பாடல் #1302

பாடல் #1302: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

காணும் பொருளுங் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமு
மூணு முணர்வு முறக்கமுந் தானாயக்
காணுங் கனகமுங் காரிகை யாமே.

விளக்கம்:

பாடல் #1301 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள் கண்டு உணர்ந்து கொண்ட பேருண்மையான பரம்பொருளே அவர்களின் எண்ணத்திற்கு ஏற்றபடியான வடிவங்களைக் கொண்ட தெய்வமாக அவர்களுக்குள் வீற்றிருக்கின்றார். தமது உடலுக்குள் பரம்பொருளே தெய்வமாக வீற்றிருப்பதால் சாதகர்கள் முறையாகப் பேணிப் பாதுகாக்கின்ற உடலும் அதனால் சாதகர்களுக்குள் ஊற்றெடுத்துப் பெருகுகின்ற அமிழ்தமும் சாதகர்களின் ஆன்மா நுகர்கின்ற இன்பமும் அதனால் கிடைக்கின்ற பேரின்ப உணர்வும் அந்த உணர்விலேயேஎ இலயித்து இருகின்ற நிலையும் இந்த நிலையை அடைந்ததும் அவர்கள் காணும் படி தானாகவே பொன் போல மாறுகின்ற உடலும் ஆகிய இவை அனைத்துமே சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கின்ற இறை சக்தியின் அருளால் கிடைக்கின்ற பேறுகள் ஆகும்.

கருத்து: சாம்பவி மண்டலச் சக்கர சாதகத்தை செய்கின்ற சாதகர் பேருண்மையான பரம்பொருளைத் தமக்குள் கண்டு உணர்ந்து இறைவன் வீற்றிருக்கும் தமது உடலையே கோயிலாக எண்ணிப் பேணிப் பாதுகாத்து உள்ளிருக்கும் இறைவனைப் போற்றி வணங்கி வழிபடும் போது அவரது ஆன்மா இன்பத்தை நுகருகின்றது. அதன் பிறகு அவருக்குள் அமிழ்தம் ஊற்றெடுக்கின்றது. அந்த அமிழ்தத்தைப் பருகியப் பேரின்ப உணர்விலேயே சாதகர் இலயித்து இருக்கும் போது அவரின் உடல் பொன் போல மாறி என்றும் அழியாத நிலை பெறுகின்றது. இவை அனைத்தும் சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கின்ற இறை சக்தியினால் அவருக்கு கிடைக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.