பாடல் #1488

பாடல் #1488: ஐந்தாம் தந்திரம் – 10. சக மார்க்கம் (இறைவன் தோழமையாக உடனிருந்து வழிகாட்டும் நெறி முறை)

சன்மார்கந் தானே சகமார்க மானது
மன்மார்க மாமுத்தி சித்திக்கும் வைப்பதாம்
பின்மார்க மாவது பேராப் பிறந்திறந்
துன்மார்க ஞானத் துறுதியு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சனமாரகந தானெ சகமாரக மானது
மனமாரக மாமுததி சிததிககும வைபபதாம
பினமாரக மாவது பெராப பிறநதிறந
துனமாரக ஞானத துறுதியு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சன் மார்கம் தானே சக மார்கம் ஆனது
மன் மார்கம் ஆம் முத்தி சித்திக்கும் வைப்பது ஆம்
பின் மார்கம் ஆவது பேரா பிறந்து இறந்து
உன் மார்க ஞானத்து உறுதியும் ஆமே.

பதப்பொருள்:

சன் (உண்மை) மார்கம் (வழியில் ஞானம் பெற்ற சாதகர்களுக்கு) தானே (தானாகவே) சக (இறைவன் தோழமையுடன்) மார்கம் (வழிகாட்டும்) ஆனது (நெறி முறையாக சக மார்கம் [தோழமை வழிமுறை] இருக்கின்றது)
மன் (இதுவே எப்போதும் நிலைத்து நிற்கின்ற) மார்கம் (வழியாக) ஆம் (இருந்து) முத்தி (முக்தி பேறு அடைவதற்கும்) சித்திக்கும் (நினைப்பதை எல்லாம்) வைப்பது (செயல்பட வைப்பது) ஆம் (ஆகவும் இருக்கின்றது)
பின் (இதற்கு நேர் எதிரான) மார்கம் (வழியில்) ஆவது (செல்பவர்கள்) பேரா (இடைவிடாமல்) பிறந்து (பிறவி எடுத்து) இறந்து (இறந்து மீண்டும் மீண்டும்)
உன் (மனம் செல்லுகின்ற) மார்க (வழியில் செல்லும் போதும் இறைவன் தோழமையுடன் மறைந்து இருந்து) ஞானத்து (ஒரு காலத்தில் உண்மை ஞானம்) உறுதியும் (உறுதியாக கிடைக்கும் படி) ஆமே (அருளுவார்).

விளக்கம்:

உண்மை வழியில் ஞானம் பெற்ற சாதகர்களுக்கு தானாகவே இறைவன் தோழமையுடன் வழிகாட்டும் நெறி முறையாக சக மார்கம் [தோழமை வழிமுறை] இருக்கின்றது. இதுவே எப்போதும் நிலைத்து நிற்கின்ற வழியாக இருந்து முக்தி பேறு அடைவதற்கும் நினைப்பதை எல்லாம் செயல்பட வைப்பது ஆகவும் இருக்கின்றது. இதற்கு நேர் எதிரான வழியில் செல்பவர்கள் இடைவிடாமல் பிறவி எடுத்து இறந்து மீண்டும் மீண்டும் மனம் செல்லுகின்ற வழியில் செல்லும் போதும் இறைவன் தோழமையுடன் மறைந்து இருந்து ஒரு காலத்தில் உண்மை ஞானம் உறுதியாக கிடைக்கும் படி அருளுவார்.

கருத்து:

உண்மை வழியில் ஞானம் பெற்றவர்களுக்கு இறைவன் தோழமையாக அருகிலேயே இருந்து நினைப்பது அனைத்தையும் செயல் படுத்துகின்றார். எந்த வழிமுறையையும் பின் பற்றாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து இறந்து மீண்டும் மீண்டும் பிறவி எடுத்தாலும் இறைவன் தோழமையாக மறைந்து இருந்து வழிகாட்டி ஒரு காலத்தில் ஞானம் பெறும் படி அருளுவார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.