பாடல் #187

பாடல் #187: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற வெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி யேத்தார்
அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.

விளக்கம்:

செடிகளிலும் கொடிகளிலும் தழைத்து வளர்கின்ற செழுமையான தளிர்களின் மேல் பூக்கின்ற பூக்களும் அது காய்க்கின்ற காய்களும் பின்பு பழுக்கின்ற பழங்களும் ஆகிய அவை உருவாக்கிய அனைத்துமே ஒரு நாள் இறந்து போவதை (பூக்கள் காய்கள் பழங்கள் பறிக்கப்படுதல் அல்லது அதுவாகவே உலர்ந்து விழுதல்) தினமும் பார்க்கும் உயிர்கள் இந்த வாழ்க்கை நிலைக்காது என்பதைப் புரிந்துகொண்டு எது நிரந்தரமானது என்பதைத் தேடி இறைவனே அனைத்திலும் நிரந்தரமானவன் என்பதைப் புரிந்துகொண்டு அவனுடைய திருவடிகளைத் தொழுது வணங்காதவர்கள் தனக்கும் இறக்கும் நாள் வரும் என்பதை அறியாத மூடர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் இறக்கும் தருணத்திலும் இறைவனை அறியாதவர்களாகவே இருக்கின்றனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.