பாடல் #193

பாடல் #193: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.

விளக்கம்:

ஒரு பானை அரிசி கரண்டி உள்ளது. இந்த மூன்றையும் வைத்து சோறு சமைக்க அடுப்பில் வைத்து அடுப்பினடியில் ஐந்து விறகுகளை வைத்து எரிக்க வேண்டும். விறகுகள் எரிய பதம்பார்த்துச் சமைக்கப்பட்ட அரிசி சோறாக மாறி உடலை வளர்க்கும் உணவாகின்றது. இதுபோலவே அழிகின்ற இந்த உடலுக்குள் அழிவைத்தராத ஒரு அரிசி இருக்கின்றது. எப்படி எனில் தியானத்தின் வழியாக உடம்பாகிய பானையில் இடகலை பிங்கலை என்கின்ற கரண்டியை வைத்து உபயோகித்து மூச்சுக்காற்றாகிய அரிசியை விறகுகளாகிய பிராணன் (உயிர்க்காற்று), அபானன் (மலக்காற்று), சமானன் (நிரவுக்காற்று), உதானன் (ஒலிக்காற்று), வியானன் (தொழிற்காற்று) வைத்து சமைத்தால் மூச்சுக்காற்று சுழுமுனை வழியே மேலெழும்பி சகஸ்ரரதளத்தை அடைந்து அமுதமாகிய சோறாக மாறும் அந்த அமுதமாகிய சோறானது உயிரை வளர்க்கும் உணவு. அந்த உணவைத் தொடர்ந்து உண்டு வருகின்ற உயிரானது அது இருக்கும் உடலுக்குக் கொடுக்கப் பட்ட காலங்கள் முடிந்தபோதும் அழிந்துவிடாமல் தொடர்ந்து மேலும் வாழ்ந்து இறைவனை தனக்குள் உணர்ந்து பேரின்பத்திலேயே இருக்கும்.

கருத்து: உடம்பில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காலங்கள் முடியும் வரை மட்டுமே உயிர் வாழ்ந்து அது முடிந்ததும் உடல் அழியக்கூடியவை. உடல் அழியாமல் வைத்து இறைவனை அடைய வேண்டுமெனில் மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரரதளத்தை அடைந்து அமுதம் பெற்று அதைப் பருகி இருக்கும் உடலிலேயே உயிரை வைத்து இறைவனுடன் பேரின்பத்தில் இருக்கலாம்.

2 thoughts on “பாடல் #193

Leave a Reply to Saravanan ThirumoolarCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.