பாடல் #181

பாடல் #181: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலும் கிடந்து விரும்புவன் நானே.

விளக்கம்:

குழந்தை இளைஞன் வயோதிகன் என்று காலம் கழியக் கழிய உடல் மாறுவதைக் கண்டும் அதன் உண்மையை அறிந்து கொள்ளாதவர்கள் உலகத்தவர்கள். உலகத்தையும் தாண்டி அண்டங்கள் அனைத்திலும் கலந்து இருப்பவனும் அதிலே தோன்றுபவை அனைத்தையும் ஒரு நாள் அழித்து ஆட்கொள்பவனுமான இறைவனின் திருவடிகளின் கீழே எத்தனைக் காலங்கள் ஆனாலும் கிடந்து இருப்பதையே நான் விரும்புகின்றேன்.

கருத்து: உயிர்களின் உடல் காலம் செல்லச் செல்ல மாறி அழியக்கூடியது. அப்படி அழியும் உடலின் ஆசை வைக்காமல் என்றும் அழியாமல் எங்கும் வியாபித்து இருக்கும் இறைவனின் திருவடிகளில் சென்றடைந்து பேரின்பத்தில் கிடப்பதன் மேல் ஆசை வைக்க வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.