பாடல் #1304: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)
பகையில்லை யென்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாளும் நன்மைக ளாகும்
வினையில்லை யென்றும் விருத்தமு மில்லைத்
தகையில்லைத் தானுஞ் சலமது வாமே.
விளக்கம்:
பாடல் #1303 இல் உள்ளபடி உலகத்தில் உள்ள எந்தவொரு பற்றுக்களும் சாதகர்களுக்கு இல்லாமல் போய்விடும். இறைவனை வணங்கித் தொழுகின்ற சாதகருக்கு அவரைச் சுற்றி இருக்கின்ற உலகத்தால் நன்மை தீமைகள் எதுவும் இல்லை. அனைத்து நாட்களும் அவருக்கு நன்மையான நாட்களாகவே இருக்கும். நல்வினை தீவினை ஆகிய எதுவுமே அவருக்கு இல்லாமல் போய்விடும். இனி எப்போதும் புதியதாக வினைகள் எதுவும் வந்து சேராது. தமது சாதகத்திற்கு தடைகள் எதுவும் இல்லாமல் தாமும் தடை இல்லாமல் உலக நன்மைக்காகச் சுழற்சியாகத் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கின்ற நிலையை அடைந்து விடுவார்.
