பாடல் #1011

பாடல் #1011: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

தானவ னாக அவனேதா னாயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
போனவ னன்பிது நாலாம் மரபுறத்
தானவ னாகுமோ ராதித்த தேவரே.

விளக்கம்:

உயிர்கள் அருச்சனை செய்து தனது பக்தியினால் தம்மை சிவமாகவும் சிவமே தானாகவும் ஆகிய இரு வழிகளிலும் சிவத்தை அறிந்து உணர்ந்தவர்களின் பேரன்பினால் இறைவனை அடையும் வழிகளில் நான்காம் நிலையாகிய சாயுச்சிய நிலையை அடைவார்கள். அப்படி சாயுச்சிய நிலையை அடைந்தவர்கள் பேரொளியாகிய ஆதித்ய (சூரிய) தேவராவார்கள்.

குறிப்பு: இறைவன் பேரொளி வடிவில் உயிர்களின் கர்மங்களை பொசுக்கும் நிலையே ஆதித்ய தேவர் ஆகும்.

இறைவனை அடையும் நான்கு முறைகள்:

சாலோகம் – இறைவன் இருக்கும் இடத்தில் அவனோடு சேர்ந்து வாழ்வது.
சாமீபம் – இறைவனுக்கு பக்கத்தில் அமர்ந்து நெருக்கமாக வாழ்வது.
சாரூபம் – இறைவனுக்கு பிரதிநிதியாக அவருக்கு செய்வதை ஏற்றுக்கொள்வது.
சாயுச்சியம் – இறைவனோடு எப்போதும் சேர்ந்து இருப்பது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.