பாடல் #329

பாடல் #329: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)

மயக்குஞ் சமய மலமன்னு மூடர்
மயக்கு மதுவுண்ணு மாமூடர் தேரார்
மயக்குறு மாயையின் மாமாயை வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

விளக்கம்:

மனதை மயக்கும் மதுவை சமயத்தின் பெயரால் அருந்தி சமயத்தை அழுக்காக்கின்றனர் மூடர்கள். மயக்கம் தரும் மதுவை அருந்தும் மூடர்கள் சமயத்தை ஆராய்ந்து அறியும் திறன் இல்லாதவர்களாக மாபெரும் மூடர்களாகின்றனர். உலகப்பற்று என்னும் பெரும் மயக்கத்திலுருந்து விடுபட்டு இறைவனை அடைய வேண்டும் என்ற தெளிவு இருப்பவர்கள் கூட சமயவழியில் சென்று மது அருந்தி வழிபட்டால் உலக மயக்கம் தெளிந்து இறைவனை அடையலாம் என்று எண்ணி மது அருந்துபவர்களை மது அன்றே மயக்கமடையச்செய்யும்.

குறிப்பு : மது கஞ்சா போன்ற போதை தரும் பொருட்களை இறைவனை அடைய வேண்டும் என்று எண்ணி சமயத்தின் பெயரால் அருந்தினாலும் அந்த போதை மயக்கம் மேலும் அவர்களை மூடர்களாக்கி மயக்கத்திலேயே வைத்திருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.