பாடல் #1489

பாடல் #1489: ஐந்தாம் தந்திரம் – 10. சக மார்க்கம் (இறைவன் தோழமையாக உடனிருந்து வழிகாட்டும் நெறி முறை)

மருவுந் துவாதெச மார்கமு மில்லார்
குருவுஞ் சிவனுஞ் சமையமுங் கூடார்
வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகு
முருவுங் கிளையு மொருங்கிழப் போரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மருவுந துவாதெச மாரகமு மிலலார
குருவுஞ சிவனுஞ சமையமுங கூடார
வெருவுந திருமகள வீடடிலலை யாகு
முருவுங கிளையு மொருஙகிழப பொரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மருவும் துவாதெச மார்கமும் இல்லார்
குருவும் சிவனும் சமையமும் கூடார்
வெருவும் திருமகள் வீட்டு இல்லை ஆகும்
உருவும் கிளையும் ஒருங்கு இழப்போரே.

பதப்பொருள்:

மருவும் (தியானத்தின் மூலம்) துவாதெச (தலைக்கு மேலே பன்னிரண்டு அங்குல தூரத்தில் இருக்கின்ற துவாதச வெளியில் இருக்கின்ற இறைவனை அறிகின்ற) மார்கமும் (யோக வழிமுறையை) இல்லார் (அறிந்து கொள்ளாதவர்களும்)
குருவும் (குருவின் மூலம் ஞானத்தை பெறாதவர்களும்) சிவனும் (இறைவன் மேல் பக்தி செய்யாதவர்களும்) சமையமும் (இறைவனை வழிபடும் தமது குல வழக்கத்தை) கூடார் (கைவிடுபவர்களும்)
வெருவும் (ஆகிய இவர்களுடன் சேர்ந்து இருப்பது வீண் என்று) திருமகள் (லட்சுமி தேவியும்) வீட்டு (அவர்களை விட்டு) இல்லை (வேண்டாம் என்று) ஆகும் (விலகி விடுவாள்)
உருவும் (அவர்களின் உடலும்) கிளையும் (உடலைச் சுற்றி இருக்கின்ற நன்மைகளும்) ஒருங்கு (அழிந்து) இழப்போரே (இழந்து விடுவார்கள்).

விளக்கம்:

தியானத்தின் மூலம் தலைக்கு மேலே பன்னிரண்டு அங்குல தூரத்தில் இருக்கின்ற துவாதச வெளியில் இருக்கின்ற இறைவனை அறிகின்ற யோக வழிமுறையை அறிந்து கொள்ளாதவர்களும் குருவின் மூலம் ஞானத்தை பெறாதவர்களும் இறைவன் மேல் பக்தி செய்யாதவர்களும் இறைவனை வழிபடும் தமது குல வழக்கத்தை கைவிடுபவர்களும் ஆகிய இவர்களுடன் சேர்ந்து இருப்பது வீண் என்று லட்சுமி தேவியும் அவர்களை விட்டு வேண்டாம் என்று விலகி விடுவாள். அவர்களின் உடலும் உடலைச் சுற்றி இருக்கின்ற நன்மைகளும் அழிந்து இழந்து விடுவார்கள்.

கருத்து:

உயர்ந்த மனித பிறவி என்பது இறைவனை அறிந்து கொண்டு அவனை அடைவதற்காக அருளப்பட்டது. இதில் இறைவனை அடையும் வழிகளாக பக்தி கர்மம் யோகம் ஞானம் ஆகிய நான்கு வழிகளை தோழமையுடன் உடனிருந்து இறைவன் அருளியிருந்தும் இது எதையுமே பின்பற்றாமல் ஆசையின் வழியில் செல்பவர்களை விட்டு தோழமையுடன் இருந்த இறைவன் விலகி நிற்பதால் அவர்களின் உயர்ந்த பிறவிக்கான நன்மைகள் அழிந்து போய் அடுத்த பிறவியில் கீழ் நிலை பிறவிக்கு சென்று விடுவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.