பாடல் #62

பாடல் #62: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.

விளக்கம்:

பரமாகிய சிவமும் பராவாகிய சக்தியும் சேர்ந்து சதாசிவம் எனும் மாபெரும் பரம்பொருளாக விளங்கி அந்தப் பரம்பொருள் மகேசுவரன், ருத்திரன், திருமால், பிரமன், ஈசுவரன் ஆகிய ஐவர்களும் சதாசிவமூர்த்தியிடமிருந்து பெற்றது மொத்தம் ஒன்பது ஆகமங்கள் ஆகும். அந்த ஒன்பது ஆகமங்களை எங்கள் குருவான நந்தி பெற்று எமக்கு அருளினான்.

பாடல் #61

பாடல் #61: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

பரனாய்ப் பராபரம் காட்டி உலகின்
தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரனாய் ஆகமம் ஓங்கிநின் றானே.

விளக்கம் :

பரமாகிய சிவமும் பராவாகிய சக்தியும் சேர்ந்து பராபரமாகிய அனைத்திற்கும் மேலான சதாசிவமூர்த்தி உலகின் தலைவனாய் நின்று எல்லா உயிர்களும் இறைவனை அடைய ஆகமங்களை அருளிய நேரத்தில் அமரர்களுக்கு குருவாய் நிற்கும் இறைவனை அரன் என்று அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு ஆகமங்கள் கூறும் ஞானத்தின் மொத்த அறிவு உருவமாக உயர்ந்து நின்றான்.

பாடல் #60

பாடல் #60: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

அண்ணல் அருளால் அருளும்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

விளக்கம்:

உயிர்கள் தன்னை அடைய இறைவன் அருளிய திவ்யமான ஆகமங்களை விண்ணகத்தில் இருக்கும் அமரர்க்கும் பொருள் விளங்க அரிதானவையாகும். மொத்தம் உள்ள ஆகமங்களை எண்ணினால் அது எழுபது கோடி நூறாயிரம் ஆகும். இத்தனை கோடி ஆகமங்களை எண்ணிக்கொண்டு இருந்தால் நீர் மேல் எழுதிய எழுத்தை எப்படிப் படிக்க முடியாதோ அதுபோல இத்தனை கோடி ஆகமங்களின் பொருளை உணரமுடியாமல் போய்விடும்.

பாடல் #59

பாடல் #59: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அரன்சொன்ன வாறே.

விளக்கம்:

இறைவனை அடைய ஆகமங்கள் கூறும் பதினெட்டு நிலைகளையும் அதன் உண்மையையும் உணர்ந்தவர்கள் பண்டிதர்கள் ஆவார்கள். இந்தப் பதினெட்டு நிலைகளையும் அரன் எனும் பெயரால் அறியப்படுபவனும் உலகங்கள் அனைத்திற்கும் முதல்வனுமான இறைவன் கூறியவையாகும். இறைவன் கூறியவற்றை அவன் கூறியபடியே விளக்குபவர்களே உண்மையான பண்டிதர்கள் ஆவார்கள்.

பாடல் #58

பாடல் #58: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றன்பொருள் ஏத்துவன் யானே.

விளக்கம்:

சதாசிவமூர்த்தி உயிர்கள் உய்யும் பொருட்டு அருளிய சிவாகமங்களை எண்ணினால் அது இருபத்து எட்டு கோடி நூறாயிரம் இவற்றையே விண்ணில் இருக்கும் தேவர்களும் சிவபெருமானின் சிறப்புக்களாகக் கூறினார்கள். அவற்றையே நானும் சிந்தனை செய்து நின்று அவற்றின் பொருளைப் புகழ்ந்து பாடிப் பரப்புகின்றேன்.

பாடல் #57

பாடல் #57: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு

அஞ்சன மேனி அரிவைஓர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

விளக்கம்:

நீல நிற தேகத்தை உடைய உமா மகேஸ்வரியை இடது பாகத்தில் கொண்ட இறைவன் தனது மேல் நோக்கிய ஐந்தாவது முகமான ஈசான முகத்திலிருந்து அரிதான இருபத்து எட்டு ஆகமங்களை தன்னைக் கைகூப்பி வேண்டிக்கொண்ட அறுபத்து ஆறு யோகபுருஷர்களுக்கு மொழிந்து அருளினான்.

