பாடல் #1501

பாடல் #1501: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

திருமன்னுஞ் சற்புத்திர மார்க சரிதை
யுருமன்னி வாழு முலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசங் கைகூப்பத் தொழுது
விருமன்னு நாடோறு மின்புற் றிருந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

திருமனனுஞ சறபுததிர மாரக சரிதை
யுருமனனி வாழு முலகததீர கெணமின
கருமனனு பாசங கைகூபபத தொழுது
விருமனனு நாடொறு மினபுற றிருநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

திரு மன்னும் சற் புத்திர மார்க சரிதை
உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கரு மன்னு பாசம் கை கூப்ப தொழுது
இரு மன்னு நாள் தோறும் இன்பு உற்று இருந்தே.

பதப்பொருள்:

திரு (இறை சக்தியானது ஆன்மாவிற்குள்) மன்னும் (நிலை பெற்று இருக்கும்) சற் (இறைவனை தந்தையாக பாவித்து) புத்திர (தம்மை மகனாக பாவிக்கின்ற) மார்க (வழி முறையே) சரிதை (இறைவனை அடைவதற்கு மூல காரணமாக செயல் படுகின்ற வழிமுறையை சொல்லுகிறேன்)
உரு (உடல் இருக்கும் வரை) மன்னி (நிலை பெற்று) வாழும் (வாழுகின்ற) உலகத்தீர் (உலகத்தவர்களே) கேண்மின் (கேளுங்கள்)
கரு (கருவிலேயே) மன்னு (நிலை பெற்று வருகின்ற) பாசம் (பாசத் தளைகளை நீக்கி இறைவனை அடைவதற்கு) கை (இரண்டு கைகளையும்) கூப்ப (ஒன்றாக கூப்பி) தொழுது (இறைவனை தொழுது வணங்கி)
இரு (இறைவனை நினைத்துக் கொண்டே இருப்பதில்) மன்னு (நிலை பெற்று) நாள் (தினம்) தோறும் (தோறும்) இன்பு (அதன் மூலம் கிடைக்கின்ற பேரின்பத்தை) உற்று (அனுபவித்துக் கொண்டே) இருந்தே (இருங்கள்).

விளக்கம்:

இறை சக்தியானது ஆன்மாவிற்குள் நிலை பெற்று இருக்கும் இறைவனை தந்தையாக பாவித்து தம்மை மகனாக பாவிக்கின்ற வழி முறையே இறைவனை அடைவதற்கு மூல காரணமாக செயல் படுகின்ற வழி முறையை சொல்லுகிறேன் உடல் இருக்கும் வரை நிலை பெற்று வாழுகின்ற உலகத்தவர்களே கேளுங்கள். கருவிலேயே நிலை பெற்று வருகின்ற பாசத் தளைகளை நீக்கி இறைவனை அடைவதற்கு அவனை இரண்டு கைகளையும் ஒன்றாக கூப்பி தொழுது வணங்கி அவனை நினைத்துக் கொண்டே இருப்பதில் நிலை பெற்று தினம் தோறும் அதன் மூலம் கிடைக்கின்ற பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.