பாடல் #1303

பாடல் #1303: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

ஆமே எழுத்தஞ்சு மாம்வழி யேயாகப்
போமே யதுதானும் போம்வழி யேபோகா
னால்நாமே நினைத்தன செய்யலு மாகும்
பார்மே லொருவர் பகையில்லை தானே.

விளக்கம்:

பாடல் #1302 இல் உள்ளபடி சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கின்ற சக்தியின் அருள் பெற்ற சாதகர்கள் பாடல் #1300 இல் உள்ளபடி அசபையாக உச்சரிக்கின்ற ‘சிவாய நம’ எனும் மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களே இறைவனை நோக்கி சாதகரின் எண்ணங்களை எடுத்துச் செல்லும் வழியாக இருக்கின்றன. சாதகர்கள் தன்னுடைய எண்ணங்களை சிந்தனை போகும் போக்கில் போக விடாமல் சிவாயநம என்னும் எழுத்துக்களின் வழியாக இறைவனை நோக்கிச் செலுத்திக் கொண்டே இருந்தால் சாதகர்கள் நினைக்கின்ற அனைத்தையும் செயலாக்க முடியும். அதன் பிறகு உலகத்தில் உள்ள எந்தவொரு பற்றுக்களும் சாதகர்களுக்கு இல்லாமல் போய்விடும்.

கருத்து: சாதகர் தனக்குள் தோன்றும் எண்ணத்தின் வழி செல்லாமல் தான் அசபையாக உச்சரித்துக் கொண்டிருக்கும் சிவாயநம மந்திரத்துடன் தனது எண்ணங்களை செலுத்தினால் இந்த உலகத்தில் சாதகர் நினைக்கின்ற அனைத்தையும் அவர் செயலாக்க முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.