பாடல் #1789

பாடல் #1789: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

அவனு மவனு மவனை யறியா
ரவனை யறியி லறிவாரு மில்லை
யவனு மவனு மவனை யறியி
லவனு மவனு மவனிவ னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அவனு மவனு மவனை யறியா
ரவனை யறியி லறிவாரு மிலலை
யவனு மவனு மவனை யறியி
லவனு மவனு மவனிவ னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவாரும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன் இவன் ஆமே.

பதப்பொருள்:

அவனும் (இறைவனும்) அவனும் (அந்த இறைவனை தமக்குள் வைத்திருக்கின்ற உயிரும்) அவனை (உண்மையான பரம்பொருளை) அறியார் (அறிந்து கொள்வதில்லை)
அவனை (இறைவனை) அறியில் (மனித அறிவினால் அறிந்து கொண்டவர்களும்) அறிவாரும் (அவனை முழுவதுமாக அறிந்து கொள்வது) இல்லை (இல்லை)
அவனும் (இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்தி அருளிய) அவனும் (தர்மத்தை முறையாக கடைபிடிப்பதன் மூலம் உயிராக இருப்பவன்) அவனை (இறைவனாக தனக்குள் இருப்பவனை) அறியில் (முழுவதுமாக அறிந்து உணர்ந்து கொண்ட பிறகு)
அவனும் (இறைவனும்) அவனும் (உயிராக இருப்பவனும்) அவன் (இறைவனே) இவன் (தான் என்பதை உணர்ந்து தானே இறைவனாக) ஆமே (வீற்றிருப்பான்).

விளக்கம்:

இறைவனும் அந்த இறைவனை தமக்குள் வைத்திருக்கின்ற உயிரும் உண்மையான பரம்பொருளை அறிந்து கொள்வதில்லை. இறைவனை மனித அறிவினால் அறிந்து கொண்டவர்களும் அவனை முழுவதுமாக அறிந்து கொள்வது இல்லை. இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்தி அருளிய தர்மத்தை முறையாக கடைபிடிப்பதன் மூலம் உயிராக இருப்பவன் இறைவனாக தனக்குள் இருப்பவனை முழுவதுமாக அறிந்து உணர்ந்து கொண்ட பிறகு இறைவனும் உயிராக இருப்பவனும் இறைவனே தான் என்பதை உணர்ந்து தானே இறைவனாக வீற்றிருப்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.