பாடல் #1781

பாடல் #1781: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

பிட்டி யடித்துப் பிதற்றித் திரிவேனை
யொட்டடித் துள்ளமர் மாசெல்லாம் வாங்கிப்பின்
தட்டொக்கா மாற்றின தன்னையு மென்னையும்
வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிடடி யடிததுப பிதறறித திரிவெனை
யொடடடித துளளமர மாசெலலாம வாஙகிபபின
தடடொககா மாறறின தனனையு மெனனையும
வடடம தொததது வாணிபம வாயதததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிட்டி அடித்து பிதற்றி திரிவேனை
ஒட்டு அடித்து உள் அமர் மாசு எல்லாம் வாங்கி பின்
தட்டு ஒக்கா மாற்றினன் தன்னையும் என்னையும்
வட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்த அதே.

பதப்பொருள்:

பிட்டி (அனைத்தையும் இறைவனே செய்கின்றான் என்று நினைக்காமல் நான் செய்கின்றேன் என்கிற தாழ்வான எண்ணத்தில் பல விதமான செயல்களை) அடித்து (செய்து கொண்டு) பிதற்றி (தேவை இல்லாதவற்றை பேசிக் கொண்டு) திரிவேனை (வீணாக அலைந்து திரிந்தாலும் இறைவன் விதித்த தர்மப்படி வாழ்க்கையை கடத்துகின்ற எம்மை)
ஒட்டு (தூசுகளை) அடித்து (நீக்கி) உள் (எமக்கு உள்ளே) அமர் (வீற்றிருக்கின்ற) மாசு (அழுக்குகளை) எல்லாம் (அனைத்தையும்) வாங்கி (தாமே வாங்கிக் கொண்டு) பின் (பிறகு)
தட்டு (குற்றத்தை) ஒக்கா (சேர்ந்து இருக்காத தூய்மையாக) மாற்றினன் (எம்மை மாற்றி அருளிய) தன்னையும் (இறைவனையும்) என்னையும் (எம்மையும்)
வட்டம் (ஒரே வட்டம்) அது (ஆகிய தன்மைக்குள்) ஒத்து (ஒன்றாக சேர்ந்து இருப்பது) அது (ஆகிய நிலைக்கு கொண்டு வந்து) வாணிபம் (தம்மை நோக்கி பிற உயிர்களும் வருவதற்கான வழிகளை எம்மை செய்ய வைத்து) வாய்த்த (அதன் பயனால் முக்தியை கொடுத்து) அதே (எமக்கு அருளுகின்றான் இறைவன்).

விளக்கம்:

அனைத்தையும் இறைவனே செய்கின்றான் என்று நினைக்காமல் நான் செய்கின்றேன் என்கிற தாழ்வான எண்ணத்தில் பல விதமான செயல்களை செய்து கொண்டு, தேவை இல்லாதவற்றை பேசிக் கொண்டு, வீணாக அலைந்து திரிந்தாலும் இறைவன் விதித்த தர்மப்படி வாழ்க்கையை கடத்துகின்ற எம்மிடமுள்ள தூசுகளை நீக்கி, எமக்குள்ளே வீற்றிருக்கின்ற அழுக்குகளை அனைத்தையும் தாமே வாங்கிக் கொண்டு அருளினான் இறைவன். பிறகு, குற்றத்தை சேர்ந்து இருக்காத தூய்மையாக எம்மை மாற்றி அருளிய இறைவனையும் எம்மையும் ஒரே வட்டமாகிய தன்மைக்குள் ஒன்றாக சேர்ந்து இருப்பதாகிய நிலைக்கு கொண்டு வந்து, தம்மை நோக்கி பிற உயிர்களும் வருவதற்கான வழிகளை எம்மை செய்ய வைத்து, அதன் பயனால் முக்தியை கொடுத்து எமக்கு அருளுகின்றான் இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.