இருபத்து எட்டு ஆகமங்களும் அதைக் கேட்ட அறுபத்து ஆறு யோகபுருஷர்களும்:

1. காமிகம்: பிரணவர், திரிகலர், ஹரர்
2. யோகஜம்: சுதா, பஸ்மர், விபு,
3. சிந்தியம்: சுதீப்தர், கோபதி, அம்பிகை
4. காரணம்: காரணர், சர்வருத்ரர், பிரஜாபதி
5. அஜிதம்: சுசிவர், சிவர், அச்சுதர்
6. தீப்தம்: ஈசர், ஈசானர், ஹூதாசனர்
7. சூட்சுமம்: சூட்சுமர், வைஸ்சிரவணர், பிரபஞ்சனர்
8. சகஸ்ரம்: காலர், பீமர், தருமர்
9. அம்சுமான்: அம்புசம்யமர், அர்க்கர், ரவி
10. சுப்ரபேதம்: தசேசர், விக்னேசர், சசி
11. விஜயம்: அனாதிருத்தர், பரமேசுவரர்
12. நிஸ்வாசம்: தசாரணர், சைலசர்
13. சுவாயம்புவம்: நிதனேசர், பிரமர்
14. அனலம்: வியோமர், அக்கினி
15. வீரம்: தேஜஸ், பிரஜாபதி
16. ரெளரவம்: பிரம்மேசர், நந்திகேசர்
17. மகுடம்: சிவர், மகாதேவர்
18. விமலம்: சர்வாத்மகர், வீரபத்திரர்
19. சந்திரஞானம்: அனந்தர், கிரஹஸ்பதி
20. பிம்பம்: பிரசாந்தர், ததீசி
21. புரோத்கீதம்: சூலி, கவசர்
22. லளிதம்: லயர், ஆலயர்
23. சித்தம்: பிந்து, சண்டேசுவரர்
24. சந்தானம்: சிவநிஷ்டர், வாயு
25. சர்வோக்தம்: சோமதேவர், நிருசிம்மர்
26. பாரமேசுரம்: ஸ்ரீதேவி, உசனஸ்
27. கிரணம்: தேவவிபவர், சம்வர்த்தகர்
28. வாதுளம்: சிவர், மகாகாளர்

பாடல் #56

பாடல் #56: பாயிரம் – 2. வேதச் சிறப்பு

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் ஆறாத அவனியில் மாட்டாதார்
மேட்டு விருப்பார் விரதம்இல் லாதவர்
ஈட்டும் இடம்சென் றிகலலுற் றாரே.

விளக்கம்:

இறைவனைப் பற்றிய பாடல்களை இசையோடு ஒலித்துப் பாடி அதற்கேற்ப பாவமும் காட்டி நடனமாடும் இளம்பெண்கள் அந்தப் பாடல்களின் மூலம் இறைவனை உணர்ந்து முக்திபெறுவதற்கு முயற்சிக்காமல் தங்களின் நடனங்களின் மூலம் பொருள் பெறவே முயற்சிக்கின்றனர். அப்பெண்களின் நடனத்தைக் கண்டு களிப்பவர்களும் அதன் உண்மைப் பொருளை உணராமல் அவர்களின் நடனத்தைக் கண்டு சிற்றின்பத்திலேயே இருக்கின்றார்கள். உயர்வான வேதங்களை உயிர்கள் உய்யும் பொருட்டு உண்மைப் பொருளுணர்ந்து ஓதவேண்டிய அந்தணர்கள் மோட்சம் அடையவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அதற்கான ஒழுக்கங்களைக் (விரதங்கள்) கடைப்பிடிக்காமல் பிறர் கொடுக்கும் பொருளுக்காக வேதங்களை ஓதி யாகங்களை வளர்ப்பதால் இந்தப் பெண்களைப் போன்றவர்கள் ஆகின்றார்கள். இவர்களால் செய்யப்படும் யாகங்களைப் பெறுபவர்களும் உண்மைப் பொருள் உணராமல் உலகப் பொருள்களிலேயே மனம் செலுத்துவதால் அப்பெண்களின் நடனத்தைக் காண்பவர்கள் ஆகின்றார்கள். இவ்வர்கள் கொடுக்கும் பொருளுக்கு ஆசைப்படும் அந்தணர்களோ அப்படி பொருள் கிடைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று தங்களின் உயர்வான பிறப்பை இழிபிறப்பாக மாற்றித் துன்பத்தில் வாழ்கின்றார்கள்.

