பாடல் #1786

பாடல் #1786: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

உணர்வுடை யார்கட் குலகமுந் தோன்று
முணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை
யுணர்வுடை யார்க ளுணர்ந்த வக்கால
முணர்வுடை யார்க ளுணர்ந்து கண்டாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உணரவுடை யாரகட குலகமுந தொனறு
முணரவுடை யாரகட குறுதுய ரிலலை
யுணரவுடை யாரக ளுணரநத வககால
முணரவுடை யாரக ளுணரநது கணடாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உணர்வு உடையார்களுக்கு உலகமும் தோன்றும்
உணர்வு உடையார்களுக்கு உறு துயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அக் காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே.

பதப்பொருள்:

உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்களுக்கு (அனுபவத்தை பெற்றவர்களுக்கு) உலகமும் (அனைத்து உலகங்களிலும் இருக்கின்ற) தோன்றும் (தர்மங்களும் தெரிய வரும்)
உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்களுக்கு (அனுபவத்தை பெற்றவர்களுக்கு) உறு (உலகத்தில் அனுபவிக்க வேண்டிய) துயர் (துன்பங்கள்) இல்லை (என்று எதுவும் இல்லை)
உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்கள் (அனுபவத்தை பெற்றவர்கள்) உணர்ந்த (அதை உணர்ந்த) அக் (அந்த) காலம் (நொடிப் பொழுதிலேயே)
உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்கள் (அனுபவத்தை பெற்றவர்கள்) உணர்ந்து (தமக்குள் இருக்கின்ற தர்மத்தின் வடிவமாகிய இறைவனையும் முழுவதுமாக உணர்ந்து) கண்டாரே (தரிசிப்பார்கள்).

விளக்கம்:

பாடல் #1785 இல் உள்ளபடி உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற அனுபவத்தை பெற்றவர்களுக்கு, அனைத்து உலகங்களிலும் இருக்கின்ற தர்மங்களும் தெரிய வரும். அவர்களுக்கு இந்த உலகத்தில் அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் என்று எதுவும் இல்லை. அவர்கள் அந்த அனுபவத்தை உணர்ந்த அந்த நொடிப் பொழுதிலேயே தமக்குள் இருக்கின்ற தர்மத்தின் வடிவமாகிய இறைவனையும் முழுவதுமாக உணர்ந்து தரிசிப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.