்ளே வைத்துப் பூஜிக்கக்கூடியவர்களுடன் பெண் மானைச் சேர்ந்த ஆண் மான் போல எப்போதும் பிரியாது இணைந்து நிற்கின்றான்.

உள் விளக்கம்:

உண்மையான பொருளான இறைவனை அடையும் ஆசையில் அவனை நெஞ்சத்தில் வைத்துப் போற்றிப் புகழ்ந்து வரும் அடியவர்களின் நெஞ்சத்திலிருந்து ஆணவம், அகங்காரம், கோபம் அவர்களைப் பாதிக்காதவாறு தாமே எடுத்துக்கொண்டு, அவர்களைச் சூழ்ந்துகொண்டு இறைவனை அடையவிடாமல் தடுக்கும் கர்மங்களை அவர்களின் வழியில் குறுக்கிடாதவாறு தடுத்து நிறுத்திவிட்டு அவர்கள் செல்லும் நேர்வழிப் பாதையில் அவர்களோடு இணைந்து ஒன்றாக நடந்து வந்து அவர்களைக் காத்தருள்வான் சதாசிவமூர்த்தி.

பாடல் #42

பாடல் #42: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கு
மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே.

விளக்கம்:

சிவபெருமானை அடைக்கலம் புகுந்து துதிப்பவர்கள் பெறத்தக்க பயன் என்னவென்றால் நான்கு திருமுடியுடைய பிரம்மன் படைப்பான மாய உலகில் மறுபடியும் மறுபடியும் பிறக்க வேண்டியவர்கள் ஆனாலும் மூங்கில் போன்ற திரட்சியான தோள்களையுடைய உமாதேவியின் தலைவனான சிவபெருமான் அவர்களுடன் பொருந்தி இருப்பான்.

பாடல் #43

பாடல் #43: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு
நிரனடி செய்து நிறைந்துநின் றானே.

விளக்கம் :

இறைவன் திருவடியை நினைத்து அவன் நாமத்தை கூறி அன்பால் கசிந்துருகி அழுது ஆராய்ந்து தெளிந்து இறைவன் திருவடியை நாள்தோறும் உறுதியான உள்ளத்தோடு தியானித்து அந்த உணர்விலே இலயித்து இருப்பவர்களுக்கு திருவடிபேற்றை அருளி இறைவன் அவர்களுடன் நிறைந்து இருப்பான்.

பாடல் #44

பாடல் #44: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.

விளக்கம் :

போற்றுவார்கள் அமரர்கள் தூய நிர்மல இறைவனின் திருவடியை போற்றுவார்கள் அசுரர்கள் தூய நிர்மல இறைவனின் திருவடியை போற்றுவார்கள் மனிதர்கள் தூய நிர்மல இறைவனின் திருவடியை யாமும் எமது அன்பினுள் அவனை போற்றி நிலைபெறச்செய்தேன்.

பாடல் #45

பாடல் #45: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

விதிவழி அல்லதிவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

விளக்கம்:

கர்ம விதிப்படியே இந்த உலகம் இயங்குகின்றதே அன்றி வேறில்லை. உயிர்கள் பெறும் இன்பமும் துன்பமும் அவரவர்களின் கர்ம விதிப்படியே இருக்குமேயன்றி மாறி இருப்பதில்லை. இருப்பினும் முக்தியடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் இறைவனை தினமும் வணங்கித் துதித்து வரும் உயிர்களுக்கு அவர்களின் கர்ம விதிகளை அகற்ற சூரியன் போல் ஒளியாய் வந்து இறைவன் முக்திபெறும் வழியைக் காட்டி அருள்வான்.

பாடல் #46

பாடல் #46: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
புந்திவண் ணன்எம் மனம்புகுந் தானே.

விளக்கம்:

மாலைநேர அந்தி சூரியனைப் போன்ற சிவந்த நிறத்தையுடைய பிறவியை அழிக்கும் அரனே சிவனே என்று மனதில் எண்ணிக்கொண்டே இருந்து இறைவனைத் தொழுகின்ற மனம் திருந்திய அடியவர்களுக்கும் அனைத்திற்கும் ஆரம்பமானவனே அனைத்திற்கும் முதல்வனே ஆதியானவனே என்று துதிக்கும் எமக்கும் ஞானத்தி ரூபமான இறைவன் எமது மனத்துள் புகுந்து நிற்கின்றான்.