பாடல் #1004

பாடல் #1004: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

சாங்கம தாகவே சந்தொடு சந்தனந்
தேங்கமழ் குங்குமங் கர்ப்பூரங் காரகிற்
பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்
தாங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே.

விளக்கம்:

புனுகு கஸ்தூரி ஆகிய கலவைகளுடன் சேர்த்து அரைத்த சந்தனம் வாசம் மிகுந்த குங்குமம் பச்சைக் கற்பூரம் கருமையான அகில் கட்டையை அரைத்த சாந்து ஆகியவற்றை சரியான அளவு எடுத்து முறைப்படி அவற்றை பன்னீரால் குழைத்து அந்தக் கலவையை இறைவனின் திருமேனியின் மேல் அழகுடன் காப்புப் போல பூசிவிட்டு அன்போடு அருச்சனை செய்தல் வேண்டும்.

பாடல் #1003

பாடல் #1003: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

அம்புய நீலங் கழுநீ ரணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளஞ் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

விளக்கம்:

  1. தாமரை மலர் (அம்புயம்) 2. கருங்குவளை மலர் (நீலம்) 3. செழுங்கழுநீர் மலர் (கழுநீர்) 4. அழகாக கட்டிய நெய்தல் மலர் 5. மாலை மணம் விரிக்கும் பாக்கு மலர் (பூகம்) 6. மாதவி மலர் 7. மந்தாரை மலர் 8. தும்பை மலர் 9. மகிழம்பூ மலர் (வகுளம்) 10. சுரபுன்னை மலர் 11. மல்லிகை மலர் 12. செண்பகம் மலர் 13. பாதிரி மலர் 14. செவ்வந்தி மலர் ஆகிய பதினான்கு வகைப் பூக்களும் இறைவனுக்கு அருச்சினை செய்ய ஏற்ற மலர்கள் ஆகும்.