உள் விளக்கம்:

வேதங்களில் இறைவனை அடையும் வழிகளும் அதைக் கடைபிடிக்கும் போது இருக்க வேண்டிய ஒழுக்கங்களும் (விரதங்கள்) கொடுக்கப்பட்டிருந்தாலும் அதைச் சிரத்தையோடு மேற்கொள்ளாமல் வெறும் சிற்றின்பத்தில் சிக்கி உலகப் பொருள்களை நாடி அலையும் உயிர்கள் தங்களின் பிறவிப் பயனை எய்யாமல் இழிந்து போகின்றார்கள். அவ்வாறு இல்லாமல் பேரின்பப் பொருளான இறைவனை வேதங்கள் மூலம் உணர்ந்து முக்தியை அடைவீர்களாக என்று திருமூலர் இங்கு அருளுகின்றார்.

பாடல் #55

பாடல் #55: பாயிரம் – 2. வேதச் சிறப்பு

ஆறங்க மாய்வரு மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வார்இல்லை
வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.

விளக்கம்:

ஆறு அங்கங்களாக விளங்கும் மாபெரும் வேதங்களை (சிட்சை, கற்பம், வியாபகரணம், சந்தோபிசிதம், சோதிடம், நிருத்தம்) ஓதி அருளிய இறைவனை தனது உடம்பினுள்ளே ஒரு அங்கமாக வைத்து அவனின் தன்மைகளை உணர்பவர்கள் யாரும் இல்லை. அவனைத் தமது உடலிலிருந்து வெளியே இருக்கும் ஒரு அங்கமாக எண்ணிக்கொண்டு பலவித செயல்களைச் செய்கின்றனர். அப்படிச் செய்து கிடைத்த பயன்களையே உயர்வாகக் கருதி அதையே பெருக்கிக் கொண்டு இறைவனை உணராமலேயே வாழ்கின்றார்கள்.

வேதத்தின் ஆறு அங்கங்கள்:

  1. சிட்சை – வேதத்தின் எழுத்து மற்றும் ஒலி முதலியவற்றைப் பற்றிச் சொல்வது.
  2. வியாகரணம் – சொற்களின் இலக்கணத்தை ஆராய்வது.
  3. சந்தம் – செய்யுள் இலக்கணம் பற்றிச் சொல்வது.
  4. சோதிடம் – கோள் நிலைகளை வைத்து காலத்தை ஆராய்வது.
  5. நிருக்தம் – வேதச் சொற்களுக்கு பொருள் கூறுவது.
  6. கல்பம் – வேதத்தின் செயல் முறைகளை உரைப்பது.

பாடல் #54

பாடல் #54: பாயிரம் – 2. வேதச் சிறப்பு

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

விளக்கம்:

இறைவனை அடைந்து முக்தி பெறும் வழிகளாகிய சித்தாந்தம் (அறிந்த கருத்துக்கள்) அசித்தாந்தம் (அறியாத கருத்துக்கள்) மற்றும் இறைவனை மனதில் எப்போதும் நினைத்து அவனை பூஜிக்கும் பெருமைக்குரிய பக்தி வழியும் குருவானவர் அருளும் மாபெரும் சிவ வழியில் ஒன்று கூடும் சன்மார்க்க வழியும் ஆகிய இவை அனைத்தும் இறைவனை அடையும் ஒரு வழியே ஆகும் என்பதையே வேதங்கள் ஓதுகின்றன.

பாடல் #53

பாடல் #53: பாயிரம் – 2. வேதச் சிறப்பு

இருக்குரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.

விளக்கம்:

சொல்லழகு மிகுந்த வேதத்தின் உள்ளே மந்திர வடிவாக இருப்பவனும் உணர்ந்து வேத‍த்தை சொல்லும் வேதியர் உள்ளத்தில் உணர்வாக இருப்பவனும் வேதம் சொல்லும் வழி நடக்கும் சிறந்த வேதியர்கள் ஓதும் வேதத்தின் சொற்களில் மறைப் பொருளாகவும் அனைத்தையும் உருவாக்கிய சக்தியாக நின்று அருளுபவனும் எம்பெருமான் முக்கண் முதல்வன் சிவபெருமானே ஆவான்.