பாடல் #1782

பாடல் #1782: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவ
னிருக்கின்ற தன்மையை யேது முணரார்
பிரிக்கின்ற விந்துப் பிணக்கறுத் தெல்லாங்
கருக்கொண்ட வீசனைக் கண்டுகொண் டேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தரிககினற பலலுயிரக கெலலாந தலைவ
னிருககினற தனமையை யெது முணரார
பிரிககினற விநதுப பிணககறுத தெலலாங
கருககொணட வீசனைக கணடுகொண டெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம்
கரு கொண்ட ஈசனை கண்டு கொண்டேனே.

பதப்பொருள்:

தரிக்கின்ற (உடல் கொண்டு பிறவி எடுக்கின்ற) பல் (பல விதமான) உயிர்க்கு (உயிர்கள்) எல்லாம் (அனைத்திற்கும்) தலைவன் (தலைவனாக)
இருக்கின்ற (இருக்கின்ற இறைவனின்) தன்மையை (தன்மைகள்) ஏதும் (எதையும்) உணரார் (உணராதவர்கள் இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடை பிடித்து வாழும் போது)
பிரிக்கின்ற (இறைவனிடமிருந்து அவர்களை பிரித்து வைத்திருக்கின்ற) விந்து (மாயையாகிய) பிணக்கு (ஆசைகள் பந்தங்களாகிய கட்டுக்களை) அறுத்து (அறுத்து) எல்லாம் (அவர்களது உடல் பொருள் ஆவி ஆகிய அனைத்தையும்)
கரு (தமக்குள்ளேயே சேர்த்துக்) கொண்ட (கொண்டு அருளுகின்ற) ஈசனை (இறைவனை) கண்டு (யாம் கண்டு) கொண்டேனே (கொண்டோம்).

விளக்கம்:

உடல் கொண்டு பிறவி எடுக்கின்ற பல விதமான உயிர்கள் அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவனின் தன்மைகள் எதையும் உணராதவர்கள் இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடை பிடித்து வாழும் போது, இறைவனிடமிருந்து அவர்களை பிரித்து வைத்திருக்கின்ற மாயையாகிய ஆசைகள் பந்தங்களாகிய கட்டுக்களை அறுத்து, அவர்களது உடல் பொருள் ஆவி ஆகிய அனைத்தையும் தமக்குள்ளேயே சேர்த்துக் கொண்டு அருளுகின்ற இறைவனை யாம் கண்டு கொண்டோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.