பாடல் #625

பாடல் #625: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.

விளக்கம்:

உயிர்களுக்கு தியானத்தின் மூலம் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் வாய்ப்பு திருவருளால் பரிசாக உள்ளது. இது தேவர்களுக்கும் கிடைக்காதது. குண்டலினியினை சிரசில் ஏற்றி தியானித்திருந்தால் உச்சியில் அமுதம் ஊறும். அவ்வமுதினை உண்போர்க்கு முடிவில்லாத ஆசை கொண்ட மனம் அடங்கப்பெற்று சமாதி நிலை வாய்க்கும். இந்த முறை அறியாத தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து அமுது உண்டார்கள். தேவர்கள் பாற்கடல் கடைந்து எடுத்த அமுதை விட நாம் தியானம் செய்து உச்சியில் ஊறச்செய்யும் அமுதம் உயர்வானது.

பாடல் #626

பாடல் #626: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.

விளக்கம்:

நம்பிக்கைக்கு உரியவனும் முதற்பொருளாக விளங்குபவனும் நான்கு வேதங்களாலும் ஒதப்படுபவனும் தங்கத்தின் ஜொலிப்பு போல உள்ளே விளங்கும் சோதியும் ஆன சிவபெருமான் மீது அன்பு செலுத்தி ஆசைகளை அடக்கி மனதை சுழுமுனை வழியாக உச்சியில் ஏறுமாறு செய்து தலை உச்சியுள்ள சகஸ்ரதளத்தில் தியானித்திருந்தால் அங்கு இருக்கும் சிவபெருமானைக் வணங்கி அவனுடன் கலந்து இருக்கலாம்.

பாடல் #627

பாடல் #627: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

மூலத்து மேலது முற்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.

விளக்கம்:

மூலாதாரத்திற்கு மேலுள்ள சுவாதிஷ்டானத்தில் கும்பக முறைப்படி அடக்கி வைத்த மூச்சுக்காற்றை அதற்கு மேலுள்ள மணிப்பூரகத்தில் கலந்து பின்பு சுழுமுனை வழியே மேலே ஏற்றிச் சென்று புருவ மத்தியிலிருக்கும் ஆக்ஞா சக்கரத்துடன் சேர்த்தால் அங்கே நெற்றிக்கு நேரில் அண்டவெளி அழகிய வடிவங்களாக காட்சியளிக்கும். அந்தக் காட்சியுடன் மனதை ஒன்றி இருப்பது சமாதி நிலை ஆகும்.

பாடல் #628

பாடல் #628: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.

விளக்கம்:

எண்ணங்களைச் சிதறவிடாமல் மனதை ஒருமுகப்படுத்தி குண்டலினி சக்தியின் மேல் வைத்து அதை சுழுமுனை வழியே மேலேற்றிச் சென்று இந்த உலகையெல்லாம் அழகாக செதுக்கி உருவாக்கிய பேரொளியாகிய இறைவனின் பொன் போன்ற அழகிய பாதத்தை நாடி அறிவால் இறைவனை உணர்ந்து சிவமும் தாமும் இரண்டாக இல்லாமல் ஒன்றாகக் கலந்து இருத்தல் சமாதி நிலையாகும்.

பாடல் #629

பாடல் #629: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங்
குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந்
துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே.

விளக்கம்:

மனதை ஒருமுகப்படுத்தி இறை நினைப்பிலேயே ஒன்றி சமாதி நிலையில் இருக்கக் கூடியவர்களுக்கு தான் யார் என்பதை உணர்ந்து தனக்குள் இருக்கும் சிவமும் உலகங்களை இயக்கிக்கொண்டிருக்கும் சக்தியும் ஒன்றாக சேர்ந்து இருக்கும். மாயை நீங்கி அருள்சக்திக்கு எதிரான காமம், கோபம், அகங்காரம் அகன்றுவிடும்.

பாடல் #630

பாடல் #630: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே.

விளக்கம்:

சமாதி நிலையில் நம்முடைய ஆன்மா ஈடு இணையில்லாத பேரொளியாய் விளங்கும் சிவபெருமானோடும் ஆதி சக்தியோடும் ஒன்றாகக் கலந்து விடும். அந்நிலையில் படைப்புக்கு முதல்வனான பிரமனும் கடல் போன்ற நீல நிற மேனியுடைய திருமாலும் ஆதிக்கடவுளான சிவபெருமானிடம் அடிபணிந்து அன்பு செலுத்துவதை நாம் உணரலாம்.

பாடல் #631

பாடல் #631: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.

விளக்கம்:

சமாதி நிலையை அடைபவர்களுக்கு பலவிதமான யோகங்களோடு அறுபத்து நான்கு விதமான சித்திகளும் கிடைக்கும். இறைவனுடன் ஒன்றாகக் கலந்து தாமே சிவமாகிய பின் சமாதி நிலையே தேவையில்லை.

பாடல் #598

பாடல் #598: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகக் கூறே.

விளக்கம்:

ஆதியிலிருந்து வரும் பூதங்கள் ஐந்தும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) புலன்கள் ஐந்தும் (பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல்) அந்தக் கரணங்கள் நான்கும் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) மாயை ஒன்றும் ஆத்மா ஒன்றும் ஆகிய 16 உண்மைகளையும் நினைப்பது ஆருயிர்த் தியானம் ஆகும். சாதாரண நிலையில் அறிவு புலன்களின் மேல் பற்றுகொண்டு இருக்கும். அந்த அறிவை புலன்களை விட்டு விலக்கி வைத்தால் வருவது முதல் பிரிவான அம்மை அப்பனாகிய இரண்டு சக்திகளும் பரத்தியானம் ஆகும். அறிவில் குருவாக சிவனை வைத்துவிட்டால் வருவது இரண்டாம் பிரிவான சிவத்தியானம் ஆகும். பரத்தியானம், சிவத்தியானம் ஆகிய இவையே யோகத்தின் இரண்டு பிரிவுகளாகும்.

பாடல் #599

பாடல் #599: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மையும் பிழைப்பித்த வாறே.

விளக்கம்:

கண், நாக்கு, மூக்கு, காது ஆகிய நான்கின் உணர்வுகளை உணர்த்தும் ஞானமாகிய கூட்டத்தில் ஓம் என்னும் ஒலியை உருவாக்கி நிற்கின்ற பரம்பொருள் ஒன்று உண்டு. அந்தப் பரம்பொருளை நினைத்து உடலை வருத்தி தியானம் செய்பவர்களின் உள் நாக்கின் உள்ளே அகண்ட பேரொளியைக் காட்டுவது மட்டுமன்றி அவ்வாறு உடலை வருத்தி தியானத்தை செய்தவர்களுக்கு இறப்பில்லாத நிலையையும் கொடுக்கும்.

பாடல் #600

பாடல் #600: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றதுவும் பார்க்கலு மாமே.

விளக்கம்:

இரண்டு கண்களையும் மூடி மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்து ஞானக் கண்ணில் (புருவ மத்தியில்) உள்ள ஜோதியைப் பார்த்து அதிலேயே மனதை வைத்தால் தலைக்கு மேல் ஆகாய கங்கை பாய்வது போன்ற உணர்வுடன் தானே தோன்றிய சுயம்புவாகிய சிவனையும் பார்க்கலாம்.